Sunday, December 24, 2017

சொந்தங்கள் பலவிதம். ஒவ்வொருவரும் ஒருவிதம்...

சொந்தங்கள் பலவிதம். ஒவ்வொருவரும் ஒருவிதம்...


அமெரிக்காவில் இருந்தவரை, இந்தியாவில் நடக்கும் எந்தவொரு குடும்ப நிகழ்ச்சிகளுக்கும் வரவேண்டிய அவசியம் இருக்காது. அன்றைக்கு ஒரே ஒரு தொலைபேசி அழைப்பு மட்டுமே. நீங்க மட்டும்தான் இங்கே இல்லை. We miss youன்னு இங்கேயிருந்து சொல்வாங்க. சரி சரின்னு அழைப்பை துண்டித்து, Seinfeld பார்க்க உட்கார்ந்துடுவோம். 

ஆனா, இந்தியா வந்தபிறகு நிலைமை வேற. நெருங்கிய / தூரத்து உறவினர்களின் சின்ன / பெரிய / மிகப்பெரிய நிகழ்ச்சிகளுக்கு (அவங்க கூப்பிட்டா!) போகவேண்டிய கட்டாயம். கூப்பிடாமல் எந்தவொரு நிகழ்ச்சிக்கும் போவதில்லைன்னு என் மாமனார் மேல் சத்தியம் செய்திருக்கேன். ஒரு வேளை கூப்பிட்டு போகாமல் இருந்துட்டா? அதைப் பற்றிய பேச்சு / பிரச்னை தனி. 

சரி, நீ உன் வீட்டில் ஏதாவது நிகழ்ச்சி நடத்திருக்கியா? அதுக்கு எல்லாரையும் கூப்பிடுவியா? அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்கள்தானான்னு கேள்வி வரும். எல்லா கேள்விகளுக்கும் இந்தப் பதிவில் விடை காண்போம். மேலே (கீழே!) படிங்க. 

அது சரி, நெருங்கிய / தூரத்து சொந்தங்கள் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் உன்னை கூப்பிடணும்னு அவசியம்தானான்னு கேட்பீங்க. மிகச்சரி. அவசியம் இல்லைதான். ஒரு திருமணம்னா, மாப்பிள்ளை, பொண்ணு & அந்த தாலி (அல்லது மோதிரம்) மட்டுமே இருக்கணும். நானெல்லாம் அநாவசியம் என்றே நினைப்பேன். ஆகவே, யாரும் கூப்பிடலேன்னா நமக்கு ஒன்றும் பிரச்னையில்லை. 

ஒரு கசின். மிகவும் நன்றாகவே பேசுவார். ஏதாவது ஒரு பொது நிகழ்ச்சியில் பார்த்தால், நாள் முழுதும் பேசிக்கொண்டும் இருப்போம். ஆனால் அவர் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு நமக்கு அழைப்பு இருக்காது. ஏற்கனவே சொன்னாற்போல் நமக்கு ஒன்றும் பிரச்னையில்லை. அடுத்த சந்திப்பில் பார்க்கும்போது அவரும் நன்றாக பேசுவார், நானும். 

ஆனால், யாரேனும் என்னை அழைக்காமல் விட்டுவிட்டால் நமது இன்னொரு கசினுக்குப் பிடிக்காது. அவன் எப்படி உன்னை அழைக்காமல் விடலாம் என்று கிளம்பிவிடுவார். இவரும் நம் அண்ணன்தான். நல்லவர்தான். நம் வீட்டு நிகழ்ச்சிகளில் பற்பல உதவிகள் செய்தவர். நமக்கு அழைப்பு இல்லாத நிகழ்ச்சிகள் அவருக்கும் பிடிக்காது. அந்த நிகழ்ச்சி நடத்துபவரைக் கூப்பிட்டு, ஏன் இவனை மட்டும் கூப்பிடலை. இந்தா தொலைபேசி எண், கூப்பிடு அவனை என அவரிடம் சொல்லிவிடுவார். 

இது எப்படி எனக்குத் தெரியும்னா, ஒரு முறை ஒரு திருமண நிகழ்ச்சிக்கு நமக்கு அழைப்பு இல்லை. எல்லாம் நன்மைக்கேன்னு நாம சும்மா இருந்தாச்சு. திருமணத்திற்கு 2 நாள் முன்னால், அந்த மாப்பிள்ளையின் தந்தை தொலைபேசியில் அழைத்து, தப்பா நினைக்காதே. உன்னை கூப்பிடாமல் விட்டுப்போச்சு. கட்டாயம் மகன் திருமணத்திற்கு வந்துடுன்னுட்டார். சரி, பெரியவரே கூப்பிட்டபிறகு போகாமல் இருக்கமுடியுமான்னு போய் 2 நாளும் விழாவை சிறப்பித்து வந்தாச்சு. பிறகு சில நாட்கள் கழித்து அவரை இன்னொரு இடத்தில் பார்த்தபோது - உன் (மேற்சொன்ன நல்ல அண்ணன்) உன்னைக் கூப்பிடச்சொல்லி 4முறை சொல்லிட்டான். ஆகவே உன்னை கூப்பிட்டேன் - என்றார். 

அன்றிலிருந்து ஒரே ஒரு வழிதான் பின்பற்றுவது. சொந்தங்களில் ஏதாவது நிகழ்ச்சி வந்து, நமக்கு அழைப்பு இல்லைன்னா, இந்த அண்ணனிடம் - அந்த கடைசி ஒரு வாரத்தில் - பேசக்கூடாதுன்ற முடிவு. உன்னை கூப்பிட்டாங்களான்னு இவர் கண்டிப்பா கேட்பார். அதன்பிறகு நடக்கப்போவதுதான் நமக்குத் தெரியுமே.

நிற்க. 

திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு முடிந்தவரையில் சொந்த பந்தங்கள் அனைவருக்கும் நேரில் போய் பத்திரிக்கை கொடுப்பது நல்ல பழக்கம்தான். ஆனால் நேரமேயில்லாமல் அனைவரும் வேகமாக ஓடுகிற இந்த காலத்தில், இதெல்லாம் சரிப்படுமா? எனக்கு உறவினர் யாரேனும் தொலைபேசி, உங்க விலாசம் சொல்லுங்க, அந்தப்பக்கம் வந்து பத்திரிக்கை கொடுக்கணும்னு சொன்னால், நான் சொல்வது இதுதான். ”உங்களை வரவேண்டாம்னு சொல்லலை. தலைக்குமேல் உங்களுக்கு எவ்வளவோ வேலை இருக்கும். பேசாமல் மின்னஞ்சலோ / வாட்சப்போ அனுப்பிவிடுங்க. நான் கண்டிப்பா வந்துடுவேன். சிரமம் வேண்டாம். எனக்குப் பிரச்னையில்லை”. சிலர் சரின்னு வாட்சப்பிடுவாங்க. அது போதும்னு நானும் போய் வந்துடுவேன். 

ஆனா, நமக்கு வாய்த்தவர்கள் அப்படியில்லை. ஒரு முறை அடியேன் செய்த புதுமனை புகுவிழா. அமெரிக்காவிலிருந்து வந்திறங்கிய 2 வாரத்தில் நடத்த நிச்சயிக்கப்பட்டது. வந்தவுடன் ஒரு சிறிய அறுவை சிகிச்சை வேறு. ஒவ்வொருவருக்கா தொலைபேசத் துவங்கினேன். இந்த மாதிரி பிரச்னை, நீங்க கண்டிப்பா வந்துடணும். எல்லாமே சுமுகமா போயிட்டா பிறகு எப்படி? நம் தூரத்து உறவினர் ஒருவர் பிரச்னை செய்தார். ”நேரில் வந்து கூப்பிட்டாதான் வருவோம். என்ன மரியாதை தெரியாம இருக்கீங்க?”. ”சார், இந்த மாதிரி இந்த மாதிரி ஆகவே..”. ”நோ நோ. ரிஜட்டட்”. கடைசியில் நான் சொல்லிட்டேன். ”நீங்க பெரியவங்க. நான் என் பிரச்னையை சொல்லிட்டேன். பெரியவங்களா வந்து ஆசிர்வாதம் செய்ய முடிந்தா நல்லது. இல்லேன்னா அங்கேயிருந்தே சொல்லிடுங்க. நன்றி”ன்னு வெச்சிட்டேன். மனுசன் வந்தாரான்னு கேட்பீங்களே? ஹிஹி. ஆள் வரவில்லை. சரி விடுங்க. இதெல்லாம் ஜகஜம்தான்னு விட்டாச்சு. 

சரி கூப்பிட்ட மற்றவர்கள் வந்தாங்களான்னு கேட்டால், அது ஒரு தனி பிரச்னை. கேளுங்க. 

RSVP என்னும் மேட்டர் நம்ம மக்களுக்கு என்றைக்கும் தெரியப்போவதில்லை. ஒரு நிகழ்ச்சிக்கு அழைப்பு வந்திருக்கு. நீங்க வர்றீங்களா இல்லையான்னு சொல்லணுமா வேண்டாமா? 500-600+ பேர் வரக்கூடிய திருமண நிகழ்ச்சிக்கு இந்த RSVP தேவையில்லை. ஆனா ஒரு சிறிய நிகழ்ச்சிக்கு?. 

ஒரு முறை நம் வீட்டில் ஒரு நிகழ்ச்சி நடத்தினோம். வெறும் 20 பேர்தான் சாப்பாட்டுக்கு. அதில் அழைக்கப்பட்ட ஒரு குடும்பத்தில் 6 பேர். கண்டிப்பா வந்துடுவோம் ஜமாய்ச்சிடலாம்னு சொன்னவங்க யாருமே நிகழ்ச்சிக்கு + சாப்பாட்டுக்கு வரவில்லை. நிகழ்ச்சி அவங்க வீட்டிற்கு பக்கத்து தெருவில்தான். இதனால் எனக்கு அவமரியாதை, அவமானம் இதெல்லாம் கிடையாது. மீந்து போகும் சாப்பாட்டிற்கு என்ன கதி? வரலைன்னு சொன்னா தப்பா நினைச்சிப்பாங்களோ? சரி வர்றோம்னு சொல்லிடுவோம். பிறகு போகவேண்டாம். அடேய். சாப்பாடு வீணாயிடும்னு நினைச்சிப் பாருங்கய்யா!!

மறுபடி நிற்க. நாம் செய்த சில குளறுபடிகளையும் சொல்றேன்.

ஒரு கசின் சகோதரி. அவருடைய கணவர் நம்மிடம் நல்லா ஜாலியா பேசுவார். ஒரு காலத்தில், அவருடைய வட்ட திருமணங்களுக்கெல்லாம் எனக்கு பத்திரிக்கை வந்துகொண்டிருந்தது. ஒரு முறை என்ன ஆச்சுன்னா, வீட்டில் இருந்த ஒரு பரிசை Giftwrap செய்து வைம்மா என்று அம்மாவிடம் சொல்ல, அவரும் செய்து வைக்க, நாமும் அதைப் போய் அவருடைய சகோதரரின் திருமணத்தில் கொடுத்துட்டு வந்தோம். ஓரிரு நாட்கள் கழித்துப் பார்த்தால், கொடுக்கணும்னு நினைத்த பரிசு இன்னும் வீட்டிலேயே இருந்தது. அப்படின்னா, நாம் அவருக்கு எதை Giftwrap செய்து கொடுத்தோம்?. கண்டுபிடிக்கவே முடியவில்லை.

சில நாட்கள் கழித்து இன்னொருவர் மூலம் தெரியவந்தது. நம் வீட்டில் பழைய audio cassetteகள் போட்டு வைக்கும் ஒரு டப்பா. தவறுதலாக அம்மா அதைக் கொண்டு போய் Giftwrap செய்துவர, அதையே கொடுத்திருக்கிறோம். மிகப்பெரிய தவறுதான். அடுத்த ஒரு மாதத்தில் அந்த கசினின் கணவரிடம் போய் மன்னிப்பு கேட்டு வந்தேன். ஆனால், தவறு தவறுதானே. நடந்து பல ஆண்டுகள் கழிந்துவிட்டாலும் இன்றுவரை அந்த கசின் கணவர் அதை மறக்கவில்லை. மறக்கக்கூடிய தவறா நாம் செய்திருக்கிறோம்?.

வேறொரு நிகழ்ச்சி. இதே போல் இன்னொரு கசின் சகோதரி. அவர் கணவரின் குடும்பத்துடன் வசித்து வந்தார். நம் வீட்டு நிகழ்ச்சி. கசின் & அவர் கணவரைக் கூப்பிடணும். நான் என்ன செய்தேன்னா, கசின் கணவருடன் பேசிவிட்டு, அவர் பெயரிலேயே பத்திரிக்கையை அனுப்பிட்டேன். ஆனால் நிகழ்ச்சிக்கு அவர்கள் இருவரும் வரவில்லை. என்னடான்னா, வீட்டில் என் அப்பா அம்மா இருக்காங்க. அவர்களையும் கூப்பிட்டு, அவர்கள் பெயரிலேயே பத்திரிக்கை கொடுத்திருக்கணும். அப்படி குடுக்காததால் நான் அந்த நிகழ்ச்சிக்கு வரவில்லைன்னு இன்னொருவர் மூலமாக சொல்லியனுப்பினார். 

நான் கசின் சகோதரியை கூப்பிடணும். கணவருடன் இருக்காருன்னு அவரை கூப்பிட்டேன். அடுத்து அவர் வீட்டில் அனைவரையும் கூப்பிடணும்னா அது முடியுமா? நாம் செய்தது ஒரு சிறிய நிகழ்ச்சி. வந்தா வரட்டும் வரலேன்னா போகட்டும் நான் சொல்லிட்டேன். செய்தது சரியா தவறான்னு தெரியல. வழக்கம்போல் நம் வீட்டில் சிலர் அது தவறுன்னும் சிலர் அது சரிதான்னு சொல்லிட்டிருந்தாங்க. சரி விடுங்க. 

இன்னொரு சம்பவம். நம் வீட்டுத் திருமணம். சொந்தங்களை ரெயில் / பேருந்து நிலையங்களிலிருந்து கூட்டி வர / கொண்டு போய் விட என்று ஒரு Vanஐ இரு நாட்களுக்கும் நிறுத்தி வைத்திருந்தேன். Transport-In-charge என்று ஒரு கசினையும் நியமித்து வண்டி வேணும்னா இவரைத் தொடர்பு கொள்ளவும் என்று அனைவருக்கும் சொல்லியிருந்தேன். முந்தைய நாள் இரவு ஒரு குழு வண்டி எடுத்துப் போயிருக்க, இன்னொரு உறவினர் குழு வண்டி இல்லை என்று கோபித்துக் கொண்டனர். இந்த கசின் நம்மிடம் சொல்லாமல் பிரச்னையை தீர்க்கப் பார்க்க, பிரச்னை தீரவில்லை. நாளை நாங்கள் திருமணத்திற்கு வரமாட்டோம்னு சண்டை போட்டு அந்தக் குழுவினர் போய்விட்டனர். பிறகு வந்தாங்கன்றது வேறு விஷயம். இந்த பிரச்னை தெரிந்து, திருமணம் ஆன ஒரு வாரத்தில், அந்த குழுத்தலைவருக்கு தொலைபேசி நான் மன்னிப்பு கேட்டேன். இதுவும் நம் தப்புதான். எல்லாம் ஒரு படிப்பினைதானே?

ஒரு தூரத்து சொந்தம். பல நாள் கழித்து ஒரு நிகழ்ச்சிக்குக் கூப்பிட்டாங்க. சந்தோஷமா போய் சாப்பிட்டு(!!) வந்தாச்சு. ஓர் ஆண்டுக்குப் பிறகு அவங்க வீட்டிலேயே இன்னொரு நிகழ்ச்சி (புமபுவி) வந்தது. அதற்கு நமக்கு அழைப்பில்லை. அது பரவாயில்லை. ஆனால், சில நாட்கள் கழித்து அந்த புது வீட்டிற்கே நாம் போக வேண்டிய நிலைமை. அப்போது அவங்க சொல்லிட்டாங்க. ”சாரிப்பா. உன்னை இந்த வீட்டு புமபுவி’க்கு கூப்பிடலை. மறந்துபோச்சு”. நானும் “அச்சச்சோ. சாரி எல்லாம் எதுக்கு? ஒண்ணும் பிரச்னையில்லை. இன்னும் கட்டப்போற அடுத்தடுத்த வீடுகளுக்கு மறந்துடாதீங்க”ன்னு ஒரு மொக்கை ஜோக் அடிச்சி நான் (மட்டும்!) சிரிச்சாச்சு. ஆனா பக்கத்தில் இருந்த ஒரு கசின் விடுவாரா? “ஆமா நீங்க போன ஆண்டு அந்த நிகழ்ச்சிக்கு கூப்பிட்டீங்க. இந்த நிகழ்ச்சிக்கு இவனை கூப்பிடலைன்னு என்னிடம் சொல்லி வருத்தப்பட்டான்”ன்னு சும்மா அடிச்சி விட்டுட்டாரு. நமக்கு வாய்த்த கசின்கள் இப்படிப்பட்ட ரகம். என்னத்த செய்றது. 

தன் வீட்டில் எந்த நிகழ்ச்சிக்கும் நம்மைக் கூப்பிடாத கசின் ஒரு முறை என்னிடம் - ”என்னடா, கூப்பிட்டாதான் நிகழ்ச்சிக்கெல்லாம் வருவியா? நாம அப்படிதான் பழகியிருக்கோமா?” என்றெல்லாம் கேட்டார். சாதாரண நாள் என்றால் யார் வீட்டிற்கும் போவதற்கு தயங்காதவன் நான். வெறுமனே தொலைபேசிவிட்டு, ஒரு நல்ல காபி வேணும். வீட்டில் இருப்பீங்களா. இதோ வர்றேன்னு சொல்லி பல முறை பலர் வீட்டிற்கு சென்றிருக்கிறேன். ஆனா திருமணம், புமபுவிழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு? அவரிடம் நான் சொல்ல நினைத்தது - “அடேய். நான் என் நிகழ்ச்சிக்கு கூப்பிட்டும் நீங்க யாரும் வரவில்லை. பிறகு நிகழ்ச்சி எப்படி நடந்ததுன்னும் கேட்கவில்லை. அப்படியிருக்கும்போது கூப்பிடாமல் யார் வருவாங்க சொல்லு”. ஆனால் வழக்கம்போல் இதைக் கேட்கவில்லை. 

இவ்வளவு பேசிவிட்டு ‘மொய்’ மறந்துட்டேன் பாருங்க. மக்கள் இந்த மொய் விஷயத்தில் ஏன் இவ்வளவு டென்சன் ஆகுறாங்கன்றது நமக்கு என்றைக்கும் புரியாத விஷயம். அவன் திருமணத்தில் அவன் எனக்கு இவ்வளவுதான் / இதுதான் கொடுத்தான். அதனால் நானும் இவ்வளவுதான் கொடுப்பேன். அவன் சக்திக்கு எவ்வளவோ கொடுக்கலாம். ஆனால் கொடுக்கவில்லை. திருமணங்கள் / நிகழ்ச்சிகள் முடிந்தும் எப்போதும் ஓயாத பேச்சுன்னா அது மொய் பற்றியதுதான். 

ஒரு நிகழ்ச்சிக்கு அழைப்பு / பத்திரிக்கை வருது. தவிர்க்க முடியாத காரணங்களால் நம்மால் போகமுடியவில்லை. அந்த சமயத்தில், மொய் மட்டும் யாரிடமாவது கொடுத்து அனுப்பணுமா? இதற்கு நம் சொந்தங்கள் பலர் சொல்லும் பதில் - யெஸ். நீ வரலேன்னாலும் பரவாயில்லை. மொய் கொடுத்து அனுப்பு. என் கேள்வி - ஏன்?. நான் போகாத நிகழ்ச்சிகளுக்கு நான் மொய் / பரிசு கொடுப்பதில்லை. தகராறு ஆனா ஆகட்டும்னு விட்டுடறது. மிடியல. 

இப்போதைக்கு இங்கே நிறுத்திக்குவோம். சொல்வதற்கு இன்னும் பற்பல சம்பவங்கள் இருப்பதால், அடுத்த பாகம் வந்தாலும் வரும்.

***

Read more...

Thursday, September 21, 2017

சென்னை - பயணக் குறிப்புகள்

சென்னை - பயணக் குறிப்புகள்

திருச்சி கல்யாணத்துக்கு (கபடி விளையாட) நான் வேணா போறேனேன்னு விஜய் சொல்வதுபோல், எந்த ஒரு சின்ன வேலை இருந்தாலும், சென்னைதானே (எந்த ஏரியாவா இருந்தாலும் ஒரு ரவுண்ட் திருவல்லிக்கேணி போயிடலாம்னுதான்!!) நான் போறேன்னு கிளம்பிடுவேன். ஆகவே இரு மாதங்களுக்கு ஒரு முறையாவது சென்னை வந்து போய்விடுவது வழக்கம். 

சென்ற ஞாயிறும் இப்படிதான் (சில ஆண்டுகள் கழித்து) பிருந்தாவனில் கிளம்பிப் போனேன். வீட்டிலிருந்து ரெயில் நிலையம் BMTCல் போகும்போதே பிரச்னை துவங்கிடுச்சு. பேருந்தில் யாருடையதோ பணத்தை pickpocket அடிச்சிட்டாங்களாம். ஒரே கூச்சல். பேருந்தை காவல் நிலையத்துக்கு விடுங்கன்னு சத்தம். போக 2.50, வர 2.50, சாப்பிட தயிர் சாதம்னு த்ரிஷா ஆண்டி சொல்வதைப் போல், போக வர SMS ticket, ரெயிலில் சாப்பிட உப்புமா இதைத்தவிர சில சில்லறை மட்டுமே வைத்திருந்த நான், மறுபடி இன்னொரு பேருந்து பிடிக்கணுமா, காசு இருக்கான்னு பார்க்க நினைக்கையில் - பிரச்னை எப்படியோ தீர்வாகி வண்டி சரியாக ரெயில் நிலையத்துக்குப் போயிடுச்சு. 

பிருந்தாவனில் பயணம் <எப்படி இருக்கும்னு மக்கள் நினைப்பது>



பிருந்தாவனில் பயணம் <நிஜமாக எப்படி இருக்கும்>


பயணிகளை விட அதிகமாக இருக்கும் வியாபாரிகளை வேடிக்கை மட்டுமே பார்த்து - காதில் தாசர் பாடல்களுடன் சென்னை போய் சேர்ந்தாச்சு. 

விடியலில், திருவல்லிக்கேணி சந்து பொந்துகளில் & கடற்கரையில் ஒரு நடைப்பயிற்சி. பின்னர் ஒரு சில மடங்கள், கோயில்கள். மாலையில் பாரதி சாலையில் பழைய புத்தகக் கடைகளை ஒரு சுற்று பார்த்துவிட்டு, climaxஆக மீசைக்காரர் கோயில். இதற்கு நடுவே எந்த வேலைக்கு (விழாவிற்கு) சென்றோமோ அங்கே போய் தலைமை தாங்குவது - இதுவே நம் பொதுவான அட்டவணை. கோயிலில் புளியோதரை & வேறு ஏதாச்சும் வாங்கி சாப்பிடுவது பற்றிய தகவல் இங்கு தேவையில்லாதது.

நாம் முன்னர் இருந்த தெருக்களில் மற்றும் நமக்குத் தெரிந்தவர்கள் இருந்த தெருக்களில் (யாருன்னு கேட்டு பழைய autographகளை கிளறக்கூடாது!) சுற்றும்போது - cinema paradiso படத்தில் 30 ஆண்டுகள் கழித்து அந்த ஊருக்கு வரும் Directorஐ பழைய முகங்கள் பார்த்து அடையாளம் கொள்ளும் - அதே போல் நம்மையும் ஓரிருவர் பார்த்து சிரித்தால் (ஹாஹான்னு இல்லை. சும்மா புன்னகை மட்டுமே), நமக்கு ஒரு திருப்தி. 

கோயிலுக்குப் போய்வருவது ஒரு நண்பர் வீட்டிற்குப் போவதுபோல். என்ன, அடியேன் மகளோடு மட்டும் அங்கு போகமுடியாது. என்ன பிரச்னைன்றீங்களா? சென்ற கோடையில் இருவரும் கோயிலுக்குப் போய் மீசைக்காரரை பார்த்துவிட்டு வந்தபிறகு, பங்கேற்கப் போயிருந்த விழாவில் அனைவரிடமும் - அப்பா, கோயிலில் அழுகிறாரு. இனி அவரோடு கோயிலுக்குப் போகமாட்டேன்னு சொல்லிட்டாங்க. அவரை (மட்டும்) பார்த்தா அது தானா வருது. நான் என்ன செய்ய? 

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் இருக்கும் இடம் ஆகையால் மாடுகள் ரொம்ப அதிகமா இருக்குன்னு சொல்வாங்க. சாணிகளை ஓரமா போய் போடுங்கன்னும் அவைகளிடம் சொல்ல முடியாது. ஆகவே எல்லா தெருக்களிலும் மாடுகள் மற்றும் சாணிகள். இதுகூட ஓகேதான்(?!?). ஆனா இந்த மனுசங்க போடுற குப்பைகளையாவது ஓரமா / தொட்டியில் போடலாமே? ம்ஹும். எங்கு பார்த்தாலும் குப்பைதான். கோயில் விழா / ரதம் ஆகிய நாட்களில் மட்டுமே சுத்தம் / ப்ளீச்சிங் பவுடர் போலிருக்கு. 

திருவல்லிக்கேணி சந்து பொந்துகளில் சுற்றியபோது கவனித்த இன்னொரு விஷயம். ஏகப்பட்ட மருத்துவர்கள் / மருத்துவமனைகள். மழை பெய்துகொண்டிருந்த அன்றைய விடியலில் ஏதாவது ஒரு மருத்துவர் கிடைத்திருந்தால் / மருத்துவமனை திறந்திருந்தால், தங்க நேரத்தை (Golden hour) தவறவிட்ட அடியேன் தந்தையாரை காப்பாற்றியிருக்கலாம். ம்ம்.

***


Read more...

Saturday, September 9, 2017

நானே நானா.. தனியாதான் பேசுறேனா..


நானே நானா.. தனியாதான் பேசுறேனா..

ட்விட்டரில் 3599 பேர் நம்மை பின்தொடர்ந்தாலும், 5க்கும் குறைவான ஆட்களே நம்மிடம் தொடர்ந்து பேசுவாங்க. மற்றவர்கள் ம்யூட்டில் போட்டு வைத்திருப்பார்கள்னு நம்புறேன். #BlockNarendraModi போல #MuteChPaiyanன்னு இதுவரை tag பார்த்ததில்லை. இது பிரச்னையில்லை. நிஜவாழ்க்கையிலும் நம் பேச்சை யாரும் கேட்பதேயில்லைன்னு நினைக்கிறேன்.

அட, எல்லார் வீட்டிலும் இதே பிரச்னைதான்பா. யார் வீட்டில்தான் குடும்பத்தலைவர் (ரேசன் அட்டையின்படி!!) பேச்சை கேட்குறாங்க? ம்ம். அதுவும் பிரச்னையில்லை. குடும்பத்துக்கு வெளியில் - உறவினர், நண்பர்கள் ஆகியோர் (எல்லாரும் அல்ல, பெரும்பாலும்) நாம் பேசறதைக் காது குடுத்து கேட்குறாங்களா இல்லையான்னே தெரிய மாட்டேங்குது.

அது எப்படி உனக்குத் தெரியும்ன்னு கேட்டா, சில பல உதாரணங்களைத் தர்றேன் பாருங்க. 

நம் சொந்தக்கார் ஒருத்தர். போன வாரம் நடந்த அண்ணன் பெண் திருமணத்தில் பார்த்தவர் - உனக்கு கன்னடம் எழுதப் படிக்க தெரியுமான்னார். அடியேனைப் பார்த்து அவர் இந்தக் கேள்வியைக் கேட்டது - கடந்த 4 ஆண்டுகளில் இது சுமார் 10வது முறை. செம கடுப்பு. முதலில் ஆமாங்க. தெரியும்னு சொல்ல ஆரம்பிச்சி - பிறகு ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் இதே கேள்வியால் கோபப்பட்டு - அந்த சமயத்தில் என்ன பதில் தோணுதோ அதைச் சொல்லத் துவங்கிவிட்டேன். 

சரி வயசானவர்னு இவரை மன்னித்து விட்டால், நம் சமகாலத்திய வாலிப வயதில் (சிரிக்க வேண்டாம்!) உள்ள ஆபீஸ் நண்பர்களும் அப்படிதான். முன் தின மாலைதான் சொல்லியிருப்பேன். அடுத்த நாள் நான் வர மாட்டேன். லீவ். அடுத்த நாள் காலை 9 மணிக்கு சரியாக அழைப்பு வரும். ஏன்பா பேருந்தில் வரலை? பைக்கில் வரியா? மறுபடி விளக்கவேண்டியிருக்கும். நான் இன்னிக்கு லீவ். 

சரி வாலிப வயதில்தான் இப்படி, சின்ன பசங்களாவது நாம் சொல்றதைக் கேட்கிறாங்களான்னா, அதுவும் இல்லை. 

பெரிய அண்ணன் பையர் ஒருத்தர். 30 வயதிருக்கும். நாங்க ஊரிலிருந்து (அமெரிக்காவிலிருந்து) வந்து சென்னையில் ஒரு 3-4 மாதம் இருந்து, இப்போ பெங்களூர் வந்து 5 ஆண்டுகள் ஆயிடுச்சு. எப்போ திருவல்லிக்கேணி போனாலும், அந்த அண்ணன் வீட்டிற்குப் போய் ஒரு காபி (ஹிஹி) குடிச்சிட்டு வருவது வழக்கம். 

அப்போ அந்தப் பையர் கேட்பார் - நங்கநல்லூரில்தானே இருக்கீங்க? தண்ணீர் பிரச்னை இல்லையே? முதல் 2-3 முறை சொல்லிப் பார்த்தேன். இல்லப்பா, நாங்க லுரு போய் நாளாச்சு. இங்க இல்ல. பையர் நம் பேச்சைக் கேட்பதாகவே தெரியல. அடுத்தடுத்த முறையும் அதே கேள்விதான். இப்பல்லாம் நான் மறுப்பு சொல்றதில்லை. ஆமாம்பா நங்கநல்லூர்தான். அந்தப் பக்கம் வந்தா வீட்டுக்கு வா. 

கண்டகண்ட தகவல்களை நாம்தான் நினைவில் வைத்திருக்கிறோமோ? (படையப்பாவில் ரஜினிக்கு எதிரே கால் மேல் கால் போட்டு உட்காரும் அந்த நடிகை பெயர் என்னன்னு கேட்கக்கூடாது) மற்றவர்கள் மேலே சொன்னாற்போல் தேவையானவற்றை மட்டுமே கேட்டு (அல்லது கேட்ட மாதிரி நடித்து) - கவனத்தை எப்போதும் எங்கேயோ வைத்து சுற்றுகிறார்களோ எனத் தோன்றுகிறது. இதில் வயது வித்தியாசம் கிடையாது. 

இவ்வளவு உதாரணங்களுப் பிறகு, இப்பல்லாம் யாரிடமும் அதிகம் பேசுவதில்லை (நம்புங்க!). அப்படி பேசினாலும், 

* அவங்க தன் கைப்பேசியைப் பார்த்தாலோ
* வேறெங்கோ நோட்டம் விட்டாலோ
* கொட்டாவி விட்டாலோ
* கேட்ட கேள்வியையே திரும்ப கேட்டாலோ

பேச்சை நிறுத்தி / அங்கிருந்து நகர்ந்து விடுவது வழக்கமாக்கிட்டேன். 

சரி நீங்களாவது ஒழுங்கா படிச்சீங்களா - இல்லே, முதல் பாராவிலிருந்து நேரா ஜம்ப் அடிச்சி கடைசி பாராக்கு வந்துட்டீங்களா? 

ஓம் சாந்தி.

***

Read more...

Thursday, August 24, 2017

மாணிக்கம் அலையஸ் பாட்ஷா

மாணிக்கம் அலையஸ் பாட்ஷா



நம் எதிர்வீட்டில் குடியிருக்கும் ஒருவர் வேறொரு இடத்தில் வீடு கட்டி, போன வாரம் புதுமனை புகுவிழா நடத்தியிருக்கிறார். அடிக்கடி பார்த்து சிரிப்பதால் - அவர்/ நம் வீட்டுப் பெண்கள் பேசிக்கொள்வதால் - அவர் / நம் வீட்டுச் சிறுமிகள் சேர்ந்து வேறொரு குழுவுடன் விளையாடிக்கொள்வதால், நம்மையும் விழாவிற்குக் கூப்பிடுவார், போய் ஒரு கட்டு கட்டிவிட்டு வரலாம்னு நினைச்சிருந்தா - மனுசன் நம்மை கூப்பிடவேயில்லை. நம் மாடி வீட்டு, பக்கத்து வீட்டு, நம் தெருவில் பலரைக் கூப்பிட்டும், நமக்கு அழைப்பு நோ. கூப்பிட்ட / கூப்பிடாத ஆட்களைப் பார்த்து ஒருவிதமாக ஊகித்தாலும், innocent until provenபடி பொறுமையாக இருந்தோம். 

இன்று அந்தச் சிறுமி சொன்னதாக, நம் வீட்டுச் சிறுமி சொன்னதும், சந்தேகம் தீர்ந்தது. Houseownersகளை மட்டும்தான் விழாக்கு கூப்பிட்டோம். வாடகைக்கு இருப்பவர்களை கூப்பிடவேணாம்னு அப்பா சொல்லிட்டார்.

நாம் ஒரு காலத்தில் பாட்ஷாவாக இருந்தாலும், தற்போது மாணிக்கத்தைவிட மோசமாக, 1BHKல் ஒரு மினிமலிஸ்டாக வாழ்க்கை நடத்துவதில் வெற்றி கண்டிருக்கிறோம்னு புரிஞ்சிடுச்சு. 

நாமாக எதையும் யாரிடமும் சொல்லிக்கொள்வதில்லை. ஜிம்பிளாக இருந்தாலும், எப்படியோ விஷயம் தெரிஞ்சிடுது. இப்படிதான் போன ஆண்டு நம் கடவுச்சீட்டு புதுப்பிக்கப் போனால், அப்படியே கொடுத்துடறாங்களா? காவலர் வந்து சரிபார்த்தபிறகுதான் கொடுப்போம்னு சொல்லிட்டாங்க. சரி அவராவது எங்க வீட்டுக்கு வரக்கூடாதா? நேராக மாடிக்குப் போய் நம் houseownerரிடம் போய் நம்மைப் பற்றி விசாரித்திருக்கிறார். 

அவர் போன பிறகு, நம்மாள் இறங்கி வந்து, எங்கேயாவது வெளிநாடு போகப்போறீங்களா? கடவுச்சீட்டுக்கு ஆள் வந்ததேன்னார். இல்லே சார், சும்மா புதுப்பிச்சி வெச்சிக்கலாம்னு - நமக்கு லுரு முகவரியிலும் ஒரு ஆவணம் வேணும். அதனால்தான் இதெல்லாம்னேன். அவரோ - நான் சிங்கப்பூர் போயிருக்கேன், அங்கே ஒரு வாரம் இருந்து ஊர் சுற்றிப் பார்த்திருக்கிறேன். கண்டிப்பாக எல்லாரும் ஒரு முறையாவது ஒரு வெளிநாடாவது போகணும். அப்பதான் நம் நாடு எப்படியிருக்குன்னு தெரியும்னு ஒரு 15 நிமிடம் பேசினார். நாம் எப்பவும்போல் நம் கதையை எதுவும் சொல்லிக்கவில்லை. 

பின்னர் ஒரு நாள் நம் மாமனாரிடம் இதைப் பற்றி houseowner பேசியபோது, இவர் ‘உண்மையைச் சொல்லிட்டாரு’. அவரோ உடனே நம்மிடம், என்ன, நீங்க அமெரிக்கால்லாம் போய் இருந்திருக்கீங்கன்னு சொல்லவேயில்லையேன்னார். நானோ, ஹிஹி. மறந்துட்டேன் சார்ன்னேன். ஒரு மாதிரி மேலும்கீழும் பார்த்தவாறு போனவர்தான், அதுக்குப் பிறகு பல நாட்கள் நம்மிடம் பேசவேயில்லை. 

நாமும் இப்படியே maintain செய்வோம்ற முடிவுக்கு வந்ததால், இப்போ அந்த புதுமனை புகுவிழா அழைப்பு வரவில்லை. நமக்கு குறைந்தபட்சம் ரூ500க்கான செலவு மிச்சம்.

***


Read more...

Saturday, May 27, 2017

சிரி சிரி சிரி சிரி...


எங்கே, அதையே கொஞ்சம் சிரிச்சிக்கிட்டே சொல்லுங்கன்னு கவுண்ட்ஸ் மன்னனில் சொல்வதைப் போல் உங்களிடம் சொல்ல முடியாது. ஏன்னா, உங்களுக்கு எப்பவுமே சிரித்த முகம்தான்னு பலர் என்னிடம் சொல்லியிருக்காங்க. இதையே வீட்டில் DW வேறு மாதிரி சொல்வாங்க. அது இப்போ வேண்டாம். நாம மேலே போவோம்.

ஹெல்மெட் மாட்டிக்கிட்டு வண்டி ஓட்டும்போது, அது நமக்கான ஒரு தனி உலகம். உள்ளே பேசலாம், பாடலாம். நான் ஏதாச்சும் ஒரு பல்ப் வாங்கிய சம்பவத்தை - அதுதான் ஏகப்பட்டது இருக்கே - நினைச்சிக்கிட்டு சிரிச்சிக்கிட்டே போவேன். அப்படி சிரித்தவாறே ஓட்டும்போது, யாருடனாவது - பக்கத்தில் வண்டி ஓட்டுபவரோ அல்லது சாலையோரத்தில் நின்றிருப்பவரோ - கண்ணோடு கண் பார்க்க நேர்ந்துவிடும். அப்படி பலமுறை நேர்ந்திருக்கிறது. சில பேர் சிரிக்க முயல்வார்கள், சிலர் யார்றா இவன், நம்மை பார்த்து சிரிக்கிறான்னு தலை திருப்பிவிடுவார்கள். சிலர், பேருந்தில் நடக்கும் வடிவேலு காமெடியைப் போல், நம்மைப் பார்த்து சிரிக்கிறானா, இல்லே பின்னாடி யாராவது இருக்காங்களான்னு பின்னாடி திரும்பியும் பார்த்திருக்காங்க. இப்படி அண்ணலும் நோக்கி சிரித்து ‘அவளும்’ நோக்கிய உதாரணங்கள் இந்தப் பதிவிற்கு தேவையில்லாத விஷயங்கள்.

இப்ப போன வாரம் நடந்தது.

யாரோ ஆண்கள், சிலசமயம் பெண்களைப் பார்த்து சிரித்ததெல்லாம் பிரச்னையில்லை. போன வாரம் அலுவலகத்திலிருந்து வரும்போது - ஹெல்மெட்டுக்குள் சிரித்தவாறே - தூரத்தில் நின்றிருந்த ஒரு போக்குவரத்து காவல் போலீஸைப் பார்த்துட்டேன்.

டக்குன்னு சுதாரித்து, சிங்கம் சூர்யா போல் stiff ஆனாலும், அவர் பார்த்துட்டார். என்னடா, இவன் நம்மைப் பார்த்து சிரிக்கிறானேன்னு, நம்மை நிறுத்தி ஓரம் கட்டுங்கன்னுட்டார்.

சார், ஹெல்மெட் கழட்டுங்க. கைப்பேசியில் பேசிட்டு வர்றீங்களா?
இல்லை சார்.

DL, Insurance?
இதோ.

ஆதார் கார்டும் இருந்துச்சு. ஆனா அவர் கேட்கவில்லை.

சரி போங்கன்னு ஒரு சந்தேகத்துடனேயே அனுப்பி வைத்தார்.

டேய், இவன் எங்கெங்கே போறானோ, அங்கெல்லாம் ஒரு ஆள் போட்டு வைங்கடா. என்னைப் பார்த்து சிரிச்சிட்டான்னு சொல்வாரோன்னு திரும்பிப் பார்த்து (சிரிக்காமல்) போனேன்.

வீட்டில் போய் விஷயத்தை சொன்னா, நான்தான் சொன்னேனே, இனாவானா மாதிரி (அய்யய்யோ, சொல்லிட்டேனே!!)

சிரிச்சிக்கிட்டே போகாதீங்கன்னு, எங்கே கேட்டாதானேன்னாங்க.

சரிம்மான்னு சொல்லி சிரித்தேன்.

***


Read more...

Wednesday, May 24, 2017

ஜொள் அங்கிள்

அடியேன் வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் 22 கிமீ தூரம். அலுவலகப் பேருந்தில்தான் போய் வருவது. அடியேன் வீட்டுப் பக்கத்திலேயே இன்னும் இருவர் (மகளிர்) அதே அலுவலகத்தில் வேலை செய்றாங்க. அலுவலகத்திற்கு தாமதமாகப் போகணும்னாலோ, வீட்டிற்கு சீக்கிரம் வரணும்னாலோ, மூவரும் ஒரு Ola book செய்து, 1/3 போட்டு போய் வருவது வழக்கம்.

திடீர்னு அலுவலகத்தில் ஒரு carpool app உருவாக்கி, மக்கள் எல்லாரும் அதை பயன்படுத்திக்கோங்கன்னு சொன்னாங்க. நாங்க மூவரும், நம்ம வீட்டு பக்கம் யாராவது காரில் போவோர் வருவோர் இருக்காங்களான்னு பார்க்கலாம்னு பார்த்தோம். அட, ஒருவர் இருந்தார். நமக்கு தோதான நேரத்தில் அலுவலகத்திலிருந்து கிளம்புபவராகவும் இருந்தார். சரி ஒரு நாள் இவர் வண்டியில் மூவரும் போவோம்னு முடிவு செய்தோம்.

அந்த நாளும் வந்தது. ஒருவருக்கு ரூ70. சும்மா போகும் வண்டியில் நாங்களும் போனால், அவருக்கு ரூ210 வரும். ஒவ்வொருவராக தம் கைப்பேசியிலிருந்து அந்த rideக்கு request கொடுத்தோம். Note the point. இரு மகளிர் மற்றும் நான். அவங்க ரெண்டு பேர் requestம் உடனே approve ஆயிடுச்சு. எனக்கு எதுவும் பதில் வரலை. Ofcourse, நாங்க மூவரும் ஒரே க்ரூப்ன்னு அங்கிளுக்கு தெரியாது.

வண்டி புறப்பட இன்னும் அரை மணி நேரம்தான் இருக்கு. புரியுதா, அந்த அங்கிளுக்கு நீங்க வர்றது பிடிக்கலை. ஜொள் அங்கிள்ன்றங்க மகளிர். சரி, நீங்க போங்க, நான் பேருந்திலேயே வர்றேன்னேன். வெயிட்டீஸ், அங்கிளுக்கு ஒரு பாடம் புகட்டுவோம்ன்றாங்க. இருவரும், அந்த requestஐ cancel செய்துவிட, உடனே அங்கிள் என் requestஐ approve செய்துவிட்டார். அதற்குள் நாங்க ஒரு ஓலா புக் செய்துவிட, நானும் அந்த அங்கிள் வண்டியை cancel செய்துவிட்டேன். ஒழுங்கா என்னையும் ஓகே சொல்லியிருந்தா ஒரு ரூ210 வந்திருக்கும். இப்போ ஜொள் அங்கிள் தனியா போகவேண்டியதாய் போச்சு. (அதன் பிறகு வேறு யாரும் request கொடுக்காத பட்சத்தில்). 

இனி மறுபடி இன்னொரு நாள் இவர் வண்டிக்கு request கொடுக்கலாமான்னு நான் கேட்க, அங்கிள் திருந்தியிருக்காரா இல்லையான்னு இன்னொரு வாய்ப்பு கொடுத்துப் பார்ப்போம்னு இருவரும் சொல்லியிருக்காங்க. பார்ப்போம். அதன் முடிவை இன்னொரு பதில் சொல்றேன். 

தொடரும்...

Read more...

Thursday, May 18, 2017

பாகுபலி2 - சில கருத்துகள்


பாகுபலி முதல் பகுதிக்கு இவ்வளவு அழுத்தம் வரலை. விடுமுறையில் வரலையோ? ஆனா, இந்த இரண்டாம் பகுதிக்கு... அன்றாட சாப்பாட்டுக்கு பிரச்னை வந்துடும்படியா ஒரு அழுத்தம். மேல் வீட்டில் பார்த்துட்டாங்க, கீழ் வீட்டில் பார்த்துட்டாங்கன்னு Tablemat விளம்பரம் போல் சொல்லத் துவங்கியதால், சரி பார்த்துடலாம்னா.. தமிழில் எங்கேயும் கிடைக்கலை அல்லது நேரம் சரிப்படவில்லை. நமக்குத் தெலுங்கு தகராறு. வெறும் சண்டைப் படம்தானே, வசனமாடா முக்கியம்,
இந்தியிலேயே பார்த்துடுவோம்னு போய் பார்த்து வந்தாச்சு.

நிறைய சண்டைக் காட்சிகள் நிறைந்த படமாங்க இது. ஏம்மா, நம்ம வீட்டில் நாம போடாத சண்டையா, அதில் கிழியாத சட்டையா? காசு குடுத்து அடுத்தவன் சண்டையை பார்க்கப் போகணுமா? பேசாம வாங்க. சரி. போயாச்ச்சு.

தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்பதில் ஒரு இணை-விதி - படம் 2 மணி நேரத்தில் இருக்கவேண்டும்னு சொல்லலாம். கவலையேபடாமல் 3 மணி நேரத்துக்கு படம் வைக்கிறாங்க. இதிலேயே நிறைய இடத்தில் ‘கட்’ செய்திருப்பது தெரியுது. அந்த கட் இல்லையென்றால், 4 மணி நேரம் கூட போயிருக்கலாம். ‘எப்போதாவது’ யூட்யூபில் பார்த்தால், ஒரு படத்தை ஒரு வாரம் / பத்து நாட்களுக்கு பார்க்கும் எனக்கு, 3மணி நேரம்லாம்... ம்ஹூம். மிடில.

படத்தில் நிறைய CG இருக்குன்னு DWவிடம் சொன்னது தப்பாப் போச்சு. தசாவதாரம் படத்தில், போவோர் வருவோர் (& சில அசையாப் பொருட்களைக் கூட) இது கமல்’ஆ இருக்குமோன்னு சந்தேகத்துடன் பார்த்தது போல், இந்தப் படத்தில், ஏங்க இந்த யானை, அருவி, இந்த குழந்தை? இதெல்லாம் நிஜமா அல்லது CGயான்னு கேள்வி கேட்டே, படம் பார்க்கும்போது என் தூக்கத்தைக் கெடுத்தாங்க.

தென்னை மரத்தை வளைத்து, angry birds போல் பறந்து செல்வதெல்லாம் செம ஐடியா. அதை அப்படியே லுரு சில்க்போர்ட் மேம்பால போக்குவரத்து நெரிசலுக்குப் பயன்படுத்தலாம். இரண்டு பக்கமும் இரண்டிரண்டு தென்னை மரத்தை நட்டு வைத்தால் போதும். பத்து பத்து பேராக பறந்து, சுலபமாக மேம்பாலத்தை தாண்டிவிடலாம். இதச்சொன்னா...

நடுவில் ஒரு காட்சியில், நீங்க சிவகாமிக்கு சொல்லலாமே என்று நாசரைப் பார்த்து கேட்க, அவர் நான் சொன்னால் சிவகாமி கேட்கமாட்டாள் என்பது போல் ஏதோ சொல்வார். அதைத் தொடர்ந்து, படையப்பா காலத்திலிருந்து நான் சொல்வதை அவள் கேட்பதேயில்லை என்று வசனம் வரும்னு பார்த்தால் - வரவில்லை.

ரோகிணி, தமன்னா - இவங்கல்லாம் திடீர்னு தலை காட்டினாங்க. முதல் பகுதியில் வந்திருப்பாங்களா இருக்கும். நமக்குத் தெரியல.

மாமா, மாமான்னு பாசத்துடன் கூப்பிட்டவரை கொன்னுட்டாரேன்னு வருத்தப்பட்டோம். படம் முடிந்து வரும்போது, மிஸ்ட் கால் வந்திருந்தது. ஏங்க, உங்க மாமான்னு கூப்பிட்டிருக்காருன்னாங்க. ஐயய்யோ, இங்கே வர்றேன்னு சொன்னார்னா, நாம வீட்டில் இல்லைன்னு சொல்லிடும்மா, நான் இன்னும் கொஞ்ச நாள் இந்த உலகில் இருக்கேன்னு சொல்லிட்டேன்.

சுபம்.

***

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP