Friday, August 29, 2008

நிஜமாகவே விடை பெறுகிறேன்...!!!

இவ்ளோ நாளா என்னோட உளறல்களை பொறுத்துக்கிட்டு வாழ்த்தி, ஊக்குவித்து, திட்டி பின்னூட்டமிட்ட அனைத்துப் பதிவர்களுக்கும் நன்றி...

கொஞ்ச நாள் இந்த பூச்சாண்டிக்கு ஓய்வு கொடுக்கலாம்னு நினைக்கிறேன்.
அதனால், பை பை!!!

எல்லோரும் கொஞ்ச நாள் ஜாலியா இருங்கப்பான்னு சொல்லலாம்னு நினைச்சேன் - ஆனா... ஆனா...

அடுத்த மாசம்... வேறொரு இடத்திலேந்து உங்கள் இதே ச்சின்னப் பையன் மீண்டும் வரும்வரை..... நன்றி... வணக்கம்...!!!

Read more...

Wednesday, August 27, 2008

சின்னமணிக்கு பிறந்த நாள்!!!




அவங்களோட ஒரே ஒரு லேட்டஸ்ட் put and give-ஐ சொல்றேன். கேட்டுக்குங்க...
சின்னமணி இப்போ நீச்சல் கத்துக்கிட்டுருக்காங்க. குளத்தில் இருக்கும்போதும் அந்த பயிற்சியாளரிடம் வளவளன்னு பேசிட்டிருப்பாங்க. அந்த மாதிரி பேசாமே நீச்சல் அடின்னு தங்கமணி அவரிடம் சொல்ல - அடுத்த நாள் வகுப்புக்கு போனவுடனேயே பயிற்சியாளரிடம் - My Mommy told not to talk to you - அப்படின்னுட்டாங்க. அங்கிருந்தே அந்த பயிற்சியாளர் எங்களைப் பார்க்க - நாங்க வெக்கப்பட்டுக்கிட்டு வேறேங்கோ பார்த்துக்கொண்டிருந்தோம்.!!!!

இவ்ளோ சொல்லிட்டு சின்னமணி பேர் சொல்லலேன்னா எப்படி... அவங்க பேர் சஹானா...

Read more...

Tuesday, August 26, 2008

மணிரத்னம் - மென்பொருள் நிபுணரானால்!!!

கணிணித்திரையை கொஞ்சம் வெளிச்சமா வெச்சிக்கோங்க.. கண்ணு 'டொக்'காயிடப் போகுது.
-----
எதுக்கு அருமையான மென்பொருள் பண்ணிட்டு, லாகின் திரையிலே 'இந்த மென்பொருளில் வரும் அனைத்து திரையும் கற்பனையே' அப்படின்னு போட்டிருக்கீங்க?
-----
100 வரிகள்லே எழுதவேண்டிய கோடிங்கை, எதுக்கு சின்னசின்னதா எழுதி 1000 வரி வரைக்கும் இழுத்திருக்கீங்க?
-----
எதுக்கு அடிக்கடி கூகிள்லே 'பழைய அமெரிக்க மென்பொருள்' அல்லது 'பழைய உலக மென்பொருள்' அப்படின்னு தேடிக்கிட்டிருக்கீங்க?
-----
உங்க மென்பொருள் வேலையே செய்யாமே சுத்தமா படுத்துடுச்சுன்னா, உக்காந்து அந்த பிரச்சினையை தீர்க்கப் பாருங்க. அதை விட்டுட்டு கணிணி பக்கத்துலே போய் 'ஏந்திரு (எழுந்திரு) மென்பொருள் ஏந்திரு'ன்னா, பிரச்சினை எப்படி சால்வாகும்?
-----
நீங்க எதுக்கு அந்த மீட்டிங்குக்குப் போனீங்க? க்ளையண்ட் நீங்க மேனேஜரா,இல்லையான்னதுக்கு 'தெரியலியேப்பா'ன்னு வேறே சொல்லியிருக்கீங்க...
-----
உங்க மென்பொருளோட பயன்பாட்டைப் பாத்துதான் எல்லோரும் எழுந்து நின்னு கைதட்டணும். நடு நடுவே தேசிய கீதத்தைப் ஒலிபரப்பி எல்லோரையும் எழுப்பி நிக்க வெக்காதீங்க...

-----
மீட்டிங்லேயும் சரி.. உங்க அறையிலேயும் சரி... எப்பவும் விளக்கை அணைச்சியே வெச்சிருக்கீங்க. போற வர்றவங்கல்லாம் அடிக்கடி எதிலேயாவது இடிச்சிக்கறாங்க... எதுக்கு இப்படி இருக்கீங்க?

-----
நீங்க செய்யற எந்த மென்பொருள பாத்தாலும் - அதை முன்னாடியே வேறே எங்கேயோ பாத்தா மாதிரியே இருக்கே? ஏன் அப்படி?

Read more...

Monday, August 25, 2008

இப்படிக்கு...

















Read more...

Saturday, August 23, 2008

ஒரே ஒரு பஞ்ச் டயலாக் சொல்லிக்கறேன்!!!

முதலில், காஞ்சனா ராதாகிருஷ்ணன் அவர்களுடைய இந்த பதிவையும், பின்னூட்டங்களையும் பார்க்கவும். அதற்கான பதில்தான் இந்த பதிவு.
எனக்கு ஆதரவாக அங்கே எழுந்த குரல்களுக்கு நன்றி... ஒரே ஒரு பஞ்ச் டயலாக் சொல்லலாம்னு நினைச்சேன். அதுக்காகத்தான் இந்த பதிவு.




இதை படிக்கும் எல்லாரும் ஒரு நிமிடம் உங்க கையை மௌஸ்லேர்ந்து எடுத்துட்டு - என்னை மாதிரியே - உயர்த்தி பிடிங்கப்பா.
கா.ரா. ஐயா... எனக்கு பின்னாடி 5.95 கோடி மக்கள் இருக்காங்க.
இது காசோ / செக்கோ / மணி ஆர்டரோ / டிடியோ எதுவுமே கொடுத்து சேர்ந்த கூட்டமில்லை.
இது அன்பாலே சேர்ந்த கூட்டம்.
ஓகேவா?
பின்: பதிவு அவ்வளவுதான். எல்லாரும் கையை இறக்கிடுங்கப்பா. அவ்வ்வ்வ்...

Read more...

Friday, August 22, 2008

பொழுது போகலேன்னா என்ன செய்யலாம்?

நேற்று மகளுக்கு தமிழ் கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கும்போது திடீரென்று தோன்றியது இந்த பதிவுக்கான ஐடியா.
இங்கே இணைத்திருக்கும் படத்தில் (தமிழ் எழுத்துக்கள் அட்டவணை) ஆங்காங்கே பல வார்த்தைகள் தென்பட்டன. அவற்றை கட்டம் போட்டுக் காட்டியிருக்கிறேன்.
இவற்றில்:
-- அழகான தமிழ் வார்த்தைகள்
-- ஆங்கில வார்த்தைகள்
--இந்தி வார்த்தைகள்
--குழந்தைகளிடம் பேசும் வார்த்தைகள்
--மற்றும் நாம் சாதாரணமாக பேசும் வார்த்தைகள்
என எனக்குத் தெரிந்த வார்த்தைகள் பலவற்றை கட்டம் போட்டுக் காட்டியிருக்கிறேன்.
தலைப்பில் சொன்னாமாதிரி - என்னைப் போலவே - இருக்கறவங்க, மேலும் முயற்சித்து பல பெரிய வார்த்தைகளைக் கண்டுபிடிக்கலாம்.


Read more...

Thursday, August 21, 2008

வலைப்பதிவர் சந்திப்புக்கு சற்றுமுன்...






ஹலோ...

வாங்க வாங்க... எப்படி இருக்கீங்க.
நானும் சூப்பரா இருக்கேன். இன்னும் அவங்கல்லாம் வரலியா?

இல்லீங்க. நானும் அவங்களுக்காகத்தான் காத்திருக்கேன்.

எத்தனை மணிக்கு வரேன்னு சொல்லியிருந்தாங்க.

வழக்கமா 6 மணிக்கு வந்துடுவாங்க.

இன்னிக்காவது போண்டா குடுப்பாங்களா?

எனக்கு கடலைதான் பிடிக்கும்.

இவங்க எதைப்பத்தி பேசுவாங்க?

அட. எதைப்பத்தி பேசினா என்னங்க. நாம சும்மா கேக்கத்தானே போறோம்.

ஏன், நீங்க நடுவிலே பேசவே மாட்டீங்களா?

பேசினா அடிச்சிபுடுவாங்க.

ஐயோ. அடிச்சிடுவாங்களா?

பின்னே, சமயத்திலே போலிஸ் கையிலே கூட பிடிச்சி குடுத்துடுவாங்க.

அட. நீங்க வேறே பயமுறுத்திக்கிட்டு... ஆமா உங்க பேரு சொல்லவேயில்லையே?

பேரெல்லாம் எதுக்குங்க இப்ப?

ஓ. நீங்க அனானியா, அப்ப இருங்க. உங்க மூஞ்சி தெரியாமே ஒரு புகைப்படம் எடுத்துக்கறேன்.

ஏய். ஏன் இப்ப புகைப்படம்லாம் எடுக்கறீங்க. நீங்க என்ன பத்திரிக்கைக்காரவுங்களா?

ஏங்க. நானும் உங்கள மாதிரி பதிவு போடறவந்தான்.

பதிவா? அப்படின்னா?

அட.. அனானி பேர் தெரியக்கூடாதுன்னா பரவாயில்லே. அதுக்காக, பதிவுன்னா என்னன்னே தெரியலேன்னு சொன்னீங்கன்னா நான் எப்படி நம்பறது?

யோவ், நான் இங்கே காலேஜ் பொண்ணுங்க வருவாங்க, அவங்கள பாக்கலாம்னு உக்காந்திருக்கேன். இங்க வந்து...

என்னது? காலேஜ் பொண்ணுங்களா? அப்போ நீங்க தமிழ் வலைப்பதிவர் இல்லையா?

அதான் இல்லேன்னு தெளிவா சொன்னேன்லே?

அடச்சே - நம்ம நண்பர் தன்னைத்தானெ நொந்துகொண்டு, சற்றுத்தள்ளி அமர்ந்திருப்பவரை பார்த்து - ஹலோ....

பின்: மேலே படத்தில் இருக்கும் ஜிங்காரோவுக்கும் படத்தை அளித்த டிபிசிடிக்கும் நன்றி.. நன்றி.. நன்றி...
இன்னொரு பின்: இன்னிக்கு alignment ரொம்பவே பிரச்சினையாயிருக்கு. திடீர்னு தமிழ்லே அடிச்சதெல்லாம், ஆங்கிலத்துக்கு மாறிடுது. அதனாலே, alignment ப்ராப்ளத்தை கொஞ்சம் பொறுத்துக்கோங்க....

Read more...

Wednesday, August 20, 2008

முதன்முதலில் வேலைக்காக சென்னை வந்தபோது!!!

சென்னை எழும்பூரில் வந்து இறங்கிய அந்த ஞாயிற்றுக்கிழமை காலை எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நான் புகைவண்டியில் தனியாக வருவது அதுதான் முதல் தடவை. அதுவும் சென்னைக்கு தனியாக வருவதால், வீட்டில் எல்லாருக்கும் கவலை. சென்னையில் அன்றைய தேதிக்கு எனக்கு யாரையும் தெரியாது. ஆனாலும், புதிதாகக் கிடைத்திருக்கும் வேலைக்குப் போகவேண்டுமே - அதனால் ஒரு பெரிய பயணத்தை மேற்கொண்டு சென்னை வந்து சேர்ந்தேன்.

அதற்கு முதல் நாள் இரவு புகைவண்டிக்குக் கிளம்பும்போது, தந்தை வழக்கம்போல் கொஞ்சமே பேசினார் - ராத்திரி தூங்கும்போது வீடு உள்ளேயிருந்து பூட்டிக்கோ. அப்பப்போ போன் பண்ணு. அவ்வளவுதான். அம்மாதான் தொடர்ந்து பேசிக்கிட்டே இருந்தாங்க - வேளா வேளைக்கு சாப்பிடுப்பா. போர்ன்விடா வாங்கி வெச்சுக்கோ. ராத்திரி ரொம்ப நேரம் டிவி பாக்கறதுக்கு கண் முழிக்காதே - அப்படி இப்படின்னு.

சரி. முன்னாடியே சொன்னா மாதிரி எழும்பூர்லே வந்து இறங்கியாச்சு. சென்னையில் ஆட்டோவிலெல்லாம் போகாதேன்னு ஊர்லே படிச்சி படிச்சி சொல்லியிருந்ததாலே, பேருந்துக்காக கொஞ்ச நேரம் காத்திருந்து அதிலேயே திருவல்லிக்கேணி போய் சேர்ந்தேன். போகவேண்டிய வீட்டு விலாசம், அதற்கான வழி எல்லாம் ஏற்கனவே பலமுறை சொல்லப்பட்டிருந்ததால், யாரிடமும் கேட்காமல் நேரே அங்கே போயாச்சு.

எப்பவும் குடும்பத்துடனே இருந்து பழக்கப்பட்டதால், தனித்து விடப்பட்ட அரை நாளிலேயே வாழ்க்கை வெறுத்துப் போனது. மனம் விட்டு பேச யாருமில்லை. தனிமை பயங்கரமாக போர் அடித்தது. இன்னும் கொஞ்ச நாளைக்கு இப்படித்தான். அதன் பிறகு, அம்மா அப்பா இங்கே வந்துட்டாங்கன்னா, எல்லா பிரச்சினையும் தீர்ந்துடும்னு மனசை தேத்திண்டு அடுத்த நாள் வேலைக்குப் போய் சேர்ந்தாச்சு.

சரி. இவ்ளோ சொன்னேனே, எங்க ஊர் எதுன்னு சொல்லவேயில்லையே? சென்னைதான். வேலைக்கு சேரணும்னு அலைபேசியில் தகவல் வந்தபோது நாங்கெல்லாம் ஒரு உறவினர் வீட்டு கல்யாணத்துக்காக பெங்களூர்லே இருந்தோம். குடும்பமே அடுத்த 10 நாட்களுக்கு மைசூர் டூர்லாம் போக, நான் மட்டும் வேலைக்காக சென்னை வந்து சேர்ந்தேன்.

இதுதான் கதையின் முதல் பாகம். மீதி கதை அடுத்த பாகத்தில்....

பின் - 1: இது என் சொந்தக்கதை இல்லீங்க. கற்பனைக் கதைதான். இன்னிக்கு வேறொரு பயணக்கட்டுரை பார்த்தபிறகு தோன்றியதுதான் இந்த கதை.

பின் - 2: அடுத்த பாகமெல்லாம் இல்லை. அது சும்மா நானும் 'தொடரும்' போட்டிருக்கேன்றதுக்காக.

Read more...

Tuesday, August 19, 2008

கிபி 2030 - தொலைக்காட்சி சேனல்கள்!!!

A - அழகிரி டிவி, ஆதித்யா டிவி, அன்புமணி டிவி
B -
C - கேப்டன் டிவி
D - தளபதி டிவி (ஸ்டாலின்), டாக்டர் டிவி (விஜய்), தயாநிதி டிவி
E -
F -
G - குரு டிவி (காடுவெட்டி)
H -
I -
J - ஜேகே டிவி (ரித்தீஷ்)
K - கார்த்திக் டிவி, கேசி டிவி (கார்த்திக் சிதம்பரம்), கேஎம் (கலாநிதி டிவி)
L - எல்.எஸ்.எஸ் டிவி (சிம்பு - லிட்டில் சூஸ்).
M -
N - நயந்தாரா டிவி
O -
P -
Q -
R -
S - எஸ்.ஆர் டிவி (சரத்)
T - த்ரிஷா டிவி
U - உதய நிதி டிவி
V - விஜய டிவி (டி.ஆர்.)
W -
X -
Y - யாத்ரா டிவி (சூஸ்)
Z -


பின் : தற்போது இருக்கிற தொலைக்காட்சிகளைக் கணக்கில் எடுத்துக்கலை. விட்டுப்போனவைகளை பின்னூட்டத்தில் கூறவும்....:-))

Read more...

Monday, August 18, 2008

தங்ஸ் Vs ரங்ஸ்!!!

முன் - 1: ஒரு நீள(!!) நகைச்சுவை கதை எழுதலாம்னு ரொம்ப நாளா ஐடியா இருந்துச்சு. ஆனா எதுவும் சரிவராததாலே, அந்த கதைக்காக சேத்து வெச்ச ஜோக்ஸை இங்கே போட்டிருக்கேன்.


முன் - 2: அப்பாடா, சொந்தக்கதை இல்லேன்னு சொல்ல எவ்ளோ பில்டப்பு கொடுக்கவேண்டியிருக்கு? அவ்வ்வ்வ்...


-------


இங்கே அமெரிக்காவிலே மின்சாரத்தடையே இருக்கறதில்லையே.. அத மாதிரி நம்ம இந்தியாவிலேயும் இருந்தா எவ்ளோ நல்லாயிருக்கும்?

ஆமாம்மா. அதுக்கு நாம என்ன பண்ணலாம் சொல்லு.

நம்ம அமைச்சர்கள், இங்கத்திய ஆட்கள கேட்டு அது மாதிரி அங்கேயும் செயல்படுத்த சொல்லலாமில்லே?

செய்யலாம்மா. ஆனா, அதிலே ஒரு சின்ன பிரச்சினையிருக்கு.

என்ன?

நம்ம அமைச்சர்கள் அலுவலகத்திற்கு வந்து இங்கே போன் பண்றதுக்குள்ளே இவங்க தூங்கப்போயிருப்பாங்க. இவங்க அலுவலகத்திற்கு வரும்போது அவங்க ஏதாவது ஒரு திரைப்பட விழாவில் கலந்துக்கறதுக்கோ அல்லது தூங்கறதுக்கோ போயிருப்பாங்க...

ஓ... அப்படியா?


------


ஏங்க இந்த கடலுக்கடியிலே பாலம்லாம் கட்றாங்களே, அதெல்லாம் துறு (துரு?) பிடிக்காமே எப்படி ரொம்ப நாளைக்கு இருக்கு?

எனக்கு எப்படிம்மா தெரியும்? ஒரு மனுசனாலே உலகத்திலே எல்லா விஷயத்தையும் தெரிஞ்சிக்க முடியாதும்மா...

எல்லா விஷயத்தையும் தெரிஞ்சிக்க வேணாம்.. அதுக்காக ஒண்ணுமே தெரியாமே எப்படி இருக்கமுடியும்னுதான் நான் கேக்கறேன்...

ஙே...

-------

ஒரு தடவை இந்த ராக்கெட்லே சந்திரனுக்குப் போய் அங்கேர்ந்து நம்ம இந்தியாவிலே, சென்னையை பாக்கணும்.

நான் வேணா ஒரு ஃபேர் ஏற்பாடு பண்ணி அனுப்பி வைக்கிறேன். திரும்பி வர்றது உன்னோட பொறுப்பு..

-----

ஒரு பெரிய நந்தவனத்திலே இருக்கக்கூடிய பல்வேறு பூச்செடிகளில் ஒன்றான ஒரு ரோஜாச்செடியில் அமர்ந்திருக்கக்கூடியதாகிய ஒரு வண்டின் படபடக்கும் இறக்கைகளைப் போல இமைகளைக் கொண்ட தலைவியே...

செகண்ட் டோஸ் காபி வேணும்னா, நேரே கேக்கவேண்டியதுதானே... எதுக்கு இப்படி சுத்தி வளைச்சி பேசறீங்க...

-----

தங்ஸ், இனிமே உன்கிட்டே சின்னச்சின்ன விஷயங்களைக்கூட மறைக்கறதில்லைன்னு முடிவு பண்ணிட்டேன்.

அப்பாடா, இப்போதான் நீங்க திருந்தியிருக்கீங்க..

இன்னிக்கு கார்த்தாலே உப்புமா சாப்பிடும்போது 5 கடுகு கீழே விழுந்துடுச்சு. அதை அப்படியே தூக்கி குப்பையிலே போட்டுட்டேன்!!!.

Read more...

Friday, August 15, 2008

தங்கமணிக்கு ரங்கமணியின் பயந்த கடிதம்!!!

அன்புள்ள தங்கமணி!


நலம். நாடலும் அஃதே!


கவனச் சிதறலுக்கு இடம் கொடாதிருக்கும் பொருட்டு நீ செய்த வாழைக்காய் பஜ்ஜியையும், கெட்டி சட்னியையும் தவிர்த்து இதை எழுதுகிறேன்.


தங்களின் சமையல் புளி(ப்பு) குழம்பாக இருந்தபோதிலிருந்து சாப்பிட்டுத் தொலைக்கவில்லை! மெள்ள நகர்ந்து, வேகமெடுத்து விருந்து மழையாகப் பொழியும் இன்னேரம், உங்களது சமையலை வேறு வழியில்லாமல் சாப்பிட்டு வருகிறேன்.


அவ்வப்போது எனது கருத்துக்களை நேரடியாகவும், குத்திக்காட்டியும், கொட்டிக் காட்டியும் தெரிவித்து வருகிறேன். இருப்பினும் தற்போது ஒரு கடிதம் - அதுவும் பயந்த கடிதம் எழுதும் நிர்பந்தம் ஏன் வந்தது? சொல்கிறேன். மேலே படியுங்கள்.


மேலே என்றால் என் தலை மேல் அல்ல, பதிவின் கீழே!!!


நேற்றுப் பார்த்த தொலைக்காட்சி சமைத்துப்பார் நிகழ்ச்சி. அதில் ஓரன்பர் குறிப்பிட்டார். 50%க்கும் மேல், காரக்குழம்பில் காரம் இருந்தால் உடல் நலக்குறைவு ஏற்படுமென்று!


ஆம். தங்கமணி! அது மட்டுமல்ல! இந்த சமைப்பது என்பது ஒண்ணாம் நெம்பர் கெடுதலான பழக்கம். எந்தப் பழக்கமும் கெட்ட பழக்கம் அல்ல என்பது எனது சித்தாந்தம். ஆனால் எப்பழக்கத்திற்கும் நாம் அடிமையாகிவிடக் கூடாது என்பதிலும் உறுதியாய் இருப்பேன்.


ஆனால் நீங்கள் சமையல் என்னும் பழக்கத்துக்கு அடிமையாகிவிடக் கூடாது என்பது எனது வேண்டுகோள்.


உங்களுடைய இந்த வயது சம்பாதிக்க வேண்டிய வயது. குடும்பத்தில் அக்கறை மிகக் காட்ட வேண்டிய வயது. தொழிலில் வெறியாய் முன்னுக்கு வருவதையே நினைத்து அதற்கான முயற்சியில் முழு மூச்சாக இயங்க வேண்டிய வயது.


உங்களுடைய உண்மையான ஓய்வு வேளையில், எப்போதாவது குழம்பு, ரசம் மற்ற எல்லா ஐட்டங்களையும் செய்யுங்கள். நல்ல வெளி நாட்டு ஐட்டங்களையும் நாடுங்கள். உங்கள் திறமை அசாத்தியமானது. நிச்சயம் ஜெயிப்பீர்கள். இன்னொரு நல்ல சமையல்காரியாகவும்கூட வரமுடியும். (மல்லிகா பத்ரிநாத் அல்லது ரேவதி ஷண்முகம் அமெரிக்கா வரும்போது உங்களுக்குத் தகவல் சொல்கிறேன். அறிமுகப் படுத்தியும் வைக்கிறேன்.)


சமையலுலகம் ஒரு மிரேஜ். சில சாப்பாட்டு ராமன்கள் இருப்பார்கள். ஒருத்தன் வெந்நீர் வைத்தாலும் அவனை ஓஹோ என்று புகழுவார்கள். அவன் சொதப்பினால், தங்கள் பசிக்கு அடுத்த உணவகத்தைத் தேடிப் போய் விடுவார்கள். அதைப் போல எல்லா வீட்டிலும் கொம்புசீவிகள் நிறையப் பேர் இருக்கிறார்கள். நான் முதன் முதலில் உப்புமா சாப்பிட்ட போதே வடகரை வேலன் இதுபற்றி என்னை எச்சரித்தார்.


சில கேள்விகளை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.


1) காலையில் எழுந்தது முதல் இன்று என்ன சமைப்பது? தொட்டுக் கொள்ள என்ன செய்வது என்ற சிந்தனையுடனே இருக்கிறீர்களா?


2) எத்தனை பேர் நமது ரெசிப்பீயைக் கேட்டு வாங்குகிறார்கள் என அறியும் ஆர்வத்தோடேயே இருக்கிறீர்களா?


3) தூங்கும் நேரம் நீங்கலாக மற்ற அனைத்து நேரமும் சமையலறையிலேயே இருக்க வேண்டுமென்று நினைக்கிறீர்களா?


4) குடும்பத்தோடு ஆற அமர்ந்து பொழுதைக் கழிக்க முன்பு போல முடியவில்லையா?


5) புதுசு புதுசா ஐட்டங்களைக் கற்றுக்கொள்ளப் போகிறோம் எனக் காலை முதல் இரவு வரை துடிப்பாயிருக்கிறதா?


இந்தக் கேள்விகளுக்கெல்லாம் மனச் சான்றின் படி பதில் சொல்லிப் பாருங்கள். உங்களுக்கே தெரியும் நீங்கள் எங்கே போகிறீர்கள் என்பது.


இரவில் நெடு நேரம் உங்களை சமையலறையில் காண முடிகிறது.


(“அப்ப நீ மட்டும் அர்த்த ராத்திரியில் சமையலறையில் என்ன செய்கிறாய்?” என்கிறீர்களா? உரிய பதில் இல்லை. இருந்தாலும் சொல்ல முடியாது.)


இரவு என்பது இறைவன் கொடுத்த வரம். இளைஞியான உங்கள் குடும்பத்துக்குத்தான் அந்த நேரம் சொந்த நேரமே தவிர unproductive, un remunerative, time consuming, tiresome, lengthy and tedious மேட்டரல்ல.


பகல் பூராவும் சின்னப்பாப்பாவின் பின்னே ஓடிவிட்டு நேரம் கெட்ட நேரத்தில் சாப்பிட்டுவிட்டு இரவிலும் இந்த சமையலறையில் நடமாடுவது நியாயமா?


எனக்குத் தெரிந்து சமையலறையில் மோர் கலந்துகொண்டிருந்த எவனோ ஒருத்தன் சமையலின் நெளிவு சுளிவுகளைத் தெரிந்துகொண்டு, இப்போது நியூயார்க் பீச்சில் நீர்மோர் விற்றுக்கொண்டிருக்கிறான்.


ஒரு பெண் தேவதையைக் குழந்தையாயும் பெற்றிருக்கிறீர்கள். அவளுக்கு உன்னதமான கல்வி அளிக்க வேண்டுமல்லவா? தலை சிறந்த முதல் நிலை அதிகாரியாக அவள் ஆனால் எவ்வளவு நன்றாயிருக்கும்?


வெளிநாட்டில் படித்துப் பணிபுரிந்தால் எப்படியிருக்கும்? அதற்காக உழையுங்கள்.


அவ்வப்போது சமையல் செய்யுங்கள். அதிகமா சமைப்பவர்களைச் சில வகைகளில் எளிதாகப் பிரிக்கலாம்.


வேறு எந்தப் பொழுதுபோக்கும் இல்லாதவர்கள்.. .. .. சமைக்க கேஸும், சாப்பிட என்னை மாதிரி ஒரு இ.வாவும் கிடைத்தால் சர்வ சதா காலமும் எதையாவது சமைத்துக்கொண்டே இருப்பார்கள்.


சமைப்பதைத் தவிர வேறு வேலை இல்லாதவர்கள். எதையாவது சமைக்கா விட்டால்… (சரி வேண்டாம்.)


இன்னும் சிலர் உணவகத்திலேயே பணிபுரிபவர்கள்... இவர்களுக்கு கரண்டியும், ஸ்பூனும் ஒரு வரமாக இருந்து கொஞ்ச காலத்துக்குப் பின் சாபமாக மாறியிருக்கும். அவர்கள் தங்களின் சுயத்தை முழுதும் இழந்துவிடாதிருக்க என்னேரமும் எதையாவது சமைத்துக் கொண்டே இருப்பார்கள்.

இன்னும் சிலர் பலவித மன நெகிழ்வுகளுக்கு ஆளானவர்கள். தங்களை மற்றவர்கள் கேவலமாக திட்ட வேண்டும் என விரும்புவார்கள். ஏன் காரக்குழம்புக்கு மிளகாய்ப்பொடி தொட்டுக்கொள்ள வேண்டும் எனவும் விரும்புவார்கள்.

இன்னும் சிலர் மேல்தட்டு சமையல்காரர்கள்.

இன்னும் சிலர் என்னை மாதிரி. பரபரப்பில்லாமல் ஓய்வு நேரம் கிடைக்கும்போது ஒரு Maggi.
When time warrants we wear an entirely different mask. இது ஒரு விளையாட்டு மாதிரி. வேடிக்கை பார்க்கிற feeling! சமைப்பதைவிட சமையல்காரனை அவதானிப்பவர்கள்.

Kindly be a balanced man. Don’t get excited!

எல்லாருக்குமே தான் தொப்பையும் தொந்தியுமாக இருக்க வேண்டுமென்ற உந்துதல் இருக்கும். குழந்தைகள் தேவையில்லாமல் அழுவதும் குமரிகள் அங்கங்கள் பிதுங்க ஆடை அணிவதும் தொப்புள் தெரியச் சேலை கட்டுவதும் எதற்காக என்று நினக்கிறீர்கள்? Exhibitionism என்கிற ஒருவிதமான phobiaவின் லேசான வெளிப்படுதான் இவை.

தாமஸ் ஹார்டி சொன்னது போல “far from the madding crowd” ஆக இருக்க வேண்டாமா நீங்கள்?
ஒரு முறை சர்வர் சுந்தரத்திடம் கேட்டேன்.

“ஐயா! இட்லியும், தோசையும் இவ்வளவு சூடா கொடுக்கிறீர்கள். காபி ஆற்றியும் கொடுக்கிறீர்கள்.. நீங்கள் ஏன் ஒரு உணவகம் ஆரம்பித்து அதில் சமைத்துக் கொண்டேயிருக்கக்கூடாது?”

“அதிகம் டிப்ஸ் கிடைக்காத உணவக சர்வர் தனது இல்லக் கிழத்தியை வைத்து உப்புமா கிண்டும் பணி செய்தமையை ஞான் செய்ய விரும்பவில்லை” என்றார்.

கடும் சினம் வந்தது எனக்கு. முதல் முறையாகக் கடுமையான வார்த்தைகளால் அவரைக் கடிந்துவிட்டுக் காப்பி குவளையைப் பாதியிலேயே வைத்துவிட்டு எழுந்து வந்துவிட்டேன்.
அன்றிலிருந்து 4 நாட்களாய் அவருடன் பேசுவதைத் தவிர்த்தும் விட்டேன்.

தங்கமணி! மீண்டும் சொல்கிறேன். மயக்கத்திலிருந்து உடனடியாக மீளுங்கள். நல்லா தொப்பை வருவதைத் தவிர வேறெந்த முன்னேற்றத்துக்குக் கிஞ்சித்தும் வழிகாட்டாத உலகம் சமையல் உலகம்!

பின் - 1: இந்த ஐடியா கொடுத்த எல்லோருக்கும், குறிப்பாக வடகரை வேலனுக்கும் நன்றி... நன்றி... நன்றி...


Read more...

Thursday, August 14, 2008

பதிவர்கள் எல்லாருக்கும் அவசரக் கடிதம்!!!


Read more...

Wednesday, August 13, 2008

நான் எடுக்கலே.. நான் எடுக்கலே - அரைபக்கக் கதை

ஒரு வாரமாயிடுச்சு அந்த பெரியவர் இந்த வீட்டுக்கு வந்து. தனியாக இருக்கும் எனக்கு கூடமாட எல்லா வேலையிலும் ஒத்தாசையாக இருந்தாலும், தன் பேரைக்கூட சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். முதல் நாள், அவரது ஊர், பேர், ஏதாவது பிரச்சினையா - என்று ஏகப்பட்ட கேள்விகள் கேட்டாலும் - அவரிடமிருந்து பதில் ஒன்றுமில்லை. அவராக வாய் திறந்து பேசட்டும் என்று நான் விட்டுவிட்டேன்.


' நான் எடுக்கலே.. நான் எடுக்கலே.' என்று தொடர்ச்சியாக சொல்லிக்கொண்டு போன வாரம் கோயில் வாசலில் உட்கார்ந்திருந்த அந்த பெரியவரைப் பார்த்தபோது எனக்குப் பாவமாக இருந்தது. பல நாட்களாய் மழிக்கப்படாத தாடியுடன் எங்கேயோ வெற்றுப்பார்வை பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்த அவர், ' நான் எடுக்கலே'யைத் தவிர வேறெதுவும் பேசத்தயாராக இல்லை.


அவரை அப்படியே விட்டுவிட மனமில்லாமல், நான் தனியாக இருக்கும் இந்த அறைக்கு கூட்டிவந்துவிட்டேன். முதல் நாள் சும்மா உட்கார்ந்திருந்த அவர், அடுத்த நாளிலிருந்து வீட்டுவேலை செய்ய ஆரம்பித்துவிட்டார் - ஆனால், எதுவும் பேசாமல். கேட்ட கேள்விகளுக்குக்கூட பதிலில்லை.


ஒரு வாரம் கழித்து இன்று பளிச்சென்று தாடியை மழித்துக்கொண்டு, குளித்து கோவிலுக்குப் போய் வந்த அவர், வழக்கம்போல் ஒன்றும் பேசாமல் விபூதியை என்முன் நீட்டினார். நானும் எதுவும் பேசாமல் அதை எடுத்துக்கொண்டவுடன், சமைப்பதற்கு நகர்ந்து சென்று விட்டார்.


அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டது. என் மணிபர்ஸைக் காணவில்லை. என் கால்சட்டையை துவைக்க எடுக்கும்போது பர்ஸை வேறெங்கும் வைத்துவிட்டாரா?... "அண்ணாச்சி, என் பர்ஸை பாத்தீங்களா?.. இங்கேதான் இருந்துச்சு...."


அன்று மாலையிலிருந்து அந்தப் பெரியவரைக் காணவில்லை.

Read more...

Tuesday, August 12, 2008

பரிசல் - மென்பொருள் நிபுணரானால்!!!

சென்னையே ஒரு ஆஃப்ஷோர்தான். சென்னைக்கு திருப்பூர் ஆஃப்ஷோர் ஆகமுடியாதான்னு கேக்காதீங்க. மரியாதையா சென்னைக்கு வந்து வேலை பாருங்க.
----

நல்லாத்தானே மென்பொருள்லே வேலை செய்றீங்க, எதுக்கு தினமும் 'மொக்கை' போடுறேன், 'மொக்கை' போடுறேன்னு சொல்லிக்கிறீங்க?


---


மென்பொருள் பெர்பார்மென்ஸ் தூக்கணும்னா, அதுக்கு பலம் தேவையில்லீங்க. நான் ஒல்லியா இருக்கேன்னு சொல்லாதீங்க...
----


நீங்க கவிதை நல்லா எழுதுவீங்கன்னு எனக்கு தெரியும். அதுக்காக கோடிங்கையும் கவிதை மாதிரி மடக்கி மடக்கி எழுதாதீங்க...

--


என்னது, நீங்க முதல்முதல்லே வேலை பாத்த மென்பொருள் 'க்ளிப்பனா'? நான் அந்த மாதிரி ஒண்ணை கேள்விப்பட்டதே இல்லையே?

ஆமா. எனக்கு 'க்ளிப்பர்'ஐ ரொம்ப நாளா தெரியும்றதாலே, அதோட பேரை 'க்ளிப்பன்'னு மாத்திட்டேன்.

---


'சந்திப்பிழை'யெல்லாம் பதிவெழுதும்போது மட்டும்தாங்க பாக்கணும். கோடிங் செய்யும்போது பாத்தா, மென்பொருள் காறித் துப்பிவிடும்.

----

உங்களுக்கு மொத்தம் எவ்ளோ வருட முன்னனுபவம்னுதானே கேட்டேன்? நீங்க முதல் மென்பொருள் செய்த தேதி, முதன்முதல் டெஸ்டிங் செய்த தேதின்னு ஏன் எல்லாத்தையும் தேதிவாரியா சொல்லிக்கிடிருக்கீங்க?

-----

தொடர்ச்சியா வேலை பாக்காதீங்க. கொஞ்சம் ஓய்வெடுங்கன்னுதானே சொன்னேன். எதுக்கு நான் ராஜீனாமா பண்றேன்னு சொல்றீங்க?

---

பின் : இந்த பதிவு எழுதி ரொம்ப நாளாச்சு.. (கடைசி 2ஐத் தவிர). இன்னிக்குத்தான் போட நேரம் கிடைச்சது. . விட்டுப்போனவற்றை மக்கள் பின் மூலமாக சொல்லுங்க....


Read more...

Monday, August 11, 2008

முறை தவறி நடந்துகொண்டேன்!!!

நான் அமெரிக்கா வந்து இப்படி செய்வேன்னு கொஞ்சம்கூட எதிர்ப்பார்க்கவேயில்லை.

நானா இப்படி 'முறை தவறி' நடந்துக்கிட்டேன்? நினைத்துப் பார்த்தால் எனக்கே என்மேல் வெறுப்பாய் வருகிறது. ஒரு நிமிடம் நிதானமாக யோசித்திருந்தாலும் இப்படி நடந்திருக்க வாய்ப்பேயில்லை. மேலும் இப்படி காலம் பூராவும் நினைத்து வேதனைப்பட்டிருக்கவும் தேவையில்லை.

எனக்கு 'அந்த' அனுபவம் முதல்முறையாக இருந்ததால், மிகவும் நடுக்கமாக இருந்தது. படபடப்பாகவும் இருந்தது. நிறைய தண்ணீர் குடித்துவிட்டு, ஒரு ஐந்து நிமிடம் சாலையோரமாகவே உட்கார்ந்துவிட்டேன்.

கணிணியில் இருக்கும் 'பின்னோக்கி' பொத்தானைப் போல், வாழ்க்கையிலும் ஒரு 'பின்னோக்கி' இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்?

நான் 'முறை தவறியதை' யாரும் பார்க்காமல் இருந்திருந்தாலாவது நல்லாயிருந்திருக்கும். ஆனால், பல பேர் அதைப் பார்த்துவிட்டார்கள். அவர்களில் சிலர் என்மேல் காறி உமிழவும், பலபேர் என்னைப் பார்த்து பயந்து ஒதுங்கிப்போவதற்கும் தயாராக இருந்தனர். நல்லவேளை யாரும் காவல்துறையினருக்கு தெரிவிப்பதற்கு முன் அந்த இடத்தைவிட்டு நான் வந்துவிட்டேன்.

ஆண்களுக்கு இந்த விஷயம் ரொம்ப சாதாரணமென்றாலும், மிகவும் சென்சிடிவான பெண்கள் இதை மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள் என்பதற்கு என் தங்கமணியே சாட்சி.

இனிமேல் என் வாழ்நாளில் இப்படி தவறு செய்யமாட்டேன் என்று தங்கமணியிடம் சத்தியம் செய்தும், அவர் என்னை நம்பத்தயாராக இல்லை. 'எப்போ இப்படிப்பட்ட அசிங்கத்தை ஒரு முறை செய்தீர்களோ, மறுபடியும் செய்யமாட்டீர்களென்று என்ன நிச்சயம்?' என்று என்னை காய்ச்சி எடுத்துவிட்டார்.

அந்த சம்பவம் நடந்து ஒரு வருடமாயிருந்ததாலும், அதற்கு பிறகு அப்படி நான் முறை தவறாததாலும், தற்போது தங்கமணியின் கோபம் சற்றே குறைந்திருக்கிறது.

சரி. யாரும் தப்பா நினைத்துக் கொள்வதற்குள் 'அந்த' விஷயம் என்னவென்று சொல்லிவிடுகிறேன்.

அமெரிக்காவில் வண்டியை சாலையின் வலதுபுறமாக ஓட்டவேண்டும். ஆனால், நான் ஏதோ டென்ஷனில் ஒரு நிமிடத்திற்கு 'முறை தவறி' இடது புறமாக (இந்தியாவில் ஓட்டுவதுபோல்) ஓட்டிவிட்டேன்.

சென்ற வருடம் ஒரு கோவிலுக்குப் போயிருந்தபோது, ஒரு இடத்தில் சரியாக திரும்பாததால், வண்டியை ஒரு வீட்டினுள் விட்டு, பின்னோக்கித் திருப்பி, மறுபடி அதே பாதையில் வரவேண்டியிருந்தது. அப்படித் திரும்பியபோது, 'பின்னோக்கி' கியரை 'முன்னோக்கி' மாற்றாமல் ஓட்டியதால், வண்டி வேகமாக பின்னால் சென்றது. சற்று தள்ளி நின்றிருந்த வண்டிகள் 'சத்தம்' போடவும், நான் டென்ஷனாகி, வேகமாக 'கியரை' மாற்றி, அதே டென்ஷனில் முறை தவறி இடதுபக்கம் ஓட்ட ஆரம்பித்துவிட்டேன்.

பின்னால் அமர்ந்திருந்த தங்கமணி, தப்பான சைடில் போறீங்க போலிருக்கே என்றவுடந்தான், அது புரிந்து, சடாரென்று பாதையை மாற்றி ஓட்ட ஆரம்பித்தேன்.

பின் - 1: ஆண்டவா, நாளைக்காவது ஒரு சூடான பதிவுக்கான ஐடியா கொடுப்பா. இப்படி மொக்கை போடவெக்கறியே!!!

பின் - 2: நம்ம மன்றத்தலைவி ராப் அவர்களின் லீவ் லெட்டர் கிடைத்தது. கொஞ்சம் பிஸியாக இருப்பதாகவும், சில நாட்கள் பதிவுகள் எதுவும் பார்க்கமுடியாதென்றும்/பின்னூட்டங்கள் போட முடியாதென்றும் கூறியிருக்கிறார். எதுவாகயிருந்தாலும், மன்றத்தின் பொதுக்குழு கூடித்தான் முடிவு செய்வோம் என்று கூறிவிட்டேன்.

Read more...

Thursday, August 7, 2008

கேள்வி-பதில் Part 5

கே: அடங்கொய்யா.. அவனா நீயி??? - அப்படின்னு யாரையாவது திட்டியிருக்கீங்களா?

சில வருடங்களுக்கு முன் சென்னை-மயிலையில் info-driveங்கிற ஒரு இடத்திலே - பவர் பில்டர்- சீபல் (Power Builder & Siebel) படிக்க சேர்ந்திருந்தேன். நமக்கு சொல்லிக்குடுத்த வாத்தியாரும் சின்னபையன் தான். நல்லாத்தான் சொல்லி கொடுத்துட்டிருந்தான்.

ஆனா பாருங்க, அந்த PBயோட சீபல் டேட்டாபேஸ் இணையவேயில்லை. பத்து பதினெஞ்சி நாளா நாங்களும் என்னென்னவோ முயற்சி செய்துக்கிட்டிருந்தோம். பக்கத்தில் உட்கார்ந்திருந்தவங்க, அட நான் ரெண்டு மாசமா முயற்சி செய்றேன், அது முடியல என்றார்.

ஆனா, நாங்க விடாமுயற்சி செய்து ஒரு வழியா அதை இணைச்சி, வாத்தியாரைக் கூட்டி வந்து காட்டினா, அவர் சொன்னதைக் கேட்டு அங்கேயே மயக்கம் போட்டு விழாதா குறைதான்....

அவர் சொன்னது இதுதான்..."அடேடே, கனெக்ட் ஆனா இப்படித்தான் இருக்குமா. நான் பாத்ததேயில்லையே..."

அடப்பாவி, அவனா நீயி... எங்களுக்கு ரெண்டு மாசம் முன்னாடி அங்கேயே படிச்சிட்டு, எங்களுக்கே வாத்தியாரா வந்துட்டியா..... அவ்வ்வ்வ்வ்...

கே: வீட்டுக்கு சொல்லாத விபத்து ஏதாவது.....?

ப: ஒரு சமயம் என் இருசக்கர வாகனத்தில், சென்னை கத்திப்பாராவிலிருந்து நங்கனல்லூர் போகும்போது, வழியிலிருக்கும் ஒரு போக்குவரத்து சிகப்பு விளக்கில் நின்றுகொண்டிருந்தோம். வண்டியில் என்னுடன் தங்ஸ்.

பச்சை வந்தவுடன் மெதுவாக வண்டியை எடுத்துப் போய்க்கொண்டிருந்தேன். அப்போது இன்னொரு இருசக்கர வாகனம் ஒன்று படுவேகமாக எங்களைக் கடந்து செல்ல முயன்றது. அந்த வண்டியில் பின்னால் அமர்ந்திருந்த ஒரு பெண், காற்றில் பறந்துகொண்டிருந்த புடவைத்தலைப்பு, கைப்பை அனைத்தையும் பிடிக்க முயற்சித்துக்கொண்டிருந்தார்.

அவர் என்னைப் பார்த்து மயங்கினாரா, அல்லது என் இரு சக்கர வாகனத்தைப் பார்த்து மயங்கினாரா தெரியாது, ஆனால், அவரது கைப்பையை என் பின்பார்க்கும் கண்ணாடியில் (Rear view) மாட்டிவிட்டார். தூண்டிலில் அகப்பட்ட மீன்போல் என் வண்டியும் அவர் இழுத்த இழுப்புக்கு சென்று - ஒரு பத்தடி தள்ளி நான் விழ - கைப்பையை உருவிக்கொண்டு - நிற்காமலேயே அவர் பறந்துவிட்டார்.

அவ்வளவு நேரம் தாக்குப்பிடித்து உட்கார்ந்திருந்த தங்ஸும் கீழே விழ, முழங்கையிலும், காலிலும் சிறு சிராய்ப்பு. எங்களுக்குப் பின்னால் வந்த வண்டிகள் டக்கென்று நின்றுவிட்டதால், பெரியதாக பிரச்சினை வேறெதுமில்லை.

உடனே, டாக்டரை (விஜய் அல்ல!!!) சென்று பார்த்து, தங்ஸுக்கு ஒன்றுமில்லை என்று தெரிந்துகொண்டு வீட்டுக்குச் சென்றோம். விபத்து பற்றி வீட்டுக்குச் சொல்லவில்லை. ஆனால், அந்த மருத்துவர் (குடும்பத்துக்கு தெரிந்தவர்தான்) எங்கள் வீட்டுக்கு தொலைபேசும்போது அவர் விபத்து பற்றி விசாரித்ததில், வீட்டுக்கு தெரிந்து - ஒரே திட்டுதான்.

ஆமா, இதென்ன. சாதாரண சிராய்ப்புதானே, இதுக்கு எதுக்கு திட்டு, கலாட்டா என்று நீங்கள் நினைக்கலாம்.

ஆனா, மேட்டர் வேறே. அப்போ தங்ஸ் வயிற்றில் குட்டி பாப்பா 6 மாதம்!!!

பின் - 1: நேரமின்மையால், இந்த கே-ப பகுதியில் இரண்டு கேள்விகள் மட்டுமே இடம்பெறுகிறது. கு.ப. மூணாவது இருக்கணும்னு நினைக்கிறேன். ஓகே. அடுத்த தடவை..

பின் - 2: அண்ணன் பரிசல் வேண்டுகோளுக்கேற்ப, கே-ப விற்கு ஒரு புது லேபிள் போட்டாச்சு. பழைய பதிவிலே போய் லேபிள் மாத்தி - பப்ளிஷ் பண்ணா - மறுபடி தமிழ்மண முகப்பிற்கு வந்துவிடுமா - என்று யாராவது சொல்லுங்க... நன்றி...

Read more...

Wednesday, August 6, 2008

பரிசுச்சீட்டு - ஒரு சிறிய கதை, மூன்று முடிவுகள்!!!

சூடான தோசை தின்றுகொண்டே பரிசுச்சீட்டு முடிவுகளைப் பார்த்துக்கொண்டிருந்த சுரேஷ், துள்ளி குதித்தான்.


"கடவுளே, கடவுளே... அந்த எண் என்னுடையதா இருக்கவேண்டுமே..."


ஓடிப்போய் சட்டைப்பையில் இருந்த பரிசுச்சீட்டை எடுத்து எண்ணை சரி பார்த்தான்.


"தங்கமணி... தங்கமணி... ஓடியா... எனக்கு பரிசு விழுந்திருக்கு... எவ்ளோ தெரியுமா?.. ரெண்டு கோடி.. ஆஹா.. என்னாலே நம்பவே முடியலையே.. சீக்கிரம் வாம்மா... எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலையே..."


முடிவு 1:


'டமால்'னு ஒரு சத்தம். சுரேஷ் கட்டிலிலிருந்து கீழே விழுந்தான். ச்சே. அவ்வளவும் கனவா என்று நொந்தபடி அலுவலகத்திற்கு கிளம்பினான்.

(இந்த முடிவை எழுதியிருந்தேன்னா, என்னுடைய ஐ.பி. யை வைத்து இடம் தேடி வந்து அடிக்கறதுக்கு ஆள் நிறைய பேர் இருப்பாங்கன்னு எனக்குத் தெரியும்!!!!. அதனால், தொடர்ந்து படிக்கவும்...).

முடிவு 2:

"ம். பரிசு விழறதெல்லாம் கதையிலேயும், சினிமாவிலேயும்தான் நடக்கும்" என்றபடி படித்துக் கொண்டிருந்த குமுதத்தை மூடி வைத்துவிட்டு, அலுவலகத்திற்கு கிளம்பினான் சுரேஷ்.

(இந்த முடிவை எழுதினாலும், @#$@# சொல்றதுக்கு பல பேர் காத்துக்கிட்டிருப்பாங்க... என்ன நான் சொல்றது... அதனால், இந்த முடிவும் வேண்டாம்... தொடர்ந்து படிக்கவும்...).

முடிவு 3:

சுரேஷின் கூச்சலைக் கேட்டு தங்கமணி அங்கே வந்தார்.

"என்னங்க.. பரிசு ரெண்டு கோடியா?"

"ஆமாம்மா. நாளைக்கே போய் அந்த பரிசை வாங்கிட்டு வந்துடறேன். இனிமே நமக்கு பிரச்சினையேயில்லை. ஜாலியா இருக்கலாம். எல்லா பணத்தையுமெ எங்காவது சேமிச்சிட்டு வட்டியிலேயே காலத்தை ஓட்டிடலாம். உனக்கு சந்தோஷம்தானே?"

" நீங்க எந்த காலத்துலே இருக்கீங்க? நம்ம ரெண்டு பசங்களையும் அடுத்த வாரம் நர்சரி பள்ளியிலே சேர்க்கணும். அவங்களோட ஒரு வருஷத்திய ஃபீஸும், டொனேஷனும் உடனடியா கட்டணும். அதனாலே என்ன பண்றீங்க, முதல்லே, அந்த ரெண்டு கோடியை வாங்கி அவங்க ஸ்கூல்லே கட்டிட்டு, மீதி இருக்கற பணத்துலே அவங்களுக்கு ஆளுக்கொரு லாலிபாப் வாங்கிக்குடுங்க. சந்தோஷப்படுவாங்க. சரி சரி. நீங்க அலுவலகத்திற்கு கிளம்பற வழியைப் பாருங்க."

(இதுதான் ஒரிஜினல் முடிவு. லேபிளையும் ஒரு தடவை பாத்திடுங்க.)

பின் - 1: சுரேஷ் சாப்பிட்டிண்டிருந்தது ____ன்னு எழுதலாம்னுதான் முதலில் நினைத்தேன். ஆனால், நண்பர் திரு.வால்பையன் (இதைப் படிப்பாரா!!!) ஏதாவது சொல்வாரோன்னு பயந்துதான் அதை 'தோசை'ன்னு எழுதினேன்!!!.... அவ்வ்வ்வ்வ்...

Read more...

Tuesday, August 5, 2008

டாக்டர், டாக்டர் - அரை பக்கக் கதை

"சொல்லுங்க, உங்களுக்கு என்ன பிரச்சினை"?

"டாக்டர். என் பேர் சுரேஷ். நான் ஒரு மென்பொருள் நிபுணரா இருக்கேன். எனக்கு சில நாட்களா ஒரு மாதிரியான பிரச்சினை. நீங்க ஒரு நல்ல மனோதத்துவ டாக்டர்னு சொன்னாங்க. அதுதான் உங்களைப் பாத்து சொல்லலாம்னு வந்தேன்".


"சரி, சொல்லுங்க".


"எனக்கு ஆவி, பேய், பிசாசு இதிலெல்லாம் நம்பிக்கையே இல்லை. இந்த கூடு விட்டு கூடு பாய்றதெல்லாம் சுத்த பேத்தல்".


"உங்க பிரச்சினை மட்டும் சொல்லுங்க. அதோட காரணத்தை நான் சொல்றேன்".


"கொஞ்ச நாளா எனக்குப் பக்கத்துலே எப்பவுமே ஒருத்தர் நிக்கறா மாதிரியே இருக்கு டாக்டர்".

"நிக்கறா மாதிரின்னா? அவங்க உருவம் உங்களுக்குத் தெரியுதா? அவங்க குரல் கேட்குதா"?

"குரலெல்லாம் ஒண்ணும் கேக்கலே டாக்டர். ஆனா, நான் பாக்கறதெல்லாம் அவங்களும் பாக்கற மாதிரியே இருக்குது. அதிலே என்னன்னா, அவங்க பாக்கற கோணம்கூட எனக்குத் தெரியுது".

"எப்போல்லாம் அப்படி நடக்குது? அப்படி நடந்ததுக்கு ஒரு உதாரணமோ அல்லது ஒரு சம்பவமோ சொல்லுங்க".


"நேத்து காபி சாப்பிடலான்னு ஒரு ஹோட்டல் போனேன். சர்வர் காபி கொண்டு வந்து என் மேஜையிலே வெச்சிட்டாரு. என் பக்கத்துலே நின்னு பாக்கறவரோட கோணம் எனக்குத் தெரியுதுன்னு சொன்னேனில்லையா, அந்த கோணத்திலே போய் காபி கப் எடுக்கலாம்னு போனேன்".

"எடுத்தீங்களா"?


"இல்லே டாக்டர். காபி கப்பை தள்ளி விட்டுட்டேன். அப்புறம் திட்டு வாங்கிண்டு வீடு வந்து சேந்தேன். எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல டாக்டர்".


"ஒரு சீட்டு எழுதித்தர்றேன். நீங்க உங்க கோணத்திலேயோ அல்லது உங்க பக்கத்துல நிக்கறவரோட கோணத்திலேயோ அதை படிச்சிட்டு, அதன்படி நடந்துக்கோங்க".


(சுரேஷ், டாக்டர் எழுதிய சீட்டைப் படிக்கிறார்).


"உங்களுக்கு எல்லாமே இரண்டு இரண்டாகத் தெரிகிறது. ஒரு நல்ல கண் டாக்டரைப் பார்க்கவும்".

Read more...

Monday, August 4, 2008

ஷங்கர் படத்தில் நடிக்க ஜே.கே.ரித்தீஷ் மறுப்பு!!!

ஜே.கே.ரித்தீஷ் வீட்டில் எல்லா பத்திரிக்கையாளர்களும் குவிந்துள்ளனர்.


டைரக்டர் ஷங்கர் படத்தில் நடிக்க வேண்டுமென்று பல பேர் காத்துக்கொண்டிருக்க, தேடி வந்த வாய்ப்பை ஜே.கே மறுத்திருப்பதால் கோடம்பாக்கத்தில் உச்சக்கட்ட பரபரப்பு.


நிருபர்: என்ன ஜே.கே. சார், இப்படி பண்ணிட்டீங்க. இதுக்கு என்ன காரணம்?


ஜே.கே: எல்லாருக்கும் வணக்கம். நீங்க யாரும் இதில் அதிர்ச்சியடையாதீங்க. படத்தின் கதை எனக்குப் பிடிக்காததாலேதான், நான் அந்த வாய்ப்பை வேண்டாமென்று உதறிவிட்டேன். இதில் எனக்கு எந்தவித வருத்தமுமில்லை.


நிருபர்: ஷங்கரோட படங்கள் எல்லாம் மிக பிரம்மாண்டமாகத்தான் இருக்கும். மக்களுக்கு ஏதாவது ஒரு கருத்தும் அதில் இருக்கும். உங்களோட திரைப்பட, அரசியல் வளர்ச்சிக்கு கண்டிப்பாக அது ஒரு நல்ல தொடக்கமாக இருக்குமே.


ஜே.கே: அவர் எனக்கு சொன்ன கதை பிரம்மாண்டமானதுதான். ஆனால் எனக்கு ஆனா எனக்கு அது ரொம்ப சாதாரணம்.


நிருபர்: என்ன இப்படி சொல்லிட்டீங்க? அந்த கதை என்னன்னு நாங்க தெரிஞ்சிக்கலாமா?


ஜே.கே: கதை நான் சொல்லமுடியாதுங்க. டைரக்டர் சார் கோச்சிப்பார். அந்த கதையிலே ஹீரோவோட அறிமுகக் காட்சியை மட்டும் சொல்றேன். கேட்டுக்கங்க.

ஹீரோ வெளி நாட்டிலேர்ந்து சென்னைக்கு வருகிறார். அவர் விமானத்தில் இறங்கும்போது, ஆயிரக்கணக்கான மக்கள் அவருக்கு வரவேற்க காத்திருக்கின்றனர். விமான நிலையத்தில் ஏகப்பட்ட மலர்களைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது. தாரை, தப்பட்டை, பேண்ட் வாத்தியங்கள் வாசித்துக்கொண்டிருக்கின்றனர். யானைகள் கையில் மாலை கொடுத்து ஹீரோவுக்கு சூடச்சொல்கிறார்கள். அதே இடத்தில் ஒரு சூப்பர் பாட்டு. ஹீரோவுடன் நடனமாட பாலிவுட் நட்சத்திரங்கள் ஐந்து பேரை புக் செய்திருக்கிறார்கள். பாட்டு முடிந்து, காமிரா முன் வந்து ஹீரோ 'வணக்கம். நான் வந்துட்டேன். இனிமே யாரும் கவலைப்படவேண்டாம்' அப்படின்னு சொல்லணும்.


இதுதான் ஷங்கர் சார் சொன்ன ஒரே ஒரு சீன். இந்த சீன் ரிச்சாகவே இல்லையென்பதால், நான் அந்த படத்தை வேண்டாமென்று சொல்லிவிட்டேன்.


நிருபர்: எனக்கென்னவோ நீங்கள் ஒரு அருமையான வாய்ப்பை இழந்துவிட்டதாகவே தோன்றுகிறது. உங்கள் முடிவை மறுபடியும் பரிசீலிப்பீர்களா?


ஜே.கே: கண்டிப்பாக கிடையாது. நான் ஒரு தடவை முடியெடுத்துட்டா... ச்சீ.. முடிவெடுத்துட்டா எடுத்ததுதான். உங்க ஆதங்கத்துக்கு நன்றி... மீண்டும் சந்திப்போம். நன்றி...


(எல்லா நிருபர்களும் போன பிறகு, கூட இருக்கும் நண்பர் ஒருவர்...)


நண்பர்: என்னடா இப்படி பண்ணிட்டே?


ஜே.கே: டேய், நான் அந்த படத்தில் நடிக்காததற்கு உண்மையான காரணத்தை சொன்னா, நீ வெறுத்துடுவே.


நண்பர்: என்ன, அப்போ உண்மையான காரணம்தான் என்ன, சொல்லுடா.


ஜே.கே: அந்த படத்தில் முன்னாடி ரஜினி சார்தான் நடிக்கறதா இருந்தது. அவர் நடிக்கமுடியாததாலேதான் என்னை கூப்பிட்டு அனுப்பிச்சாரு ஷங்கர் சார்.


நண்பர்: அதுதான் எனக்கு தெரியுமே? அப்புறம்?


ஜே.கே: மேற்படி அறிமுகக் காட்சியை சொன்னவுடனேயே, நான் படத்துலே நடிக்கறதுக்கு ஓகேன்னுட்டேன். அவரும், அப்படின்னா இன்னிக்கே அந்த சீனை எடுத்துடலாம். எல்லாம் ரெடியா இருக்கு அப்படின்னார்.

நண்பர்: வாவ். விமான நிலையத்திலே எல்லா ஏற்பாடும் தயாரா இருந்துச்சா?

ஜே.கே: நானும் அவர்கிட்டே இதைத்தான் கேட்டேன். அதுக்கு அவரு சொன்னதைக் கேட்டு அங்கேயே மயக்கமாகி விழுந்துட்டேன்.


நண்பர்: அப்படி என்னதாண்டா சொன்னாரு?


ஜே.கே: அப்படிப்பட்ட பொருட்செலவிலே ஒரு அறிமுகக் காட்சி ரஜினிக்கு மட்டும்தான் வெப்பாராம். எனக்கு... எனக்கு...


நண்பர்: உனக்கு?


(அடுத்த பாராவை சொல்லிட்டு ஜேகே மறுபடியும் மயக்கமாகி விழுகிறார்).


ஜே.கே: என் கையிலே ஒரு ஹாண்டிகெம் (Handycam) கொடுத்து விமான நிலையம் போகச்சொன்னாரு. போய் அந்த ' நகரும் படிக்கட்டுகளுக்கு' எதிரே இந்த ஹாண்டிகேமை வைத்துவிட்டு, நான் மேலேயிருந்து இறங்கி ஹண்டிகேம் பக்கத்துலே வந்து 'வணக்கம். நான் வந்துட்டேன். இனிமே யாரும் கவலைப்படவேண்டாம்' அப்படின்னு சொல்லிட்டு, ஹாண்டிகேமை ஆஃப் செய்து, அவர்கிட்டே போய் கொடுக்கணுமாம். மத்த படப்பிடிப்பு அடுத்த வாரம் வெச்சிக்கலாம்னார்.

பின் - 1: இது ஒரு கற்பனைக் கதைதான். நம்ம தல, அண்ணன் ஜே.கே, டைரக்டர் ஷங்கரோட படத்தில் நடிக்கணும்றதுதான் என் விருப்பம்.

பின் - 2: மன்றத்தோட பொருளாளர் அப்துல்லா அண்ணாச்சி அவர்கள் நடந்த விபத்துலேந்து விரைவில் மீண்டு வந்து - எல்லா பதிவுலேயும் 'மீ த பஷ்டு' போடவேண்டுமென்று - இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.


Read more...

Friday, August 1, 2008

கிபி 2030 - சென்னைக்குப் போறீங்களா?

"வடமாவட்டங்களுக்குப் போறவங்க மட்டும் இங்கே இறங்குங்க. மத்தவங்களுக்கெல்லாம், அடுத்த நிறுத்தம்" - ஓட்டுனரின் அறிவிப்பு கேட்டது. கூடவே யாரிடமோ கத்துவதும் - "ஏய், வீட்லே சொல்லிட்டு வந்துட்டியா, வண்டி வர்றது தெரியல?.. மாடு மாதிரி குறுக்கே வர்றியே?"...


"ஏங்க, அடுத்தது நம்ம இடம்தானே?. எழுந்திருச்சி முன்னாடி போய் கதவுகிட்டே நிப்போம். வாங்க".



"என்னடி, எழுந்திருக்க எங்கே இடம் இருக்குன்னு நீ இப்போ கிளம்பிட்டே?. வழியிலே பெட்டி, படுக்கையெல்லாம் அடுக்கி வெச்சிருக்காங்களே?"



"ஏங்க, நீங்க முன்பதிவு செஞ்சிட்டுதானே வந்தீங்க? முன்பதிவு செய்த பெட்டியிலுமா இப்படி கூட்டம்?"



"ஆமாண்டி. இப்போல்லாம், முன்பதிவுக்கெல்லாம் அர்த்தமேயில்லாமெ போயிடுச்சு. கொஞ்சம் கூட வெக்கமேயில்லாமெ திடீர் பயணம்னு ஏர்றவனுங்க எல்லாம் - கொஞ்சம் தள்ளி உக்காருங்க சார்னு உக்காந்துடறாங்க. விட்டா என் மடியிலேயே உக்காந்துடுவாங்க. கம்மனாட்டிப் பசங்க"..



(எதிரில் உட்கார்ந்திருப்பவர் திடீரென்று எழுந்து)


"ஏய், யாரைப் பாத்து கம்மனாட்டிப் பசங்கன்னு சொன்னே? நான் யார் தெரியுமா? வெட்டிடுவேன். ஒரே ஒரு டிக்கெட் வாங்கிட்டா, இந்த வண்டி முழுக்க உனக்கே சொந்தம்னு நினைச்சியா?"



"ஐயோ. விட்டுடுங்க. இவர் ஏதோ தெரியாமெ சொல்லிட்டார். ஏங்க, நீங்க வாங்க. நாம போய் இறங்கற வழியை பாப்போம்".

"உக்காரு உக்காரு. வண்டி நிக்கட்டும். அப்புறம் எழுந்து போகலாம்".



(அடுத்த அறிவிப்பு)"தென் மாவட்டங்களுக்கும், கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கும் போறவங்க இங்கே இறங்கிக்கோங்க".



"வாடி, இறங்கலாம்".




"இட்லி, வடை, காப்பி.... இட்லி, வடை, காப்பி.... "


"ஏம்பா, நாங்க இறங்க வேண்டாமா, இங்கே வந்து இட்லிக்கடையைப் போட்டுட்டியே..."

ஒருவழியாய், அடித்துப்பிடித்து இறங்குகிறார்கள்.


"போதுங்க. இனிமே சென்னை வர்றதுன்னா ஒழுங்கா பேருந்துலியோ அல்லது புகைவண்டியிலியோதான் வரணும். விமானத்துல வேண்டவே வேண்டாம். அப்பப்பா, போதும் போதும்னு ஆயிடுச்சு..."




பின் :


---> இது சென்னை விமான நிலைய விரிவாக்கப் பிரச்சினை பற்றியதுதான்.

---> இருக்கிற விமான நிலையத்தை விரிவு படுத்த இடம் இல்லாமல், வெவ்வேறு இடத்தில் கட்டி, அதுவும் சில வருடங்களில் நிரம்பி வழிந்தால் என்ன ஆகும் என்ற கற்பனைதான் இது.


---> கதையில் கணவன் கோபத்தில் இருப்பதால்தான் மனைவியை 'டி' போட்டுக் கூப்பிடுகிறார் என்று தெரிந்து கொள்ளவும். இல்லையென்றால், 'ங்க'தான்.


Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP