Showing posts with label FeTNA-2010. Show all posts
Showing posts with label FeTNA-2010. Show all posts

Saturday, July 10, 2010

FeTNA-2010: ஊக்கம் கொடுத்த பாராட்டுகளுக்கு நன்றி...

முதல் நன்றி அண்ணன் பழமைபேசிக்குத்தான். அவரோட இந்த இடுகையைப் பார்த்து, விழாவில் என்னைத் தேடி வந்து பாராட்டியவர்கள் குறைந்த பட்சம் 15 பேர். அனைவருக்கும் நன்றி.

அடுத்தது நான் ஹோட்டல் அறை கொடுத்து, அதில் சுகமாய் தங்கியவர்கள், என்னைக் கண்டுபிடித்து நன்றி சொன்னவர்கள் பலர். அனைவருக்கும் நன்றி.



பிறகு கூட வேலை பார்த்த சக தன்னார்வலர்கள், நண்பர்கள், விழாவில் சந்தித்த பதிவர்கள் அனைவருக்கும் நன்றி.



அனைத்துக்கும் மேலாக இந்த அருமையான வாய்ப்பளித்து, இறுதியில் மேடையேற்றி சந்தன மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி, விருதும் கொடுத்த தலைவர்கள் திரு.முத்துவேல் செல்லையா மற்றும் திரு.பழனி சுந்தரம் அவர்களுக்கும் மிக்க நன்றி..



(இன்னுமொரு இடுகை புகைப்படங்களுக்காக போடலாம்னு நினைக்கிறேன். இதோட FeTNA-2010 இடுகைகள் முடிவுக்கு வரும்).






Read more...

Friday, July 9, 2010

FeTNA-2010: நான் வாங்கிய திட்டுகள்!!

வீட்டுலே திட்டு வாங்குறது நமக்கு பழக்கமானதுதான். ரெண்டு நாள் தொடர்ந்து திட்டு வாங்கலேன்னா, ஏதோ பிரச்சினைன்னு தோணும். இப்ப அதுவேண்டாம். நாம பேசப்போறது FeTNAவில் நான் வாங்கின திட்டுகளைப்பற்றி.

**********

இந்த விழாவில் என்னுடைய மற்றொரு முக்கிய வேலை சிறப்பு விருந்தினர்கள் மற்றும் கொடையாளர்களுக்கு தங்குமிட வசதி செய்து கொடுப்பது. தமிழ்லே சொன்னா hotel room booking.

1. ஒரு/இரு படுக்கைகள் கொண்ட அறைகள்
2. ஒரு/இரு/மூன்று இரவுகளுக்கான அறைகள்
3. குழுவினருக்கு ஒரே இடத்தில் அறைகள்
4. தனிப்பட்ட வேண்டுகோள்கள் (சக்கர நாற்காலியில் வருபவர், நாய்க்குட்டியோடு வருபவர் etc.,)

இதையெல்லாம் கருத்தில் கொண்டு அவரவர்களுக்கு அறை கொடுத்து, வந்து போக வழி, வண்டி நிறுத்த இடத்துக்கான வழி இப்படி எல்லாவற்றையும் அவர்களுக்கு தெரியப்படுத்துவதே என் வேலை.

தனிப்பட்ட முறையில் அனைவரும் கடிதம் போவதால், மிகவும் கவனமெடுத்து இதை செய்தாலும், என்னுடைய தவறால், ஒருவருக்கு நீங்க கூடுதல் இரவு எடுத்திருக்கீங்க, அதற்குண்டான பணத்தை நாளைக்கு வந்து கட்டிடுங்கன்னு அனுப்பிட்டேன்.

அதுக்கு இரவு 11.30 மணிக்கு தொலைபேசி கத்துனாரு பாருங்க.. ஹிஹி.. நமக்கெல்லாம் இது சாதாரணம்தானே.. என்னுடைய தவறுதான். என்னை மன்னிச்சிடுங்கன்னு எவ்வளவோ சொல்லியும் சமாதானமாகாத அவர், பிறகு விழாவில் நேரில் பார்த்தபொழுது மிகவும் நெருங்கிய நண்பராக மாறினார்.

*****

மேலே சொன்னது என்னுடைய தவறென்றால், ஹோட்டல்காரங்க செய்த தவறு நிறைய. அறையில் வெளிச்சம் போதலே, சுடுதண்ணி வரலே, குளிர்சாதனம் வேலை செய்யலே - அப்படின்னு என்கிட்டே புகார்கள் குவிந்தன. ஹோட்டல் அறைகளுக்கு என் தொலைபேசி எண்ணைக் கொடுத்திருந்ததால், இதெல்லாம்கூட என் காதில். மக்கா, அதெல்லாம்
அங்கேயே சொல்லுங்க. நான் வந்து எதுவும் செய்யமுடியாதுன்னு நிறைய பேருக்கு சமாதானம் சொல்ல வேண்டியிருந்தது.

*****

இதைப்போல், ரொம்ப மோசமாக கத்தினவர் இன்னொருத்தர். அவருக்கு இரு படுக்கைகள் கொண்ட அறைக்குப் பதில் ஓரு ப. கொ. அறைதான் கிடைச்சது. இந்த மாதிரி மாத்தி கொடுத்துட்டேன்னு என்கிட்டேயும் ஹோட்டல்காரங்க சொல்லலே.

நட்சத்திர அறிமுக கூட்டத்தில் நானும் இன்னொரு நண்பரும் சேர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கலாம்னு பேசவேண்டியதை தயார் செய்து வைத்திருந்தோம். சரியா அந்த நேரம் பார்த்து மேற்படி ஆளு தொலைபேசி கச்சாமுச்சான்னு கத்த, அவரை சமாதானப்படுத்தி வேறொரு அறை வாங்கிக் கொடுக்க ஆள் எதுவும் கிடைக்காமே நானே போக வேண்டியதாகி, இந்த தொகுத்து வழங்கும் வாய்ப்பு பறிபோனது.

நீங்கதான் இதை ( நிகழ்ச்சி தொகுப்பு) செய்திருக்கணும். திடீர்னு இந்த பிரச்சினை வந்தது எதிர்பாராததுன்னு தலைவர் இன்றளவும் சொல்லி வருத்தப்படும் சம்பவம். ரைட் விடுங்க அடுத்த தடவை பாத்துப்போம்னு சொன்னேன்.

*****

இப்படி திட்டினவங்களைத் தவிர பலர் நேரில் தேடி வந்து பாராட்டியது மிக மிக மகிழ்ச்சியடைய வைத்தது.

அப்படி கிடைத்த பாராட்டுக்களும், பரிசுகளும் அடுத்த இடுகையில்.

*****

Read more...

Wednesday, July 7, 2010

FeTNA-2010: திரைக்குப் பின்னால்.. நடந்தது என்ன?

இரண்டு நாட்களுக்கு தொடர்ச்சியாக பல நிகழ்ச்சிகள். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் வெவ்வேறு ஒருங்கிணைப்பாளர்கள், பங்கேற்பாளர்கள், ஒலி/ஒளி அமைப்பு இருந்தும் எப்படி இவை அனைத்தும் தங்குதடையின்றி (சிற்சில பிழைகளைத் தவிர) நடந்தேறின?

இவற்றுக்குக் காரணம் மேடைக்குப் பின்னால் 8 பேர் கொண்ட ஒரு குழு. இவர்கள் செய்தது என்ன?

ஒருவர் ஒலி.

ஒருவர் ஒளி.

ஒருவர் வெண்திரையில் விவரங்களைக் காட்ட.

ஒருவர் மேடையில் தேவையான பொருட்களை சேகரிக்க

ஒருவர் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைப்பாளர்களை ஒருங்கிணைக்க

ஒருவர் தகவல் பரிமாற்றத்துக்கு

ஒருவர் அவசர தேவைகளுக்கு

இவர்கள் எல்லோருக்கும் மேலாளராக ஒருவர்

ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் இந்த 8 பேரும் ஒருவரையொருவர் (கம்பியில்லா சாதனத்தின் மூலம்) தொடர்பு கொண்டு - அனைவரும் தயாரா என்று கேட்டபிறகு - மேலாளர் "திரையைத் தூக்கலாம்" என்று சொன்னவுடன் அவரவர் வேலையைத் துவக்க வேண்டும்.

இதில் யாரேனும் ஒருவர் பிரச்சினை என்று சொன்னாலும், திரையைத் தூக்காமல், 'ஒலி'க்காரர் ஏதேனும் ஒரு பின்னணி இசையை போட்டுவிடுவார். ஏதேனும் அறிவிப்பு இருந்தால் அறிவிப்பு செய்ய மற்றொருவர் வந்துவிடுவார். அதற்குள் பிரச்சினை களையப்பட்டு திரையைத் தூக்க ஏற்பாடு செய்யப்படும்.

இதில் இன்னொரு தகவல் என்னன்னா, இந்த 8 பேரும் ஒரே அலைவரிசையில் இல்லை. அரங்கத்தின் கம்பியில்லா அலைவரிசையில் மூவரும், நம் (தனியார்) அலைவரிசையில் பாக்கி பேரும் இருந்தோம். அரங்க அலைவரிசையில் ஆங்கிலேயரும் இருந்ததால் அதில் ஆங்கிலத்திலும், நம் அலைவரிசையில் தமிழிலும் பேசவேண்டும்.

இந்த கூட்டுமுயற்சியில் என்னுடைய வேலை என்னவென்றால், இரண்டு அலைவரிசைக்கும் நடுவில் இருந்து, தகவல் பரிமாற்றம் செய்வது.

இக்குழுவில் ஓரிருவரைத் தவிர பாக்கி அனைவருக்கும் இந்த வேலை புதிதாக இருந்தாலும், ஆரம்ப சில பிழைகளுக்குப்பின், வேலைகள் கடகடவென நடந்தன.

அரங்கத்திலிருந்து நிகழ்ச்சிகளைப் பார்க்கும் யாருக்கும் கடைசிவரை இந்த 8 பேரைப் பற்றி தெரியாவிட்டாலும், இவர்களது ஒருங்கிணைப்பே இந்த இரண்டு நாட்கள் முழுவதும் நிகழ்ச்சிகள் நடைபெற வலுவானதொரு காரணமாகும்.

விழா சுமுகமாக முடிந்தபிறகு வேலை செய்த அனைவரும் பயங்கர திருப்தியாக உணர்ந்தோம். வாய்ப்பளித்த பேரவைக்கு நன்றி கூறி குழுவின் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டோம்.

Read more...

Tuesday, July 6, 2010

FeTNA-2010: மதுரை வீரன் தெருக்கூத்து..

பட்டையை கிளப்புறான், பட்டையை கிளப்புறான் அப்படின்னு போட்டி போட்டு கூவும் ‘அவரோட’ ரசிகர்களும், ‘இவரோட’ ரசிகர்களும் இந்த மதுரை வீரன் தெருக்கூத்தை பார்த்திருக்கணும். இவங்கதான் நிஜமா ப.கி.

நானெல்லாம் சென்னையில் பொறந்து வளர்ந்த ஆளு. கோவில் திருவிழான்னா தெரு முழுக்க ஒலிபெருக்கி வெச்சி பாட்டு போட்டு, பசங்களை படிக்கவே விடாமே தொந்தரவு பண்ணுவாங்க (ஹையா. ஜாலி!). கூத்து எல்லாம் பாத்தது இல்லை. திரைப்படங்களில் பாத்த மாதிரியும் தெரியல. அதனால் இந்த விழாவில் பாத்துடலாம்னு முடிவோட
இருந்தேன்.

முதலிலிருந்தே இந்த கலைஞர்கள் வருவதில் பிரச்சினை இருந்தது. முதலில் விசா பிரச்சினை. பிறகு பயணச்சீட்டு கிடைக்காமல் பிரச்சினை. பிறகு விமானம் தாமதமானதால் பிரச்சினை. பிறகு ஒரு வழியாய் விழாவின் முதல் நாளன்று வந்து சேர்ந்தனர். நிகழ்ச்சி நிரலில் கூத்து முதல் நாள் இரவென்று போட்டிருந்தது. இரண்டரை மணி நேர நிகழ்ச்சி. அவர்கள் அன்றுதான் வந்திருந்ததால், கடைசி நேரத்தில் நிகழ்ச்சிகள் மாற்றியமைக்கப்பட்டு, அன்று இரவு நட்சத்திரங்களின் அறிமுகம் என்றும், அடுத்த நாள் கூத்து என்றும் அறிவிக்கப்பட்டது.

அடுத்த நாள் மாலை 4.30௦ மணி நிகழ்ச்சிக்கு, மதியம் 12 மணியிலிருந்தே ஒப்பனை செய்யத் தொடங்குகிறார்கள். 4.30 மணியும் ஆயிற்று. அரங்கில் கூட்டம் அப்புகிறது. அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த கூத்து துவங்குகிறது.

ஆரம்பத்தில், சலசலவென மக்களிடமிருந்து வந்த சத்தம் சிறிது நேரத்தில் அடங்குகிறது. கலைஞர்கள் ஆடுகின்றனர். பாடுகின்றனர். குதிக்கின்றனர். சுழலுகின்றனர். சிரிக்கின்றனர். அழுகின்றனர். மக்களை அங்கிங்கு நகரவிடாமல் நாற்காலியில் கட்டிப் போடுகின்றனர். மக்களும் சும்மா உட்காரவில்லை, உணர்ச்சிவசப்பட்டு உட்கார்ந்திருக்கின்றனர்.

அப்புறம் வந்துச்சு பாருங்க, மதுரை வீரன் வருகை. அரங்க வாயிலிலிருந்து மேடை நோக்கி வரும் அந்த வீரனுக்கு - அடேங்கப்பா.. மக்கள் அனைவரும் எழுந்து நின்று மதுரை வீரனை வரவேற்கின்றனர். கைதட்டலும், விசில் சத்தமும் காதைப் பிளக்கின்றன. (அப்துல்லா அண்ணனின் விசில் சத்தம் ஒலிபெருக்கியே இல்லாமல் அரங்கம் முழுவதும் பரவுகிறது. நான் பாம்பு மாதிரி.. வெறும் புஸ் புஸ்!) .

ஒரு சிலர் வீரன் முன் நடனமாடத் துவங்க, பலர் அவர்களை பின்பற்ற, ஏகப்பட்ட பேர் முண்டியடிக்க, இவர்கள் எல்லோரையும் தாண்டி வீரன் மேடைக்கு வரவே 20 நிமிடங்களுக்கு மேலானது. மேடையிலும் பலர் (இரு பெண்கள் ஆவேசத்துடன் தலைவிரி கோலமாக) ஆட, நாங்கள் இருப்பது அமெரிக்காவா இல்லை தமிழகத்தின் ஏதோ ஒரு கிராமமா என்ற ஒரு சந்தேகம் வந்துவிட்டது. பிறகு அனைவரையும் கீழே அனுப்பிவிட்டு மறுபடி கூத்தை ஆரம்பிக்க சிறிது நேரம் பிடித்தது.

மதுரை வீரன் கதை பரபரவென்று நகர்கிறது. நாயகன் பிறப்பது, பெற்றோரை பிரிவது, நாயகி பிறப்பது, இருவரும் பெரியவர்களாவது என்று ஆடல் பாடல்களுடன் விவரிக்கின்றனர். அனைவரது நடிப்பையும் விவரிக்க அருமை, அட்டகாசம் போன்ற வார்த்தைகள் குறைவே.

ஒன்றரை மணி நேரம் ஒரு இடத்தில் அமர்ந்ததே பெரிய விஷயம்னு நினைச்சிக்கிட்டிருந்தபோதே, கடமை 'காலிங் சத்யா, காலிங் சத்யா' என்று காதில் ஒலித்தது. அதனால், கூத்தின் முடிவே பார்க்காமல் எழுந்து வெளியே வந்துவிட்டேன். கடைசிவரை பார்த்த நண்பர்கள் கூறியதைக் கேட்டு முடிவை தவறவிட்டதை எண்ணி வருத்தமுற்றேன்.

அடுத்த வாரம் காணொளி வரும்போது பார்க்கவேண்டும் என்று இருக்கும் பலரில் நானும் ஒருவன்.

ஒரு அருமையான கலையை இன்னும் காப்பாற்றிக் கொண்டிருக்கும் முனைவர் ஆறுமுகம் குழுவினருக்கு வணக்கங்களும், இந்த அற்புதமான அனுபவத்தை அளித்த பேரவை அமைப்பாளர்களுக்கு நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்.

*****

அடுத்த நாள் கூத்துக் குழுவினர் தங்கியிருந்த இடத்தில் வேறொரு வேலை செய்யப் போயிருந்தபோது அக்குழுவில் பங்குபெற்ற ஒரு கலைஞரிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர் - இந்தியாவில் கூத்து நடத்தி முடித்தபிறகு மக்கள் மேடையேறி அவர்களுக்கு பணம் கொடுப்பார்கள் என்றும், அமெரிக்காவிலும் அப்படி கொடுப்பார்கள் என்று அவர் எதிர்பார்த்ததாகவும் கூறினார்.

இங்கிருந்த மக்களில் பெரும்பான்மையோருக்கு (என்னையும் சேர்த்து) கூத்து நிகழ்ச்சியே புதிதாக இருக்கும்போது, அப்படி பணம் கொடுக்கும் வழக்கம் இருக்கு என்பதே தெரிந்திருக்காது என்பதை விளக்கி, கையில் இருந்த சில நோட்டுக்களை கொடுத்து, கூத்துக்காக பாராட்டிவிட்டு வந்தேன்.

******

பிகு: படங்களை பழமை அண்ணனின் இடுகைகளில் பார்த்துக் கொள்ளுங்கள். (என் படங்களைப் பற்றி.. அது ஒரு பெரிய கதை.. தனி இடுகையில்!).

******

Read more...

Monday, July 5, 2010

FeTNA-2010 : பழமைபேசியையும், நசரேனையும் தோற்கடிச்சிட்டோம்ல!


பேரவைக்காக நான் செய்த பல்வேறு வேலைகளுக்கு நடுவில் (அவை தனித்தனி இடுகைகளில் வரும்!) இலக்கிய வினாடி வினாவில் பங்கேற்பதாகவும் பேர் கொடுத்திருந்தேன்.

பின்னர் தன்னந்தனியாக இருந்தவொரு நேரத்தில் - இலக்கியத்துக்கும் நமக்கும் என்ன சம்மந்தம்? அதில் நாம் என்ன பதில் சொல்ல முடியும்? - என்றெல்லாம் யோசித்துப் பார்த்தேன். கல்யாணம்ற ஒரு பெரிய சவாலையே ஏத்துக்கிட்டே, இந்த வினாடி வினா முடியாதான்னு எதிரே இருந்தவர் (கண்ணாடியில்) சொன்னார்.


சரி நானும் ஆட்டத்துக்கு வர்றேன்னு சொல்லிய அடுத்த நாளுக்குள் அண்ணன் பழமைபேசி, அணிகளெல்லாம் அறிவிச்சிட்டு பல்வழி அழைப்புகளுக்கான நேரம் காலத்தையெல்லாம் குறிச்சி அனுப்பிட்டார். நானும் இரண்டொரு அழைப்பில் கலந்துகொள்கிறேன். எனக்கு சில பாடத்திட்டங்களை ஒதுக்கி, நீ கண்டிப்பா இதை படிக்கணும்னெல்லாம் சொல்லிட்டாங்க.


அப்பதான் பேரவை விழாவுக்கான வேலைகள் சரியான சூடு பிடித்திருந்த நேரம். நானும் __யாக ஆரம்பித்த காலம். இந்த எனக்கான பாடத்தையும் படிக்க ஆரம்பிச்சேன். நல்லவேளை, செய்யுள், வெண்பா அப்படியெல்லாம் குடுக்காமே எனக்கு உரைநடைப்பகுதிகளை ஒதுக்கியிருந்தாங்க. ஜாலியா பல தடவைகள் படிச்சேன். கொஞ்சம் விட்டுப்(பி)படிப்போம்னு முடிவு செய்தேன். விட்டுட்டேன். ஹிஹி.. உங்களுக்குத்தான் தெரியுமே.. அப்புறம் (பி)படிக்கவேயில்லை.


அதற்குள் விழாவுக்கான நேரம் வந்துவிட்டது. நான் பயங்கர __யாயிட்டேன். நம்ம அணியிலிருக்கிற மத்தவங்க படிக்காமலா போயிருப்பாங்க. அவங்க நம்மளையும் ஜெயிக்க வெச்சிருவாங்கன்னு தைரியம் வந்துடுச்சு (வேறே வழி?). மேலும் எங்க அணியில் அண்ணன் அப்துல்லா இருந்தாருன்றது ஒரு யானையளவு தைரியத்தை கொடுத்திருந்தது. எதிரணியில் அண்ணன் பழமைபேசியும், தம்பி நசரேயனும்.

இங்கே ‘கட்’ பண்றோம். இப்போ விழாவில் இரண்டாம் நாள்.

வினாடிவினா துவங்குகிறது. அட்டகாசமான வடிவமைப்பு. பல்லூடத்தின் சிறப்பான பயன்பாடு. உருவாக்கியவர் திரு. நாஞ்சில் பீற்றர் ஐயா அவர்கள். பலவிதமான கேள்விகள். பதில்கள் கொட்டுகின்றன. மறுபடி ஒரு ஹிஹி. பதில்கள் கொட்டுறது என்கிட்டேயிருந்து இல்லே. என்னைத் தவிர மத்தவங்க எல்லார்கிட்டேயிருந்தும். இப்படி எல்லாக் கேள்விகளும் பாடத்திட்டங்களுக்கு வெளியே (out-of-syllabus) கேட்டா நான் எப்படி பதில் சொல்றதுன்னு, என்னையே நான் சமாதானப்படுத்திக்கிட்டேன்.

நடுவில் ஒரு கேள்வி கேட்டப்போ டக்குன்னு கையத் தூக்குறேன். பக்கத்திலிருந்த அண்ணன் அப்துல்லா, மைக்கை சத்யாகிட்டே கொடுங்க. கையத் தூக்குறாரு. பதில் அவருக்குத் தெரியும்போலங்கறாரு. சட்டை ரொம்ப ச்சின்னதானதால், அதைக் கொஞ்சம் தளர்த்திக்கலாமேன்னு கையைத் தூக்கியது பேராபத்துலே முடிஞ்சுடுச்சு. அப்புறம் வழியறது நமக்கென்ன புதுசா, உண்மையச் சொல்லிட்டு கையை இறக்கிட்டேன்.

கடகடன்னு பறக்குற வினாடிவினா கேள்விகள். எல்லாத்துக்கும் சடசடவென பதில்கள். தமிழார்வலர்கள், அறிஞர்கள் கலக்குறாங்க. அருமையான பதில்களுக்குப் பிறகு நிகழ்ச்சி முடிவடையுது. ஜெயிக்கப் போவது யாரு? வேற யாரு? எங்க அணிதான். 9 மதிப்பெண்கள் வித்தியாசத்தில் நாங்க ஜெயிச்சிட்டோம். எல்லோருக்கும் முனைவர் பர்வீன் சுல்தானா சான்றிதழ்கள் வழங்குறாங்க.


மத்தவங்க எல்லாரும் படிச்சி தெரிஞ்சிக்கிட்டு நிகழ்ச்சிக்கு வந்தாங்கன்னா, நான் மட்டும் நிகழ்ச்சிக்கு வந்துட்டு நிறைய தெரிஞ்சிக்கிட்டேன். அடுத்த வருடமாவது ஏதாவது உருப்படியா படிக்கலாம்னு ஒரு யோசனை. பாப்போம். டேய் அடுத்த வருடமும் இதே இடுகையை மறுவெளியீடுதான் செய்யப்போறேன்னு அவரு கண்ணாடியில் சொல்றாரு. (மொதல்லே வீட்டிலிருக்கிற கண்ணாடியையெல்லாம் தூக்கணும்...)





*****

பிகு-1 : எனக்குக் கொடுத்த சான்றிதழில் என் பேருக்கு முன்னால் இருக்கிற இரண்டு சொற்களைப் பாத்து சிரிக்கக்கூடாது சொல்லிட்டேன்.

பிகு-2 : இடுகையில் ரெண்டு இடத்தில் __ போட்டிருக்கிறேன். உங்களுக்கே தெரிஞ்சிருக்கும். ‘பி’யில் துவங்கி ‘ஸி’யில் முடியுற ஒரு சொல். அதை கொஞ்சம் ஓவராத்தான் சொல்லிட்டேன் போல. அவருக்குப் பிடிக்கலே. அவரு போட்டிருக்கிறது நீதானா பாருன்னு உரலைக் கொடுத்த நண்பருக்கு நன்றி..

*****

Read more...

Tuesday, June 29, 2010

FeTNA-2010 : 23ம் ஆண்டு விழா

1 சென்ற வருடம் எங்க ஊர் தமிழ்ச் சங்கத்தில் தீபாவளி விழா. முதல்முறையாக நாங்க போனோம். அப்பத்தான் சொன்னாங்க அடுத்த வருடம் பேரவை விழா இதே ஊரில்தான் நடக்குதுன்னு.


2 அடுத்த நாள் பழமைபேசி அண்ணனுக்கு முதல்முறையாக தொலைபேசறேன் - அண்ணே. நான் ஏதாவது உதவி செய்யமுடியுமா?


3 அடுத்த நாள் பேரவை செயலரிடமிருந்து தொலைபேசி வருது. - மிக்க மகிழ்ச்சி. இன்னும் வேலைகள் துவங்கலே. நான் உங்களுக்கு மின்னஞ்சல் செய்யறேன்.


4 ஜனவரி மாதம் - மெதுவா மின்னஞ்சல்கள் வரத் துவங்குகின்றது. தன்னார்வலர்கள் கூட்டத்திற்கு கூப்பிடுறாங்க. ஓரிரு நண்பர்கள் கிடைக்குறாங்க.


5 பிப்ரவரி மாதம் - குழுக்கள் அமைக்கப்படுகின்றன. என்னையும் இரு குழுக்களில் போடுகின்றனர். இரு வாரங்களுக்கொரு முறை தொலைபேசியிலும் மாதமொருமுறை சந்திப்பும் துவங்குகின்றன.


6 மார்ச் மாதம் - குழுக்கள் பரபரப்பாகின்றன. வாரநாட்களில் பல்வழி அழைப்புகள் ஆரம்பம். வாரயிறுதிகளிலும் வேலை வருகின்றது.


7 ஏப்ரல் மாதம் - இப்போது நான் மூன்று குழுக்களில். இரண்டில் தலைமை. வாரத்தில் மூன்று பல்வழி அழைப்புகள். அதில் பேசியவைகளை வைத்து வேலைகள் செய்கிறோம். மின்னஞ்சல்கள் பெருகுகின்றன.


8 மே மாதம்: அனைத்து நாட்களும் பல்வழி அழைப்புகள். ஒரு நாளைக்கு கு.ப 10 மின்னஞ்சல்களுக்கு பதில் போட வேண்டியிருக்கிறது. வாரயிறுதியில் ஒரு நாள் வேலை. வீட்டில் மெதுவாக 'ப்ச்' என முணுமுணுப்புகள் துவங்குகின்றன. அலுவலக வேலைகளுக்கு இதுவரை பங்கமில்லை.


9 ஜுன் மாதம்:அலுவலகம் பல நாட்கள் மட்டம் போட்டு இந்த வேலை செய்யவேண்டிய நிலை. வீட்டில் அன்றாடம் செய்யும் வேளைகளில் சுணக்கம். தினமும் பல்வேறு அழைப்புகள். ஏகப்பட்ட மின்னஞ்சல்கள். வாரமொருமுறை கூட்டம்.


10. ஜுலை 3, 4, 5: ஆறு மாத உழைப்புக்கு பலன் கிடைக்கும் மாதம். இன்னும் மூன்று நாட்களில் விழா. வேலைகள் உச்சக்கட்டத்தில். அனைத்து தன்னார்வலர்களும் தயார் நிலையில்.

**********

இதுக்கு மேல் அடிக்க நேரமில்லை எனக்கு. அதனால் விழாவுக்கு வாங்க. அங்கே சந்திப்போம்.

**********

Read more...

Friday, May 14, 2010

FeTNA-2010 விழாவுக்கு கண்டிப்பா வாங்க...




பல்லக்கில் பவனி வரப்போகிறாள் நம் தமிழ்த்தாய், சுதந்திரமாக. எப்போது? வட அமெரிக்க சுதந்திர தின விடுமுறை வரும் ஜூலை 3 - 5 தினங்களில். எங்கே? நம் தாய் பேரரசி அல்லவா. அரண்மனையில்தான் இருக்கும், இந்த அலங்காரத் திருவிழா. அமெரிக்காவில் கனெக்டிகட் என்ற மாநிலத்தில், Waterbury என்ற ஊரில் உள்ள "Palace Theater"ல் நடக்கவிருக்கிறது. அந்த இடம் பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சி. அந்த அரங்கில் க்லை நிகழ்ச்சிகளும் இருந்தால், இன்னும் எப்படி இருக்கும்!

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 23வது தமிழ் விழா இது. FeTNA என்று ஆங்கிலத்தில் கூறப்படுகிறது (Federation of Tamil Associations of North
America) 'செந்தமிழ்க் காவலர்' என்று போற்றப்படும் ச.இலக்குவனாரின் நூற்றாண்டு விழாவாகவும் இந்த வருடம் அமைந்திருக்கிறது. FeTNA தலைமைக் குழு ஒவ்வொரு வருடமும் ஒரு மாநிலத்தில் இந்தத் திருவிழாவை திட்டமிட்டு அங்குள்ள தமிழர்களுடன் உற்சாகத்துடன் ஒன்றுபட்டு உழைத்து, வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள். போன
வருடம் அட்லாண்டா என்ற நகரில், மிக அருமையாக நடத்தியிருந்தார்கள்.

அமெரிக்க மண்ணில் தமிழினம் ஒற்றுமையாக வாழ்ந்து ஒரு அடையாளத்தை ஆழமாக பதிக்க, கலை, இலக்கிய நிகழ்ச்சிகளை இந்திய, அமெரிக்க வல்லுனர்களையும், கலைஞர்களையும் வரவழைத்து, எல்லோருக்கும் நல்லுணர்வையும், புல்லரிப்பையும் உண்டாக்கும் வகையில் கொண்டாட இருக்கிறார்கள் FeTNA தலைமையும், வெவ்வேறு குழுக்களும், தன்னார்வத் தொண்டர்களும்.

கனெக்டிகட் தமிழ் குழந்தைகள் 'சங்கே முழங்கு' என்ற பாட்டுக்கு, படியெடுத்து நடந்து, சிறப்பு விருந்தினர்களை வரவேற்று தொடங்கவிருக்கிறது, இந்த பெருவிழா.

இயக்குனர் சிகரங்களில் ஒருவரான பாரதிராஜா, இளமைக்கூட்டம் ஆவலுடன் எதிர்பார்க்கும் பிரபல நடிகர் விக்ரம், பிரபல நடிகை த்ரிஷா, சேவைக்கும், சனாதன தர்மத்துக்கும் பெயர் போன தவத்திரு மருதாசல அடிகளார் இளையபட்டம், சிரிக்க வைக்க நடிகர் சந்தானம், சிந்திக்க வைக்க பேராசிரியை பர்வீன் சுல்தானா, கவிதையை சுவைக்க வைக்க கவிஞர் தாமரை என்று சிறப்பு விருந்தினர்கள் இந்தியாவிலிருந்து வருகிறார்கள்.

July 3,4 இரண்டு மாலை வேளைகளிலும் இரண்டு அருமையான கலை நிகழ்ச்சிகள். பாரம்பரியக் கலையை பரிமளிக்க வைக்க புதுச்சேரி தலைக்கோல் குழுவினர் தெருக்கூத்து "மதுரை வீரனை" அமெரிக்க அரண்மனை அரங்கத்துக்கே அழைத்து வருகிறார்கள். மெல்லிசை
இயக்குனர் மன்னர் ஹாரிஸ் ஜெயராஜ், கார்த்திக்குடன், சாதனா சர்கத்துடனும் இணைந்து, இன்னிசை அளிக்கவிருக்கிறார், இரண்டாவது தினம்.

இவற்றை தவிர்த்து அந்தந்த மாநிலங்களிலிருந்து தமிழ்ச் சங்க நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள், தொடர் மருத்துவ கல்லூரி, வாழ்க்கைத்துணை சந்திப்பு, தொழிலதிபர்கள் வரவேற்பு என்று parallel programs.

20 திருமணங்களைக் கூட ஒன்று சேர்த்து நடத்தி விடலாம். ஆனால், இது போன்ற எல்லா தமிழர்களின் ஆர்வத்துக்கும், திறமைக்கும், வயதுக்கும், கலையுணர்ச்சிக்கும் முக்கியத்துவத்துக்கும் ஏற்ப ஒரு விழா நடத்த பொறுப்பேற்க விரும்பும் மனிதருக்கு ஒரு அசாதாரண திறமையும், தன்னம்பிக்கையும் வேண்டும். அதற்கு சொந்தமானவர் முனைவர் பழனி சுந்தரம். அவர்தான் இந்த விழாவின் ஒருங்கிணைப்பாளர். FeTNAவின்
செயலாளரும் அவர்தான். தலைவராகவும் சீக்கிரம் பொறுப்பேற்க இருக்கிறார். தற்போது தலைவர் முனைவர் முத்துவேல் செல்லையா, சுந்தரத்துக்கு பலத்த ஆதரவு கொடுத்து, இந்த விழாவின் வெற்றிக்கு முழு மூச்சுடன் முனைந்து பாடுபடுகிறார்.

இந்த செய்தியை ஆர்வத்துடன் படிக்கும் வாசகர் என்ன செய்யலாம்?
http://www.fetna.org என்ற வலைதளத்துக்குள் புகவும். எல்லா விவரங்களையும்
கூர்ந்து படிக்கவும். விழாவுக்கு போகலாமா / வேண்டாமா என்ற யோசனையிருந்தால் "போகலாம்" என்று உள்மனதிற்கு ஆணையிடுங்கள். உடனே வலைதளத்துக்கு சென்று பதிவு செய்யவும்.

ஆசையிருந்தும் நேரம், தூரம், பணவீக்கம் போன்ற நெருக்கடியால், உங்களால் வர முடியாவிட்டாலும், அமெரிக்காவில் உள்ள உங்கள் உறவினர் / நண்பருக்கு தெரிவியுங்கள். அப்படியும் இல்லையென்றால், உங்கள் வாழ்த்துக்களையாவது FeTNAவுக்கு அனுப்புங்கள்.

"நிதி மிகுந்தவர், நேரம் உள்ளவர் வந்து மகிழுங்கள்.
நேரம் குறைந்தவர், நிதி மிகுந்தவர் தந்து உதவுங்கள்.
நிதி குறைந்தவர் நேரம் மிகுந்தவர் பிறருக்கு சொல்லுங்கள்.
எதுவும் இல்லையென்று நினைப்பவர் (மின்) அஞ்சலில் வாழ்த்துங்கள்".

Please visit : www.fetna.org

Contact : Dr.Pazhani Sundaram (203)-271-2064
Dr.Muthuvel Chelliah (443)-538-5774

"செந்தமிழால் சேர்ந்திணைவோம். செயல்பட்டே இனம் காப்போம்".

Submitted by

Dr.Chitra Vaitheeswaran
Connecticut, USA

*****

Read more...

Monday, March 29, 2010

FeTNA-2010 விழா மலருக்கு படைப்புகள் வரவேற்கப்படுகின்றன...


வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை தொடர்பான செய்திகளுக்கு FeTNA-2010 லேபிளுக்கு சென்று பார்க்கலாம். மேலும் விவரங்கள் http://www.fetna.org/ தளத்தில் கிடைக்கும்.

*****


சுமார் 3000 தமிழர்கள் கூடும் இவ்விழாவில் 'விழா மலர்' ஒன்று வெளியிடப்படும். அம்மலரில் பிரசுரிக்க படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.

படைப்புகளுக்கான விதிமுறைகளாக விழாக்குழுவினர் தெரிவிப்பது என்னவெனில் :


*** கதை, கவிதை மற்றும் கட்டுரைப் படைப்புகள் தமிழில் இருக்கவேண்டும். சில ஆங்கிலப் படைப்புகள் தகுதி அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்படும்.

*** சமர்ப்பிக்கப்படும் படைப்புகள் ஒரு குறுந்தலைப்பும், பொருளடக்கம் பற்றிய சிறு விவரிப்பும் கொண்டிருக்கவேண்டும்.

*** 500 வார்த்தைகளுக்கும் குறைவான, முழுப்பக்கப் படைப்புகளுக்கு முன்னுரிமை தரப்படும்.

*** இவ்வாண்டுத் தமிழ் விழாவின் மையக்கருத்தைப் (செந்தமிழால் சேர்ந்திணைவோம் - செயல்பட்டே இனம் காப்போம்) பிரதிபலிக்கும் படைப்புகளுக்கு முன்னுரிமை தரப்படும்.

*** படைப்புகள் பொருள் பொதிந்தவையாகவும், கருத்தூட்டமும் கல்வித்தரமும் கொண்டவையாகவும் இருக்கவேண்டும்.

*** முன்னால் பிரசுரிக்கப்படாத, தனித்தன்மை வாய்ந்த, அசலான படைப்புகளை ஊக்குவிக்கிறோம். பிறர் படைப்புகளின் பிரயோகம் ஊக்குவிக்கப்படாது. அப்படி அவற்றை மேற்கோள் காட்டும்போது தயவுசெய்து மூலப்படைப்பையும் அதன் ஆசிரியரையும் குறிப்பிடவேண்டும்.

*** படைப்புகள் கண்டிப்பாக எவ்விதத்திலும் தவறான கருத்துக்களையோ, அவமதிப்பையோ, அல்லது அநாகரிகத்தையோ பிரதிபலிக்கக்கூடாது.

*** அனைத்துப் படைப்புகளும் மின்னஞ்சல் வாயிலாக malar@fetna2010.org என்ற முகவரிக்கு MS Word (.doc) அல்லது PDF வடிவில் அனுப்பப்படவேண்டும். தேவையான புகைப்படங்கள், ஓவியங்கள் மற்றும் வரைபடங்கள் அனைத்தும் .JPG வடிவில் இருக்கவேண்டும்.

*** அனைத்துப் படைப்புகளும் ஏப்ரல் 30, 2010 வெள்ளிக்கிழமைக்கு முன்னர் எமக்கு வந்து சேர வேண்டும்.

*** கெடு முடிந்தபின்னர் அனுப்பப்படும் படைப்புகள் பிரசுரிக்கப்படா.

*** எந்தப் படைப்பும் பிரசுரிப்புக்கேற்ப எங்களால் மாற்றியமைக்கப்படலாம்.

*** வந்து சேரும் நுழைவுகளின் எண்ணிக்கையைப் பொறுத்துத் தேர்வு செய்யப்பட்ட படைப்புகளே விழா மலரில் பிரசுரிக்கப்படும்.

*** படைப்புகள் குறித்த ஆசிரியர் குழுவின் முடிவுகளே இறுதியானவை.

*** இந்த ஆண்டு சமர்ப்பிக்கப்படும் படைப்புகளிலிருந்து சிறந்த ஆறு தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றுக்கு விழாவில் கலந்துகொள்ளும் தமிழறிஞர் கையால் பரிசுகள் (ஒரு முதல் பரிசு, இரு இரண்டாம் பரிசுகள், மூன்று மூன்றாம் பரிசுகள்) விழாவின் இறுதி நாளன்று வழங்கப்படும்.

*** இந்த அறிவிப்புக் குறித்த கேள்விகள் ஏதேனும் இருப்பின் அவற்றை மின்னஞ்சல் வாயிலாக malar@fetna2010.org என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டுகிறோம்.

*****

சென்ற ஆண்டுகளின் விழா மலர்களுக்கு இங்கே சுட்டவும்.

*****

Read more...

Sunday, March 14, 2010

FeTNA-2010 : தேர் இப்பொழுது மூன்றாவது பல்லிணை சக்கரத்தில்..

பேரவையின் விழாவைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம் இன்னொருமுறை இங்கே.

பெயர்:
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை ஆண்டு விழா

எங்கே :
வாட்டர்பரி, கனெக்டிகட் மாநிலத்தில்.

எப்போழுது :
ஜூலை 3 முதல் 5ம் தேதி வரை

இணையதளம் :
www.fetna.org

விழாவிற்கு முன்பதிவு செய்ய :
http://registration.fetna.org

முன்பதிவு தொடர்பான சந்தேகங்களுக்கு :
registration@fetna2010.org

இந்த ஆண்டு விழாவின் நோக்கம் :
செந்தமிழால் சேர்ந்திணைவோம் - செயல்பட்டே இனம் காப்போம்.

கலந்து கொள்ளும் பிரபலங்களின் பட்டியல் :
தற்போது இறுதி கட்டத்தில். கூடிய விரைவில் வெளியிடப்படும்.

*****

விழாவில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்கள் வருகையை மேற்கூறிய சுட்டியை அழுத்தி, இப்போதே முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். ஏப்ரல் 15ம் தேதிக்கு முன், பதிவு செய்பவர்களுக்கு சிறப்புப் பரிசும் காத்திருக்கிறது. தகவல்களுக்கு பேரவை இணையதளத்தைப் பார்க்கவும்.


விழாவில் பங்கேற்கும் அனைவரும் மகிழ்ச்சியுடன் நிகழ்ச்சிகளை கண்டுகளித்து - சுவையான உணவு உண்டு - திருப்தியுடன் திரும்பிப் போய், பல காலம் இவ்விழாவை நினைவு கூறவேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் 50க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், 20க்கும் மேற்பட்ட குழுக்களாக பிரிந்து, தத்தமது வேலைகளை முனைப்பாக செய்து கொண்டிருக்கின்றனர்.


தன்னார்வலர்கள், தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையில் எந்தவொரு சிறு விஷயத்தையும் மறந்துவிடக்கூடாதென்று எல்லாவற்றையும் ஆவணப்படுத்தி - அதை அவ்வப்போது சரிபார்த்து - வரும் சந்தேகங்களுக்கு வாரமொருமுறை கூட்டம் கூடி - மற்றவர்களை ஊக்கப்படுத்தி - ஜனவரி மாதம் முதல் பல்லிணை சக்கரத்திலிருந்த - ஊர் கூடி இழுக்கும் இந்தத் தேரை இப்போது மூன்றாவது பல்லிணை சக்கரத்தில் தள்ளியிருக்கிறார்கள். இன்னும் நாட்கள் செல்லச்செல்ல இந்த தேர் வேகமெடுத்து, ஜூலை மாதம் அனைவரது கூட்டு முயற்சியில் வெற்றிகரமாக ஓடி, தன் நிலையை அடையும் என்று நம்பிக்கை வலுக்கின்றது.

*****

தன்னார்வலர் குழுவில் சேர விருப்பமுள்ளவர்கள் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

*****

இந்த htmlஐ தங்கள் தளத்தில் ஏற்றி, இவ்விழாவைப் பற்றி அனைவரும் அறிந்திட உதவினால் மிக்க நன்றியுள்ளவன் ஆவேன்.

*****

பேரவைக்கான விளம்பரங்களுக்கு நன்றி.http://www.behindwoods.com/

*****

பல்லிணை சக்கரம் = gear.

*****

Read more...

Thursday, February 11, 2010

ஃபெட்னா - முன்னேற்பாடுகள் குறித்து - 2/11/2010

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் ஆண்டு விழாக்கூட்டம் பற்றி முன்னாடியே சொல்லியிருக்கேன். வரும் ஜூலை மாதம் 3 - 5 வரை வாட்டர்பரி, கனெக்டிகட் மாகாணத்தில் நடைபெறுகிறது.

பேரவை பற்றிய ஒரு சிறு குறிப்பு:

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையானது - வட அமெரிக்காவில் இருக்கும் பல்வேறு தமிழ்ச் சங்கங்களை ஒருங்கிணைக்கும் லாப நோக்கமற்ற ஒரு கூட்டமைப்பு ஆகும்.

1987ம் ஆண்டு 5 உறுப்பினர்களுடன் துவக்கப்பட்ட இந்த பேரவை, தற்போது அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் 40 தமிழ்ச் சங்கங்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது.

பேரவை ஆண்டு விழாவின் நோக்கமானது - தமிழ் மக்கள் தமது தமிழுணர்வை மேம்படுத்திக் கொள்ளவும், உரிமையை நிலை நாட்டுவதற்கும், தமிழின் வளர்ச்சிக்கு உதவுவதே ஆகும். இதே நோக்கங்களுடன் பேரவை விழாக்கள் 1987 முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றது.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள பேரவையின் 23ம் ஆண்டு விழா, அமெரிக்கத் தமிழ் மக்களின் வரலாற்றிலேயே பெரியதொரு விழாவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்திற்கு 2,000க்கும் அதிகமான தமிழர்கள் வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விழாவை வெற்றியடையச் செய்யும் நோக்கத்துடன், 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் - 20க்கும் மேற்பட்ட குழுக்களாக பிரிந்து சுமார் ஆறு மாத காலம் உழைக்கிறார்கள். இந்த ஆண்டு விழாவிற்கான வேலைகள் தற்போது முழுவீச்சில் துவங்கியிருக்கின்றது.

அடிக்கடி நடக்கப்போகும் இந்த தன்னார்வலர்களின் முதல் கூட்டம் சென்ற மாதம் 31ம் தேதி நடைபெற்றது. அதைப் பற்றிய செய்திக்கு இங்கே சுட்டவும்.

தற்போது இந்த விழாவிற்கு இணையத்தில் பதிவு செய்யும் வசதி துவக்கப்பட்டிருக்கிறது. பதிவு / நன்கொடை கட்டண விவரங்களுக்கு இங்கே சுட்டவும்.

இன்றே முன்பதிவு செய்து - விழாவிற்கு பெருமளவில் வருமாறு பேரவையின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

Read more...

Sunday, December 13, 2009

FeTNA-2010 : ஊர் கூடி இழுக்கும் பிரமாண்ட தேர்...

நேற்று (12/12/2009), Connecticut Glastonbury-யில் வட அமெரிக்க தமிழ் சங்கப் பேரவையின் (FeTNA) கூட்டம் நடைபெற்றது.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய கூட்டத்தில், கனெக்டிகட் தமிழ் சங்கத்தின் தலைவி திருமதி.ஸ்ரீமதி ராகவன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.



FeTNAவின் தலைவர் முனைவர் திரு.முத்துவேல் செல்லையா அவர்கள் - இந்த பேரவையின் வரலாற்றினையும், ஆண்டு விழாவின் சிறப்பினையும், சென்ற முறை அட்லாண்டாவில் நடைபெற்ற கூட்டத்தின் வெற்றியையும் சொல்லி, அதைவிட இந்த முறை இன்னும் சிறப்பாக செய்ய வேண்டிய அவசியத்தையும் கூறினார்.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திரு.நல்லதம்பி (மறைந்த நடிகர் திரு.என்.எஸ்.கிருஷ்ணனின் புதல்வர்) தன் பெற்றோரின் வாழ்க்கையிலும், திரைப்படங்களிலும் நடந்த முக்கியமான நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார்.



விழாவில் பேசிய முனைவர் திரு.பழனி சுந்தரம் அவர்கள் - இந்த விழாவினை வெற்றிகரமாக நடந்த அனைத்து தமிழர்களும் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.




மேலும், ஜூலை மாதம் நடக்கவிருக்கும் விழாவில் பங்கேற்கவிருக்கும் சிறப்பு விருந்தினர்கள் இன்னும் முடிவாகவில்லையென்றும் கூறினார். ஆனாலும், பலரை இன்னும் தொடர்பு கொண்டு பேசிக்கொண்டிருப்பதாகவும் கூறி ஒரு பட்டியலை வாசித்தார்.


திரு.அப்துல் கலாம் அவர்கள் (இவரை மூன்று வருடங்களாக விழாவுக்கு வரவழைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்களாம்), பேரூர் ஆதீனம், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், HCL தலைவர் ஷிவ் நாடார், PepsiCo தலைவி இந்திரா நூயி, எழுத்தாளர் சிவசங்கரி, இறையன்பு IAS, இயக்குனர்கள் பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம், நடிக/ நடிகையர் சூர்யா, ஜோதிகா, விக்ரம், விவேக், வடிவேலு, கஞ்சா கருப்பு, மதுரை முத்து - ஆகிய பலரும் வர வாய்ப்பு இருப்பதாக அறிவித்தார்.


முனைவர். திரு முத்துவேல் செல்லையா, முனைவர் திரு.பழனி சுந்தரம், FeTNAவின் முன்னாள் தலைவர் திரு. நாச்சிமுத்து சாக்ரடீஸ், தமிழ்மணம் சங்கரபாண்டி மற்றும் பலருடன் உரையாட வாய்ப்பு கிடைத்தது.

இதே மாநிலத்தில் இருக்கும் - பிரபு (இவரும் பதிவராம். ஆனால் கடந்த ஒரு வருடமாக ஒன்றும் எழுதவில்லையாம்!), சுகன் மற்றும் மோகன் என்று சில தமிழர்களின் நட்பும் கிடைத்தது.

குடி என்பது எனக்கு 'குடி'த்தனத்தில் மட்டுமே இருப்பது என்பதால் ஒன்றும் குடிக்காமல், அங்கிருந்த அருமையான உணவை மட்டும் சாப்பிட்டுவிட்டு, சுமார் 8.30 மணிக்கு புறப்பட்டு வந்துவிட்டேன்.


*****


(வந்திருந்த கூட்டத்தினரின் ஒரு பகுதி)


(இ-வ திரு. நல்லதம்பி, திரு.முத்துவேல் செல்லையா, திரு.பாலகிருஷ்ணன், திரு.பழனி சுந்தரம்).


(முனைவர் திரு.முத்துவேல் செல்லையா பேசுகிறார்).



(முனைவர் திரு.பழனி சுந்தரம் பேசுகிறார்).



Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP