Thursday, November 19, 2009

Five Q - தங்கமணிகள் எப்படி பயன்படுத்தறாங்க?

நேத்து நம்ம நண்பர் வால்பையன் அஞ்சு கேள்விகள்னு ஒரு மிகவும் நல்ல, பயனுள்ள இடுகை போட்டிருந்தாரு. வர்ற பதில்களுக்கேற்ப வேறே கேள்விகளைக் கேட்டு, பிரச்சினையோட மூல காரணத்தை
கண்டுபிடிக்க உதவும் உத்தி. அலுவலகங்களிலெல்லாம் கண்டிப்பா பயன்படும்.

கட் கட் கட். அட ஷாட் மாறுதுங்க.

இதே உத்தியை தங்கமணிகள் வீட்டுலே எப்படி பயன்படுத்தறாங்கன்னு பாப்போம்.

அங்கேயாவது கேள்விகளைக் கேட்கணும். இங்கே இவங்க வாயே திறக்காமே - எப்படி உண்மையை கண்டறியறாங்கன்னு ஒரு உதாரணத்தோட பாப்போம். இதிலே வர்ற ரங்கமணி, தங்கமணியை வடிவேலு, கோவை சரளாவா நினைச்சிக்கூட பாக்கலாம். நல்லா இருக்கான்னு சொல்லுங்க...

****

ஒரு வீட்டுக்கு விருந்தினர்கள் வந்திருக்காங்க. எல்லோரும் உக்காந்து பேசிட்டிருக்கும்போது, அந்த வீட்டு ரங்கமணி மெதுவா பேச்சை ஆரம்பிக்கிறாரு.

போன வாரம் நம்ம நண்பர் சுரேஷ் குடும்பத்தினர் வந்திருந்தபோது, நாந்தான் அவங்களுக்கு என் கையாலே சமோசாவும், பால் பாயசமும் செஞ்சி கொடுத்தேன். சாப்பிட்டுட்டு ரொம்ப நல்லாயிருக்குன்னு பாராட்டினாங்க.

தங்ஸ்: ம்?

சரி. சமோசா நான் பண்ணல. ஆனா கடையிலேந்து வாங்கி வந்தது நாந்தானே.. வாங்கிண்டு வந்தாதானே உன்னாலே அதை செய்ய முடியும்?

தங்ஸ்: ம்? (இப்போ குரல் கொஞ்சம் ஜாஸ்தியாகுது!)

சரி சரி. இப்போ என்ன ஆயிடுச்சுன்னு இப்படி குரலை உயர்த்துறே? பால் பாயசமும் நான் செய்யலேதான். அது ரெடிமேட்தான். ஆனா ஃப்ரிட்ஜ்லேந்து எடுத்துக் கொடுத்தது நாந்தானே?

ம்? (இன்னும் கொஞ்சம் ஜா)

சரிம்மா. என்னை ஒருத்தர் பாராட்டிட்டாருன்னா உனக்குப் பிடிக்காதே? இதோ பாருப்பா, அவங்க என்னய பாராட்டலே. என் தங்ஸைதான் பாராட்டினாங்க. போறுமாம்மா? இப்போ திருப்திதானே?

ம்? (இன்னும் கொஞ்சம் ஜா)

அட என்னடா இது? உன்னைத்தான் பாராட்டினாங்கன்னு சொன்னேன். அது தப்பாவே இருந்தாலும் இப்படி கோபப்படலாமா? சரி உண்மைய சொல்லிடறேன். ஏதோ தகராறுலே வந்தவங்க கன்னாபின்னான்னு
எங்களை திட்டிட்டுதான் போனாங்க... இப்ப ஓகேவா?

ம்? (இன்னும் கொஞ்சம் ஜா)

இப்படி வீட்டுக்கு வந்தவங்க முன்னாடி என் மானத்தை வாங்கித்தான் ஆகணுமா? ஒரே ஒரு பொய் சொன்னா என்ன ஆகிடப்போகுது. இதோ பாருப்பா. நான் மறுபடி முதல்லேந்தே சொல்லிடறேன். எங்களுக்கு
சுரேஷ்னு ஒரு நண்பரே கிடையாது. யாரும் எங்க வீட்டுக்கும் வரலே. நாங்களும் அவங்களுக்கு எதுவும் செய்து தரலே.

போறும்மா. இனிமே ம்? சொல்லாதே. எனக்கு ரொம்ம்ம்ம்ப பயமாயிருக்கு. இப்ப நான் என்ன சொல்லிப்புட்டேன்னு என்னை ரொம்ப மிரட்டறே. இனிமே நான் இவங்க முகத்துலே எப்படி முழிப்பேன்? பொண்டாட்டி என்னை கத்தறதை வெளியேல்லாம் போய் சொல்லிடுவாங்களே? கடவுளே!!!

(அழுதுகொண்டே எழுந்து அறைக்குள் ஓடுகிறார்).

தங்ஸ் : 10, 9, 8, ...

வீட்டுக்கு வந்தவர், தங்ஸிடம் : என்னங்க, இப்படி அழுதுகிட்டே ஓடுறாரு. நீங்க என்னடான்னா, 10, 9, 8ன்னு எண்ணிக்கிட்டு இருக்கீங்க?

தங்ஸ்: (கையால் இருங்க இருங்கன்னு செய்கை காமிச்சிக்கிட்டே) : 4, 3, 2, 1 என்றபின் 'டொம்' எனவும், அறைக்குள்ளேயிருந்து 'டொம்' என சத்தம் கேட்கிறது.

விருந்தினர்: ஐயய்யோ. உள்ளே ஏதோ சத்தம் கேக்குது. என்ன விழுந்ததுன்னு போய் பாருங்க.

தங்ஸ்: விடுங்க. அது ஒண்ணுமில்லே.

விருந்தினர் : அட என்னங்க இப்படி சொல்றீங்க. உங்க கணவருக்கு ஏதாவது ஆகியிருக்கப்போகுது.

தங்ஸ்: அவருக்கு சினிமாலே வர்ற ஹீரோயின்னு நினைப்பு. அவங்கல்லாம் அழுதுகிட்டே உள்ளே ஓடிப்போய் கட்டில்லே 'தொம்'முன்னு விழுவாங்கல்ல. அதே மாதிரிதான் இவரும் அழும்போதெல்லாம் செய்வாரு. அதை கண்டுக்கிடாதீங்க.

விருந்தினர் : கட்டில்லே விழுந்தா இப்படி சத்தம் கேக்குமா? பயங்கரமா கேட்டுச்சே.

தங்ஸ்: நம்ம வீட்டுலே கட்டிலே இல்லேன்னு எவ்ளோ தடவை சொன்னாலும் இவரு கேக்க மாட்டேங்கறாரே. நான் என்ன செய்ய?

*****

Read more...

Tuesday, November 17, 2009

பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்!!!






மேலே இருக்குற படங்களையெல்லாம் பாத்தீங்கல்லே! எப்படி டெர்ரரா இருக்குதுன்னு. பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்னு சொன்னா, யாரு கேக்குறாங்க.

அந்த படங்கள் சொல்றத இங்கே பாட்டா படிச்சிருக்கேன் பாருங்க. எல்லாம் ஏதோ ஒரு சினிமா பாட்டோட உல்டாதான் (அது சரி, ஒரிஜினல் பாட்டு எழுதத் தெரிஞ்சா, நான் ஏன் இங்கே பொட்டி தட்டிட்டிருக்கேன்!!). என்னென்ன பாட்டுன்றத நீங்களே கண்டுபிடிச்சிக்கோங்க.

நல்லாயிருந்தா நாலு வார்த்தை சொலிட்டு உங்க மன பாரத்தை இறக்கி வெச்சிட்டு போங்க!!!

*********

தாக்காதே என்னை தாக்காதே
ஜல்லி கரண்டியால என்னை தாக்காதே
இழுக்காதே என்னை இழுக்காதே
லுங்கி கிழியப்போது என்னை இழுக்காதே

வேணாம் வேணான்னு நான் அழுதேன்
நீ தானே என்ன சாத்திப்புட்டே!
போடா போடான்னு என்னை விரட்டி
சந்துல நீ தானே மொத்திப்புட்டே !

நல்லா இருந்த என் சட்டையை
நாராக கிழிச்சிபுட்டே!
கறுப்பா இருந்த என் கண்களை
கலரா மாத்திபுட்டே !
***********
பார்த்து பார்த்து கண்கள் பயந்திருக்கு
நீ வருவாய் என
பயந்து பயந்து கண்கள் சிவந்திருக்கு
நீ வருவாய் என

பேசிக்கிட்டே நீ வருவாயா - காதை கொடுக்கிறேன்
சாந்தமாக நீ வருவாயா - ஜோக்கு அடிக்கிறேன்
வேகமாக நீ வருவாயா - காப்பி தருகிறேன்
கோபமாக நீ வருவாயா - சாம்பல் ஆகிறேன் (நீ வருவாய் என)
**********
சப்பாத்தி கட்டை உடையும் நேரமிது
தங்கமணி அழைக்குது ஆஆஆஆஆஆ
கருப்பு சட்டை கிழியும் நேரமிது
லுங்கியும் கிழியறதுக்குள்ளே வாஆஆஆஆ

தரையிலே தூக்கிப் போட்டு மிதித்திடவே
இரு காலும் துடிக்குது
தரதரன்னு இழுக்கையில்
புது சுகம் பிறக்குது (சப்பாத்தி)

********
அம்மாடி... இதுதான் உதையா?
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
அட ராமா... இது எப்போ முடியுமோ?

முதுகுலே ஏதோ டம்டமுன்னு கேட்குது
தலையிலே ஏதோ லொட் லொட்டுன்னு விழுகுது

போடுங்க போடுங்க இன்னும் போடுங்க
வேணும் நல்லா வேணும்
சொல்ற பேச்சை கேட்டு நடந்துக்காட்டி
மண்டை ரெண்டா உடையும்
ஆஆஆஆஆ
***********

Read more...

Friday, November 13, 2009

நொறுக்ஸ் - வெள்ளி - 11/13/2009

போன மாதம் ஒரு நாள் எங்க மாநில தமிழ் சங்கத்திலே தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி - ஒரு இன்னிசை கச்சேரியும், ஈரோடு மகேஷின் சிரிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
ஈரோடு மகேஷ் : நல்லா சிரிப்பாத்தான் பேசுறார். வருடா வருடம் இங்கே வராப்பலயாம். இந்த வருடம்தான் எங்களுக்குத் தெரியும். வழக்கம்போல் எதையும் தயார் செய்து வைத்துக் கொள்ளாமல், அந்தந்த சமயத்துக்கேற்ப ஜோக்குகளை அள்ளித் தெளித்து கூடவே நல்ல மேற்கோள்களோடு பேசினார்.

நடிக்க வரலேன்னா என்ன செய்துட்டிருப்பீங்க? கலையுலகத்துலே உங்க லட்சியம் என்ன? - நடிகைகளைப் பார்த்து இப்படி வரலாற்று சிறப்புமிக்க கேள்விகளைக் கேட்கும் தொகுப்பாளர்களைப் போல் - இடைவேளையில் வெளியே வந்த மகேஷை மடக்கி நாங்களும் கேள்விகள் கேட்டோம். எப்படி எதையும் தயார் செய்துக்காமே கடகடன்னு ஜோக்கா பொளந்து கட்றீங்க? - கார்ல் மார்க்ஸையெல்லாம் எப்படி மேற்கோள் காட்டி பேசறீங்க? - இன்னுமா உங்களுக்கு கல்யாணம் ஆகலே?.

அரங்கத்தில், நாங்கள் எதிர்பார்க்காத - தங்கமணி எதிர்பார்த்த - ஒரு கடை இருந்தது. ப்ரின்ஸ் ஜுவல்லரி. நிகழ்ச்சி ஆரம்பிக்க கூப்பிட்டுக்கிட்டே இருக்காங்க - இங்கே தங்ஸும் அவர் நண்பிகளும் ப்ரின்ஸில் நின்னுட்டு வெளியே வரவே மாட்டேன்னுட்டாங்க.

கடை எங்கும் போகாது, நிகழ்ச்சி முடிஞ்சதும் நிறைய வாங்கித் தர்றோம்னு (ஏமாத்தி) உள்ளே கூட்டிட்டு போய் - வெளியே வரும்போது (10 மணி) - நல்ல வேளை, கடை மூடியிருந்தது.

கடை மட்டும் திறந்திருந்தா, எங்க நிலைமை ரொம்பவே கஷ்டமாயிருக்கும்!!!






**********

சஹானாவோட வகுப்பில் வாரந்தோறும் ஒருவரை - student of the week - அப்படின்னு தேர்ந்தெடுக்குறாங்க. சத்தம் போடாமே, சொல்ற பேச்சை கேட்டு, நல்ல புள்ளையா நடக்குறவங்களுக்கு இந்த 'விருது' கிடைக்குது. சில வாரம் யாருக்குமே கிடைக்காமையும் இருக்குது.

இன்னிக்கு அவனுக்கு கிடைச்சுது, இன்னிக்கு அவளுக்கு கிடைச்சுதுன்னு அப்பப்போ சொல்லிட்டே இருப்பாங்க.

இப்படியே எல்லாருக்கும் கிடைக்குதே. உனக்கு எப்போ அந்த விருது கிடைக்கும்? அப்படின்னு போன வாரம் கேட்டேன். கூடவே - மிஸ் சொல்ற பேச்சை கேட்டு நடந்தாதானே கிடைக்கும்? எப்பவும் கத்திக்கிட்டே, பக்கத்தில் இருப்பவரோட சண்டை போட்டுட்டிருந்தா எப்படி விருது கிடைக்கும்? அப்படின்னேன்.

அதுக்கு சஹானா - அதெல்லாம் ஒண்ணுமில்லே. எல்லாருக்கும் வரிசையா கொடுத்து வர்றாங்க. ஸ்கூல் (இந்த வருடம்) முடிய இன்னும் நிறைய நாளிருக்குல்ல. கண்டிப்பா எனக்கும் ஒரு நாள் குடுப்பாங்க - அப்படின்னுட்டாங்க.

ரொம்ம்ம்ப தெளிவா இருக்காங்கப்பா!!

********

வட அமெரிக்கத் தமிழ் சங்கப் பேரவையின் (Fetna) அடுத்த ஆண்டு விழா ஜூலை 2010ல் கனெக்டிகட்டில்தான் நடைபெறுகிறதாம். அரங்கம் நம்ம வீட்டு பக்கத்திலேதான். சரி ஒரு மூணு நாள் அங்கனயே டேரான்னு முடிவு பண்ணியிருக்கோம்.

*******

சமீபத்தில்(!!) வெளியான ஆறு (சூர்யா, திரிஷா) படத்தை வெகு சமீபத்தில்தான்(!!) பார்த்தேன். ஐசுவர்யாவும் சரி, மத்தவங்களும் சரி - படத்துலே கெட்ட வார்த்தைகளை சரமாரியா பயன்படுத்தறாங்க. cut எதுவுமில்லாமல் எல்லாமே தெளிவா கேக்குது வேறே. அதையெல்லாம் இப்போ கெட்ட வார்த்தையில்லேன்னு சொல்லிட்டாங்களா என்ன?

**********

மீண்டும் சஹானா!!!

பொம்பள புள்ளன்றது சஹானா விஷயத்துலே சரியாத்தான் இருக்கு. ஸ்கூல்லே, தொலைக்காட்சியில் இங்கேல்லாம் பாத்து - நகப்பூச்சு, உதட்டுச் சாயம், உயர்-செருப்பு இதெல்லாம் பெண்களுக்கு கட்டாயம்னு அம்மணி தெரிஞ்சிக்கிட்டாங்க. (கேட்டாலும் வாங்கிக் குடுக்கலைன்றது வேற விஷயம்!!).

எந்த கடைக்குப் போனாலும், பெண்களுக்கான பகுதிக்கு சென்று - எந்தெந்த பொருட்களை எங்கெங்கே(!!) தடவிக்கணும்/போட்டுக்கணும்னு விளக்குறாங்க.அதோட இல்லாமல், அந்த அக்காவை பாரு, அந்த மாதிரி காதுல மாட்டறது வாங்கணும், இந்த ஆண்டியை பாரு இந்த மாதிரி செருப்பு வேணும்னெல்லாம் கேக்குறாங்க.

அதனால் இப்பல்லாம் எங்கே போனாலும், நான் அங்கிருக்கும் அக்காவையும், ஆண்டியையும் தைரியமாய்(!!) பாக்க முடியுது. தங்ஸ் கேட்டாலும், நம்ம பாப்பாவுக்காக - அவங்க வளையலையும், கம்மலையும் பாத்தேன். அவ்வளவுதான். வேறொண்ணுமில்லைன்னு சமாளிச்சிடறேன்.. ஹிஹி..

******

Read more...

Thursday, November 5, 2009

ஆபீஸில் தூங்கும் பாட்ஷா!!!

பத்திரிக்கைகளில் வரும் ஜோக்குகளில், ஆபீஸில் தூங்குவது பற்றிய ஜோக் கண்டிப்பாக ஒன்றாவது இருக்கும். மக்களும் விதவிதமா யோசிச்சி எழுதுவாங்க. ஹிஹி. நானும் அதே மாதிரி ஏதாவது எழுதலாம்னு யோசிச்சதோட விளைவுதான் இந்த இடுகை.

******

இதே சப்ஜெக்ட்டில் நான் இரண்டு நாள் முன்னாடி போட்ட ட்விட்டுகளை பார்த்துவிட்டு - தலைப்பில் சொன்ன அந்த கதைக்குப் போகலாம். (ட்விட்டருக்கு ஆள் சேக்கணுமே!!! அதுக்குதான் - அந்த சினிமாக்காரங்களை மாதிரி - ஒரு விளம்பரம்!!!).

தூக்கம் வர்றவனுக்கு - ஆபீஸ் மேஜை - பஞ்சு மெத்தை! ஹ!

மேனேஜர்! இந்த நாள் உன் டைரியில் குறிச்சி வெச்சிக்கோ. எப்படி என் தூக்கத்தை நீ கெடுத்தியோ, அதே மாதிரி உன் தூக்கத்தை கெடுத்து, உன்னை நடு ஹால்லே முழிமுழின்னு முழிக்க வெக்கலே... (டப்.. தொடையை தட்டி) என் பேர் ச்சின்னப் பையன் இல்லே.

யாரு தூங்குனா கண்ணு மூடி குறட்டை வந்து வாயிலேந்து பயங்கரமா ஜொள்ளு வழியுதோ - அவந்தான் தமிழ்! (ச்சின்னப்பையன்னு போடமாட்டேன்!!)

காலை கீழேயே வெச்சேன்னா - 5 நிமிஷம் தூங்கப்போறேன்னு அர்த்தம். டேபிள் மேலே தூக்கி வெச்சேன்னா - 5 மணி நேரம்னு அர்த்தம்

சேர்ந்தே இருப்பது ஆபீஸும் தூக்கமும். சேராமல் இ தூக்கமும் வேலையும். சொல்லக்கூடியது சாயங்காலம் எழுப்பு. சொல்லக்கூடாதது தூக்கத்தில் உளறல்

ஆபீஸ்லே இன்னிக்கு நான் தூங்கறேன்.. நாளைக்கு என் பையன்.. அப்புறம் என் பேரன் தூங்குவான். இதெல்லாம்.. எனக்கு என்ன பெருமையா???

ஆபீஸ் வந்தவுடன் தூங்கணும்னு... அந்த ஆண்டவன் சொல்றான்... விஷ்க்.. விஷ்க்... இந்த ச்சின்னப்பையன் தூங்கறான்... விஷ்க்.. விஷ்க்...

******

தலைப்புக்கான கதை:

பாட்ஷா வேலை பார்க்கும் இடத்தில் அவரது தம்பி மேனேஜராக இருக்கிறார். ஒரு நாள் பாட்ஷா அலுவலகத்தில் நன்றாக குறட்டை விட்டு தூங்கி விடுகிறார். அந்த குறட்டை சத்தத்தால் பலரது தூக்கம் கெடுகிறது. தூக்கமின்மையால் அவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர்.

இனி...

ரயில் போகும் சத்தம்... தடக் தடக்... தடக் தடக்... என்று கேட்கிறது.

பாட்ஷா தூக்கக் கலக்கத்தோடு அமர்ந்திருக்க - தம்பி வெளியிலிருந்து வந்து பேசுகிறார்.

ஆபீஸ்லே நாலு பேர் தூங்கவே முடியாம முழிச்சிக்கிட்டே இருக்காங்க. கெஸ்ட் ஹவுஸ்லே மூணு பேர், தூக்கம் இப்ப வருமா அப்ப வருமான்னு படுத்து கிடக்கறாங்க. டாக்டர்ஸ் அவங்க இன்னும் 24 மணி தூங்க மாட்டாங்கன்னு கெடு கொடுத்திருக்காங்க. அந்த மூணு பேர்ல நம்ம முதலாளியும் ஒருத்தரு.

நம்ம வீட்டு டிவியில் நாலு மொக்கை படங்களை வரிசையா போட்டப்போ ராத்திரி முழுக்க கண்முழிச்சி பாத்துக்கிட்டே இருந்தீங்க. இந்த ஊரே நின்னு வேடிக்கை பாக்க, கொட்டற மழையிலே பேப்பர் கப்பல் விட்டு விளையாடவே பொறந்தா மாதிரி, ராத்திரி முழுக்க தூங்காமே விளையாடிக்கிட்டே இருந்தீங்க.
நேத்து நீங்க தூங்கவிடாமே அலையவிட்ட நம்ம ஆபீஸ் ஆட்களை ட்ரீட் பண்ண டாக்டர்ஸ் மிரண்டு போய் நிக்கறாங்க. இது சாதாரண ஆள் விட்ட குறட்டை சத்தமில்லே. நாடி, நரம்பு, ரத்தம், சதை, புத்தி எல்லாத்திலேயும் தூக்கவெறி ஊறிப்போன ஒருத்தனால்தான் இப்படி தூங்கமுடியும்றாங்க.

உங்களால் தூக்கம் கெட்டுப் போன யாராவது ஒருத்தன் ரிசைன் பண்ணாலும், நானே உங்களை வேலை விட்டு தூக்க வேண்டியிருக்கும். அண்ணே... சொல்லுங்க... நீங்க யாரு... பாம்பேலே நீங்க எந்த ஆபீஸ்லே தூங்கிட்டிருந்தீங்க? இந்த தூக்கம்தான் உங்க வாழ்க்கையாயிருந்ததா. அப்போ நீங்க இங்கே முழிச்சிட்டிருந்தது வேஷமா? வேஷம் கலைஞ்சி
போச்சுன்னு பயமா இருக்கா? ஏன் ஒண்ணும் பேசாமே இருக்கீங்க? அப்போ, எங்ககிட்டே நீங்க எதையோ மறைக்கிறீங்க. சொல்லுங்க.. எனக்கு இப்பவே தெரிஞ்சாகணும். நீங்க யாரு? பாம்பேலே நீங்க எங்கே தூங்கிட்டிருந்தீங்க? சொல்லுங்க.

இதைக்கேட்ட அம்மாவுக்கு கோபம் வந்துவிடுகிறது.

சிவா.. என்னடா? விசாரணையா? அவன் வேலையை பணயம் வெச்சி ஆபீஸ்லே தூங்கினதுக்கு பாராட்டு பத்திரமா? யார்கிட்டே பேசறே? இப்படி ஒரு தூக்கம் என்னாலே தூங்க முடியலியேன்னு நான் ஏங்காத நாளே கிடையாது.

இதோ பாரு. உன் மேனேஜர் புத்தியை வாசற்படிக்கு வெளியே விட்டுட்டு, அவன் தம்பியா இந்த வீட்டுக்குள்ளே வர்றதா இருந்தா வா, இல்லே அவன் ஒருத்தனையே என் புள்ளையா நினைச்சிப்பேன். நீ அப்படியே போயிடு.

அம்மா, தம்பியிடம் இப்படி கேட்டுக் கொண்டிருக்கையில், பாட்ஷா தூக்கக் கலக்கத்துடன் அறைக்குள் போய் - கதவை சார்த்திக் கொள்கிறார்.

பின்னணியில் ‘சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க. எனக்கு இப்பவே தெரிஞ்சாகணும். சொல்லுங்க சொல்லுங்க' என்ற குரல் ஒலித்தபடியேயிருக்க, டபக்கென்று படுக்கையில் படுத்து குறட்டை விட ஆரம்பிக்கிறார். கொர் கொர்...

- சுபம் -

********

Read more...

Tuesday, November 3, 2009

வெள்ளி மாலை Vs ஞாயிறு மாலை

வெ.மா : அரை மணி நேரம்தான் ஆகும். அடுத்த வாரத்துக்கான துணிகள் எல்லாத்தையும், இந்த வாரயிறுதிலேயே அயர்ன் பண்ணி வெச்சிடறேன்.

ஞா.மா : சரி விடு. ஒரு நாளைக்கு அஞ்சு நிமிஷம்கூட ஆவாது. அன்னன்னிக்கு பண்ணிண்டா போச்சு!!!

*****

வெ.மா: நூலகத்திலேந்து வாங்கி வந்த புத்தகம் ஒண்ணு காணோம். வீட்டை நாளைக்கு தலைகீழா புரட்டி அதை எப்படியாவது தேடி எடுக்கறேன் பாரு.

ஞா.மா: என்ன. ரெண்டு டாலர் ஃபைன் கேப்பாங்க. அவ்ளோதானே? கொடுத்துட்டா போச்சு. அப்புறம் அந்த புத்தகம் கிடைச்சா, நாமே வெச்சிக்கலாம்.

*****

வெ.மா: நீல கலர் கார், கார் மேக கலர் மாதிரி கருப்பா ஆயிட்டு வருது. இந்த வாரயிறுதியில் வண்டியை தண்ணீர்-கழுவல் (water wash) பண்ணியே ஆகணும்.

ஞா.மா: வர்ற வியாழன்லேந்து மழைன்னு போட்டிருக்கான். வண்டியை கொஞ்ச நேரம் மழையில் நிக்க வெச்சா தானா சுத்தமாயிட்டு போகுது.

*****

வெ.மா : ஒரு காலுக்கான வெள்ளை காலுறையை மட்டும் காணோம். நாளைக்கு அதை தேடியே ஆகணும். இன்னொண்ணை தனியா எப்படி மாட்டிண்டு போறது?

ஞா.மா : ஒரு கால்லே கருப்பு காலுறையும், இன்னொரு கால்லே வெள்ளை காலுறையும் மாட்டிண்டு போனா யாருக்கு தெரிய போகுது? அப்படியே தெரிஞ்சாலும், அப்பத்தான் பாத்தா மாதிரி காட்டிக்க வேண்டியதுதான்.

*****

வெ.மா: ஒட்டடை நிறைய வந்துடுச்சு. நாளைக்கு வீட்டை முழுக்க சுத்தம் பண்ணிடவேண்டியதுதான். பக்கத்து வீட்டுலேந்து ஒட்டடை குச்சியை வாங்கி வைம்மா.

ஞா.மா: ச்சே பாவம் அந்த சிலந்திங்க. நம்மை விட்டா அதுக்கு வேற எது கதி? அதையெல்லாம் ஒழிக்க வேண்டாம். இப்போதைக்கு அப்படியே விட்டுடுவோம்.

*****

வெ.மா: இதுவரை பாக்காத படம் ஏதையாவது பாக்கணும். நம்ம மக்கள் பரிந்துரைத்த படங்கள் சில இருக்கு.

ஞா.மா: எவ்ளோ தடவை ஆனாலும் தலைவரோட படங்களைப் பாத்தா (பாட்ஷா, படையப்பா etc) இப்பவும் உடம்பு புல்லரிக்குது பாத்தியா!!!

*****

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP