Showing posts with label அறிவியல். Show all posts
Showing posts with label அறிவியல். Show all posts

Monday, July 28, 2008

தன் கையே தனக்குதவி!!!

கிபி 2030 - சென்னையில் ஒரு அலுவலகத்தில் நண்பர்கள் சுரேஷ், ரமேஷ் இருவரும் பேசிக்கொண்டிருக்கின்றனர்.


சு: பயங்கர தலைவலியா இருக்குடா.


ர: ஏன், என்ன ஆச்சு? ராத்திரி சரியா தூங்கலியா இல்லே ராத்திரி அடிச்சுது இன்னும் தெளியலியா?


சு: அதெல்லாம் ஒண்ணுமில்லேடா, வீட்டிலே பால் தீர்ந்திடுச்சு. கார்த்தாலே காபி குடிக்கலே. அதனாலே, தலைவலி.


ர: ஹேய், என்ன ஜோக்கடிக்கறியா? பால் தீர்ந்துடுச்சுன்னா, ஃப்ரிட்ஜே பால் கடைக்குப் தொலைபேசி சொல்லிடுமே? அவந்தான் 10 நிமிஷத்திலே பால் வந்து கொடுத்துடுவானே?


சு: அட, போன மாசமே அந்த கடையோட தொலைபேசி எண் மாறிடுச்சுப்பா. நாந்தான் அதை ஃப்ரிட்ஜோட settingsலே மாத்தலே.


ர: சரிப்பா, அதில்லேன்னா என்ன, உன்னோட செல்லுலே எஸ்.எம்.எஸ் வருமே?


சு: எனக்குத்தான் தினமும் ஏகப்பட்ட எஸ்.எம்.எஸ் வருதே - தத்துவம், அரசியல், வங்கியிலேந்து - அப்படி, இப்படின்னு. அதனாலே, நான் எந்த எஸ்.எம்.எஸ்ஸையும் பாக்கறதேயில்லை.


ர: எஸ்.எம்.எஸ் அனுப்பிச்சி எதுவும் நடக்கலேன்னா, உடனே ஃப்ரிட்ஜ்தான் உன் கைபேசியில் கூப்பிடுமே?


சு: கூப்பிட்டிருக்கும்னு நினைக்கறேன். நான் நேத்து என் ஆளுகிட்டே ஒரு நாலு மணி நேரம் பேசிக்கிட்டிருந்தேன். அந்த சமயத்துலே, கிட்டத்தட்ட 10-15 கால்கள் வந்திருந்தன. எல்லாத்தையும் பாத்துக்கிட்டே வந்த நான், இதை மிஸ் பண்ணியிருப்பேன்னு நினைக்கறேன்.


ர: உன்னோட கைபேசியை நீ எடுக்கலேன்னா, கைபேசியிலேர்ந்து மெயில் பெட்டிக்கு ஒரு மெயில் போறாமாதிரி செட் பண்ணியிருக்கியே? அந்த மெயிலையாவது பாத்தியா?


சு: என்னோட கைபேசியிலேர்ந்து மெயில் பெட்டிக்கு வர்ற மெயில்களுக்கெல்லாம் நான் ஒரு 'Rule' செட் பண்ணி நேரா அதையெல்லாம் அழிச்சிடுவேன். அதனால, நான் அங்கேயும் பாக்கலை.


ர: உன்னையெல்லாம்.... என்ன பண்றதுன்னே எனக்கு தெரியல...


சு: இந்த தொழில்நுட்பம் இன்னும் வளரலேன்னு நான் நினைக்கறேன். பாரேன், இவ்ளோ வளர்ந்திருந்தும் எனக்கு இன்னிக்கு பால் இல்லாததாலே காபி கிடைக்கலே.


ர: டேய்.. டேய். உனக்கு வந்த எந்த தகவலையும் நீ பாக்காமே, தொழில்நுட்பம் மேலே பழி போடாதே.


சு: சரி சரி. நீ டென்சனாகாதே. எனக்கு ஒரு சந்தேகம். நாம இவ்ளோ வசதிகள் வெச்சிருந்தும், எனக்கு இன்னும் பிரச்சினை இருக்கே. அந்த காலத்துலேயெல்லாம் ரொம்ப கஷ்டப்பட்டிருப்பாங்கன்னு நினைக்கறேன்.


ர: அதுதான் இல்லே. நான் கேள்விப்பட்டது என்னன்னா, அவங்க இதையெல்லாம் விட ஒரு சூப்பர் தொழில்நுட்பம் வெச்சிருந்தாங்களாம். சின்ன வயசிலே, என் தாத்தா எனக்கு சொல்லியிருக்கார்.


சு: அப்படியா, அது என்ன?


ர: அந்த தொழில்நுட்பத்தோட பேரு - 'தன் கையே தனக்குதவி'. அதாவது, தினமும் ஒரு தடவை, அவங்களே ஃப்ரிட்ஜைத் திறந்து பாத்திடுவாங்க. பால் தீர்ந்திருந்துன்னா, உடனே கடைக்குப் போய் வாங்கிட்டு வந்துடுவாங்க. அவ்வளவுதான்.


பி.கு: சிறில் அலெக்ஸின் அறிவியல் போட்டிக்கு என்னுடைய மூன்றாவது இடுகை இது.

Read more...

Tuesday, July 22, 2008

சென்னை இன்னும் இந்தியாவில்தான் இருக்கிறது!!!

கிபி 2080 - சென்னை. அம்மா, அப்பா மற்றும் ஒரு பையன் உள்ள ஒரு குடும்பம். ஒரு உயர்தர சீன உணவகத்தில் உணவருந்திக் கொண்டிருக்கின்றனர்.

பையன்: அம்மா, இன்னிக்கும் எனக்கு நூடுல்ஸ் போதும்.

அம்மா: என்னப்பா, அது மட்டும் எப்படி போதும்? வேறே ஏதாவது சாப்பிடு.

பையன்: போம்மா. ஒரே போரடிக்குது.

அம்மா: ஏங்க, இவன் எப்போ பாத்தாலும் இப்பத்தான் போரடிக்குது, போரடிக்குதுன்னு சொல்லிட்டிருக்கான். இந்த வருஷமாவது அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்கு பெங்களூர், மைசூர் போகலாங்க. அப்புறமாவது கொஞ்ச நாளைக்கு சும்மா இருக்கானான்னு பாப்போம்.

அப்பா: சரிம்மா. ஏற்பாடு பண்றேன். நம்ம எல்லாருக்கும் பாஸ்போர்ட் இருக்கு. விசா மட்டும்தான் எடுக்கணும். அதுவும் பிரச்சினையில்லை. ஒரே நாள்லே எடுத்துடலாம்.

மகன்: ஹையா.. ஜாலி.. விசான்னா என்னப்பா?

அப்பா: விசான்றது ஒரு நாட்டுக்குள்ளே போறதுக்கான அனுமதிச்சீட்டு. அது இருந்தாத்தான் அவங்க நாட்டுக்குள்ளேயே போக அனுமதிப்பாங்க.

மகன்: நீங்க விசா எடுத்துண்டு நிறைய் தடவை பெங்களூர் போயிருக்கீங்களாப்பா?

அப்பா: நான் சின்ன வயசா இருந்தப்போல்லாம், பெங்களூரும் சென்னையும் ஒரே நாட்டுலேதான் இருந்துச்சு. கொஞ்ச வருஷம் முன்னாலேதான் இப்படி ஆயிடுச்சு. அன்னிலேர்ந்து, இங்கேயிருந்து யார் அங்கே போனாலும் அல்லது அங்கேயிருந்து யார் இங்கே வந்தாலும், விசா எடுத்துத்தான் ஆகணும்.

மகன்: சரி. அங்கே போய் நாம என்னென்ன பாக்கப்போறோம்பா?

அப்பா: மைசூர் அரண்மனை பாக்கலாம். அப்புறம், நம்ம பாட்டி வீட்டு பின்னாடி ஓடுதில்லையா, காவிரி, அது புறப்பட்டற இடத்தை பாக்கலாம்.

மகன்: சூப்பர்பா. எனக்கு பாட்டி வீட்டுக்கு போகறதுக்கு பிடிக்கறதே அந்த காவிரி ஆறுதான். வருஷத்திலே எப்போ போனாலும், மேல் படிக்கட்டு வரைக்கும் தண்ணி ஓடிண்டேயிருக்கும். நீங்க சின்ன வயசிலே ரொம்ப என்ஜாய் பண்ணியிருப்பீங்க, இல்லையாப்பா?

அப்பா: இல்லைப்பா. அப்போல்லாம் இந்த காலம் மாதிரி இல்லே. கர்நாடகாலேர்ந்து தண்ணி திறந்துவிட்டாத்தான் தமிழ்நாட்டுக்கு தண்ணி வரும். அதுக்கு பெரிய பெரிய கலாட்டால்லாம் நடக்கும். நம்ம அரசியல் கட்சித் தலைவர்கள் உண்ணாவிரதம் இருப்பாங்க. திரைப்படக் கலைஞர்களெல்லாம் ஊர்வலம் போவாங்க.

மகன்: இப்போல்லாம் அந்த மாதிரி பிரச்சினை இல்லையாப்பா?

அப்பா: இல்லேப்பா. கர்நாடகா வேறே நாடானப்புறம் இந்த தண்ணி பிரச்சினை ஈஸியா தீர்ந்திடுச்சு.

மகன்: இப்போ கர்நாடகா எந்த நாடுப்பா?

அப்பா: China.

பின் - 1: இது சிறில் அலெக்ஸ் நடத்தும் அறிவியல் போட்டிக்கான எனது இரண்டாவது இடுகையா போடலாமான்னு தெரியல. உங்க பதில்களைப் பார்த்துத்தான் முடிவு பண்ணணும்.

பின் - 2: கடந்த 4 வருடங்களில் 300+ முறையாக எல்லை தாண்டி பிரச்சினை செய்திருக்கும் சீனாவை, சும்மா வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருக்கும் இந்தியா, பிற்காலத்திலும் அப்படியே இருந்தால், என்ன ஆகும் என்கிற கற்பனைதான் இந்த பதிவு.

பின் - 3: காவிரி பிரச்சினை இரு நாடுகளுக்கிடையே இருந்திருந்தால், எப்போவோ தீர்ந்திருக்கும் என்று ஞாநி சொல்லியிருந்தார். அதையும் இந்த 'சிறு' கதையில் பொருத்திவிட்டேன்.

Read more...

Tuesday, July 15, 2008

விண்கூட்டர் விபத்து!!!

கிபி 2080.சென்னை நங்கநல்லூரில் ஒரு காலை வேளை. மணி 7.00.

காட்சி - 1:

சுரேஷ் பரபரப்பாக அலுவலகம் கிளம்பும் நேரம். தன் வீட்டின் 110வது மாடியில் நிறுத்தப்பட்டிருந்த தன் விண்கூட்டரை (விண் ஸ்கூட்டர்) நோக்கி மின் தூக்கியில் போய்க்கொண்டிருக்கிறான்.

"இன்னும் 10 நிமிடத்தில் என்னுடைய Exit-ஐ அடைந்துவிட்டால், அடுத்த 100 கிலோ மீட்டர்களை 5 நிமிடத்தில் கடந்துவிடலாம். 7.30 மணிக்குள் அலுவலகம் போய்ச்சேர வேண்டும். ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கிறது".

வண்டி புறப்பட்டுவிட்டது. குறிப்பிட்ட உயரத்தை அடைந்ததும், நிர்ணயிக்கப்பட்ட பாதையை நோக்கி திருப்பினான்.

சுரேஷ் 5 நிமிடத்தில் தன் அலுவலகம் போவதற்குள், நாம் இந்த 'விண்கூட்டர்' பற்றி தெரிந்துகொள்வோம், வாங்க.

பத்து வருடங்களுக்கு முன் நம் மக்கள் கண்டுபிடித்த வண்டிதான் இந்த விண்கூட்டர். சூரிய ஒளியை பயன்படுத்தி பறக்க/ஓடக்கூடியது. இந்தியாவில் பெட்ரோல் சுத்தமாக இல்லாமல் போய்விட்டதால், இதை கஷ்டப்பட்டு கண்டுபிடித்தனர். ஒரு மணி நேரம் சார்ஜ் செய்தால், ஒருவர் உட்காரக்கூடிய விண்கூட்டர் 1000 கிமீ வரை போகும்.

இந்தியாவில் சூரியஒளிக்கு பஞ்சமேயில்லாததாலும், வேறு வழியில்லாததாலும் மக்கள் இதை போட்டி போட்டுக்கொண்டு வாங்க ஆரம்பித்தனர். சில நாட்களில், சாலைகளில் நெரிசல் அதிகமாகி, வண்டி ஓட்டவே இடமில்லாமல் போனதால், அதே வண்டியை பறக்க வைக்க முயன்று அதிலும் வெற்றி பெற்றுவிட்டனர்.

ஓகே. மறுபடி கதைக்கு வரலாம்.

இன்னும் ஒரு நிமிடம்தான். அலுவலகம் வந்துவிடும். விசில் அடித்துக்கொண்டே வந்த சுரேஷ், திடீரென்று அலறினான்.

"ஆஆ. இதென்ன பொருள்னே தெரியலையே. திடீர்னு என் பாதையில் வந்துவிட்டதே. இந்த வேகத்தில் நான் ப்ரேக் போட்டால் என் கதி?" - ஆனால், யோசிக்க நேரமில்லை. பிரேரரரக் அடித்தான் சுரேஷ்.

காட்சி - 2

சுரேஷ் கண்விழித்துப் பார்த்த இடம் ஒரு மருத்துவமனை.

" நான் எங்கே இருக்கேன். எனக்கு என்ன ஆச்சு???"

"கவலைப்படாதீங்க. உங்களுக்கு ஒண்ணுமில்லை. சிறிய விபத்துதான். ஒரு வாரம் மயக்கமா இருந்து இப்பத்தான் முழிச்சிருக்கீங்க..."

"டாக்டர், எனக்கு என்ன ஆச்சு? நான் பறக்கும்போது எதுமேலேயோ மோதிட்டேன்னு நினைக்கிறேன். அது என்னன்னு தெரியல".

"ஆமா... நீங்க மோதினது ஒரு சின்ன வான்குடை (Parachute) மேல்"

"என்னது? வான்குடையா? சிறுவர்கள் விளையாட்டுப் பொருளா அவ்ளோ மேலே வந்தது?

"இல்லை. அது சிறுவர்களுக்கான வான்குடை இல்லை. சில காரணங்களுக்காக மனிதர்கள் கண்டுபிடித்ததுதான் அது..."

"என்ன காரணம் டாக்டர்?. மேலும் அதிலே ஏதோ ஒரு பொருள் கட்டியிருந்ததே? அது என்ன என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை..."

"சொல்றேன். அதிலே கட்டியிருந்தது ஒரு பூசணிக்காய்"

"என்ன, பூசணிக்காயா? எதுக்கு பூசணிக்காயை வான்குடையில் கட்டி அனுப்பினாங்க?"

"பழங்காலத்திலே புது வண்டி வாங்கறவங்க திருஷ்டி கழிக்கறேன்னு பூசணிக்காயை வண்டி முன்னாடி உடைப்பாங்க. ஸ்கூட்டர்லே போனவங்க நிறைய பேர் அதிலே வழுக்கி விபத்துக்குள்ளான சம்பவங்கள் நிறைய நடந்திருக்கு".

"அதே பழக்கத்துலே விண்கூட்டர் வாங்கற மக்கள் பூசணிக்காயை வான்குடையிலே கட்டி பறக்கவிட்டு, விண்கூட்டருக்கு திருஷ்டி கழிக்கறாங்க. இதனாலே, மேலே பறக்கறவங்க நிறைய பேர் உங்களை மாதிரி விபத்துலே மாட்டிக்கறாங்க... நீங்க நல்லவேளையா பெரிய பிரச்சினையில்லாமே தப்பிச்சிட்டீங்க"

பூசணிக்காய் பறந்த காரணத்தைக் கேட்ட சுரேஷ், மீண்டும் நீண்ட மயக்கத்துப் போனான்.

பக்கத்தில் எங்கிருந்தோ ஓடிக்கொண்டிருந்த தொலைக்காட்சியில் பழம்பெரும் நடிகர் விவேக் சொல்லிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது... "1000 பெரியார்கள் வந்தாலும்..."

*** சிறில் அலெக்ஸின் அறிவியல் சிறுகதைப் போட்டிக்கான முதல் இடுகை ***

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP