Wednesday, December 28, 2011

கடைசியில் என்னையும் அரசியல்வாதி ஆக்கிட்டாங்க!



பலமான டிஸ்கி & எச்சரிக்கை:


சில நாட்களுக்கு முன் நடந்த ஒரு தகராறைக் குறித்து எழுதும் சுயவிளக்கப் பதிவு இது. சிரிப்பதற்கு விஷயம் ஒண்ணும் இருக்காது. இதை படிக்கலேன்னாலும் ஒண்ணும் ஆயிடாது. நல்ல மூடில் இருக்கிறவங்க, நல்ல பதிவு எதிர்பார்த்து வந்தவங்க நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை. தயவு செய்து இந்த பதிவை படிக்காமல் மூடிவிடவும். நன்றி.


இந்த மாதிரி இன்னொரு பதிவும் வராது. அதனால் பயந்து 'unfollow' செய்துடாதீங்க.


***


ஒரு நண்பர் ஒரு நாள் டிவிட்டரில் யாரையோ திட்டிக்கிட்டே இருந்தாரு. திட்டினார்னா பத்து நிமிஷம், இருபது நிமிஷம் இல்லே - நாள் முழுக்க பல ட்வீட்கள் போட்டு திட்டிக்கிட்டே இருந்தாரு. இந்த திட்டல் எதுக்கு / யாருக்குன்னு யாருக்கும் தெரியாததால், TLல் இருந்த பலர் அந்த திட்டுகளை RT செய்தும், அவரை ஏற்றி விட்டுக் கொண்டும் இருந்தனர். நானும் புரியாமல் பார்த்துக் கொண்டிருக்க, அந்த திட்டுகள் அனைத்தும் எனக்குதான் விழுந்ததுன்னு மாலையில் புரிந்தது.

சரிதான், மனுஷனை இவ்வளவு டென்சன் செய்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டு, அவரை டிவிட்டரில் ப்ளாக் / அன்பாலோ செய்துவிட்டேன். அதோடு பிரச்னை தீர்ந்ததென்று நினைத்தேன். அது எவ்வளவு தப்புன்னு பிறகு புரிந்தது.

என்ன தப்புன்னு யோசிக்கிறீங்களா - அவர் நாள் முழுக்க என்னை திட்டியது தப்பில்லையாம். அதை நான் பப்ளிக்கா சொல்லிட்டு, அவரை ப்ளாக் செய்ததுதான் தப்பாம். அதாவது அந்த திட்டுகளை நான் கண்டுக்காமே இருந்திருக்கணுமாம். இப்போ நான் மன்னிப்பு கேட்டுவிட்டதால், அவரை அனைவரும் கேள்வி கேக்குறாங்களாம். அது அவருக்கு கஷ்டமா இருக்காம். சாமி, முடியல என்னாலே.

இருங்க. இன்னும் முடியல(!). இன்னொரு நண்பர் இது விஷயமா பஞ்சாயத்து செய்ய வந்தபோது சொன்னது - உங்களை திட்டிட்டோமேன்னு அவர் ரொம்ப வருத்தப்படறாரு. என்ன பண்றதுன்னு தெரியல.

எப்படி எப்படி? திட்டறது என்னை. வருத்தப்படறது அடுத்தவன்கிட்டேயா? நல்லா இருக்குல்லே நியாயம்? இத கேட்டா இன்னும் கதை வளருது.

உங்ககிட்டே மன்னிப்பு கேட்க வந்தா, நீங்க டக்குன்னு மூஞ்சி திருப்பிக்கிட்டு போயிடறீங்களாம். அப்புறம் அவரால் எப்படி பேச முடியும்?. இந்த இடத்தில் நிஜமாவே என்னால் முடியல. பாஸ். இந்த நடிப்பையெல்லாம் நாங்க தங்கப்ப-தக்கம் படத்திலேயே பாத்துட்டோம். தொலைபேசி, கைப்பேசி, மின்னஞ்சல் - இதிலெல்லாம்கூட பேசலாம்னு தெரியுமா? தெரியாதா?.

இப்படி கோபமாவே இருந்தா, உலகத்தில் நட்பு எப்படி மலரும்? அமைதி எப்படி பூக்கும்?. நீங்கதான் விட்டுக் கொடுத்து அட்ஜஸ்ட் செய்து போகணும். - இந்த அறிவுரை எனக்கு.

யப்பா சாமி. நாள் முழுக்க திட்டு வாங்கினவன் நான். அதுக்கு பிறகு எல்லா தப்பும் என் மேலேதானா?. சரி. ஒரே ஒரு தீர்வுதான் இதுக்கு.

தினமும் காலையில் எழுந்து என் தலையை தடவி பாத்துக்கறேன். என்னிக்கு என் தலையில் வடியறது ரத்தம் கிடையாது - தக்காளி சட்னின்னு தோணுதோ, அன்னிக்கு நானே வந்து 'திட்டு வாங்கினதுக்கு' மன்னிப்பு கேட்குறேன்.

எப்பூடி?

***

பல மாதங்களாக draftல் இருந்த பதிவை போட்டாச்சு. நிம்மதி ஆச்சு. இனி அடுத்த பதிவு புது வருடத்தில்.

அனைவருக்கும் இனிய இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் 2012.

***



Read more...

Saturday, December 24, 2011

சென்னை பள்ளிகள் - பாகம் 1

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் வந்துட்டா எங்க ப்ராஜெக்ட் நீட்டிக்கப்படும். அப்படி நீட்டிக்கப்படுவதில் ஒன்றும் பிரச்னை/சந்தேகம் இல்லையென்றாலும் ஒரு திக்திக்தான். ஆனா, அதே சமயத்தில் இன்னொரு கேள்வியும் வந்து நிற்கும். ஒரு சில வாரங்கள் விவாதங்களுக்குப் பிறகு, அடுத்த ஒரு வருடத்திற்கு ஒத்தி வைக்கப்படும். அது என்ன கேள்வி?



"போதும் இந்த நாடு. நம்ம ஊருக்கே போயிடலாமா?". பின்னணியில் பாட்டு ஒலிக்கும் - 'சொர்க்கமே என்றாலும்.. அது நம்மூரைப் போல வருமா?"


நான் பெங்களூர், ஹைதை, குர்காவ்ன், நொய்டா இப்படி எல்லா ஊரிலிருந்தும் relocate செய்திருக்கேன். ஆனா அப்போல்லாம் நிலைமை வேறு. இப்ப மிக முக்கியமான பாயிண்ட் - சஹானாவின் பள்ளி. சரியா அவங்க சொல்ற நேரத்தில் போய் அப்ளிகேஷன் வாங்கணும். ஒரு நுழைவுத் தேர்வு. அப்புறம்தான் பள்ளியில் சேர்க்கை. கொடுமை என்னன்னா, இதெல்லாம் தொடர்ச்சியா நடக்கற விஷயங்களும் இல்லை. சில பள்ளிகளில் அப்ளிகேஷனுக்கும், பள்ளியில் சேர்க்கைக்கும் நடுவில் ஆறு மாத காலங்களும் ஆகும். அதுக்காக, இந்தியா போயிட்டு வந்து, திரும்ப பள்ளி துவங்கும்போது போகணும். இப்படியெல்லாம் நிறைய மக்கள் செய்திருக்காங்க. (இணையத்தில் தேடும்போது தெரிந்தது). அடங்கப்பா, நாமும் இதேதான் செய்வோமா என்று எண்ணி, ஆராய்ச்சியை துவக்கினோம். நிறைய ஆட்களிடமும் ஆலோசனை கேட்டோம். அவர்களின் கருத்துகளும், பள்ளிகளின் அராஜகங்களும் பகீர் ரகம்.


நிறைய பேருக்கு தெரிந்திருக்கலாம். இங்கு அமெரிக்காவில் அரசு பள்ளிகளில் - அந்தந்த ஏரியாவில் இருப்பவர்களை அந்தந்த பள்ளிகள் கட்டாயமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். தனியார் பள்ளிகளிலும் அவ்வளவு தள்ளுமுள்ளு இருக்காது. (தனியாரில் காசுதான் மிகமிக அதிகம்).


ஊருக்கு வர்றோம். பக்கத்தில் எந்த பள்ளி இப்போ நல்லாயிருக்குன்னு கேட்டா, ஒரே குரலில் அனைவரும் சொல்வது - அமெரிக்காவிலிருந்து வர்றே. நீ சாதாரண பள்ளியிலெல்லாம் சேர்க்கக் கூடாது. பத்மாசேஷாத்ரி / DAV இந்த மாதிரி இடத்தில்தான் சேர்க்கணும்.


ஏன்யா, அமெரிக்காவிலிருந்து வந்தா பெரிய கொம்பா? அதுக்காக, பெரிய பள்ளியில்தான் சேர்க்கனுமா? ஏன், லோக்கல் பள்ளியில் படித்தால் படித்தா படிப்பு வராதா? அல்லது அங்கே படிக்கறவங்க நல்லா படிக்கலியா? ஏன், இப்படி கொலவெறியோட சுத்தறீங்கன்னு கேட்டா, அதுக்கு பல்வேறு காரணங்களை அடுக்குறாங்க.


அமெரிக்கா வரும்போது நான் lower-middleclassதான். ஆறு வருடத்தில் சிவாஜி ரஜினி மாதிரியெல்லாம் அப்படி சம்பாதித்து விட முடியாதுடான்னா எவன் கேக்கறான்? சரி விட்டுத்தள்ளுங்க. பெரிய பள்ளிகளுக்கான பாயிண்ட்கள் இவைதான்.


நமக்கு சென்னை. நங்கநல்லூர்.


வீட்டு பக்கத்திலேயே (சின்னமலையில்) PSBB Millenium இருக்குன்னு சொல்லி ஒரு கிலி ஏத்தினாரு. பிறகு இணையத்தில் தேடித் பார்த்தால் - அந்த இடத்தில் இரண்டாம் வகுப்பு வரை மட்டும்தான். மூன்றாம் வகுப்புக்கு போரூர் போகணும். அது ரொம்ப தூரம்னு தெரிஞ்சுது. (சஹானா மூன்றாம் வகுப்பு சேரணும்.) நல்ல வேளைன்னு நினைச்சிக்கிட்டேன்.


ஆனா, அப்படியும் அடங்காமே திரியற மக்கள் நம்ம மக்கள்னு அப்புறம்தான் தெரிஞ்சுது. என்னடான்னா, நங்கநல்லூரில் இருக்கற ஒரு பய, PSBB போரூரில் பையனை சேர்க்கணும்னு, சொந்த வீட்டையே வித்துட்டு, போரூர்லே வீடு வாங்கி பள்ளிக்குப் பக்கத்தில் போயிட்டானாம். அடப்பாவிகளா, எங்கே என் வீட்டையும் வித்துடுன்னு சொல்வாங்களோன்னு நினைச்சேன். இதுவரை அப்படி யாரும் கேட்கலை.



அடுத்து இன்னொருத்தர். உறவினர்தான். அவர் மாதச் சம்பளம் ரூ.இருபதாயிரம். அவர் தன் பையனை ஆதம்பாக்கம் DMVயில் சேர்த்திருக்கிறாராம். அங்கே வருடத்திற்கு ரூ.நாற்பதாயிரம் கட்டணமாம். இதெல்லாம் கொஞ்சம் ஓவராயில்லே. பள்ளிக்கே தன் இரண்டு மாத சம்பளத்தை கொடுத்துட்டா, அப்புறம் மத்ததெல்லாம் எப்படி நடக்கும்? கேட்டா, நல்ல கல்வி. பையன் வருங்காலம் நல்லா இருக்க வேணாமா?. அவர் முடிவை மாத்தறது நம்ம கையில் இல்லே. ஆனா இது ரொம்ப டூ மச்னு பார்த்தாலே தெரியுது. சரிதானே?



இன்னொரு நல்ல செய்தி. பெரிய பள்ளிகளில் சேர்க்கை குழந்தைகளுக்கு (PreKG) மட்டும்தான். மூன்றாம் வகுப்புக்கெல்லாம் அனுமதி கிடையாதாம். இதுக்கு என்னடா காரணம்னா, சின்ன வயசுலேந்து அவர்களை நல்லா தயார் செய்கிறார்களாம். நடுவில் வர்றவங்க தகுதி எப்படி இருக்கும்னு தெரியாதாம். அடங்கொப்பா முடியல என்னாலே. ஆனா என்னைப் பொறுத்தவரை அது ஒரு நல்ல விஷயம். என்னை யாரும் அந்த பள்ளியில் சேர்க்கலைன்னு சொல்லமுடியாது. அவங்கதான் சேர்க்கமாட்டாங்கன்னு சொல்லிடலாம்.



இப்படியாக பெரிய பள்ளிகள் எதுவும் பக்கத்தில் கிடையாது, சேர்க்கவும் முடியாதுன்னு தெரிந்த பட்சத்தில் (அப்பாடா!), அடுத்த ரக பள்ளிகள் பட்டியல் எடுக்க ஆரம்பிச்சோம்.



தொடரும்...



Read more...

Thursday, December 1, 2011

மடக்கவுஜ!




நீதான் வீட்டுக்குப் பெரியவன்
நீதான் சின்னவங்களை
அனுசரிச்சி போகணும்

அவங்க உன்னை விட
பெரியவங்க - நீதான்
அவங்ககிட்டே
மரியாதையா நடந்துக்கணும்

ச்சின்னச்சின்ன
விஷயங்களுக்காக
நண்பர்களோட
சண்டை போடாதே
அவங்க தயவு
பிறகு தேவைப்படும்

எவ்ளோ பெரிய
தவறு செய்திருந்தாலும்
நண்பர்களை
மன்னித்துவிடு
பிற்காலத்துலே
அவங்க உதவியாயிருப்பாங்க

உன் மேனேஜர்
திட்டினாரா
நீதான் ஏதாவது
தப்பு செய்திருப்பே

உன் குழுவில்
யாரேனும் சரியா
வேலை செய்யலியா -
உனக்கு வேலை
வாங்கத் தெரியல

எல்லாமே நான்தான்
செய்யணும்னா
எல்லா தப்பும்
என்னுது மட்டும்னா

ங்கொய்யாலே..

இந்த உலகத்துலே
மத்தவங்கல்லாம்
எதுக்காக வந்துருப்பாங்க?

***

பிகு: மடக், மடக்கி எழுதியால் இதை மடக் கவுஜ'ன்னு யாரும் திட்டும்முன் நானே தலைப்பில் சொல்லிட்டேன்!!

***





Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP