Wednesday, May 20, 2009

மாமனார் போட்ட மோதிரம்!!!

ச்சின்ன வயசிலேயிருந்தே நமக்கு இந்த விரலில் மோதிரம் அணிவது பிடிக்காது. கல்யாணத்துக்குப் பிறகு ஆண்களுக்கு எல்லாமே அவர்கள் விருப்பத்துக்கு எதிராகத்தான் நடக்கும் என்ற பொது விதிப்படி, எனக்கும் என் மாமனார் ஒரு மோதிரத்தைப் போட்டு விட்டார்.

"அட அதை எவன்பா கையிலே எல்லாம் போட்டுக்கிட்டு அசிங்கமா - உள்ளே வாங்கி வெளியே வித்துட வேண்டியதுதான்" - அப்படின்னு அண்ணன் கவுண்டமணி சொன்னதைப் போல் - அதை வெளியே விக்க முடியலேன்னாக்கூட கையில் மாட்டிக்கொண்டு அலைவது படு அவஸ்தையான விஷயம் எனக்கு.

பெரிய மனது பண்ணி தங்ஸ் என்னிக்காவது வற்புறுத்தி மோதிரத்தை போட்டுக்கச் சொன்னாலும், அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை - கை காட்டுங்க... கை காட்டுங்கன்னு சொல்லி - அந்த மோதிரம் பத்திரமாக இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்வார். அலுவலகத்தில் இருந்தால் தொலைபேசியில் ஸ்டேட்டஸ் அப்டேட் நடக்கும்.

அது ஏன் அப்படின்னு கேட்டீங்கன்னா - அட கேக்கலேன்னாக்கூட நான் சொல்லித்தான் ஆகணும்.

வீட்டிலோ அலுவலகத்திலோ உக்காந்து நான் யோசிச்சிண்டிருந்தேன்னு வைங்க - சரி சரி அலுவலக விஷயமா நான் என்னிக்கு யோசிச்சிருக்கேன் - எல்லாம் நம்ம பதிவு விஷயமாத்தான் - அந்த மோதிரம் ஒரு வழியாயிட்டிருக்கும்.

ஒரு விரல்லேந்து இன்னொரு விரலுக்கு மாற்றுவது, ஒரே விரலில் அதை சுற்றிக்கொண்டிருப்பது - அப்படி இப்படின்னு அதை ஒரு இடத்துலே உக்கார விடாமே விளையாடிட்டிருப்பேன். கு கையிலே பூ அப்படின்னு ஒரு பழமொழி இந்நேரத்துக்கு உங்களுக்கு நினைவுக்கு வரலாம். தப்பில்லை.

ஒரு சமயத்தில் என்ன ஆச்சுன்னா, தங்க மோதிரத்தை தொலைச்சிடுவேன்னு சொல்லி, எனக்கு வெள்ளியில் ஒரு மோதிரத்தை போட்டிருந்தாங்க. ஒரு நாள் வீட்டு வாசலில் நின்று தங்ஸுடன் பேசிக்கொண்டிருந்தபோது, வழக்கம்போல் மோதிரத்தை நோண்டிக்கொண்டிருக்க, டக்கென்று என் கையிலிருந்து குதித்து - அந்த மோதிரம் பக்கத்திலிருந்த ஒரு சாக்கடையில் விழுந்து சடாரென்று மறைந்தது.

அன்றிலிருந்து எந்த வகையான மோதிரத்தையும் என் கண்களில் காட்டாமல் வைத்திருந்த தங்ஸிடம், போன வாரம் ஒரு சிறப்பு நாளில் கெஞ்சிக் கூத்தாடி அந்த தங்க மோதிரத்தை வாங்கி மாட்டிக்கொண்டேன். ஆனால், அப்படி மாட்டிக்கொண்ட ஒரு மணி நேரத்திலேயே - அந்த மோதிரம் கொடுத்த அசௌகரியத்தாலும், தங்ஸ் கொடுத்த (அன்புத்!!) தொல்லையாலும் - வீட்டிலேயே அதை கழட்டி உள்ளே வைத்தாயிற்று.

மோதிரத்தை கழட்டிய அந்த நிமிடம், சந்தோஷத்தில் நான் சிறகில்லாமலேயே வானத்தில் பறந்து கொண்டிருந்தேன். லிட்டில் (இன்னுமா?) சூப்பர் ஸ்டார், நம்ம சிம்பு மாதிரி - கோலப்பொடி இல்லாமலேயே காத்துலே கோலம் போட்டு காட்டினேன்.

அப்பாடா, இப்பத்தான் என் விரல்களுக்கு விடுதலை கிடைச்சா மாதிரி இருக்கு - இனிமே பாரு, என் கையிலேந்து இடுகையா கொட்டப் போகுது - பின்னூட்டமா பின்னப் போகுது - அப்படின்னு ஆனந்தப் பட்டேன். ஆனா வழக்கம்போல கணிணியில் உக்காந்து, விசைப்பலகையில் கை வச்சபிறகு, தட்டச்சுவதற்கு எதுவுமே தோன்றவில்லை. கொஞ்ச நேரம் அப்படியே
திரையை முறைத்துப் பார்த்தபிறகு, கணிணியை அணைத்துவிட்டு தூங்கப் போய்விட்டேன்.

சரி, அவ்வளவுதான். இடுகையின் கடைசி பத்திக்கு வந்தாச்சு.

போன வாரம் ஒரு சிறப்பு நிகழ்ச்சின்னு சொன்னேனே - அது மட்டும் என்னன்னு சொல்லிட்டு முடிச்சிக்கறேன். மே 14ம் தேதி நமக்கு (எங்களுக்கு) திருமண நாள். அவ்வளவுதான்.

*****

Read more...

Tuesday, May 19, 2009

நொறுக்ஸ் - செவ்வாய் - 05/19/2009

முதல் செய்தியாக - நாடாளுமன்றத்துக்குப் போகவிருக்கும் நம் தானைத்தலைவர், தங்கத்தின் தங்கம், அகிலாண்ட பிரமாண்ட நாயகன் அண்ணன் ஜே.கே.ஆருக்கு வாழ்த்துகளை சொல்லிக்கறேன்.

அவரு எம்.பி ஆனதைக் கேட்ட தமிழ்த் திரையுலகம் மட்டற்ற மகிழ்ச்சிக்கடலில் ஆழ்ந்திருக்குன்னு கேள்விப்பட்டு சந்தோஷப்பட்டேன். ஆனால் அந்த மகிழ்ச்சியானது - இனிமே அவர் தமிழ்ப் படத்தில் நடிக்கமாட்டாருன்னு சொன்னதாலே வந்த மகிழ்ச்சின்னு கண்டுபிடிச்சபிறகு கோபம் கோபமா வருது.

பின்னே என்ன, அவர் இனிமே நடிக்க மாட்டாருன்னு சொன்னா, மக்கள்தானே சந்தோஷப்படணும்?

*****

ஒரு வேளை இலங்கை விடுதலை அடையும்போதே தமிழர்களுக்கு தனி நாடு பிரிக்கப்பட்டிருந்தால்...

தன் தாயைப் போல ராஜீவும் இந்த பிரச்சினையை ஒழுங்காகக் கையாண்டிருந்தால்...

சென்ற முறை ஐ. நா தலைவராக இந்தியர் சசி தரூர் தேர்வாகியிருந்தால்...

இந்தியாவின் பாதுகாப்பு தூதராக ஒரு தமிழர் இருந்திருந்தால்...

ஐ.நாவிலிருந்து இலங்கையில் பார்வையிடப் போயிருந்தவர் ஒரு தமிழராக இருந்திருந்தால்...

இதே மாதிரி ஏகப்பட்ட பதிலற்ற கேள்விகள் இருந்தாலும், ஏதாவது ஒன்றிற்காவது பாஸிட்டிவ் பதில் கிடைத்திருந்தால்.. நம் மக்கள் இப்படி உலக நாடுகள் அனைத்தும் கைவிடப்பட்ட அனாதைகளாய் அலைந்து அல்லல்பட்டு இறந்து போயிருக்க மாட்டார்கள்.

*****

கோடிகோடியாக கொள்ளை அடித்து வாழும் தலைவர்கள் சர்வ சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருக்க, தன் மக்களின் சுதந்திரத்திற்காகப் போராடிய ஒரு தலைவன் கண்டிப்பாக இப்படி சாகக்கூடாது. இலங்கை அரசால் வெளியிடப்பட்ட பிரபாகரன் உடல் நிஜமாக அவராக இருக்கக்கூடாதென்றே வேண்டுகிறேன்.

*****

சில நாட்களுக்கு முன் போட்டிருந்த முத்தையா இடுகையின் உரலை அந்த இடுகையின் நண்பர் சுரேஷுக்கு அனுப்பியிருந்தேன்.

தொலைபேசி, வீடு, நாடு, மின்னஞ்சல் என எல்லாவற்றையும் மாற்றிவிட்ட அந்த நண்பர் - நெடுநாள் கழித்து தன் பழைய மின்னஞ்சலைப் பார்க்க - அதில் என் மின்னஞ்சலைப் பார்க்க - கொசுவத்தி சுத்திக்கொண்டே - என்னைத் தொடர்பு கொண்டுவிட்டார்.

வாழ்க இணையம்!!! வளர்க முத்தையா தொடர்!!!

*****

புது டெம்ப்ளேட் எப்படியிருக்குன்னும் ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போங்க மக்கள்ஸ்...

*****

தங்ஸ்: காங்கிரஸ்தான் இப்போ தனிப்பெரும்பான்மை அடைஞ்சிடுச்சே. அப்படியும் சோனியா ஏன் பிரதமராகாமே மன்மோகன் சிங்கை பிரதமராக்கியிருக்காங்க?

நான்: அவங்க கட்சியும் நம் வீட்டைப் போலதாம்மா. அதனால்தான்.

தங்ஸ்: புரியலியே.

நான்: நம்ம வீட்டு ரேஷன் கார்டுலே கு.த.ன்னு யார் பேர் போட்டிருக்கு. என் பேர்தானே? ஆனா, நிஜமான கு.த யாரு? .. அதே மாதிரிதான் அவங்க கட்சியிலேயும்.

டம். டமார். டுமீல். டப்.

*****

Read more...

Wednesday, May 13, 2009

நொறுக்ஸ் - புதன் - 05/13/2009

சமீபத்தில், கொலவெறியோட ரெண்டு வேலைகளைச் செய்தேன். ஒரு வேலை செய்தபிறகு நல்லா சிரிச்சேன் - மற்றொரு வேலை செய்தபிறகு கொஞ்சம் கண்ணீர் விட்டேன். ஆனா, ரெண்டு சமயத்திலும் எனக்கு நல்லா திட்டு விழுந்தது. அப்படி என்ன செய்தேன்? விவரம் பதிவில்.

*****

இந்த வருடம் என்னோட ஓட்டு போடும் வாய்ப்பு போயிடுச்சு. கவலைப்படாதேப்பா, உன் ஓட்டை வேறே யாராவது தவறாமே போட்டுருப்பாங்கன்னு சொல்றீங்களா - அதுவும் சரிதான். (சொந்த) அம்மாவைப் பாக்க வர்ற சாக்குலே டெல்லியிலிருந்து வந்து ஓட்டு போட்டதும், திருமணத்திற்கு முதல் நாள் மாப்பிள்ளை முறுக்கோட (சாப்பிடற முறுக்கு இல்லே!) போய் ஓட்டு போட்டதும் நினைவுக்கு வருது.

*****

பிறர் கண்ணாடி உடைந்ததற்கு சிரித்தால்
நம் கண்ணாடி பிற்பகலில் தானே உடையும்.

அட திட்டறதுக்கு ரெடியாகாதீங்க. நாந்தான் இதை குறள்னு சொல்லவேயில்லையே...

போன வாரம் என்னுடைய பாஸ், ஞாபகமறதியில் அவரோட மூக்குக் கண்ணாடி மேலே உக்காந்துட்டாரு. அப்போ அறையில் இருந்த நாங்க எல்லாரும் பயங்கரமா சிரிச்சிட்டோம். அப்பவே அவரு நல்லா சாபம் விட்டிருப்பாருன்னு நினைக்கிறேன்.

இன்னிக்கு என்ன ஆச்சுன்னா, கார்லேந்து இறங்கியவுடன் கண்ணாடியை ஒழுங்கா அதோட இடத்தில் மடித்து வைக்க சோம்பேறித்தனப்பட்டு - நான் உட்காரும் இருக்கையிலே போட்டுட்டு போயிட்டேன். கொஞ்ச நேரம் கழித்து திரும்பி வந்து - எதிரில் இருந்த இரு அமெரிக்க பிரஜைகளின் மீது வைத்திருந்த என் இரு கண்களையும் விலக்க முடியாமல் - யாருப்பா அது, பார்த்த விழி பார்த்தபடின்னு பாடுறது - காரில் ஏறி உட்கார்ந்தேன். பச்சக்.

நல்லவேளை, பின்புறம் சேதாரம் ஒண்ணுமில்லாமல் தப்பித்தேன்.

*****

நம்ம கடையிலே 'கடையோட மாப்பிள்ளை'ன்னு ஒரு நாடகம் (மாதிரி) ஆரம்பித்து இதுவரை ஐந்து பகுதிகள் வந்திருக்கு. இதோட கடைசி பகுதி வர்ற வாரம் வருது. ஒவ்வொரு பகுதி வந்தபிறகும் உடனே படித்து பின்னூட்டியவர்களுக்கும் - இது முடியட்டும், எல்லா பகுதிகளையும் சேர்த்து படிச்சிக்கலாம்னு வெயிட் பண்றவங்களுக்கும் நன்றி.

எல்லா பகுதியையும் எழுதிட்டே வெளியிடலாம்னுதான் முதலில் நினைத்தேன். பிறகு, நம்ம (என்) சோம்பேறித்தனத்தில் இருந்த அபார நம்பிக்கை காரணமாகவும், ஒரு பகுதி போட்டாதான், பிரஷர் காரணமாக அடுத்த பகுதி வெளியிட்டே ஆகணும்ற கட்டாயம் வரும்னு நினைச்சி - வெறும் கதைக்களத்தை முடிவு செய்துட்டு - அப்பா. மூச்சு வாங்குது. நான்
சொல்ல வந்தது புரிஞ்சுடுச்சில்லே... அவ்வளவுதான்.

*****

இந்த ஊருக்கு வந்து மூணு வருஷத்திற்கு பிறகு நேற்றிரவு முதல் முறையாக - எங்க வீட்டுலே ரெண்டு மணி நேரத்துக்கு மின்வெட்டு. தமிழகத்துலே தேர்தல்னா, உலகத்தமிழர்கள் எல்லார் வீட்டிலேயும் மின்வெட்டு அமுல்படுத்தணுமான்னு எங்களுக்கு வந்த சந்தேகத்தை யார்கிட்டே கேட்டு தெளிவடையறதுன்னு தெரியல.

மின்வெட்டுன்னவுடனே, பதிவர் நண்பர் மருதநாயகம் ஒரு தடவை சொன்னதுதான் நினைவுக்கு வந்துச்சு.

அவரோட சின்னப்பையன் (நானில்லை!) இங்கிருந்து தமிழ்நாட்டுக்குப் போன புதிதில், வீட்டில் டிவி பாத்துக்கிட்டிருந்தபோது கரண்ட் கட் ஆயிடுச்சாம். அமெரிக்காவில் இருந்தவரைக்கும் கரண்ட் கட்டுன்னா என்னன்னே தெரியாத பையனாச்சே. அங்கே இருக்கறவங்கதான் டிவியை அணைச்சிட்டாங்கன்னு சொல்லி புரண்டு புரண்டு ஒரே அழுகையாம்.

பிறகு தினமும் அதேமாதிரி கட்டாவதால் பழகிப்போயிருக்கும்னு சொன்னாரு.

*****

வேலை 1: கார் கதவை இழுந்து மூடும்போது, நடுவே தங்ஸின் கைவிரல் இருந்ததை கவனிக்கவில்லை. அட, விரலை நசுக்கிட்டேன்னு நினைக்காதீங்க. முடியிழையில் மிஸ்ஸாயிடுச்சு(!!). இருந்தாலும் அவங்களுக்கு கொஞ்ச நேரம் வலிச்சது (அப்படின்னாங்க).

வேலை 2: வீட்டில் ஓடியாடி விளையாடும்போது என் கால் தடுக்கி நாற்காலியில் இடித்ததால், சஹானாவுக்கு அடி. ரெட் இண்டியன் மாதிரி ஆயிட்டாங்க. பயங்கர அழுகை.

எந்த வேலை செய்தபிறகு சிரித்தேன், எந்த வேலை செய்தபிறகு கண்ணீர் விட்டேன்றது உங்க கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்!!!

*****

Read more...

Monday, May 11, 2009

ஜெயலலிதா மென்பொருள் நிபுணரானால்...!!!

மேனேஜர்: இந்த ப்ராஜெக்டை நாம ஜாவாலே பண்ணப் போறோம்.

ஜெ: ஜமாய்ச்சிபுடலாம். பிரச்சினையே இல்லை.

மே: கொஞ்ச நாள் முன்னாடி இதையே சொன்னதுக்கு - எனக்கு ஜாவா தெரியாது, அதனால் இதை செய்ய முடியாதுன்னீங்களே?

ஜெ: அது போன மாசம்.

மே: இப்போ எப்படி தெரிஞ்சது உங்களுக்கு ஜாவா?

ஜெ: நேத்து என் நண்பர் ரவி ஜாவா சிடி கொண்டு வந்து காட்டினாரு. அதை ஒரு அரை மணி நேரம் பாத்து எல்லாத்தையும் தெரிஞ்சிக்கிட்டேன். இவ்ளோ நாளா ஜாவா தெரிஞ்சிக்காமே இருந்தது தப்புதான். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்க.

மே: சரி. எல்லா வேலையையும் சீக்கிரமா முடிச்சி தர்றேன்னு க்ளையண்டுக்கு ஏன் மின்னஞ்சல் அனுப்பினீங்க.

ஜெ: அந்த மின்னஞ்சலை நான் அனுப்பலை. என் கணிணியிலேந்து வேறே யாரோ அனுப்பிட்டாங்க.

மே: நேத்திக்கு கேட்டபோது, நாந்தான் அனுப்பினேன்னு சொன்னீங்களே?

ஜெ: நான் அப்படி சொல்லவே இல்லை. உங்களுக்கு 'செலக்டிவ் அம்னீஷியா' இருக்கும்னு நினைக்கறேன்.

மே: சரி விடுங்க. இந்த வேலையை சரியா செஞ்சி முடிப்பீங்களா? ராத்திரியெல்லாம் வேலை செய்ய வேண்டியிருக்கும்.

ஜெ: எனக்கு குடும்பம் ஒண்ணும் இல்லை. அதனால் அலுவலகமே கதின்னு கிடப்பேன். எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்து பாருங்க.

மே: உங்க குழுவிலே இருக்கறவங்க கிட்டேயும் நிறைய வேலை வாங்க வேண்டியிருக்கும்.

ஜெ: அது என் பிரச்சினை. பெண்டு நிமித்தி வேலை வாங்கறேன்.

மே: அவங்க வேலை செய்யலேன்னா...

ஜெ: ராவோட ராவா எல்லாரையும் வேலையை விட்டு துரத்திடறேன்.

மே: சரி. உங்களையே இந்த ப்ராஜெக்ட் மேனேஜரா போடலாம்னு முடிவு பண்ணிட்டேன். நாளைக்கே வேலையை ஆரம்பிக்கறோம்.

ஜெ: ப்ராஜெக்ட் என் கைக்கு வந்துடுச்சு இல்லே. இனிமே நான் சொல்றதுதான் இங்கே சட்டம். நீங்க கொஞ்சம் அப்படி சைட்லே உக்காருங்க.

மே: அப்படின்னா...

ஜெ: நாளையிலேந்து நான் மூணு மாசம் லீவ்லே போறேன். திரும்ப வந்தப்பிறகுதான் வேலை ஆரம்பிக்கறோம்.

மே: எதுக்கு இப்ப திடீர்னு லீவ்?

ஜெ: நான் ப்ராஜெக்ட் மேனேஜர் ஆயிட்டேன்னா தமிழ்நாடு, கேரளா இங்கேயிருக்கற கோயில்கள்லே வந்து தரிசனம் பண்றதா வேண்டிக்கிட்டிருந்தேன். அதுக்கு ஒரு மாசம். அப்புறம் ஆந்திராலே போய் ஓய்வு எடுத்துக்கறதுக்கு ரெண்டு மாசம். மொத்தம் மூணு மாசம்... வர்ட்டா... பை......

Read more...

Sunday, May 10, 2009

கடையோட மாப்பிள்ளை - பகுதி 5!!!

சரணம் நல்லா பாடினீங்க. ஆனா பல்லவியில் கோட்டை விட்டுட்டீங்க. இன்னொரு சான்ஸ் கிடைக்கும்போது நல்லா பாடுங்க. கோலங்கள். கோலங்கள். அழகான கோலங்கள். மன்மத ராசா மன்மத ராசா. கன்னி மனசை கொல்லாதே. முக்கியச் செய்திகள் முடிவடைந்தது. விரிவான செய்திகள் இரவு 8 மணிக்கு. அந்த வாழைப்பழம்தாண்ணே இது.

மாதுவோட அப்பா: மாது.. மாது. எழுந்திருடா..

மாது: அடச்சே... வீட்லேதான் டிவி சானல் மாத்தவே விடமாட்டேன்றே. கனவிலேயாவது கடகடன்னு சானல் மாத்தி பாத்துக்கிட்டிருக்கலாம்னா, அதையும் கெடுத்துட்டே. எதுக்கு என்னை அவசரமா எழுப்பறே இப்போ. ஜானகி வந்துட்டாளா?

மா.அப்பா: அது சரி. அவளைத்தான் வேணாம்னு சொல்லிட்டியே. அவ எதுக்கு இங்கே வர்றா?

மாது: பின்னே வேறே என்ன விஷயம்?

மா.அப்பா: டேய். உங்கம்மாவை ரொம்ப நேரமா காணலைடா.. எங்கே போனான்னே தெரியல..

மாது: இவ்ளோதானா? இதுக்கு ஏன் இப்படி டென்சனாகுறே? நேத்திக்கு ராத்திரி சீரியல் பாக்கும்போது கரண்ட் கட்டாயிடுச்சு இல்லையா. அதனால கதை கேக்கறதுக்கு பக்கத்து வீட்டுக்குப் போயிருப்பா. கொஞ்ச நேரத்துலே வந்துடுவா. போய் படு. நானும் கனவை கண்டின்யூ பண்ணனும்.

மா.அப்பா: இல்லேடா. என்கிட்டே சொல்லாமே எங்கேயும் போகமாட்டா. எழுந்திரு எங்கேயாவது போய் தேடலாம்.

மாது: அட. அவன் அவன் பொண்டாட்டி ஊருக்கு போகமாட்டாளா, காணாமே போகமாட்டாளான்னு காசு செலவழிச்சி ஜோசியம் பாக்கறான். நீ என்னடான்னா என்னை கொஞ்ச நேரம்கூட தூங்கவிடாமே தொந்தரவு பண்ணிட்டிருக்கே.

ட்ரிங் ட்ரிங்..

மாது: ஹலோ..

ஜா.அப்பா: ஹலோ நாந்தான் ஜானகி அப்பா பேசறேன். வருத்தமான செய்தி இப்பத்தான் தெரிஞ்சுது.

மாது: காணாமே போன விஷயம் அதுக்குள்ளே உங்களுக்கும் தெரிஞ்சி போச்சா.

ஜா.அப்பா: ஆமா. ஃபோனுக்கு கீழே லெட்டர் எழுதிவெச்சிட்டுதானே காணாமே போனா.

மாது: என்ன? ஃபோனுக்குக் கீழேயா? இருங்க. ஒரு நிமிஷம் பாக்குறேன். அட ஆமா, இங்கே ஒரு லெட்டர் இருக்கே...

(மாது லெட்டரை படிக்கிறார்).

மாது: மாது கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னதாலே...

ஜா.அப்பா: மாது கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னதாலே...

மாது: நான் வீட்டை விட்டுப் போறேன்.

ஜா.அப்பா: நான் வீட்டை விட்டுப் போறேன்.

மாது: என்னை யாரும் தேட வேண்டாம்.

ஜா.அப்பா: என்னை யாரும் தேட வேண்டாம்.

மாது: நான் என்ன தமிழ்ப் பாடமா நடத்தறேன்? ஏன் நான் சொல்றதையே திரும்பத் திரும்ப சொல்றீங்க?

ஜா.அப்பா: நான் என்கிட்டே இருக்கற லெட்டரைத்தானே படிச்சேன்?

மாது: என்ன? எங்கம்மா வீட்டை விட்டு போறேன்னு எழுதிவெச்சிட்டுப் போன லெட்டர் உங்களுக்கும் ஒரு காப்பி அனுப்பியிருக்காளா? இது என்ன மாலை முரசா? எல்லார் வீட்டுக்கும் ஒரு காப்பி அனுப்ப? இன்னும் யாரெல்லாம் ஃபோன் பண்ணி விசாரிக்கப் போறாங்களோ?

ஜா.அப்பா: என்ன? உங்கம்மா வீட்டை விட்டுப் போயிட்டாங்களா? நான் படிச்சது ஜானகியோட லெட்டர். அவளும் வீட்டை விட்டு ஓடிட்டா.

மாது: அதெப்படி ரெண்டு பேரும் ஒரே சமயத்துலே ஓடிப்போயிருக்காங்க. ஐபில், தேர்தல் மாதிரி இதுவும் வீட்டை விட்டு ஓடற சீசனா? அதுவும் லெட்டர்கூட ஒரே மாதிரி இருக்கு. நான் என்ன நினைக்கிறேன்னா, லெட்டர் டெம்ப்ளேட்டை ரெண்டு பேரும் ஒரே இடத்துலேந்துதான் சுட்டிருப்பாங்க.

ஜா.அப்பா: இப்போ அதுவா முக்கியம்? இவங்க சேர்ந்து ஓடிப்போயிருக்காங்களா? தனித்தனியா போயிருக்காங்களான்னு தெரியலயே? நான் போலீஸ்ல போய் புகார் பண்ணப்போறேன்.

மாது: சரி சரி. போங்க. நாங்களும் எங்கேயாவது போய் தேடுறோம்.

மா.அப்பா: மாது. அந்த லெட்டரைக் குடு. உங்கம்மா ஏதாவது க்ளூ குடுத்துட்டுப் போயிருக்காளான்னு பாப்போம்.

மாது: ஏன்? ஏதாவது க்ளூ இருந்தா அதை அழிச்சிடலாம்னு பாக்கிறியா? நல்ல ஐடியாதான். அதுக்கு பேசாமே இந்த லெட்டரை அப்படியே கிழிச்சி போட்டுட்டு, ரெண்டு பேரும் நிம்மதியா உக்காந்து டிவி பாக்கலாமே? என்ன சொல்றே. ஓகேவா?

மா.அப்பா: இங்கே பாத்தியா. லெட்டர் கடைசியிலே ‘கோவிந்தா கோவிந்தா'ன்னு எழுதியிருக்கா.

மாது: ஓடிப்போகும்போதுகூட எவ்ளோ நக்கல் பாத்தியா? என் கல்யாணம் அவ்ளோதான் - கோவிந்தான்னு எழுதிட்டுப் போயிருக்கா.

மா.அப்பா: அதில்லேடா. இது என்னவோ க்ளூ மாதிரி தெரியுது எனக்கு. கோவிந்தான்னு யாராவது தெரியுமா உனக்கு?

மாது: நம்ம வீட்டுக்குத் தினமும் பேப்பர் போடறானே.. அவன் பேரு கோவிந்தாதான். ஒரு வேளை அம்மா அவன் வீட்டுக்கு ஓடி போயிருப்பாங்களோ?

மா.அப்பா: ச்சீ. அவ எதுக்கு அவன் வீட்டுக்குப் போகணும். நான் என்ன நினைக்கிறேன்னா, அம்மா பெருமாள் கோவிலுக்குதான் போயிருக்கணும். நானும் கோயிலுக்குப் போய் அவளை தேடப்போறேன். நீயும் வா போகலாம்.

மாது: சரி. ஆனா எனக்கு இன்னும் சந்தேகம் தீரலை. நான் பேப்பர்காரன் கோவிந்தன் வீட்டுக்குப் போய் அம்மா அங்கே இருக்காங்களான்னு பாக்கறேன்.

மா.அப்பா: ஒரு வேளை உங்கம்மா அங்கே இல்லேன்னா?

மாது: எதையாவது சொல்லி சமாளிக்கணும் அவ்ளோதானே? உன்கூட கோவிலுக்கு வர்றதா வேண்டிக்கிட்டிருக்கேன்னு சொல்லி கோவிந்தனையும் கூட்டிட்டு கோயிலுக்கு வந்துடறேன். நீ முன்னாடி போயிட்டுரு.

(அடுத்த பகுதி.. கடைசி பகுதி... இன்னும் சில நாட்களில்...)

Read more...

Wednesday, May 6, 2009

புதிய / புத்தம் புதிய மனைவியின் சமையல்...


முகு : இதை படிக்கும் அன்புச் சகோதரிகளே, இது வெறும் தமாசுக்காகதான். சீரியஸா எடுத்துக்காதீங்க.

*****

புத்தம் புதிய:
வாரத்துக்கு ஒரு நாள் நாம வெளியே போய் சாப்பிட்டு வரலாம். சமைக்கறதுலேந்து நீ ரெஸ்ட் எடுத்துக்கோ.

புதிய:
வாரத்துக்கு ரெண்டு நாள் நான் வெளியே சாப்பிட்டுக்கறேன். அப்போதான் உன் சமையல்லேந்து விடுதலை கிடைக்கும் எனக்கு.

*****

புத்தம் புதிய:
தினமும் டிவி பாத்து நீ புதுசு புதுசா சமைக்கறது நல்லா இருக்கு.

புதிய:
முதல்லே வழக்கமா சமைக்கறதை ஒழுங்கா சமைக்க கத்துக்கோ. புது ஐட்டங்கள்லாம் வேண்டாம்.

*****

புத்தம் புதிய:
ஒரே ஐட்டத்தை எப்படி வெவ்வேறே சுவைகள்லே செய்யறே நீ? அதிசயம்தான்.

புதிய:
ங்கொய்யாலே. அதெப்படி நீ எந்த ஐட்டம் செய்தாலும், எல்லாம் ஒரே மாதிரியே இருக்கு?

*****

புத்தம் புதிய:
ஃபேனைப் போடு. ஆற அமர உக்காந்து சாப்பிட்டாதான் உன் சாப்பாடு அருமையா இருக்கும்.

புதிய:
ஃபேனைப் போடாதே. சூட்டோட சூடா சாப்பிட்டாதான் சுவையும் தெரியாது. சாப்பாடும் கடகடன்னு உள்ளே இறங்கும்.

*****

புத்தம் புதிய:
நீ எந்த ஐட்டம் செஞ்சாலும், அதிலே 'அன்பு'ன்ற ஒரு பொருளை சேர்த்து பரிமாறும்போது, அந்த ஐட்டத்தின் மதிப்பு எங்கேயோ போயிடுது.

புதிய:
நீ எந்த ஐட்டம் செஞ்சாலும், அதிலே 'அன்பு'ன்ற ஒரு பொருளை சேர்த்து பரிமாறும்போது, அதில் அன்பு மட்டும்தான் இருக்கு. வேறெந்த சுவையும் இல்லை.

*****

புத்தம் புதிய:
என் கண்ணை மூடிக்கொண்டு நீ செய்த புது ஐட்டத்தை சுவைக்கச் சொல்வாய். நானும் அது என்ன என்று கண்டுபிடிக்க முடியாமல் திணறுவேன்.

புதிய:
என் கண்ணை 'பே'ன்னு திறந்து கொண்டே நீ செய்த புது ஐட்டத்தை சுவைத்தாலும், அது என்ன என்று கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறேன்.

*****

பிகு: முன்னாடி முகு போடலேன்னா, பின்னாடி வீட்டுலே (எனக்கு) சாப்பாடு கிடைக்காதுன்னு எனக்குத் தெரியும். உங்களுக்கும் தெரியும்தானே?

*****

Read more...

Tuesday, May 5, 2009

நானும் அரசியலில் குதிக்கப் போகிறேன்...


தென் மாநிலத்திலிருந்து சென்னை வரும் விமானத்தில் இருவர் பேசிக்கொள்வது.

"நீங்க அரசியல்வாதியா? வெள்ளையும் சொள்ளையுமா இருக்கீங்களேன்னு கேட்டேன்".

"ஆமாங்க. நான் அரசியல்வாதிதான். வர்ற எம்.பி தேர்தல்லே வேட்புமனு தாக்கல் பண்ணப்போறேன். அது சம்மந்தமா கட்சித் தலைமையை பாத்துப் பேசத்தான் சென்னை போயிட்டிருக்கேன்".

"இந்த சின்ன வயசுலே நீங்க அரசியல்லே ஈடுபடறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. எந்த தொகுதிலேந்து போட்டியிடப் போறீங்க? இப்போ அந்த தொகுதி எம்.பி. யாரு?"

"நான் ___ தொகுதியில் போட்டியிடப் போறேன். இப்போ அங்கே யாரு எம்.பின்னு தெரியல".

"இதுக்கு முன்னாடி அங்கே உள்ளாட்சித் தேர்தல்லெல்லாம் நின்னு வேலை பாத்திருப்பீங்கன்னு நினைக்கிறேன். அப்பத்தானே அந்த மக்களைப் பத்தி தெரிஞ்சிக்க முடியும்? அவங்களுக்கும் உங்களைத் தெரியும்?"

"இல்லீங்க. எனக்கு அரசியல்லே ஈடுபாடே இல்லே. எங்க கட்சித் தலைமைதான் ரொம்பவே வற்புறுத்தி என்னை நிக்க வெக்கிறாங்க. நான் எந்த பதவியும் வகிச்சதில்லை".

"கட்சியே வற்புறுத்தி உங்களை தேர்தல்லே நிறுத்தறாங்கன்னா, ஏதாவது பொதுச்சேவை செய்தோ அல்லது போராட்டத்தில் கலந்துகொண்டோ மக்கள் மத்தியிலே உங்களுக்கு ஒரு நல்ல பேரு வந்திருக்கணும். நான் சொல்றது சரிதானே"?

"அதுக்கெல்லாம் எங்கேங்க நேரம்? நான் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் பண்றவன். என் தொழிலை கவனிக்கவே எனக்கு 24 மணி நேரம் போற மாட்டேங்குது".

"இப்படி அரசியல், சமூகசேவை இதிலெல்லாம் முன்னனுபவம் எதுவுமே இல்லாமே, மக்கள் தொண்டு செய்றதுக்காக பொது வாழ்க்கையில் ஈடுபடறீங்களே.. உங்களை நான் ரொம்ப பாராட்டறேன்".

"நன்றிங்க"..

"இந்த நாட்டின் வருங்காலம் இளைஞர்கள் கையில்தான் இருக்குன்னு சொல்றது ரொம்ப சுலபம். ஆனா, அதை செயல்படுத்த உங்களை மாதிரி இளைஞர்களுக்கு சீட் கொடுத்து ஊக்குவிக்கற உங்க கட்சித் தலைமையையும் பாராட்டணும்".

"ஆமாங்க. இது எல்லாத்துக்கும் எங்க கட்சித் தலைவர்தான் காரணம்".

"கேக்கறேனேன்னு தப்பா நினைக்காதீங்க. உங்களுக்கு எந்த தகுதியில் அடிப்படையில் இந்த சீட் கொடுத்திருக்காங்கன்னு நான் தெரிஞ்சிக்கலாமா? "

"அட இதில் தப்பா நினைக்க என்னங்க இருக்கு. அந்த கட்சித் தலைவர் என் ஒன்ணு விட்ட சித்தப்பாதாங்க. எங்க குடும்பமே அரசியல் குடும்பம்தான். என் சொந்தக்காரங்கள்லே மூணு பேர் எம்.பியாகவும், நாலு பேர் அமைச்சராகவும், அஞ்சு பேர் எம்.எல்.ஏவாகவும் இருக்காங்க. அந்த ஒரு தகுதி போதாதா எனக்கு?"

ஙே...

Read more...

Monday, May 4, 2009

குழந்தை யாரை மாதிரி இருக்கு?


குழந்தை பொறந்துடுச்சு. அட, எனக்கு இல்லீங்க. ஒரு உதாரணத்துக்கு சொல்றேன். ஒருத்தருக்கு குழந்தை பொறந்துடுச்சுன்னு வைங்க. அதை பாக்க வர்றவங்க என்னன்ன சொல்வாங்க, அதுக்கு அந்த குழந்தையோட அம்மா, அப்பாவோட ரியாக்ஷன் எப்படியிருக்கும்னுதான் இந்த பதிவு... ஐ ஆம் சாரி பழமைபேசி... இந்த இடுகை.

எனக்கு எப்பவுமே புரியாத ஒண்ணு (அட.. புரியாத விஷயங்கள் நிறைய இருக்கு. அதிலே இதுவும் ஒண்ணுன்னு சொல்ல வந்தேன்!), குழந்தையை குழந்தையா பாத்து, அதன் அழகை யாருமே ரசிக்க மாட்டாங்களா? அது எப்பவுமே யார் மாதிரியாவது இருந்தே ஆகணுமா? அப்படி இல்லேன்னாலும், அவங்களா ஏதாவது கற்பனை செய்துகொண்டு அவரை மாதிரி இருக்கு,
இவரை மாதிரி இருக்குன்னு ஏன் சொல்றாங்க.

குழந்தை தாத்தா மாதிரி இருக்கு, அம்மா மாதிரி இருக்கு - அப்படின்ற ஒப்பீட்டையாவது ஒப்புக் கொள்ளலாம். மூக்கு மாமா மாதிரி இருக்கு. நெத்தி சித்தி (ஒரு எதுகை மோனைதான்!) மாதிரி இருக்குன்னு பார்ட் பார்ட்டா பிரிச்சி ஒப்பீடு செய்யணுமா?

ஒவ்வொருத்தரா குழந்தைய பாக்க வரும்போதும், கு.அப்பாவுக்கு 'பக்பக்'னு அடிச்சிக்கும். அடங்கொய்யா, இவன் யாரை ஒப்பீடு செய்யப்போறானோ தெரியலியே? ஒழுங்கா வந்தோமா, பாத்தோமான்னு போய்க்கிட்டே இருங்கப்பா. என் பொழப்புலே மண்ணு அள்ளி போட்றாதீங்கன்னு மனசுலே குமுறிக்கிட்டிருப்பாரு. - அட, ஏன்னு புரியலியா?. கீழே படிங்க.

கு.அம்மாவோட சொந்தக்காரங்க யாரையாவது ஒப்பீடு செய்து சொல்லிட்டார்னா, அவருக்கு அடிச்சது லக். கொஞ்சம் அதிகமா சாக்லேட்டும், அடிக்கடி வீட்டுக்கு வந்துபோகும்படி அழைப்பும், உபசரிப்பும் கிடைக்கும்.

அதுவே அவரு, கு.அப்பாவோட சொந்தக்காரங்க யாரையாவது ஒப்பீடு செய்துட்டார்னு வைங்க. உதாரணத்துக்கு, குழந்தையோட முடி அப்படியே அதோட அத்தைய கொண்டிருக்குன்னு சொல்லிட்டார்னா, சொன்னவருக்கு சாக்லேட் கட். கு.அப்பாவுக்கு ஒரு முறைப்பு (முறைக்கிறது யாருன்னு சொல்லித்தான் ஆகணுமா?), ரெண்டு திட்டு, மூணு வேளை சாப்பாட்டில்
உப்பு கட். - அது எதுக்கு அவ அப்படி சொல்லணும்? இனிமே இந்த பக்கம் வரட்டும் பாத்துக்கறேன். - அட விடும்மா, ஏதோ சொல்லிட்டா, சும்மா இந்த காதுலே வாங்கி அந்த காதுலே விடுவியா?

முதல்லே சொன்னா போல, குழந்தை யாரை மாதிரியும் இல்லேன்னாலும் அதுவும் பிரச்சினைதான். வர்றவங்க - கேமிரா வெக்கிற தாமிரா (டைரக்டர்னு படிங்க!) மாதிரி குழந்தைய பல கோணங்கள்லே பாத்துட்டு இவ யாரை மாதிரி இருக்கான்னு தெரியலியே - அப்படின்னு தீவிரமா யோசிக்கும்போது - ஏண்டா அமைதியான குடும்பத்துலே புகுந்து குழப்பத்தை உண்டு பண்றீங்கன்னு மனசிலே நினைச்சாலும் - வெளியே சிரிச்சிக்கிட்டே - இல்லையே, குப்புற கவுந்தடிச்சி படுத்தா அப்படியே என்னை மாதிரியே இருப்பான்னு பெருமையா சொல்லிப்பாரு கு.அப்பா.

இப்படியாக போறவங்க வர்றவங்க எல்லாம் ஒப்பீட்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்க, கு.அப்பாவோ முறைப்பிலிருந்து தப்பிக்க - டேக் டைவர்ஷன், டேக் டைவர்ஷன் - அப்படின்னு பேச்சை மாத்தி வேறே விடயத்தை (அல்லது விஷயத்தை அல்லது விசயத்தை அல்லது விஸயத்தை அல்லது தமிழ்லே மேட்டரை) பேச ஆரம்பிச்சிட்டுதான் மூச்சே விடுவாரு (கடைசி
இல்லை, அடுத்த).

பிகு: இது சில நண்பர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் அடிப்படையில் எழுதப்பட்டது. உங்க கருத்தையும் சொல்லுங்க...
************

Read more...

Sunday, May 3, 2009

கடையோட மாப்பிள்ளை - பகுதி 4.

இதுவரை : பொண்ணு பாக்கறதுக்காக ஜானகி வீட்டுக்குப் போன மாதுவை பிடிக்கலேன்னு ஜானகி சொல்லிடறாங்க.

இதோட முந்தைய பகுதிகளை முன்னாடியே படிக்காதவங்க - "நாடகம் மாதிரி" லேபிளை பிடிச்சீங்கன்னா தொடர்ச்சியா படிச்சிடலாம்.

*****

மாதுவின் வீடு.

மாது: எனக்கும் வருத்தமாதான் இருக்குப்பா.

மா.அப்பா: இருக்காதா பின்னே? ஒரு பொண்ணுக்கு இவ்ளோ இது இருக்கலாமா?

மாது: இதை கேள்விப்பட்டா என் நண்பர்களெல்லாம் என்னை கேலி செய்வாங்கப்பா. நான் என்ன பண்ணுவேன்.

மா.அப்பா: வருத்தப்படாதேடா மாது. இந்த பொண்ணு இல்லேன்னா என்ன, உலகத்திலே வேறே பொண்ணே இல்லையா என்ன?

மாது: அதில்லேப்பா. நான் சொல்ல வந்ததே வேறே.

மா.அப்பா: என்னடா கண்ணா?

மாது: அங்கே போய் ரொம்ப நேரம் பேசியிருக்கோமே. ஹோட்டல்லாம் வெச்சிருக்காளே. ஒரு டிபன் கொடுக்கணும்னு தோணவேயில்லையே அவங்களுக்கு. வெறும் காபி கொடுத்து அனுப்பிச்சிட்டாங்களே?

மா.அப்பா: அடச்சீ. இவ்ளோதானா? உன்னையெல்லாம் திருத்தவே முடியாதுறா. நல்லவேளை அந்த பொண்ணு தப்பிச்சுட்டா. வேறே யாரு வந்து மாட்டப்போறாளோ உன்கிட்டே.

மாது: அப்பா, எனக்கொரு ஐடியா.

மா.அப்பா: என்ன, நாமளே வெளியே எங்கேயாவது போய் சொஜ்ஜி, பஜ்ஜி சாப்பிட்டு வரலாமா?

மாது: வெரி குட். இப்பதான் நீ என் அலைவரிசைக்கே வர்றே. ஆனா, நான் சொல்ல வந்தது அது இல்லே.

மா.அப்பா: என்னன்னுதான் சொல்லித் தொலையேன்?

மாது: அவங்க இந்த கல்யாணம் வேணாம்னு இன்னும் கன்ஃபர்ம்டா சொல்லலேயில்லே. அதை அவங்க முதல்லே சொல்றதுக்கு முன்னாடி, நாம தொலைபேசி இந்த கல்யாணத்தை கான்சல் பண்ணிடுவோம். எப்படி ஐடியா?

மா.அப்பா: வேறே வழி? உன்னை பெத்ததுக்கு இப்படி எல்லார்கிட்டேயும் அவமானப்பட வேண்டியிருக்கு. இனிமே அந்த மனுசன் மூஞ்சியில் எப்படி முழிப்பேன்னு தெரியலே.

மாது: போன வாரம் நம்ம மளிகை கடையிலே கடைக்காரனுக்குத் தெரியாமே பபுள்கம் எடுத்து சாப்பிட்டுட்டு அவன் கண்டுபிடிச்சி உன்னை திட்ட ஆரம்பிச்சவுடனே, பயங்கரமா முழிச்சியே... அதே மாதிரி முழிச்சிப் பாரு. அதுதான் உனக்கு சரியாயிருக்கும்.

மா.அப்பா: சரி சரி. கத்தாதே. உள்ளேயிருக்குற உங்கம்மா காதுலே விழுந்துடப்போகுது. இப்பவே ஜானகி வீட்டுக்கு தொலைபேசறேன்.

ட்ரிங்... ட்ரிங்...

மா.அப்பா: ஹலோ.. நாந்தான் மாதுவோட அப்பா பேசறேன்.

ஜா.அப்பா: அட. நானே இப்ப உங்களுக்கு தொலைபேசலாம்னு நினைச்சேன். அதுக்குள்ளே நீங்களே பண்ணிட்டீங்க.

மா.அப்பா: விஷயத்தை சொல்லுங்க.

ஜா.அப்பா: இல்லே இல்லே. நீங்கதானே தொலைபேசினீங்க. நீங்களே முதல்லே சொல்லுங்க.

மா.அப்பா: சரி. நானே சொல்றேன். இப்படி சொல்றதுக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு. இருந்தாலும் சொல்லிடறேன். மாதுவுக்கு ஜானகிய பிடிக்கலியாம். அதனால், இந்த கல்யாணம் நடக்காதுன்னு சொல்லிட்டான். நாம கொடுத்து வெச்சது அவ்வளவுதான். Let us be friends.

ஜா.அப்பா: என்ன இப்படி சொல்லிட்டீங்க?

மா.அப்பா: ஓ. உங்களுக்கு இங்க்லீஷ் தெரியாதுன்னு எனக்கு தெரியாது. நான் சொல்ல வந்தது - நாம இனிமே நண்பர்களா இருப்போம்.

ஜா.அப்பா: அட. அது இல்லீங்க. நான் சொல்ல வந்தது ஒரு சந்தோஷமான சமாச்சாரம். முதல்லே முடியாதுன்னு சொன்ன ஜானகி, இப்போ கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டா. கூடிய சீக்கிரத்துலேயே ஒரு நல்ல முஹூர்த்தத்தை பாருன்னு சொன்னா. அதைத்தான் சொல்ல வந்தேன். நீங்க என்னடான்னா...

மா.அப்பா: ஹலோ.. ஹலோ...

மாது: அப்பா. விடுங்க. இதுக்காக அவர்கிட்டே போய் லோ லோன்னு லோ-க்ளாஸ் மாதிரி தொங்காதீங்க. முடியாதுன்னா முடியாதுன்னு சொல்லிட்டு வெச்சிடுங்க.

மா.அப்பா: அதில்லேடா மாது. ஃபோன் கட்டாயிடுத்து.

மாது: அதான் டைரக்டர் டச்ன்றது. இந்த சம்மந்தம் கட்டாயிடும்னு எப்படி பூடகமா சொல்றாரு பாத்தியா?

மா.அப்பா: சும்மாயிரு மாது. ஜானகியோட அப்பா சொன்னதைக் கேட்டேன்னா நீ ரொம்ப அதிர்ச்சியாடுவே.

மாது: என்ன, ஜானகி கல்யாணம் வேணாம்னதாலே, அவளுக்கு பதிலா அவரு என்னை கட்டிக்கிறேன்னாரா? அதுவும் முடியாதுன்னு சொல்லிடு. தமிழ்நாட்லே அதுக்கெல்லாம் ஒத்துக்கமாட்டாங்க.

மா.அப்பா: டேஏஏஏய். சொல்றத கேளு. ஜானகி இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாளாம்.

மாது: இது என்ன புதுக்கதை? பேசாமே அவளை போய் அரசியல்லே சேரச்சொல்லு. டக்டக்குன்னு கட்சி மாற சரியா இருக்கும்.

மா.அப்பா: சரி இப்ப என்ன பண்றது?

மாது: அவளுக்கு வேணா முடிவ மாத்திக்கறது முடி ஸ்டைலை மாத்திக்கறது மாதிரி சுலபமா இருக்கலாம். ஆனா நான் ஒரு தடவை முடிவெடுத்துட்டா முடி எடுத்தா மாதிரி. மாத்திக்கவே மாட்டேன்.

மா.அப்பா: முடிதான் கொஞ்ச நாள்லே மறுபடி வளர்ந்துடுமே.

மாது: அப்போ நானும் கொஞ்ச நாள் கழிச்சி முடிவை மாத்திக்க முயற்சி பண்றேன். இப்போதைக்கு இல்லை.

மா.அப்பா: அதில்லைடா மாது... இப்போ..

மாது: அப்பா.. என் முடிவிலே மாற்றமேயில்லை. சும்மா வளவளான்னு பேசிக்கிட்டே போகாதே. சீன் ரொம்ப பெரிசாயிட்டே போகுதுன்னு டைரக்டர் ‘கட்' சொல்றதுக்கு முன்னாடி, நாமளே உள்ளே போயிடுவோம். சாப்பாடும் ரெடியாயிருக்கும். சாப்பிடுவோம். என்ன?

மா.அப்பா: சரி சரி. வா போகலாம்.

(தொடரும்...)

*****

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP