Saturday, May 27, 2017

சிரி சிரி சிரி சிரி...


எங்கே, அதையே கொஞ்சம் சிரிச்சிக்கிட்டே சொல்லுங்கன்னு கவுண்ட்ஸ் மன்னனில் சொல்வதைப் போல் உங்களிடம் சொல்ல முடியாது. ஏன்னா, உங்களுக்கு எப்பவுமே சிரித்த முகம்தான்னு பலர் என்னிடம் சொல்லியிருக்காங்க. இதையே வீட்டில் DW வேறு மாதிரி சொல்வாங்க. அது இப்போ வேண்டாம். நாம மேலே போவோம்.

ஹெல்மெட் மாட்டிக்கிட்டு வண்டி ஓட்டும்போது, அது நமக்கான ஒரு தனி உலகம். உள்ளே பேசலாம், பாடலாம். நான் ஏதாச்சும் ஒரு பல்ப் வாங்கிய சம்பவத்தை - அதுதான் ஏகப்பட்டது இருக்கே - நினைச்சிக்கிட்டு சிரிச்சிக்கிட்டே போவேன். அப்படி சிரித்தவாறே ஓட்டும்போது, யாருடனாவது - பக்கத்தில் வண்டி ஓட்டுபவரோ அல்லது சாலையோரத்தில் நின்றிருப்பவரோ - கண்ணோடு கண் பார்க்க நேர்ந்துவிடும். அப்படி பலமுறை நேர்ந்திருக்கிறது. சில பேர் சிரிக்க முயல்வார்கள், சிலர் யார்றா இவன், நம்மை பார்த்து சிரிக்கிறான்னு தலை திருப்பிவிடுவார்கள். சிலர், பேருந்தில் நடக்கும் வடிவேலு காமெடியைப் போல், நம்மைப் பார்த்து சிரிக்கிறானா, இல்லே பின்னாடி யாராவது இருக்காங்களான்னு பின்னாடி திரும்பியும் பார்த்திருக்காங்க. இப்படி அண்ணலும் நோக்கி சிரித்து ‘அவளும்’ நோக்கிய உதாரணங்கள் இந்தப் பதிவிற்கு தேவையில்லாத விஷயங்கள்.

இப்ப போன வாரம் நடந்தது.

யாரோ ஆண்கள், சிலசமயம் பெண்களைப் பார்த்து சிரித்ததெல்லாம் பிரச்னையில்லை. போன வாரம் அலுவலகத்திலிருந்து வரும்போது - ஹெல்மெட்டுக்குள் சிரித்தவாறே - தூரத்தில் நின்றிருந்த ஒரு போக்குவரத்து காவல் போலீஸைப் பார்த்துட்டேன்.

டக்குன்னு சுதாரித்து, சிங்கம் சூர்யா போல் stiff ஆனாலும், அவர் பார்த்துட்டார். என்னடா, இவன் நம்மைப் பார்த்து சிரிக்கிறானேன்னு, நம்மை நிறுத்தி ஓரம் கட்டுங்கன்னுட்டார்.

சார், ஹெல்மெட் கழட்டுங்க. கைப்பேசியில் பேசிட்டு வர்றீங்களா?
இல்லை சார்.

DL, Insurance?
இதோ.

ஆதார் கார்டும் இருந்துச்சு. ஆனா அவர் கேட்கவில்லை.

சரி போங்கன்னு ஒரு சந்தேகத்துடனேயே அனுப்பி வைத்தார்.

டேய், இவன் எங்கெங்கே போறானோ, அங்கெல்லாம் ஒரு ஆள் போட்டு வைங்கடா. என்னைப் பார்த்து சிரிச்சிட்டான்னு சொல்வாரோன்னு திரும்பிப் பார்த்து (சிரிக்காமல்) போனேன்.

வீட்டில் போய் விஷயத்தை சொன்னா, நான்தான் சொன்னேனே, இனாவானா மாதிரி (அய்யய்யோ, சொல்லிட்டேனே!!)

சிரிச்சிக்கிட்டே போகாதீங்கன்னு, எங்கே கேட்டாதானேன்னாங்க.

சரிம்மான்னு சொல்லி சிரித்தேன்.

***


Read more...

Wednesday, May 24, 2017

ஜொள் அங்கிள்

அடியேன் வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் 22 கிமீ தூரம். அலுவலகப் பேருந்தில்தான் போய் வருவது. அடியேன் வீட்டுப் பக்கத்திலேயே இன்னும் இருவர் (மகளிர்) அதே அலுவலகத்தில் வேலை செய்றாங்க. அலுவலகத்திற்கு தாமதமாகப் போகணும்னாலோ, வீட்டிற்கு சீக்கிரம் வரணும்னாலோ, மூவரும் ஒரு Ola book செய்து, 1/3 போட்டு போய் வருவது வழக்கம்.

திடீர்னு அலுவலகத்தில் ஒரு carpool app உருவாக்கி, மக்கள் எல்லாரும் அதை பயன்படுத்திக்கோங்கன்னு சொன்னாங்க. நாங்க மூவரும், நம்ம வீட்டு பக்கம் யாராவது காரில் போவோர் வருவோர் இருக்காங்களான்னு பார்க்கலாம்னு பார்த்தோம். அட, ஒருவர் இருந்தார். நமக்கு தோதான நேரத்தில் அலுவலகத்திலிருந்து கிளம்புபவராகவும் இருந்தார். சரி ஒரு நாள் இவர் வண்டியில் மூவரும் போவோம்னு முடிவு செய்தோம்.

அந்த நாளும் வந்தது. ஒருவருக்கு ரூ70. சும்மா போகும் வண்டியில் நாங்களும் போனால், அவருக்கு ரூ210 வரும். ஒவ்வொருவராக தம் கைப்பேசியிலிருந்து அந்த rideக்கு request கொடுத்தோம். Note the point. இரு மகளிர் மற்றும் நான். அவங்க ரெண்டு பேர் requestம் உடனே approve ஆயிடுச்சு. எனக்கு எதுவும் பதில் வரலை. Ofcourse, நாங்க மூவரும் ஒரே க்ரூப்ன்னு அங்கிளுக்கு தெரியாது.

வண்டி புறப்பட இன்னும் அரை மணி நேரம்தான் இருக்கு. புரியுதா, அந்த அங்கிளுக்கு நீங்க வர்றது பிடிக்கலை. ஜொள் அங்கிள்ன்றங்க மகளிர். சரி, நீங்க போங்க, நான் பேருந்திலேயே வர்றேன்னேன். வெயிட்டீஸ், அங்கிளுக்கு ஒரு பாடம் புகட்டுவோம்ன்றாங்க. இருவரும், அந்த requestஐ cancel செய்துவிட, உடனே அங்கிள் என் requestஐ approve செய்துவிட்டார். அதற்குள் நாங்க ஒரு ஓலா புக் செய்துவிட, நானும் அந்த அங்கிள் வண்டியை cancel செய்துவிட்டேன். ஒழுங்கா என்னையும் ஓகே சொல்லியிருந்தா ஒரு ரூ210 வந்திருக்கும். இப்போ ஜொள் அங்கிள் தனியா போகவேண்டியதாய் போச்சு. (அதன் பிறகு வேறு யாரும் request கொடுக்காத பட்சத்தில்). 

இனி மறுபடி இன்னொரு நாள் இவர் வண்டிக்கு request கொடுக்கலாமான்னு நான் கேட்க, அங்கிள் திருந்தியிருக்காரா இல்லையான்னு இன்னொரு வாய்ப்பு கொடுத்துப் பார்ப்போம்னு இருவரும் சொல்லியிருக்காங்க. பார்ப்போம். அதன் முடிவை இன்னொரு பதில் சொல்றேன். 

தொடரும்...

Read more...

Thursday, May 18, 2017

பாகுபலி2 - சில கருத்துகள்


பாகுபலி முதல் பகுதிக்கு இவ்வளவு அழுத்தம் வரலை. விடுமுறையில் வரலையோ? ஆனா, இந்த இரண்டாம் பகுதிக்கு... அன்றாட சாப்பாட்டுக்கு பிரச்னை வந்துடும்படியா ஒரு அழுத்தம். மேல் வீட்டில் பார்த்துட்டாங்க, கீழ் வீட்டில் பார்த்துட்டாங்கன்னு Tablemat விளம்பரம் போல் சொல்லத் துவங்கியதால், சரி பார்த்துடலாம்னா.. தமிழில் எங்கேயும் கிடைக்கலை அல்லது நேரம் சரிப்படவில்லை. நமக்குத் தெலுங்கு தகராறு. வெறும் சண்டைப் படம்தானே, வசனமாடா முக்கியம்,
இந்தியிலேயே பார்த்துடுவோம்னு போய் பார்த்து வந்தாச்சு.

நிறைய சண்டைக் காட்சிகள் நிறைந்த படமாங்க இது. ஏம்மா, நம்ம வீட்டில் நாம போடாத சண்டையா, அதில் கிழியாத சட்டையா? காசு குடுத்து அடுத்தவன் சண்டையை பார்க்கப் போகணுமா? பேசாம வாங்க. சரி. போயாச்ச்சு.

தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்பதில் ஒரு இணை-விதி - படம் 2 மணி நேரத்தில் இருக்கவேண்டும்னு சொல்லலாம். கவலையேபடாமல் 3 மணி நேரத்துக்கு படம் வைக்கிறாங்க. இதிலேயே நிறைய இடத்தில் ‘கட்’ செய்திருப்பது தெரியுது. அந்த கட் இல்லையென்றால், 4 மணி நேரம் கூட போயிருக்கலாம். ‘எப்போதாவது’ யூட்யூபில் பார்த்தால், ஒரு படத்தை ஒரு வாரம் / பத்து நாட்களுக்கு பார்க்கும் எனக்கு, 3மணி நேரம்லாம்... ம்ஹூம். மிடில.

படத்தில் நிறைய CG இருக்குன்னு DWவிடம் சொன்னது தப்பாப் போச்சு. தசாவதாரம் படத்தில், போவோர் வருவோர் (& சில அசையாப் பொருட்களைக் கூட) இது கமல்’ஆ இருக்குமோன்னு சந்தேகத்துடன் பார்த்தது போல், இந்தப் படத்தில், ஏங்க இந்த யானை, அருவி, இந்த குழந்தை? இதெல்லாம் நிஜமா அல்லது CGயான்னு கேள்வி கேட்டே, படம் பார்க்கும்போது என் தூக்கத்தைக் கெடுத்தாங்க.

தென்னை மரத்தை வளைத்து, angry birds போல் பறந்து செல்வதெல்லாம் செம ஐடியா. அதை அப்படியே லுரு சில்க்போர்ட் மேம்பால போக்குவரத்து நெரிசலுக்குப் பயன்படுத்தலாம். இரண்டு பக்கமும் இரண்டிரண்டு தென்னை மரத்தை நட்டு வைத்தால் போதும். பத்து பத்து பேராக பறந்து, சுலபமாக மேம்பாலத்தை தாண்டிவிடலாம். இதச்சொன்னா...

நடுவில் ஒரு காட்சியில், நீங்க சிவகாமிக்கு சொல்லலாமே என்று நாசரைப் பார்த்து கேட்க, அவர் நான் சொன்னால் சிவகாமி கேட்கமாட்டாள் என்பது போல் ஏதோ சொல்வார். அதைத் தொடர்ந்து, படையப்பா காலத்திலிருந்து நான் சொல்வதை அவள் கேட்பதேயில்லை என்று வசனம் வரும்னு பார்த்தால் - வரவில்லை.

ரோகிணி, தமன்னா - இவங்கல்லாம் திடீர்னு தலை காட்டினாங்க. முதல் பகுதியில் வந்திருப்பாங்களா இருக்கும். நமக்குத் தெரியல.

மாமா, மாமான்னு பாசத்துடன் கூப்பிட்டவரை கொன்னுட்டாரேன்னு வருத்தப்பட்டோம். படம் முடிந்து வரும்போது, மிஸ்ட் கால் வந்திருந்தது. ஏங்க, உங்க மாமான்னு கூப்பிட்டிருக்காருன்னாங்க. ஐயய்யோ, இங்கே வர்றேன்னு சொன்னார்னா, நாம வீட்டில் இல்லைன்னு சொல்லிடும்மா, நான் இன்னும் கொஞ்ச நாள் இந்த உலகில் இருக்கேன்னு சொல்லிட்டேன்.

சுபம்.

***

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP