Thursday, August 24, 2017

மாணிக்கம் அலையஸ் பாட்ஷா

மாணிக்கம் அலையஸ் பாட்ஷா



நம் எதிர்வீட்டில் குடியிருக்கும் ஒருவர் வேறொரு இடத்தில் வீடு கட்டி, போன வாரம் புதுமனை புகுவிழா நடத்தியிருக்கிறார். அடிக்கடி பார்த்து சிரிப்பதால் - அவர்/ நம் வீட்டுப் பெண்கள் பேசிக்கொள்வதால் - அவர் / நம் வீட்டுச் சிறுமிகள் சேர்ந்து வேறொரு குழுவுடன் விளையாடிக்கொள்வதால், நம்மையும் விழாவிற்குக் கூப்பிடுவார், போய் ஒரு கட்டு கட்டிவிட்டு வரலாம்னு நினைச்சிருந்தா - மனுசன் நம்மை கூப்பிடவேயில்லை. நம் மாடி வீட்டு, பக்கத்து வீட்டு, நம் தெருவில் பலரைக் கூப்பிட்டும், நமக்கு அழைப்பு நோ. கூப்பிட்ட / கூப்பிடாத ஆட்களைப் பார்த்து ஒருவிதமாக ஊகித்தாலும், innocent until provenபடி பொறுமையாக இருந்தோம். 

இன்று அந்தச் சிறுமி சொன்னதாக, நம் வீட்டுச் சிறுமி சொன்னதும், சந்தேகம் தீர்ந்தது. Houseownersகளை மட்டும்தான் விழாக்கு கூப்பிட்டோம். வாடகைக்கு இருப்பவர்களை கூப்பிடவேணாம்னு அப்பா சொல்லிட்டார்.

நாம் ஒரு காலத்தில் பாட்ஷாவாக இருந்தாலும், தற்போது மாணிக்கத்தைவிட மோசமாக, 1BHKல் ஒரு மினிமலிஸ்டாக வாழ்க்கை நடத்துவதில் வெற்றி கண்டிருக்கிறோம்னு புரிஞ்சிடுச்சு. 

நாமாக எதையும் யாரிடமும் சொல்லிக்கொள்வதில்லை. ஜிம்பிளாக இருந்தாலும், எப்படியோ விஷயம் தெரிஞ்சிடுது. இப்படிதான் போன ஆண்டு நம் கடவுச்சீட்டு புதுப்பிக்கப் போனால், அப்படியே கொடுத்துடறாங்களா? காவலர் வந்து சரிபார்த்தபிறகுதான் கொடுப்போம்னு சொல்லிட்டாங்க. சரி அவராவது எங்க வீட்டுக்கு வரக்கூடாதா? நேராக மாடிக்குப் போய் நம் houseownerரிடம் போய் நம்மைப் பற்றி விசாரித்திருக்கிறார். 

அவர் போன பிறகு, நம்மாள் இறங்கி வந்து, எங்கேயாவது வெளிநாடு போகப்போறீங்களா? கடவுச்சீட்டுக்கு ஆள் வந்ததேன்னார். இல்லே சார், சும்மா புதுப்பிச்சி வெச்சிக்கலாம்னு - நமக்கு லுரு முகவரியிலும் ஒரு ஆவணம் வேணும். அதனால்தான் இதெல்லாம்னேன். அவரோ - நான் சிங்கப்பூர் போயிருக்கேன், அங்கே ஒரு வாரம் இருந்து ஊர் சுற்றிப் பார்த்திருக்கிறேன். கண்டிப்பாக எல்லாரும் ஒரு முறையாவது ஒரு வெளிநாடாவது போகணும். அப்பதான் நம் நாடு எப்படியிருக்குன்னு தெரியும்னு ஒரு 15 நிமிடம் பேசினார். நாம் எப்பவும்போல் நம் கதையை எதுவும் சொல்லிக்கவில்லை. 

பின்னர் ஒரு நாள் நம் மாமனாரிடம் இதைப் பற்றி houseowner பேசியபோது, இவர் ‘உண்மையைச் சொல்லிட்டாரு’. அவரோ உடனே நம்மிடம், என்ன, நீங்க அமெரிக்கால்லாம் போய் இருந்திருக்கீங்கன்னு சொல்லவேயில்லையேன்னார். நானோ, ஹிஹி. மறந்துட்டேன் சார்ன்னேன். ஒரு மாதிரி மேலும்கீழும் பார்த்தவாறு போனவர்தான், அதுக்குப் பிறகு பல நாட்கள் நம்மிடம் பேசவேயில்லை. 

நாமும் இப்படியே maintain செய்வோம்ற முடிவுக்கு வந்ததால், இப்போ அந்த புதுமனை புகுவிழா அழைப்பு வரவில்லை. நமக்கு குறைந்தபட்சம் ரூ500க்கான செலவு மிச்சம்.

***


0 comments:

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP