Monday, February 15, 2016

உட்கார்ந்தான், ஓடினான், கிடந்தான்.



ITPL to KRPuram ரெயில் நிலையம். முன்பெல்லாம் ஆட்டோவில் ரூ150 கேட்பாங்க. ரூ120க்கு வருவாங்க. சென்ற ஆண்டு நவம்பர் மழைக்குப் பிறகு எல்லா விலையும் கூடிப்போச்சு போல. இந்த முறை கேட்டதற்கு ரூ300ன்னாரு. சாமி, ரூ500க்கு நான் சென்னைக்கே போறேன். என்னை விட்டுடுங்கன்னு ஓலா ஆட்டோ பார்த்தால், ஒரே ஒரு நிமிடம் காட்டியது. Confirm செய்து நிமிர்ந்தால், அடடே, அவரே வந்துட்டாரேன்னு ஓலா வந்துடுச்சு. ரூ110 மீட்டர்+ரூ10 கொடுத்து ரெயில் ஏறியாச்சு.

நிமிர்ந்த முதுகும், நேர்கொண்ட பார்வையுமாய் உட்கார்ந்து போகணும் இந்த Double Deckerல். (அப்படின்னா, அந்தக் கட்சிக்காரங்க இந்த ரெயிலில் போக முடியாதான்னு கேட்கக்கூடாது!!). வாரயிறுதி வெள்ளி மாலைக்கு அதிக கும்பலில்லை. 3-seaterல் நான் ஒருவனே உட்கார்ந்து வந்ததால், கொஞ்சம் கால் நீட்டி கால் மடக்கி பிரச்னையில்லாமல் போக முடிந்தது.

Central to Triplicane பேருந்தில் ஏறியாச்சு. பெங்களூரு நிலைமையில் 4கிமீக்கு ரூ12ஆவது இருக்கும்னு காசு கொடுத்தால், ரூ4க்கு டிக்கெட் கொடுத்து, சரியான மீதி சில்லறையும் உடனே கொடுத்தார் நடத்துனர். கண்ணில் வந்த ஜலத்தை கஷ்டப்பட்டு அடக்கிண்டேன்.

85+ வயதான ஒரு சொந்தக்கார். நான்கைந்து சாக்லெட் கொடுத்தார். யாருக்கு இது? சஹானாவுக்கான்னா, அடேய் இது உனக்குதான். சாப்பிடுன்னார். எனக்கு எதுக்கு? சின்ன வயசில் தினமும் சாக்லெட் கேட்டு எங்க வீட்டுக்கு வருவே. உனக்கு எவ்வளவு வயசான என்ன? எங்களுக்கு நீ எப்பவுமே குழந்தைதான். அப்புறம் என்ன சொல்றது? போட்டேன் சாக்லெட்டை (என்) வாயில்.

அப்பா. எவ்ளோ நாளாச்சு இந்த லோக்கல் டாஸ்மாக் வாசத்தை நுகர்ந்து. பறக்கும் ரெயிலில் படுத்தபடியே (மட்டையாகி) வந்த இருவரிடம்தான் அந்த நறுமணம். ரூ5க்கு 15 நிமிடத்தில் திருவல்லிக்கேணியிலிருந்து கஸ்தூரிபாய் நகருக்கு வந்து சேர்த்துடுச்சு பறக்கும் ரெயில். (யஹ் கஸ்தூரிபாய் நகர் ஹை).

இறங்கியவுடன் தயாராக நின்றது புதுச்சேரிக்கான ஒரு குளிர்சாதன பேருந்து. லோக்கல் வெயிலில் காயணும்னு வந்தவனுக்கு, எதுக்கு குசாபே. வேண்டாம்னுட்டேன். (ஹிஹி. காசும் அதிகமா இருக்கும்லே!). பின்னாடியே இன்னொரு தநா விரைவுப் பேருந்து. ரூ97க்கு 3.30மணி நேரம் ஓட்டி (ஒரு சிறு தேநீர்க்கான நிறுத்தத்துடன்) புதுச்சேரி கொண்டு வந்து சேர்த்தார் ஓட்டுநர்.

ஆரோவில் ஓட்டம் துவங்கிடுச்சு. 9மணி வாக்கில் சரியான வெயில். சட்டையைக் கழற்றி கக்கத்தில் வைத்து ஓடிக்கொண்டிருந்தேன். அப்போ பக்கத்தில் வந்த ஒருவர், சட்டையை அவுத்திட்டீங்க சரி. அந்த பூணலையும் எடுத்துடுங்க. ரொம்ப தொந்தரவா இருக்கும். நான் அதுக்குதான் அதை கழற்றி Hotelலிலேயே வெச்சிட்டு வந்துட்டேன்னாரு. அடேய். அதுக்கு நீ ஊரிலேயே வெச்சிட்டு வந்திருக்காலாமேன்னு, சொல்ல நினைத்தேன். சொல்லவில்லை. சரி சார், அடுத்த முறை அப்படியே செய்றேன்னு கொஞ்சம் முன்னாடி ஓடிப்போனேன்.

சரி, 42கிமீ ஓட்டத்திற்கே சட்டையைக் கழட்டிட்டே, 75 அ 100 ஓடினா, இன்னும் எதையெல்லாம்.. ஐ மீன்.. என்னவெல்லாம் செய்வேன்னு ஏடாகூடமா கேட்காமல், அடுத்த பத்திக்குப் போங்க.

புதுச்சேரியில் தடுக்கி விழுந்தால்.. சரக்கு கடையல்ல. நான் சொல்ல வந்தது ஃப்ளெக்ஸ். கட்சிகளின் ‘தலைவர் வருகிறார்’ பேனர்கள் கூட இல்லை. திருமண வாழ்த்துகள் ப்ளெக்ஸ்கள். மணமக்களை ஓரமாக போட்டுவிட்டு, வாழ்த்தும் நண்பர்களின் படங்களுடன் ஏகப்பட்ட விளம்பரங்கள். டூ மச். இஅ23பு போல், ஒரு ஃப்ளெக்ஸ் மைதானம் அமைத்தாலும், அதுவும் நிரம்பிவிடும்.

இதுவும் புதுச்சேரியில்தான். ஞாயிறன்று அம்மா கட்சியினர் பட்டாசு வெடித்து சிறப்பு ஊர்வலம். இதனால் பேருந்துகள் ஒரு பத்து நிமிட நெரிசலில் சிக்கின. ஆனால் மக்கள் அதுக்காக திட்டவில்லை. ஏன்னா, எல்லா பேருந்துகளிலும் ஏறி ‘சார், லட்டு, அம்மா, லட்டு’ன்னு லட்டு விநியோகம் செய்து கொண்டிருந்தனர். எல்லாரும் ஆளுக்கு 2கூட வாங்கிக் கொண்டபோது, நான் லட்டு வேண்டாம்னு சொல்லிட்டேன். அதுக்காக, நான் அந்தக் கட்சி இல்லையோ? வேறெந்தக் கட்சியா இருக்கும்னெல்லாம் ஆராய்ச்சி வேண்டாம் மக்கழே.

Auroville to Puducherry பேருந்து நிலையத்திற்கு ஆட்டோ கேட்போம்னு எவ்வளவு ஆகும்னா, இவரும் சென்னை போகும் கட்டணத்தை விட அதிகமாக, ரூ200ன்னு சொல்லி, வண்டி எடுக்க வந்தார். சிரமப்படாதீங்க, நானே பார்த்துக்கிறேன்னு சொல்லி, ஒரு தனியார் பேருந்தில் ஏறி ரூ5க்கு டிக்கெட் எடுத்து, பேருந்து நிலையம் வந்து சேர்ந்தேன்.

Puducherry to Bangalore. படுக்கை வசதி கொண்ட குசாபே. இரவுக்குள் வீட்டுக்கு வந்து சேர்த்துட்டான்.

இப்படியாக ஆரோவில் பயணம் இனிதே நிறைவுற்றது.

***


Read more...

Monday, February 1, 2016

வாரயிறுதி பயணக் குறிப்புகள்.


ஒரு திருமண நிகழ்ச்சிக்காக திருக்கோயிலூருக்குப் போய் வந்தோம். அந்த பயணத்திற்கான சிறு குறிப்புகள்தான் இந்தப் பதிவு.

பெங்களூரிலிருந்து திருக்கோயிலூருக்கா? பேருந்திலா? சாலைகள் மோசமாக இருக்கும். பார்த்து போங்கன்னு சொன்னார் நண்பர். கிருஷ்ணகிரி வரை தேநெ7 வெண்ணெய். அதுக்கப்புறமும் நண்பர் சொன்ன மாதிரி மோசமெல்லாம் இல்லை. படுமோசம். 3+ ஆண்டுகளாகவே அப்படிதான் இருக்காம். பல இடங்களில் சாலை / பாலம் போடும் வேலைகள். முடிஞ்சிடுச்சுன்னா நல்லாயிருக்கும். அதுவரை கர்ப்பஸ்த்ரிகள் அந்தப் பக்கம் போவதை தவிர்க்கவும்.

பல ஆண்டுகள் கழித்து சஹானாவைப் பார்த்த உறவினர் ஒருவர், என்னம்மா படிக்கிறே, என்ன பள்ளி, எத்தனாவது ரேங்க் என பல கேள்விகள் கேட்டாரு. இவரும் எல்லாத்துக்கும் பொறுமையா பதில் சொன்னாரு. முடிஞ்சுதா? அடுத்த நாள் காலை. அந்த ஆளை மறுபடி சந்திக்க நேர்ந்தது. சஹானாவைப் பார்த்து அவர் கேட்ட முதல் கேள்வி - என்னம்மா படிக்கிறே?.

செங்கம் பேருந்து நிலையம். ஆத்திரத்தை அடக்கிவிட்டு, அடுத்ததை அடக்க முடியாமல் ஊர் மக்கள் எல்லாரும் இங்கே வந்துதான் போவாங்க போலன்னு நினைக்க வைக்கும் வாடை. நம் ஓட்டுநருக்கும் அந்த வாடை வந்ததால், உடனே வண்டியை கிளப்பிட்டாரு.

ஊருக்குப் போய், தென்பெண்ணையைப் பார்த்து பல்லாண்டுகள் ஆச்சு. திச2015ல் தமிழக மழை வெள்ளத்தில் இந்த நதியில் தண்ணீர் விட்டிருக்காங்கன்னு சொன்னாங்க. ஜன2016ல் இன்னும் தண்ணீர் இருக்கலாம்னு நினைச்சி போனா, கண்ணுக்கெட்டிய வரை அங்கங்கே மக்கள், மணலில் குந்தவெச்சி, அசிங்கம் செய்திங். மிகப்பெரிய திறந்தவெளி அசிங்கரங்கம்.

உலகளந்த பெருமாள். கோயிலில் ஆறஅமர வேடிக்கை பார்த்தவாறு தரிசனம் முடிச்சாச்சு. பெரும்பாலான கோயில்களைப் போலவே இங்கும் செக்யூரிட்டி முதற்கொண்டு அனைவரும் வணக்கம் வைக்கிறார்கள். கையில் பல பத்து ரூபாய் நோட்டுகள் இருந்தால் நலம்.

இன்னொரு உறவினர். ஏன் என் பையன் பூணலுக்கு வரலை. இந்தக் கல்யாணத்துக்கு மட்டும் வரத் தெரிஞ்சுதில்லை? அடேய். இப்போ நான் வந்தது பெங்களூரிலிருந்து. அப்போ நான் இருந்தது அமெரிக்காவில். அதெல்லாம் எனக்குத் தெரியாது. உன்மேல் எனக்குக் கோபம் இன்னும் தீரலை. பிறகு, பந்தியில் அவருக்கு ஒரு எக்ஸ்ட்ரா லட்டு வாங்கித் தந்தபிறகு சிறிது பேசினார்.

திருவண்ணாமலை பேருந்து நிலையம். 12வாழைப்பழம் 10ரூபாய்னு வாங்கியாச்சு. சிறிது நேரத்தில் ஒரு வயதானவர் பசிக்குது ஏதாவது காசு கொடுங்கன்னு கேட்டு பேருந்து ஓரமாக வந்தாரேன்னு, சீப்பிலிருந்து 6வாப பிச்சி அவரிடம் கொடுத்தோம். பேருந்து புறப்பட்டு ஒரு சுற்று சுற்றி, வெளிச்சுவர் ஓரமாக மறையும் வரை அவரைப் பார்த்திருந்ததால், அந்தப் பழங்களை அவர் சாப்பிடாமல் தூக்கியெறிந்ததை பார்க்க முடிந்தது.

ஒரு வழிக்கு 250கிமீ. இரண்டு வழிக்கும் த நா அதிவிரைவுப் பேருந்து. சரியா 6மணி நேரம் எடுத்துக்கறாங்க. பேருந்து நல்ல கண்டிஷனில்தான் இருந்தது. ஆனா தேநெ7ல் வரும் பாலங்கள் மேல் ஏற முக்கி முக்கி முக்குது. சரக்கு லாரிகளுடன் போட்டி. 7 தாண்டியபிறகு சாலைகள் சரியில்லைன்னு ஏற்கனவே பார்த்தாச்சு.

போகும்போது அமைதியாகப் போன பேருந்து, திரும்பி வரும்போது மாபியா மெம்பர்களோடு வந்தது. ஓட்டுநர் + நடத்துனர் இருவரும் மாபியா. கேட்கணுமா. மொத்த 6மணி நேரமும் 80-90 பாடல்கள். இவங்களும் கூடவே பாடிக்கிட்டு. சரின்னு நாமும் காதில் சொருகியிருந்த தாசர் பாடல்களை எடுத்துவிட்டு, ஆத்தா பெத்தாளே ஆம்பளயா என்னத்தான்னு பாடிக்கிட்டே வந்து சில்க்போர்டில் இறங்கியாச்சு.

நன்றி வணக்கம்.

***

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP