உச்சத்தைத் தொட்ட தினம்...
அண்ணன் ஆதி அவர்களின் இந்த இடுகைதான் இதுக்கு முன்னோடி!
அவர் நம்மை அழைக்கலேன்னாலும், நாமளா போடறதுதானே சங்கிலி இடுகைக்கும், எதிர் இடுகைக்கும், நமக்கும் மரியாதை. அதனாலே என்ன சொல்ல வர்றேன்னா... கீழே படிங்க. உங்களுக்கே புரியும்.
***
அன்று ஆகஸ்ட் 27. சஹானாவின் பிறந்த நாள்.
வேறொரு இடத்தில் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தாலும், வீட்டிலும் அலங்காரம் செய்ய ஆரம்பித்திருந்தோம்.
அன்று மட்டும் சஹானா சமத்தாக இருந்ததால், எங்களுக்கு சந்தோஷம்.
நிறைய பரிசுகள் வரப்போகிறதென்று தெரிந்ததால், அவளுக்கும் சந்தோஷம்.
பார்ட்டிக்கு வரும் குழந்தைகளுக்கு பரிசுகள் வாங்கி வைத்தாயிற்று.
பெரியவர்களுக்காக குடிக்க (குளிர்பானம்தாங்க!), கொறிக்க - சில சாப்பாட்டுப் பொருட்கள் தயார்.
வண்ண வண்ண ரிப்பன் தோரணங்கள் கட்டியாகி விட்டது.
அவற்றை மேற்கூறையிலிருந்து பக்கவாட்டுச் சுவர்களில் ஒட்டவைத்து, ஒரு விழா மேடைக்கான தோற்றத்தை கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருந்தோம்.
பிறந்த நாள் புத்தாடை அணிவித்து, சஹானாவின் புகைப்படங்களை அங்கங்கே சுவற்றில் மாட்டியாயிற்று.
நாங்களும் பழைய ஆடைகளை துவைத்து, நெருப்புப் பெட்டியின் கீழ் தேய்த்து போட்டுக் கொண்டாயிற்று.
நடுநடுவே ஊரிலிருந்தும், நண்பர்களிடமிருந்தும் வாழ்த்து தொலைபேசிகள் வந்த வண்ணமிருக்கின்றன.
ஏற்பாடு செய்திருந்த பிறந்த நாள் கேக் தயாராகி விட்டதென்று தொலைபேசியும் வந்தாயிற்று.
எல்லோரும் வந்திருந்த பார்ட்டியில் குழந்தைகளுக்கான சிலபல நிகழ்ச்சிகள் நடைபெற்று, அனைவரும் விடைபெற்று சென்றனர்.
இப்படியாக ஒரு பிறந்த நாள் விழா மகிழ்வுடன் நிறைவேறியது.
*** The End ***
பின்குறிப்பு:
என்னடா, ஒண்ணுமே புரியல. அதுக்குள்ளே இடுகையும் முடிஞ்சிடுத்தேன்னு நினைக்கிறவங்க - ஒரு நிமிஷம்.
மேலே 'அவற்றை'ன்னு ஆரம்பிக்கும் வாக்கியத்தை மறுபடி படிக்கவும்.
இடுகையின் தலைப்பையும் ஒரு முறை படிக்கவும்.
புரிஞ்சிடுத்தோன்னோ?