Thursday, February 26, 2009

ஒற்றுமையில் வேற்றுமை!!!

ஒருத்தரு கல்யாணம் பண்ணிக்கணும்னு பெண் பாக்கப் போறாரு. போன இடத்துலே பையனும் பொண்ணும் தனியா பேசிக்கட்டும்னு ஒரு அறையில் போட்டு தள்ளிடறாங்க. இதான் சீன். இனி கதை.

*****

"ஏதாவது பேசுங்களேன்"

"ம். என்ன பேசறது?"

"உங்களுக்கு பிடிச்சது, பிடிக்காதது இதெல்லாம் சொல்லுங்க. நானும் அதுக்கு பதில் சொல்றேன். நம்ம ரெண்டு பேரோட டேஸ்டும் ஒத்துப்போகுதான்னு பாப்போம்."

"ம். சரி. எங்கேந்து ஆரம்பிக்கறது. ம். நான் தமிழோடு நிறைய இந்திப் படங்களும் பாப்பேன்".

"அப்படியா. வெரிகுட். ஆனா எனக்கு இந்தி தெரியாது. அதனால் வெறும் தமிழ் படங்கள மட்டும்தான் பாப்பேன்".

"படத்துக்குப் போறதுன்னா, முதல்லே விமர்சனம் எல்லாத்தையும் படிச்சிட்டு நல்லா இருந்தாதான் படத்துக்கே போவேன் நான்".

"அது சரிப்படாது. விமர்சனத்தை படிச்சிட்டா அப்புறம் படம் பாக்கும்போது த்ரில்லே இருக்காது. அதனால் நான் முதல்லே படத்தைப் பாத்துட்டுதான் விமர்சனம் படிப்பேன்".

"ஒரு நல்ல புத்தகம் கிடைச்சுதுன்னா, சீக்கிரம் படிச்சி முடிச்சிடக்கூடாதேன்னு, மெல்ல அனுபவிச்சி படிப்பேன்".

"நான் அப்படியில்லேப்பா. நல்ல புத்தகமா இருந்துதுன்னா, அதை கீழே வெக்கவே தோணாது எனக்கு. ஒரே மூச்சிலே அதை கடகடன்னு படிச்சி தூக்கிப் போட்டுடுவேன்".

"பத்திரிக்கைகளை நான் பின்னாடியிருந்துதான் படிக்க ஆரம்பிப்பேன்".

"பின்னாடியிருந்தா? ச்சேச்சே! அப்படி படிச்சா, விடுகதை மாதிரியான மேட்டருக்கெல்லாம் முதல்லே பதில் தெரிஞ்சிடுமே. நான் அப்படி படிக்கமாட்டேன்".

"சாப்பிடும்போது எனக்குப் பிடிக்காத ஐட்டம் ஏதாவது போட்டாங்கன்னா, அதை தொடவே மாட்டேன்".

"அதுக்கு நேரெதிர் நான். மொதல்லே அந்த பிடிக்காத ஐட்டத்தை காலி பண்ணிட்டு, அப்புறம் இருக்கறதை ரசிச்சி ருசிச்சி சாப்பிடுவேன்."

(சிறிது நேரம் அமைதி)

ஆண்: "நமக்குள்ளே இவ்ளோ வேற்றுமை இருக்கே... நாம திருமணம் செய்துக்கிட்டா சந்தோஷமா இருப்போமா?"

பெண்: "அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினையில்லை. அப்பப்போ சிறுசிறு சண்டை போட்டால்தான் வாழ்க்கை இன்பமா இருக்கும். எனக்குள்ளே பட்சி சொல்லுது -- நாம வேற்றுமையில்தான் ஒற்றுமை காணப்போறோம்னு."

ஆ: "அதெல்லாம் சரி. ஆனா.. "

பெ: "ஆனா என்ன... சொல்லுங்க..."

ஆ: "ஒரே ஒரு ஒற்றுமை இருக்கு நம்மகிட்டே. ஆனா, அதுவே பெரிய பிரச்சினையாயிடக் கூடாதேன்னுதான் எனக்கு கவலையாயிருக்கு".

பெ: "என்ன சொல்றீங்க? ஒற்றுமை இருந்தா பிரச்சினை எதுக்கு வருது? சொல்றேனேன்னு தப்பா நினைக்காதீங்க. நீங்க கமலஹாசன் பேட்டிகள் நிறைய பாப்பீங்களா? ஏன்னா, நீங்க சொல்றது எனக்கு புரியவேயில்லே..."

ஆ: "சொல்றதை தெளிவா கேளுங்க. நீங்க ஒரு பொண்ணு. நீங்க யாரை கல்யாணம் பண்ணிப்பீங்க?"

பெ: "இது என்ன கேள்வி? ஒரு ஆம்பளையத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்."

ஆ: "அதேதான் நானும் சொல்ல வர்றேன். எங்க வீட்லே இதை தெளிவா என்னாலே சொல்ல முடியல. அதனால் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி கல்யாணம் நடக்காதுன்னு நீங்களே சொல்லிடுங்க. நான் வர்றேன். பை பை..."

Read more...

Wednesday, February 25, 2009

நொறுக்ஸ் - செவ்வாய் - 02/25/2009



"இவ்ளோ பெரிசா வளர்ந்திருக்கியே? இன்னுமா இப்படி?" - அப்படின்னு ஒரு பத்து பேரு சுத்தி நின்னு உங்களை கேட்டாங்கன்னா எப்படி இருக்கும்? - என்னோட அனுபவம் கீழே...


*****




ஒரு வாரம் பதிவு எதுவும் போடலேன்னா நாலு பேரு நாலு விதமா பேசுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். ஆனா அந்த நாலு பேரும் பேசிக்கிட்டே, கோச்சிக்கிட்டு ஃபாலோயர் பட்டியலிலிருந்து போயிடுவாங்கன்னு இப்பத்தான் கேள்விப்படறேன்... அவ்வ்வ்... போன வாரம் 61ன்னு இருந்தது இன்னிக்கு 57 ஆயிடுச்சு... அதனால், விடாமே எழுதி தமிழுக்கு மறுபடி தொண்டாற்றலாம்னு முடிவு பண்ணிட்டேன்.. எனக்கென்ன போச்சு... படிக்கறவங்களுக்குத்தானே கஷ்டம்!!!!




*****




அலுவலக நேரத்துலே வெளியே போய் ஷாப்பிங் பண்ற சுகமே தனி... என்ன சொல்றீங்க? ஆனா அது யாருக்கும் தெரியாத மாதிரி பண்ணனும்.




ஒரு தடவை இப்படித்தான், நண்பன் சொன்னான்னு அலுவலகத்திலிருந்து கிளம்பி ஷாப்பிங் செய்ய போயாச்சு. ஒரு மணி நேரம் சுற்றிவிட்டு கடகடன்னு திரும்ப வந்தாக்கா, அலுவலக வாசல்லே எங்களுக்கு பலத்த வரவேற்பு. அந்த கட்டிடத்தில் இருக்கும் 200-250 பேரும் வெளியே நிக்கறானுவ. வரும்போதே எங்க மேனேஜர் எங்களை பாத்துட்டாரு. சிரிச்சிக்கிட்டே அவர்கிட்டே போனாக்கா - அரை மணி நேரமா வெளியேதான் நிக்கறோம். fire alarm அடிச்சிருந்துச்சு... நீங்க எப்போ வெளியே போனீங்கன்னாரு...




”ஹிஹி... இப்படி வெளியே நிற்க போரடிச்சுது... இப்பத்தான் ஒரு பத்து நிமிஷம் முன்னாடி போனோம்”னு சொல்லி சமாளிச்சோம்....!!!




*****



எல்லாரும் நிறைய பேசிட்ட நம்ம தல ஏ.ஆர்.ஆர் பற்றிய செய்திதான். விருது வழங்கும் விழாவை பார்த்துக் கொண்டிருந்தபோது நான் (கண்டிப்பா நிறைய பேரும்) நினைத்தது, உணர்ந்தது எல்லாத்தையும் உணர்ச்சிபூர்வமா அப்படியே தன் பதிவில் சொல்லியிருக்காரு இவரு. அட்டகாசமா இருக்கு. இங்கே போய் பாருங்க. நண்பர் பேரு விஜயசாரதி.




*****




நான் பொறந்து வளர்ந்ததும் தமிழ்நாட்லேதான். ஒரு நல்ல குடும்பத் தலைவனா கொஞ்ச நாள் இருந்தது தமிழ்நாட்லேதான். இந்திய வாக்காளர் அடையாள அட்டையும், அரசு வழங்கியிருக்கும் ரேசன் அட்டையும் என் பேர்லே இருக்கு. எங்க வீட்லே ஒரு மூணு பேரு இருக்கோம். குறைந்த பட்சம் ஒரு கலைமாமணி அவார்டாவது கொடுப்பாங்களான்னு யாராவது சொல்லுங்க. அதுக்கு எங்கே அப்ளை பண்ணணும்னு ஏதாவது உரல் கொடுத்தீங்கன்னா நல்லாயிருக்கும்.




முதல் ரெண்டு நாளா எல்லார்கிட்டேயும் ரஹ்மான் ரஹ்மான்னு பொலம்பிக்கிட்டிருந்தேன்னா, இப்போ ரெண்டு நாளா ஐஸ்வர்யா தனுஷ்னு பொலம்பிக்கிட்டிருக்கேன்.. முடியல சாமி... எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.




*****




தமிழ்மண முகப்பு கீழ் பகுதியில், 'அனுபவம்' தொகுப்பில் ஒரு பதிவு ரொம்ம்ம்ம்ம்ப நாளா அப்படியே இருக்குன்னு நினைக்கிறேன். யாராவது பாத்திருக்கீங்களா????? கீழே படத்துலே வட்டம் போட்டு காட்டியிருக்கேன்... ஒரு ஜெனெரல் நாலெட்ஜ்காக தெரிஞ்சிக்கலாமேன்னுதான் கேக்கறேன்.





*****



ரெண்டு வருஷத்துக்கு முன் ஒரு நீண்ட பயணம் போனபோது ஓய்வுக்காக ஒரு உணவகத்துலே நின்றோம். சஹானாவுக்கு டயபர் (diaper) மாத்தணும்னு சொன்னதால், அவரையும் கூட்டிக்கிட்டு ஒரு டயபரையும் எடுத்துண்டு, 'பராக்கு' பாத்துக்கிட்டே போகும்போது அந்த டயபர் என் பாக்கெட்லேந்து கீழே விழுந்துடுச்சு. அங்கேயிருந்த ஒரு குறும்புக்கார தாத்தா ஒருத்தரு - "அண்ணே, உங்க டயபர் கீழே விழுந்துடுச்சு பாருங்க"ன்னு கத்தி சொல்லிட்டாரு. நான் திரும்பி பாக்கறதுக்குள்ளே, என்னை ஒரு பத்து பேரு பாத்துட்டாங்க.




எல்லார்கிட்டேயும் போய் - அண்ணே, அது நான் போட்டிருந்திருக்கலே... என் பாக்கெட்லேந்துதான் விழுந்துச்சு. நம்புங்க - ன்னு சொல்லிட்டிருக்கவா முடியும்?. அந்த தாத்தாக்கு 'நற நற'ன்னு ஒரு நன்றி சொல்லிட்டு, மத்தவங்களுக்கு ஒரு 'ஹிஹி' சொல்லிட்டு அந்த இடத்தை விட்டு ஓடிட்டேன். வேறே என்ன பண்றது????




*****

Read more...

Tuesday, February 17, 2009

சில மொக்கை ஹைக்கூகளும் பின்னே ஒரு கவிதையும்...!!!


இன்னிக்கு முழுக்க மொக்கை மூடுலே இருந்ததாலே ( நீ என்னிக்குதாண்டா சீரியஸ் மூடுலே இருந்திருக்கேன்னு நிறைய பேர் தட்டச்ச தயாராவது தெரியுது!!!), மனசுலே கவிதை மழையா
பொழிஞ்சுது. அதை அப்படியே பிழிஞ்சி சிலதை மட்டும் இங்கே போட்டிருக்கேன். பாக்கி அப்பப்போ வரும்!!! எஞ்சாய் பண்ணுங்க.... அவ்வ்வ்....


புத்தூர் மருத்துவமனை


பின்னவீனத்துவ
எழுத்தாளரின்
கட்டு உடைக்கப்படுகிறது...


வலைப்பதிவாளன்


கடனட்டைக்காக
தொலைபேசுபவரிடம் --
“உங்க பேர் என்ன?”


கொள்ளுப்பேத்தி அழுகை


கோடிக்கணக்கில்
பிங்க் டிரஸ்
அனுப்பும் போராட்டம்.


கொள்ளுப்பேரன் பதவியேற்பு


ஜ்யாமெண்ட்ரி பாக்ஸ்
திறக்கும் மாபெரும்
விழா..


பேசும்படம் - II (விளக்கம் கீழே...)


சந்தானத்தின்
முழு நீள
நகைச்சுவைப் படம்...


குடும்பஸ்தரின் வாரயிறுதி


எங்கு போறதுன்னு முடிவு பண்றதிலே சண்டை...
அங்கு போகும்போதும் வழியிலே சண்டை...
தின்னும் இடத்துலே திட்டிக்கிட்டே சண்டை...
திரும்பி வரும்போது தாறுமாறா சண்டை...
வீட்லே நுழைஞ்சதும் விடாமே சண்டை...
போறுண்டா சாமி..
சண்டே வந்தாலே காயுது மண்டை

-----


பேசும்படம் - II வின் விளக்கம்!!!


சஹானாவுக்கு ஆங்கிலம் சொல்லி கொடுத்துக் கொண்டிருந்தபோது, silent எழுத்துகளைப் பற்றிய சர்ச்சை(!!!) வந்தது. உதாரணத்திற்கு :- queue.


அவரின் கேள்வி என்னன்னா - அந்த உபரி எழுத்துக்கள் தேவையில்லேன்னா, விட்றவேண்டியதுதானே... எதுக்கு வீணா அதையும் சேர்த்து எழுதிக்கிட்டு??? இப்படில்லாம் கேட்டா என்னன்னு பதில் சொல்றது சொல்லுங்க... நான் வழக்கம்போல் ‘பே'ன்னு முழிச்சிட்டிருந்தேன்.


இதாவது பரவாயில்லை...


அதன் பிறகு தமிழ் படிக்கும்போது -- இதில் ஏன் silent எழுத்துக்கள் இல்லைன்னு ஒரு கேள்வி... என்னோட ‘ரசம்' என்னன்னுதான் உங்களுக்கு தெரியுமே!!!


பிறகு தட்டுத்தடுமாறி நான் சொன்னது இதுதான்.


”எனக்குத் தெரிஞ்சி தமிழ்லே அந்த மாதிரி இல்லை. ஆனா, நம்ம நகைச்சுவை நடிகர்களோட சீன்லே பல இடங்கள்லே, அவங்க பேசறப்போ பல வார்த்தைகளை - பின்னால் அதிகப்படியா இசை அமைத்தோ அல்லது வெறும் காத்தடித்தோ - சென்சார்லே அமுக்கிடுவாங்க.”


இந்த விவாதம் செய்துகொண்டிருக்கும்போதுதான் மேற்கூறிய ஹைக்கூ(???) தோன்றியது... எப்படி????


Read more...

Sunday, February 15, 2009

மாலில் (Mall) ஒரு நாள்!!!

வாரயிறுதியில் ரொம்பவே போரடிச்சதுன்னா, நாங்க போற இடம் எங்க ஊர் மால். ஒரு நாள் முழுக்கக்கூட உள்ளாற சுத்திக்கிட்டே இருக்கலாம். யாரும் - என்ன பண்றீங்க, எங்கே வந்தீங்கன்னு கேக்கவே மாட்டாங்க. ஒரே ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன செய்வேன்னாக்கா, கடனட்டைகளை வெளியே காரிலேயே விட்டுட்டு போயிடுவேன். இல்லேன்னா, இது நல்லாயிருக்கு, அது நல்லாயிருக்குன்னு தேவையில்லாமே வாங்க ஆரம்பிச்சிடுவாங்க(!!!). அதனால், ஆத்திர அவசரத்துக்கு ஒரு பத்து ரூபாய் மட்டும் பாக்கெட்லே போட்டுட்டு உள்ற போயிடுவோம்.


அந்த மாலில் என்னன்ன கடைகள் இருக்கு, அங்கே நாங்க பண்ற கலாட்டாக்கள் என்னென்ன - கீழே படிங்க.


முதல்லே வர்றது ஒரு ஃபர்னிச்சர் கடை. அந்த கடைக்கு வரும் சிறுவர்களுக்கு ஒரு பெரிய பலூன் ஊதித்தருவாங்க. அந்த பலூனுக்காகவே அந்த கடைக்குள்ளே போய் - இந்த அலமாரி வாங்கலாமா, அந்த சோஃபா வாங்கலாமான்னு சிறிது நேரம் தங்ஸுடன் ஆலோசித்தபிறகு(!!!) - சஹானாவுக்காக பலூன் வாங்கப் போய் நிற்போம். ஒரே ஒரு தொல்லை என்னன்னா, அங்கிருக்கும் சீட்டில் நம்ம பேரு, தொலைபேசி எண் எல்லாத்தையும் எழுதினாத்தான் அந்த பலூன் கொடுப்பாங்க. முதல் தடவை தெரியாத்தனமா எங்க தொலைபேசி எண்ணைக் கொடுத்து பலூனை வாங்கி வந்துட்டோம். அவங்களும் தொடர்ந்து பல தடவை தொலைபேசி, அதை வாங்குங்க, இதை வாங்குங்கன்னு ஒரே தொல்லை பண்ணிட்டாங்க... நாம விடுவோமா... அடுத்த தடவையிலிருந்து பலூன் வாங்கிவிட்டு - தொலைபேசி எண் கொடுக்கும்போது - நண்பர்கள் யாராவது ஒருத்தரோட எண்ணை கொடுத்துட்டு... எஸ்கேஏஏஏப்......



கடைகளுக்குள்ளே நடந்துபோகும்போது நான் சிறிது முன்னாடி நடந்துகொண்டிருக்க, மத்த ரெண்டு பேரும் பின்னாடி வருவாங்க. எங்க கூட நடந்து வாங்களேன்னு தங்ஸ் சொன்னாங்கன்னா நான் சொல்றது - ”அதான் கல்யாணம் ஆயிருச்சுல்லே... அதுக்கப்புறம் என்ன பக்கத்துப் பக்கத்துலே நடக்க வேண்டியிருக்கு? ஊர் உலகத்திலே எல்லாம் இப்படியா நடக்கறாங்க?”. -- இந்த என் கூற்றை மறுக்கறவங்க கையைத் தூக்குங்க.



அடுத்து வர்றது - பொம்பளைங்களுக்கான முடிதிருத்தும் கடை. இந்த உலகத்துலேயே எனக்குப் புரியாத ஒண்ணே ஒண்ணு (!!) இதுதான். இந்த பெண்கள், நீளமான முடியிருந்தா ரொம்ப அசிங்கமாயிருக்குன்னு - அதை சுருட்டையாக்கிக்க கடைக்கு வர்றாங்க. அதே சுருள் முடியிருக்கிறவங்க என்னடான்னா - அதுவும் நல்லாயில்லேன்னு சொல்லி முடியை நீளமாக்கிக்கணும்னு கடைக்கு வர்றாங்க. இருக்கறத வச்சிக்கிட்டு ஏன் இருக்க'முடி'யலேன்னு தெரியல!!! யாராச்சும் சொல்லுங்க. இந்த கடையைத் தாண்டி போறப்ப நான் தங்ஸ்கிட்டே சொல்றது என்னன்னா - நானும் ஒரு தடவை அந்த கடையில் புகுந்து, நீளமா இருக்கற என் மீசையை சுருள்மீசையாக்கி விடும்மான்னு அங்கிருக்கிறவங்கள கேக்கணும்.!!!



அடுத்து வர்றது - பெண்களுக்கான மேக்கப் சாமான்கள் கடைகள். சஹானாவையும், அவங்கம்மாவையும் கடைக்குள்ளே 'வேடிக்கை' பாக்க அனுப்பிச்சிடுவேன். நமக்கு பெண்களின் மேக்கப் சமாச்சாரங்கள் எதுக்கு சொல்லுங்க? அதனால் நான் மேக்கப் கடைக்குள்ளே போகாமே, மேக்கப் போட்டுட்டு வர்றவங்கள வேடிக்கை பாத்துக்கிட்டே வெளியே உக்காந்திருப்பேன்.



அந்த மாலில் நடந்து கொண்டிருக்கும்போது நம் வழியில் திடீரென்று சில விற்பனைப் பெண்கள் குறுக்கிடுவாங்க. புதுசா வந்திருக்கிற ஏதாவது ஒரு பொருளை காட்டி - இதை வாங்கிக்குங்கன்னு பெரிய லெக்சர் கொடுத்திட்டிருப்பாங்க. நானும் ‘மனதைத் திருடிவிட்டாய்' பிரபுதேவா மாதிரி தலையாட்டிக்கிட்டு - பின்னாடி வர்ற தங்ஸ் என்னை நெட்டித்தள்ளிப் போறவரைக்கும் - சிரிச்சிக்கிட்டே நின்னுட்டிருப்பேன். நம்மையும் ஒரு மனுசனா மதிச்சி பேசறவங்களை நாமும் மதிச்சி நின்னு பேசறதுதானே முறை? தங்ஸுக்கு அது புரிவதேயில்லை... அடுத்த தடவை போகும்போது, அவங்க கிட்ட்ட்ட்டே போய் அவங்க பேசறத கேட்டுக்கிட்டேஏஏஏ இருக்கணும்.



இப்படியாக ஒரு தடவை மாலில் இருந்து வெளியே வரும்போது -- எதிரில் வந்த இன்னொரு இந்திய ஜோடி ஒன்றைப் பார்த்தோம். “இங்கே வரவேண்டாம், வரவேண்டாம்னு எவ்ளவோ சொல்றேன். கேட்டாத்தானே? இதுக்கு வீட்லேயே ஏதாவது படம் பாத்துக்கிட்டிருக்கலாம். “ -- அப்படி இப்படின்னு அந்த தங்ஸ் வளவளவென்று பேசிக்கொண்டே போனார். “ நான் தனி மரமில்லேடா... ஒரு தோப்பு...”ன்னு சொல்லிக்கிட்டு நெஞ்சை நிமித்திக்கிட்டு வெளியே வந்தேன்.

Read more...

Wednesday, February 11, 2009

வேலண்டைன்ஸ் டே ஸ்பெஷல்...!!!

இந்த வாரயிறுதியிலே நான் பெங்களூர்லேயோ, மங்களூர்லேயோ இருக்கணும்னு நினைச்சேன்... யாரையும் பாக்கறதுக்கு இல்லேங்க... சும்மா அங்கங்கே நின்னுகிட்டு - போற வர்ற லேடீஸ்கிட்டே இப்போ டைம் என்ன? இன்னிக்கு தேதி என்ன? அப்படின்னு கேக்கத்தான். ஸ்ரீராம் சேனாக்காரங்க புண்ணியத்துலே எனக்கும் ஏதாவது நல்லது(!!!) நடக்காதாங்கற நப்பாசைதான் பாருங்க.




நம்ம ஊர்லேதான் இந்த நாளை 'காதலர்' தினமா கொண்டாடறாங்க. காதலர்களுக்கு பூ, புஷ்பம், புய்ப்பம் (இல்லே, நீங்க சொல்றா மாதிரியும் சொல்லலாம்!!!), வாழ்த்து அட்டை மாதிரியான சமாச்சாரங்கள் விக்குதுன்னு சொல்றாங்க.




இங்கே, காதலர்களுக்காக மட்டுமில்லாமல், பெற்றோர், ஆசிரியர், சகோதர சகோதரிகள், நண்பர்கள் அப்படி இப்படின்னு மானாவாரியா எல்லோருக்கும் தங்கள் அன்பை வெளிக்காட்டும் ஒரு நாளாக கொண்டாடறாங்க.




ஒரு டாலருக்கு விற்கும் வாழ்த்து அட்டையிலிருந்து, ஆயிரங்களில் விற்கும் நகைகள் வரை இந்த தினத்திற்காக விற்பனைக்கு வந்திருக்கிறது. கடைகள்லே கூட்டம் அலைமோதுது. சரி நாங்களும் - வெறும் சில வாழ்த்து அட்டைகள் வாங்கறதுக்காகவும், வாங்கறவங்கள பாக்கறதுக்காகவும் சிலபல கடைகளுக்குப் போய் வந்தோம்.




வாழ்த்து அட்டை எதுக்குன்னு கேக்கலியே, சஹானாவுக்கு பள்ளியில் படிக்கும் நண்பர்களுக்குக் கொடுக்கத்தான். வாழ்த்து அட்டை மட்டும் போதாது, ஏதாவது ஒரு கிஃப்டும் வாங்கணும்னு ரெண்டு கால்களிலும் நின்று அடம்பிடித்தவரை ஒரு சாக்லேட் வாங்கிக் கொடுத்து சமாதானப்படுத்தி விட்டோம்.




நேற்று உட்கார்ந்து எல்லா அட்டைகளிலும் படங்களை வரைந்து, கையெழுத்திட்டு, உறைகளிலும் நண்பர்கள் பெயர் எழுதி - அனைத்தையும் தயார் செய்துவிட்டார். வெள்ளி அன்று பள்ளியில் துள்ளி விளையாடும் எம்குலப் பெண்களுக்கு மஞ்ஞ்ஞ்சள் அரைத்து.... சாரி சாரி... எதுகை மோனையோட சொல்லணும்னு ஆரம்பிச்சி, வசனம் எங்கேயோ போயிடுச்சு... மறுபடி முதல்லேந்து ஆரம்பிக்கறேன்...:-))

வெள்ளி அன்று பள்ளியில் நடக்கும் சிறு பார்ட்டியில் அட்டைகளை நண்பர்களுக்குக் கொடுக்க வேண்டியதுதான் பாக்கி.

அனைவருக்கும் இனிய வேலண்டைன் தின வாழ்த்துகள்!!!


*****


ஆசிரியர்களுக்கு கொடுப்பதற்காக சில...


*****

நண்பர்களின் பட்டியல்


*****

பயங்கர பிஸிப்பா.. கொஞ்ச நேரம் கழிச்சி வாங்க.. பேசலாம்...



*****

மொத்த அட்டைகள். கையெழுத்துடன் ஒரு படம் போட்டு தரப்படும்.

Read more...

Tuesday, February 10, 2009

டாக்டர் விஜயின் அடுத்த படம் - காலு.. The Golden Leg...

ஒரு மருத்துவமனையில் ஒரு பெண் புலம்பிக் கொண்டிருக்கிறார்.

"உடனே பத்தாயிரம் கொடுத்தாதான் ஆபரேஷன் பண்ணுவேன்னு இந்த டாக்டர் சொல்றாரு. இப்போ நான் பணத்துக்கு எங்கே போவேன். யார்கிட்டே கேப்பேன்?".

அங்கிருந்து ஒருவர் வந்து அந்த பெண்ணிடம் ஒரு கைபேசியை கொடுக்கிறார் - "இந்தாங்கம்மா, நம்ம வேலு இதை கொடுத்தார். நீங்க அவருக்கு உடனே இந்த தொலைபேசியில் ஒரு கால் போட்டு, அந்த டாக்டர்கிட்டே கனெக்ட் பண்ணி கொடுங்க. அப்புறம் எல்லாம் சரியாயிடும். கவலைப்படாதீங்க".

"ஐயா, அந்த வேலு எங்கிருந்தாலும் நல்லாயிருக்கணும். நான் இப்பவே கால் பண்றேன்".


*****


திருமண மண்டபத்தில் பெண்ணின் தந்தை பையனின் தந்தையிடம் கெஞ்சுகிறார்.

"ஐயா, இப்படி கடைசி நிமிஷத்திலே வந்து ஒரு லட்சம் கொடுத்தாத்தான் கல்யாணம் நடக்கும்னா எப்படிங்க? இன்னும் ஒரு மாசத்திலே என் தலையை அடகு வெச்சாவது நான் ஒரு லட்சம் புரட்டித் தர்றேன்னு சொன்னேனே? தயவு செய்து உங்க பையனை தாலி கட்டச் சொல்லுங்க".

"அதெல்லாம் முடியாது. டேய். எழுந்திருடா. இந்த கல்யாணம் நடக்காது".

அங்கிருந்து ஒருவர் வந்து பெண்ணின் தந்தையிடம் ஒரு கைபேசியை கொடுக்கிறார். "ஐயா, இந்தாங்க. நம்ம வேலு இதை கொடுத்தனுப்பிச்சாரு. நீங்க உடனே அவருக்கு இதிலேந்து ஒரு காலைப் போட்டு அந்த ஆளிடம் கனெக்ட் பண்ணிக் கொடுங்க. எல்லா பிரச்சினையும் சரியாயிடும். வருத்தப்படாதீங்க".

"தம்பி. உடனே பண்றேம்பா. உடனே பண்றேன்.. என் பொண்ணுக்கு வாழ்க்கையைத் தந்த அந்த வேலுத்தம்பி எங்கிருந்தாலும் மகராசனா இருக்கணும்".


*****


"எல்லாருக்கும் இப்படி செல்ல குடுத்து உதவி பண்றாரே நம்ம வேலு... இப்ப அவரு எங்கே இருக்காரு?"

"இன்னிக்கு என்ன நாளு! நம்ம ராயபுரம் டீமுக்கும் ராயப்பேட்டை டீமுக்கும் கால்பந்து இறுதிப் போட்டி. அண்ணந்தான் ராயபுரம் டீமுக்கு தலைவர். அங்கேதான் இருப்பார்".


*****


கால்பந்து மைதானம். ஒருத்தர் கால்களை மட்டும் க்ளோசப்பில் காட்டுகிறார்கள் (அது விஜயின் கால்கள்தான்னு நமக்கு ஏற்கனவே தெரியும்!!!).

இன்னும் ஒரே ஒரு கோல் போட்டால், அந்த கால் பார்ட்டியின் அணி கோப்பையை வென்று விடும். அனைவரும் தயாராக, நம் ஆளும் பெனால்டி ஷாட் அடிக்க தயாராகிறார்.

ஒரு பத்தடி பின்னால் தள்ளிப்போய் அங்கிருந்து பந்தை நோக்கி ஸ்லோ மோஷனில் ஓடிவருகிறார். அவர் வைக்கும் ஒரு காலடிக்கும் - பூகம்பமும், எரிமலை வெடிக்கும் எஃபெக்ட் காட்டப்படுகிறது - அரங்கத்தில் அனைவரும் வேலு, வேலு என்று கத்திக்கொண்டிருக்க - பின்னணி இசையில் காலு, காலு என்று இசைக்கப்படுகிறது.

பந்தின் பக்கத்தில் வரும்போது, திடீரென்று அவர் கைப்பேசி அடிக்கிறது. ஓடிக்கொண்டே அதை எடுத்துப் பார்க்கிறார். ஒரே சமயத்தில் இரண்டு (தொலைபேசி) கால்கள் வருகிறது. (லாஜிக்கையெல்லாம் மறந்துடுங்க!!!).

அந்த தொலைபேசி கால்கள் எங்கிருந்துன்னு எல்லோருக்கும் தெரியும். ஒண்ணு, மருத்துவமனையிலிருந்து.. இன்னொண்ணு கல்யாண மண்டபத்திலிருந்து.

விஜய் எப்படி இந்த பிரச்சினைகளை சமாளிப்பார், கோல் போடுவாரா, ஆட்டத்தில் வெல்வாரா - இப்படி ஏகப்பட்ட கேள்விகளுடன், படம் பார்க்கும் மக்கள் படபடப்பில் சீட்டின் நுனிக்கே வந்துவிடுகின்றனர்.

'டக்'கென்று விஜய் அந்த கைப்பேசியை தூக்கி மேலே போடுகிறார். அது கீழே வரும்போது, தன் காலால் அதை எட்டி உதைக்க, அது பறந்து போய் பந்தின் மேல் பட்டு, பந்து பறந்து போய் கோல்போஸ்டில் விழுகிறது.

இப்போது திரைப்பட ஸ்க்ரீனை மூன்றாக பிரித்துக் காட்டுகின்றனர்.

முதல் ஸ்க்ரீனில்:
மைதானம்: கோல் போட்ட விஜயை எல்லோரும் தூக்கி வெற்றியை கொண்டாடுகின்றனர். பயங்கர ஆரவாரம்.

இரண்டாவது ஸ்க்ரீனில்:
மருத்துவமனை: கைப்பேசியை எட்டி உதைத்த விஜயின் கால், டாக்டரின் கையில் இருக்கும் கைப்பேசியிலிருந்து வெளியே வந்து அவரை எட்டி உதைப்பதுபோல் பயமுறுத்துகிறது.
பயந்து போன டாக்டர், அந்த ஆபரேஷனை இலவசமாக செய்துவிடுகிறேனென்று சொல்கிறார்.

மூன்றாவது ஸ்க்ரீனில்:
கல்யாண மண்டபம்: கைப்பேசியை எட்டி உதைத்த விஜயின் கால், பையனின் தந்தை கையிலிருக்கும் கைப்பேசியிலிருந்து வெளியே வந்து, அவரை எட்டி உதைக்கிறது.
அவரும் பயந்து கொண்டு - "உங்க காசே வேணாங்க. டேய், தாலிய கட்றா. சீக்கிரம் சீக்கிரம்" என்று சொல்லி திருமணத்தை நடத்தி வைக்கிறார்.


*****


இப்போது இரண்டாவது ஸ்க்ரீனும், மூன்றாவது ஸ்க்ரீனும் மறைய - முதல் ஸ்க்ரீன் பெரிதாகிறது. உடனே தொடங்குகிறது பாட்டு.


ஏய்.. காலைப் பாரு... காலைப் பாரு..
வேலுவோட காலைப் பாரு
கோலு போடும் காலைப் பாரு
ஷூவுக்குள்ளே சாக்ஸை பாரு
சாக்ஸுக்குள்ளே நகத்தை பாரு
நகத்தில் அழுக்கு இல்லே பாரு
வெட்டியாக இருக்கும்போது
அழுக்கை சுத்தம் செய்துடுவாரு
வாயாலே நாம பேசும்போது
காலாலே இவரு பேசுவாருடா.. ஹாஹாஹாஹா..
ஹேய்... Goldன்னா வேலுதான்..
Legன்னா காலுதான்...
Gold... வேலு... Leg... காலு...

*****

டக்கென்று விஜய் நம்மைப் பார்த்து திரும்பி கண்ணடித்து சிரித்துக் கொண்டே வணக்கம் செய்கிறார்.

திரையில் "காலு.. The Golden Leg..."... "கதை, திரைக்கதை, வசனம், டைரக்சன்... டாக்டர் விஜய்" என்று காட்டப்படுகிறது.


Read more...

Monday, February 9, 2009

அலுவலகத்தில் வேலையை துவக்கும் முன் செய்யவேண்டியவை என்ன?

தினமும் காலையில் அலுவலகத்திற்குப் போனவுடன் சில பேர் தங்கள் இருக்கையில் வைத்திருக்கும் (ஏதாவது) ஒரு கடவுள் படத்திற்கு ஒரு 'குட் மார்னிங்' போட்டபிறகு அன்றைய வேலையை துவக்குவார்கள். அப்போதுதான் அன்றைய வேலை பிரச்சினை எதுவும் இல்லாமல் போகும் என்ற ஒரு சிறு நம்பிக்கை. என்ன சரிதானே???


அப்படி வேலையை துவங்கும் முன் நான் என்ன செய்வேன்னு நினைச்சிப் பாத்தேன்.... ஆமா... அதுதான் இந்த பதிவு... :-))


சுடோகு : காலையில் மூளையை(!!!) சுறுசுறுப்பாக வைத்திருக்க இந்த சுடோகுதாங்க உதவுது. கஷ்டமான 'லெவல்' ஏதாவது ஒண்ணு எடுத்துக்கிட்டு, எவ்ளோ நேரமானாலும்(!!!) அந்த விளையாட்டை முடிச்சிட்டுத்தான் அன்றைய அலுவலக வேலையை துவக்கணும்ற உறுதியோடு விளையாடுவேன். அப்படியே வெற்றியோட முடிச்சிட்டேன்னா அன்றைய தினம் மிக அற்புதமா இருக்கும்ன்றது என்னோட நம்பிக்கை.


காபி: காலங்கார்த்தாலே அலுவலகத்தில் காபி குடிக்கிற சுகமே தனி. ஒரு கப் முழுக்க எடுத்துக்கிட்டு, 'சர்ர்ர்ர்ர்'ன்னு சத்தத்தோட கொஞ்சம் கொஞ்சமா அதை உறிஞ்சி குடிப்பேன். அப்படி காபி குடிக்கறதை ஒரு தவமா நினைக்கறதாலே, அதை முடிக்கற வரைக்கும் எந்த வேலையையும் துவக்கறதில்லேன்னு முடிவே பண்ணிட்டேன்...


வீட்டுக்கு தொலைபேசி: அலுவலகம் வந்தபிறகு, நல்லபடியா வந்து சேர்ந்ததை வீட்டுக்கு சொல்லணுமே. மெனக்கெட்டு இந்த ஒரே ஒரு விஷயத்துக்காக தொலைபேசினா நல்லா இருக்காதுன்றதாலே, கூட ஒரு பத்து நிமிடம் தங்ஸிடம் பேசுவேன். அலுவலகத்துலே வேலை எப்பவுமே இருக்கும். அதுக்காக வீட்டுக்கு பேசாமே இருக்கமுடியுமா என்ன?

நடைப்பயிற்சி: வேலையில் மூழ்கிட்டேன்னா சுத்திலும் என்ன நடக்குதுன்னே எனக்குத் தெரியாது. பயங்கர டென்ஷனாயிருக்கும். அதனாலே என்ன செய்வேன்னா - (டென்ஷன்) வரும்முன் காப்போம்ற நல்ல எண்ணத்திலே, காலையிலேயே ஒரு பத்து நிமிடம் அலுவலகத்தில் அப்படியே ஒரு சுற்று நடைப்பயிற்சிக்கு போய்விட்டு வருவேன். வீட்லே வேலை ஜாஸ்தி, நடக்க இடமில்லைன்ற காரணத்தால் இப்படி அலுவலகத்தில் நடக்க வேண்டியிருக்கு அவ்ளோதான் வேற காரணம் ஒண்ணுமில்லே...

நண்பர்கள் நலன்: நம்ம நலனை மட்டும் பாத்துக்கிட்டா போதுமா, நம்ம கூட வேலை பாக்கறவங்களும் நல்லா இருக்கணுமே... அந்த நல்ல எண்ணத்துலே.. தினமும் காலை அலுவலகம் வந்தவுடன் எல்லா நண்பர்கள் இடத்துக்கும் போய்.. நேத்து நல்லா தூங்கினீங்களா?... என்ன ஷாப்பிங் பண்ணீங்க... என்ன படம் பாத்தீங்க... அப்படி இப்படின்னு கொஞ்ஞ்ஞ்ஞ்சமே கொஞ்ச நேரம் பேசிட்டு, டக்குன்னு என் இருக்கைக்கு வந்துடுவேன்... எனக்கு வேலைதான் முக்கியம்....

செய்திகள்: ஒரு இரவு முழுக்க தூங்கியிருக்கோம். அந்த நேரத்துலே உலகத்துலே என்னென்ன நடந்திருக்கோ? -- இதை தெரிஞ்சிக்கறதுக்காக இணையத்தில் சென்னை / தமிழக / இந்திய / உலக செய்திகளை ஒரு முறை படித்துவிடுவேன். அதுக்காக தினமும் ஏதாவது பரபரப்பான நியூஸை எதிர்ப்பார்க்கிறவன்னு நினைச்சிக்காதீங்க. உலக விஷயங்களை தெரிஞ்சிக்கணும்கிற ஆர்வம்தான் காரணம். அதுக்கப்புறம்தான் எப்பவுமே கூட இருக்கிற அலுவலக வேலையெல்லாம்.

இப்படியாக ஒரு வழியா இந்த ச்சின்ன்ன்ன்ன்னச்சின்ன விஷயங்களை முடிச்சிட்டு, அலுவலக வேலைகளை துவக்கி விடுவேன்.

பட்டுவாடா: நேற்று அலுவலகத்தை விட்டு போனபிறகு வந்திருக்கும் மின்னஞ்சல்களை ஒரு முறை பார்த்துவிட்டு, எல்லாவற்றையும், என்னை விட சிறப்பாக வேலை செய்யும் என்கூட வேலை பார்ப்பவர்கள் யாரின் பார்வைக்காவது அனுப்பி வைத்துவிடுவேன். தபால்காரர் எல்லா தபால்களையும் பகுதி வாரியாக பிரிப்பதை நினைத்துக் கொள்ளவும். அதே மாதிரிதான் நான் செய்யும் பட்டுவாடாவும்.

*****

அவ்வளவுதான். இன்னியோட வேலை முடிஞ்சுது. இனிமே இணையத்துலே உக்காந்திர வேண்டியதுதான். நம்ம கடைக்கு வந்திருக்கறவங்களை வரவேற்கணும். நாம போற வழக்கமான கடைகள்லே போய் வருகையை பதியணும். நாளைய பதிவுக்கான வேலையை துவக்கணும். எனக்கு நிறைய வேலை இருக்கு. பிறகு பாப்போம். என்ன? பை பை....சீ யூ.....

Read more...

Sunday, February 8, 2009

நொறுக்ஸ் - ஞாயிறு - 02/08/2009

(காட்சி 1)
"என்னங்க, என்ன பண்ணிக்கிட்டிருக்கீங்க இவ்ளோ நேரமா?"
"பழ்ழு தேழ்ழிக்கிழுக்கேன்."
"அதுக்கு இவ்ளோ நேரமா? சீக்கிரம் வெளியே வாங்க. காபி ஆறிப்போகுது.."
"வன்ழுத்தேன். ழிவிலே ழொன்னது கேழ்ழியா. ழொம்ப நேழம் பழ்ழு தேழ்ழணும்னு ழொன்னாங்க..."
"சரி சரி. சீக்கிரம் வாங்க வெளியே..."

(காட்சி 2)
"என்னம்மா... தோசை ரெடியா? ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டிருக்கேன்.."
"அது சரி. நான் என்ன இங்கே சும்மாவா இருக்கேன். தோசை செய்துட்டுதானே இருக்கேன்.."
"சீக்கிரம் ஆவட்டும். கை காயுது பாரு."
"அப்படியே கொஞ்சம் திரும்பி பாருங்க."
(கையில் சூடாக தோசைத்திருப்பி)
"சரி சரி. நான் இப்ப என்ன சொல்லிட்டேன்னு இவ்ளோ கோச்சிக்கறே..."

-----

மேலே இருக்கும் இரண்டு காட்சிகளும் எங்க வீட்லே நடந்ததுதான். அதில் என்ன ஸ்பெஷல், இது எல்லா வீட்லேயும் நடக்கறதுதானேன்னு சொல்றீங்களா.. அப்படி இல்லே... இதற்கான
பதில் பதிவின் கடைசியில்!!!

********

என் பிறந்த நாள், தங்ஸின் பிறந்த நாள், எங்கள் திருமண நாள், சஹானாவின் பிறந்த நாள் - இந்த நாலு நாட்களும் நான் அலுவலகத்திற்கு லீவ் போட வேண்டுமென்ற தீர்மானம் வருட
ஆரம்பத்திலேயே வீட்டில் போடப்பட்டு விடுகிறது. காலையில்/மாலையில் அல்லது அந்த நாளுக்குப் பக்கத்து வாரயிறுதியில் கொண்டாடலாமென்று கூறினால் வெளிநடப்பு(!!!)
செய்துவிடுகின்றனர்.

ஆட்சியாளர்களிடம் சொல்லி, இப்படிப்பட்ட கொண்டாட்டங்களையெல்லாம் எல்லோரும் ஜனவரி 1ம் தேதிதான் கொண்டாட வேண்டுமென்று ஆணை பிறப்பிக்கச் சொல்ல வேண்டும். என்ன சொல்றீங்க?.... அவ்வ்வ்..

*****

நண்பர்களுடன் பேசவேண்டியிருந்தால், அவர்களை ஒரு குறிப்பிட்ட நேரத்தைச் சொல்லி, சரியா அந்த நேரத்திற்கு தொலைபேசச் சொல்வேன். (அதாவது - பேசுவதற்கு
‘அப்பாயிண்ட்மெண்ட்'!!!) அது எதுக்குன்றீங்களா???

நாமும் நிறைய வீட்டு வேலை (பாத்திரம் தேய்த்தல், துணி துவைத்தல்) போன்ற வேலைகளை செய்கிறோம் என்று சொன்னால் யாரும் நம்பமாட்டேன் என்கிறார்கள். அதனால், நாம் வேலை செய்யும் நேரமாகப் பார்த்து அவர்கள் தொலைபேசினால், அவர்கள் இரு நிமிடம் காத்திருக்க வைத்துவிட்டோ அல்லது (சத்தத்துடன்) அந்த வேலை செய்துகொண்டோ அவர்களிடம் பேசி - நான் வேலை செய்ததை ‘வரலாற்றில்' இடம்பெறச் செய்வதற்காகத்தான். ஏன்னா, வரலாறு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப முக்கியம். சரிதானே????

*****

ஒரு வாரம் டென்ஷனாய் கழிந்தபிறகு ஒரு வழியாக இன்று பூச்சாண்டிக்கு 50-வது ஃபாலோயர் கிடைத்தார். ஃபாலோயர் எல்லோரும் பின்னூட்டம் போடுவதில்லை.. பின்னூட்டம்
போடுறவங்கெல்லாம் ஃபாலோயரா இருக்கறதில்லை - இந்த வாதமெல்லாம் ஓகே என்றாலும், நான் கூட 50 அடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதனால், முதல் 49 ஃபாலோயர்களுக்கு
நன்றி.. நீங்க இல்லேன்னா எனக்கு 50 கிடைச்சிருக்காது. 50வது நண்பருக்கு மிக்க நன்றி!!!

*****

முதலில் சொன்ன ரெண்டு காட்சிகளிலும் நாங்க சாதாரணமா பேசிக்கிட்ட மாதிரி தெரியும். ஆனா. ஒவ்வொரு வாக்கியத்துக்குப் பிறகும் 'ஓவர்'னு சொல்லிப் பாருங்க.... கரெக்ட். நண்பர்
ஒருவர் தன் மகனின் பிறந்த நாளுக்கு சஹானாவுக்கு, சிறுவர்கள் விளையாடும் வாக்கி-டாக்கி ஒன்று பரிசாகக் கொடுத்தார். இப்பல்லாம் வீட்லே (இருக்கறதே மொத்தமே ரெண்டு
அறைதான்!!!) அந்த வாக்கி-டாக்கியில்தான் பேசறதே..... :-)))

பிகு: அவ்வ்வ்.... இதெல்லாம் ரொம்ப 'ஓவர்' - அப்படின்னு வர்ற பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்படும்!!!

Read more...

Wednesday, February 4, 2009

தமிழ்குடும்பத்தில் ஒரு அவசரக்கூட்டம்...!!!

முகு - 1: இதில் வரும் கதாபாத்திரங்கள், சம்பவம் அனைத்தும் கற்பனையே. அப்படியே யாரையும் குறிப்பிடும்படியாக இருந்தால், அது தற்செயலானதுதான்.


முகு - 2: அதே மாதிரி எந்த வசனத்தை யார் பேசினாங்கன்றது முக்கியமில்லை. என்ன பேசினாங்கன்றதுதான் முக்கியம். படிச்சிட்டு நல்லா இருந்தா சொல்லுங்க...

*****

"கண்ணுகளா, நம்ம குடும்பத்திலே மொத்தம் எவ்ளோ குழந்தைகள் இருக்குன்னு ஒரு கணக்கு பண்ணி சொல்லுங்க பாப்போம்".

"எதுக்குப்பா?"


"யாரு இது எதிர்க்கேள்வி கேக்கறது? எல்லா குழந்தைங்க பேருலேல்யும் ஒரு தொலைக்காட்சி சேனலோ, FM-ஓ ஆரம்பிக்க வேணாமா? இன்னும் நாலைஞ்சு மாசத்துலே தேர்தல் வருது. அதுக்குள்ளே எல்லா லைசன்சும் வாங்கிடணும்."

"அப்ப ஓகே... ம்... மொத்தம் 25 குழந்தைங்க இருக்காங்க இப்போதைக்கு."


"25ஆ? அண்ணா... கணக்கு இடிக்குதே????... ஆ... இந்த மூணு குழந்தைங்க பக்கத்து வீட்டு குழந்தைங்க. இங்கே சும்மா விளையாட வந்திருக்காங்க. அவங்கள விட்ருங்க."


"அநியாயம்... அக்கிரமம்.... இது எதிர்க்கட்சிகளின் சதி.. நம்ம வீட்டுக்குள்ளே குழந்தைகளை ஏவி, இங்கே நடக்கும் விஷயங்களை கவரப் பாக்கறாங்க... முதல்லே இவங்கள வீட்டுக்கு அனுப்புங்க.."


"அப்பா... இவ்ளோ தொலைக்காட்சி ஆரம்பிக்கிறோமே? என்னென்ன சப்ஜெக்ட்லே ஆரம்பிக்கப் போறோம்? அறிவியல், வரலாறு, ஸ்போர்ட்ஸ் இப்படியா?"


"எவ அவ? இதெல்லாம் ஆரம்பிச்சா மக்களுக்கு ஞானம் வந்துடாதா? அப்புறம் நம்ம பொழப்பு?
அப்போ என்ன சப்ஜெட்லே ஆரம்பிக்கறது?"


"சினிமா, நகைச்சுவை, பாட்டு இதெல்லாம் ஏற்கெனவே இருக்கு. வேணா 'அடல்ட்ஸ்' சேனல் ஒண்ணு ஆரம்பிச்சிடலாம். இதில் 'பெரியவர்களுக்கு' மட்டும் காட்டக்கூடிய சினிமா காட்சிகள், ட்ராமா இதெல்லாம் போடலாம்."


"அப்ப பிரச்சினையேயில்லே.. இப்ப வர்ற எல்லா சினிமாக்களையும் அந்த சேனல்லே காட்டிடலாம்... "


"இப்படியெல்லாம் செய்ய முடியுமா? மக்கள்கிட்டேந்து எதிர்ப்பு வராதா?"


"அதெல்லாம் ஒண்ணும் வராது. அதுக்கு நான் ஒரு ஐடியா வெச்சிருக்கேன். "


"என்ன அது?"

"அந்த தொலைக்காட்சியிலே முதல் தொடரே - திருவள்ளுவர் கதைகள்னு சொல்லிடலாம். இதில் அவரோட 'காமத்துப்பால்' லேந்து ஒவ்வொரு குறளா எடுத்து அதை ஒரு வாரம் வரக்கூடிய ட்ராமாவா போடறோம். அதுக்கு கதை, வசனம் நாந்தான் எழுதுவேன்."


"இதெல்லாம் சரிப்படுமான்னு எனக்குத் தெரியல."


"சரிப்பட்டுத்தான் ஆகணும். நான் முன் வைத்த காலை பின் வைக்க மாட்டேன்.. ஏன்னு தெரியுமா?"


"ஏன்?"


"ஏன்னா 'பின்'லே காலு வெச்சேன்னா.. பின் - பின்னங்கால்லே குத்திடும்."


"அய்யோ தம்பி... இந்த மாதிரி மொக்கை ஜோக்கை அடிக்காதேன்னு எவ்ளோ தடவை சொல்லியிருக்கேன்..."


(சிறுவர்களுக்குள் சண்டை)

"டேய், நாளைக்குத்தான் இறுதியான நாள். இலங்கைதான் கண்டிப்பா ஜெயிக்கணும். அதுதான் எனக்குப் பிடிக்கும். "


"ஆஹா. எங்கள் வீட்டு ச்சின்னச்சின்ன தொண்டர்களும் இலங்கையில் நடக்கும் போரின் நடவடிக்கைகளை கவனிக்கிறார்கள் என்று நினைக்கையில் என் மனம் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறது."


"தங்கச்சி... ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா இந்த பசங்களை நினைச்சி... இனிமே நல்லா வலுவடைஞ்சிடும் நம்ம கட்சி..."


"அட.. என்னண்ணா நீங்களும் அவரைப்போலவே லூசா இருக்கீங்க... இவங்க இந்தியா - இலங்கை கிரிக்கெட் மேட்ச் பத்தி பேசறாங்க... அங்கே நடக்கும் போரைப் பத்தி இல்லே..."


"சரி சரி... எனக்கு நேரமாச்சு. நான் போகணும். எல்லாரும் கிளம்புங்க.. அடுத்த வாரம் இதே நாள் இதே நேரம் உங்களை சந்திக்கும்வரை நன்றி கூறி விடைபெறுகிறேன்... நன்றி.. வணக்கம்."


"சரிதான். நம்ம புது சேனல்லே காம்பியரிங் செய்யறதுக்கு ஒரு ஆள் கிடைச்சாச்சு" ...


(அனைவரும் கலைந்து செல்கின்றனர்).

Read more...

Tuesday, February 3, 2009

DosaSoft - மென்பொருள் நிபுணரின் தோசைக்கடை!!!


இந்த கதையில் மொத்தம் மூணு பேர்.
சா=சாப்பிட வந்தவர்; மு=முதலாளி; தொ=தொழிலாளி.
மு-வும், தொ-வும் முன்னாள் மென்பொருள் நிபுணர்கள்.

**********

சா: எனக்கு பயங்கர பசியாயிருக்குது. உடனே என்ன கிடைக்கும்னு சொல்லுங்க. சூடா இருக்கணும்.


மு: எல்லாமே உடனடியா, சூடா கிடைக்கும். உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க. நான் கொண்டு வந்து தர்றேன்.


சா: அப்ப சரி, ரெண்டு சப்பாத்தி கொண்டு வாங்க.

(ஒரு பதினைந்து நிமிடம் கழித்து)

மு: மன்னிச்சிடுங்க. சப்பாத்தி மட்டும்தான் இங்கே இல்லே. அதைத் தவிர வேறே என்ன வேணும்னாலும் கிடைக்கும்.


சா: சரி. பரவாயில்லே. எனக்கு ஒரு தோசை கொண்டு வாங்க. நல்லா சூடா, முறுகலா, கொஞ்சமா நெய் போட்டு கொண்டு வாங்க.


(சமையலறையில்)


தொ: நான் இங்கே வேலைக்கு சேர்ந்து ஒரு வாரமாயிடுச்சு. எப்போ எனக்கு ப்ரமோஷன் கொடுக்கப் போறீங்க?


மு: என்னது, ஒரே வாரத்துலே ப்ரமோஷனா?


தொ: ஆமா. என்னை ‘சீனியர் மாஸ்டர் (சரக்கு)' ஆக்கிடுங்க. எனக்குக் கீழே வேலை செய்ய ரெண்டு பேரை போடுங்க. அவங்களை நான் நல்லபடியா வேலை வாங்கி, எல்லா
சிற்றுண்டியையும் தயார் பண்ணிடுவேன். முக்கியமான விஷயம் - அந்த ரெண்டு பேர்லே ஒருத்தராவது பொண்ணா இருக்கட்டும். பக்கத்து கடையிலே பாருங்க. அழகழகா பொண்ணுங்க
தோசை சுடறாங்க. நானும் இருக்கேனே இங்கே உங்களோட!!!


மு: இவ்ளோதானா? வேறே ஏதாவது இருக்கா?


தொ: அப்படியே, இந்த கடையில் வரும் லாபத்தில் எங்களுக்கும் 10% கிடைக்கறா மாதிரி ஏற்பாடு பண்ணுங்க. என்னை ஒரு மூணு மாசம் வெளி நாட்டுக்கு அனுப்பிச்சீங்கன்னா, பல
நல்ல ஐட்டங்களை சமைக்கறதுக்கு கத்துக்கிட்டு வந்துடுவேன்.


மு: இதெல்லாம் உனக்கே ரொம்ப டூ மச்சா தெரியல? ஒழுங்கா முறுகலா ஒரு தோசை சுடற வழியப்பாரு.


தொ: தோசை போட இப்பத்தான் நான் கத்துக்கிட்டிருக்கேன். அதனால் நான் போடற தோசை சரியா வரும்னு சொல்ல முடியாது.


மு: வேலைக்கு சேரும்போது, எல்லா டிபனையும் அருமையா பண்ணுவேன்னு சொன்னியே. முன்னாடி வேலை பாத்த இடத்துலே தோசை, சப்பாத்தி எல்லாம் போட்டிருக்கேன்னு
சொன்னதா வேறே ஞாபகம்.?


தொ: அது வந்து.. அது வந்து... அங்கே வேலை பாக்கும்போது... ரெண்டு வருஷமா அந்த சரக்கு மாஸ்டர் தோசை சுடும்போது, பக்கத்துலே இருந்து பாத்திருக்கேன். அவ்ளோதான்.ஆனா, தோசையைத் தவிர மத்த எல்லா டிபனையும் அருமையா செய்வேன் நான்.


மு: அந்த கதையெல்லாம் இங்கே வேணாம். இப்ப அவர் தோசைதான் கேக்கறாரு. இன்னும் ரெண்டு நிமிஷத்துலே எனக்கு தோசை ரெடியாகணும்.


தொ: முயற்சி பண்றேன். சரியா வரலேன்னா எனக்கு தெரியாது. உங்களை யாரு ரெண்டு நிமிஷத்துலே தோசை ரெடியாயிடும்னு அவர்கிட்டே சொல்லச் சொன்னது? அதெல்லாம்
எவ்ளோ கஷ்டம்னு வேலை செய்யற எனக்குத்தான் தெரியும்.


மு: சரி சரி. கோச்சிக்காதேப்பா... சீக்கிரம் செய்துடு.


தொ: அது சரி. என்னோட திறமைக்கு நான் இன்னேரம் தாஜ் ஹோட்டல்லே தோசை சுட வேண்டியவன். இங்கே வந்து உங்ககிட்டே மாரடிக்க வேண்டியிருக்கு. எல்லாம் என்
தலையெழுத்து.


தொழிலாளி பல தடவை முயற்சித்தும் தோசை முறுகலாகவே வரவில்லை. முறுகலாக இருந்தால் வட்டமாக இல்லை. எல்லாம் சரியாக இருந்தால், அதை கல்லிலிருந்து எடுக்கவே
முடியவில்லை.


(மேலும் அரை மணி நேரம் கழித்து)


சா: என்னப்பா, தோசை வருமா வராதா?


மு: உங்க தோசை அருமையா வந்துக்கிட்டேயிருக்கு. அதை கல்லிலிருந்து எடுக்க வேண்டியதுதான் பாக்கி. நீங்க அதுவரைக்கும் இந்த சட்னியும், சாம்பாரும் சாப்பிட்டுக்கிட்டிருங்க.


சா: நான் ஒரே ஒரு தோசை கேட்டு ஒரு மணி நேரம் ஆயிடுச்சு. கண்லேயே காட்டமாட்டேன்றீங்க. என்னை விட்டுடுங்கப்பா. நான் போறேன். இனிமே இந்த கடைப்பக்கம் வரவே மாட்டேன்.


மு: அப்படியா. இப்படி ஒரு நல்ல கஸ்டமரை இழக்க எனக்கு மனசே வரமாட்டேங்குது. சரி, என்ன பண்றது. இந்த ஒரு மணி நேரம் உங்களுக்காக தோசை செய்ய முயற்சித்ததற்கான
பில் இந்தாங்க. வெறும் ஐநூறு ரூபாய்தான்.


சா: என்னது? ஒண்ணுமே சாப்பிடாததுக்கே ஐநூறு ரூபாயா? இது ரொம்பவே அநியாயம்.


மு: அதோட இன்னும் ஒரு ஐந்து நிமிடம் செலவு செய்து - எங்க சர்வீஸ் எப்படி இருந்ததுன்னு சொல்ற இந்த சர்வேயும் பூர்த்தி செய்துடுங்க. இப்போ வந்ததுக்கு மிக்க நன்றி... இதே
மாதிரி நீங்க அடிக்கடி இங்கே வரணும்.

(சாப்பிட வந்தவர் அலறி அடித்துக்கொண்டு ஓடுகிறார்).

Read more...

Monday, February 2, 2009

இரு சக்கர வாகனத்தில் பிரச்சினைகள்...


இந்தியாவில் இரு சக்கர வாகனத்தில் ஊர் சுற்றிய காலங்களில், வண்டியில் ஏதாவதொரு பிரச்சினை இருந்துகொண்டே இருக்கும். அது என்னென்ன பிரச்சினைன்றீங்களா? - இல்லே,
என்ன பிரச்சினையா இருந்தா எனக்கென்னன்றீங்களா??? - எதுவாயிருந்தாலும் வந்தது வந்துட்டீங்க.... முழுப் பதிவ படிச்சிடுங்க.

விளக்கு:


ஒரு தடவை என்ன ஆச்சுன்னா, வண்டியின் விளக்கு நான் அணைத்தாலும், அணையாமல் - தலைவர்கள் சமாதியில் எரிவதுபோல் - அணையா விளக்காகிவிட்டது. நானும் அந்த
பிரச்சினையை சரிசெய்யாமல் ஒரு வாரம் வரைக்கும் வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தேன். மெக்கானிக்கிடம் போய்வர சோம்பேறித்தனம்தான், வேறென்ன. வீட்டில் கேட்டதற்கு - பகல்
வேளையில் திடீரென்று பயங்கர மழை வந்து வானம் இருட்டிக்கொண்டால் என்ன செய்வது?(!!!) அதனால்தான் விளக்கை அணைக்காமல் அப்படி எரியவிட்டிருக்கிறேன் - என்று
சொல்லிவிட்டேன்.


அதற்குப்பிறகு எங்க வீட்டிலேயே ஒண்ணும் சொல்லாமல் விட்டு விட்டாலும், ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து என்னை அந்த பிரச்சினையை தீர்க்க வைத்துவிட்டார்கள். அப்படி என்ன
செஞ்சாங்கன்றீங்களா? எப்ப வண்டியில் போனாலும், எதிரே வருபவர்கள் என் விளக்கு எரிவதை சைகை மூலம் (ஹார்ன் அடிப்பதுபோல செய்கை) சொல்லிக்கொண்டே இருக்க, நானும் பிரச்சினையை அவர்களுக்கு விளக்காமல் - வணக்கம் செய்வதுபோல் தலையாட்டிக் கொண்டே போய்விடுவேன்.


வீட்டில் இருப்பவர்களுக்கு மட்டும் தலையாட்டினால் போதும் என்று நினைத்த எனக்கு - அந்த வாரம் நான் போகுமிடமெல்லாம் அனைவருக்கும் தலையாட்டிக் கொண்டே இருந்ததால் -
தலை(யும்) லூஸாகி விடுமோ என்ற பயம் வந்துவிட்டதால், உடனே மெக்கானிக்கிடம் போய் அந்த பிரச்சினையை சரிசெய்தேன்.


ஒலிப்பான்:


முன்னாடி சொன்ன விளக்கு மாதிரியே ஒலிப்பானும் ஒரு தடவை பிரச்சினை பண்ணிச்சு. நான் அதை பயன்படுத்தலேன்னாலும், ஒலிப்பான் தன்னாலே ஒலிக்க ஆரம்பிச்சிடுச்சு. ரொம்ப
மெதுவா நகர்கிற போக்குவரத்தில், திடீர் திடீரென்று என் ஒலிப்பான் ஒலிக்க, முன்னாலிருப்பவர்கள் திரும்பிப் பார்த்து திட்ட ஆரம்பித்துவிடுவார்கள். நானும் உலகை உய்விக்க வந்த பரம்பொருள் ஆசீர்வாதம் செய்வதுபோல் கையை தூக்கிக் காட்டி - எதுவும் என் கையில் இல்லை, அது தன்னால் கத்திக்கொண்டிருக்கிறது என்று சொல்ல முயற்சிப்பேன்.
சில நாட்கள் கழித்து, இந்த பிரச்சினையால் அடிதடி எதுவும் வந்துவிடக்கூடாதென்று இதையும் சரி செய்துவிட்டு வண்டி ஓட்டினேன்.


ப்ரேக்:


என் வண்டிக்கும் ப்ரேக்குக்கும் எப்பவும் ஏழாம் பொருத்தம்தான். அதாவது, வண்டியில் எப்பவுமே இல்லாத ஒன்று - இந்த ப்ரேக்தான். உடனடி (சடன்) ப்ரேக் அடித்தாலும், ஒரு பத்தடி
தள்ளிப்போய்தான் மெதுவாக நிற்கும்.


ஒரு தடவை என்ன ஆச்சுன்னா, ரெண்டு (நிஜ) நாய்கள் - காதல் தோல்வியில் என் வண்டி முன்னால் விழுந்து தற்கொலை செய்யும் எண்ணத்தோடு திடீரென்று வழியில் வந்துவிட்டன.
எங்கேயோ வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்த நான், சடாரென்று ப்ரேக் போட்டேன்.


ஏற்கனவே சொன்னதுபோல் - நான் அவ்வளவு வேகமாய் ப்ரேக் அடித்தும், ஒண்ணுமே
நடக்காததுபோல் - வண்டி சிறிது தூரம் தள்ளிப் போய் நின்றது.


அப்படி வண்டி போய் நின்ற இடத்தில் இரண்டு நண்பர்கள் நின்று பேசிக்கொண்டிருந்தனர். என் வண்டி மெதுவாக அவர்கள் நடுவே போய் நின்றது. அந்த இருவரில் ஒருவர் தோளோடு
தோள் இடித்து நானும் வண்டியோடு நின்றேன்.


ஒருவர் : “டேய், இவர் உனக்குத் தெரிஞ்சவரா?”


மற்றொருவர்: “இல்லையே. நான் உனக்குத் தெரிஞ்சவர்னுதான் நினைச்சேன். உன்மேலேதானே வந்து இடிச்சிக்கிட்டு நின்னாரு?”


நான்: “உங்க ரெண்டு பேரையுமே எனக்குத் தெரியாது சார். ஒரு நாய் மேலே இடிக்கக்கூடாதுன்னு ப்ரேக் அடிச்சதுலே, வண்டி சறுக்கிக்கிட்டு உங்களுக்கு நடுவே வந்துடுச்சு. அங்கே பாருங்க அந்த நாய்தான்...”


நான் காட்டிய திசையில் அந்த நாய்கள் மட்டுமல்ல, எந்த உயிரினமும் இல்லை!!!


மறுபடி ஒருவர் (சரியான கடுப்பில்): சரி சரி. கிளம்புங்க. நாங்க பேசணும்.


வண்டியை கிளப்ப நான் மட்டும் நினைத்தால் போதுமா, வண்டியும் அப்படி நினைக்கணுமே. அடுத்த ஐந்து நிமிடத்திற்கு அடிஅடியென்று அடித்தும், வண்டி கிளம்பவேயில்லை. அவர்களும்
வெறுத்துப்போய், பேசுவதற்கு வேறு இடம் தேடிப்போய்விட்டார்கள்.


ஓட்டுனர் உரிமம்:


ஓட்டுனர் உரிமம்ற ஒண்ணு இல்லாமலேயே நானும் ஐந்தாறு வருடமாக சென்னையிலும், நோய்டாவிலும் வண்டி ஓட்டிக்கொண்டிருந்தேன். ரொம்ப நாள் கழித்து திடீரென்று ஞானோதயம் வந்து - நம்மால் ஒரு சாராயக்கடை உரிமத்தையோ அல்லது ஒரு பெட்ரோல் பங்க் உரிமத்தையோதான் வாங்க முடியவில்லை - குறைந்தபட்சம் இந்த ஓட்டுனர் உரிமத்தையாவது வாங்கிவிடுவோமென்று முடிவு செய்து - எட்டு போட்டுக் காட்டி வாங்கிவிட்டேன்.


நம்ம நண்பர் தொழிலதிபர் சஞ்சய்க்கு ஏற்பட்ட அனுபவம் மாதிரியே - நானும் ஓட்டுனர் உரிமத்தை வாங்கிய அடுத்த நாள் காவலர்களால் ஓரம்கட்டப்பட்டேன். எல்லா
ஆவணங்களையும் அவர்கள் சரிபார்த்துக் கொண்டிருக்க - நான் யோசித்துக் கொண்டிருந்தேன், எந்த அவதாரம் எடுக்கலாமென்று - அன்னியன்? இந்தியன்?. “சனியன், எல்லாத்தையும்
சரியா வெச்சிண்டிருக்கு” - எல்லா ஆவணங்களையும் திருப்பிக்குடுத்து என்னைப் போகச்சொன்ன அந்த காவலர் பார்த்த பார்வையிலிருந்து நான் புரிந்து கொண்டது.


Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP