Sunday, May 3, 2009

கடையோட மாப்பிள்ளை - பகுதி 4.

இதுவரை : பொண்ணு பாக்கறதுக்காக ஜானகி வீட்டுக்குப் போன மாதுவை பிடிக்கலேன்னு ஜானகி சொல்லிடறாங்க.

இதோட முந்தைய பகுதிகளை முன்னாடியே படிக்காதவங்க - "நாடகம் மாதிரி" லேபிளை பிடிச்சீங்கன்னா தொடர்ச்சியா படிச்சிடலாம்.

*****

மாதுவின் வீடு.

மாது: எனக்கும் வருத்தமாதான் இருக்குப்பா.

மா.அப்பா: இருக்காதா பின்னே? ஒரு பொண்ணுக்கு இவ்ளோ இது இருக்கலாமா?

மாது: இதை கேள்விப்பட்டா என் நண்பர்களெல்லாம் என்னை கேலி செய்வாங்கப்பா. நான் என்ன பண்ணுவேன்.

மா.அப்பா: வருத்தப்படாதேடா மாது. இந்த பொண்ணு இல்லேன்னா என்ன, உலகத்திலே வேறே பொண்ணே இல்லையா என்ன?

மாது: அதில்லேப்பா. நான் சொல்ல வந்ததே வேறே.

மா.அப்பா: என்னடா கண்ணா?

மாது: அங்கே போய் ரொம்ப நேரம் பேசியிருக்கோமே. ஹோட்டல்லாம் வெச்சிருக்காளே. ஒரு டிபன் கொடுக்கணும்னு தோணவேயில்லையே அவங்களுக்கு. வெறும் காபி கொடுத்து அனுப்பிச்சிட்டாங்களே?

மா.அப்பா: அடச்சீ. இவ்ளோதானா? உன்னையெல்லாம் திருத்தவே முடியாதுறா. நல்லவேளை அந்த பொண்ணு தப்பிச்சுட்டா. வேறே யாரு வந்து மாட்டப்போறாளோ உன்கிட்டே.

மாது: அப்பா, எனக்கொரு ஐடியா.

மா.அப்பா: என்ன, நாமளே வெளியே எங்கேயாவது போய் சொஜ்ஜி, பஜ்ஜி சாப்பிட்டு வரலாமா?

மாது: வெரி குட். இப்பதான் நீ என் அலைவரிசைக்கே வர்றே. ஆனா, நான் சொல்ல வந்தது அது இல்லே.

மா.அப்பா: என்னன்னுதான் சொல்லித் தொலையேன்?

மாது: அவங்க இந்த கல்யாணம் வேணாம்னு இன்னும் கன்ஃபர்ம்டா சொல்லலேயில்லே. அதை அவங்க முதல்லே சொல்றதுக்கு முன்னாடி, நாம தொலைபேசி இந்த கல்யாணத்தை கான்சல் பண்ணிடுவோம். எப்படி ஐடியா?

மா.அப்பா: வேறே வழி? உன்னை பெத்ததுக்கு இப்படி எல்லார்கிட்டேயும் அவமானப்பட வேண்டியிருக்கு. இனிமே அந்த மனுசன் மூஞ்சியில் எப்படி முழிப்பேன்னு தெரியலே.

மாது: போன வாரம் நம்ம மளிகை கடையிலே கடைக்காரனுக்குத் தெரியாமே பபுள்கம் எடுத்து சாப்பிட்டுட்டு அவன் கண்டுபிடிச்சி உன்னை திட்ட ஆரம்பிச்சவுடனே, பயங்கரமா முழிச்சியே... அதே மாதிரி முழிச்சிப் பாரு. அதுதான் உனக்கு சரியாயிருக்கும்.

மா.அப்பா: சரி சரி. கத்தாதே. உள்ளேயிருக்குற உங்கம்மா காதுலே விழுந்துடப்போகுது. இப்பவே ஜானகி வீட்டுக்கு தொலைபேசறேன்.

ட்ரிங்... ட்ரிங்...

மா.அப்பா: ஹலோ.. நாந்தான் மாதுவோட அப்பா பேசறேன்.

ஜா.அப்பா: அட. நானே இப்ப உங்களுக்கு தொலைபேசலாம்னு நினைச்சேன். அதுக்குள்ளே நீங்களே பண்ணிட்டீங்க.

மா.அப்பா: விஷயத்தை சொல்லுங்க.

ஜா.அப்பா: இல்லே இல்லே. நீங்கதானே தொலைபேசினீங்க. நீங்களே முதல்லே சொல்லுங்க.

மா.அப்பா: சரி. நானே சொல்றேன். இப்படி சொல்றதுக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு. இருந்தாலும் சொல்லிடறேன். மாதுவுக்கு ஜானகிய பிடிக்கலியாம். அதனால், இந்த கல்யாணம் நடக்காதுன்னு சொல்லிட்டான். நாம கொடுத்து வெச்சது அவ்வளவுதான். Let us be friends.

ஜா.அப்பா: என்ன இப்படி சொல்லிட்டீங்க?

மா.அப்பா: ஓ. உங்களுக்கு இங்க்லீஷ் தெரியாதுன்னு எனக்கு தெரியாது. நான் சொல்ல வந்தது - நாம இனிமே நண்பர்களா இருப்போம்.

ஜா.அப்பா: அட. அது இல்லீங்க. நான் சொல்ல வந்தது ஒரு சந்தோஷமான சமாச்சாரம். முதல்லே முடியாதுன்னு சொன்ன ஜானகி, இப்போ கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டா. கூடிய சீக்கிரத்துலேயே ஒரு நல்ல முஹூர்த்தத்தை பாருன்னு சொன்னா. அதைத்தான் சொல்ல வந்தேன். நீங்க என்னடான்னா...

மா.அப்பா: ஹலோ.. ஹலோ...

மாது: அப்பா. விடுங்க. இதுக்காக அவர்கிட்டே போய் லோ லோன்னு லோ-க்ளாஸ் மாதிரி தொங்காதீங்க. முடியாதுன்னா முடியாதுன்னு சொல்லிட்டு வெச்சிடுங்க.

மா.அப்பா: அதில்லேடா மாது. ஃபோன் கட்டாயிடுத்து.

மாது: அதான் டைரக்டர் டச்ன்றது. இந்த சம்மந்தம் கட்டாயிடும்னு எப்படி பூடகமா சொல்றாரு பாத்தியா?

மா.அப்பா: சும்மாயிரு மாது. ஜானகியோட அப்பா சொன்னதைக் கேட்டேன்னா நீ ரொம்ப அதிர்ச்சியாடுவே.

மாது: என்ன, ஜானகி கல்யாணம் வேணாம்னதாலே, அவளுக்கு பதிலா அவரு என்னை கட்டிக்கிறேன்னாரா? அதுவும் முடியாதுன்னு சொல்லிடு. தமிழ்நாட்லே அதுக்கெல்லாம் ஒத்துக்கமாட்டாங்க.

மா.அப்பா: டேஏஏஏய். சொல்றத கேளு. ஜானகி இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாளாம்.

மாது: இது என்ன புதுக்கதை? பேசாமே அவளை போய் அரசியல்லே சேரச்சொல்லு. டக்டக்குன்னு கட்சி மாற சரியா இருக்கும்.

மா.அப்பா: சரி இப்ப என்ன பண்றது?

மாது: அவளுக்கு வேணா முடிவ மாத்திக்கறது முடி ஸ்டைலை மாத்திக்கறது மாதிரி சுலபமா இருக்கலாம். ஆனா நான் ஒரு தடவை முடிவெடுத்துட்டா முடி எடுத்தா மாதிரி. மாத்திக்கவே மாட்டேன்.

மா.அப்பா: முடிதான் கொஞ்ச நாள்லே மறுபடி வளர்ந்துடுமே.

மாது: அப்போ நானும் கொஞ்ச நாள் கழிச்சி முடிவை மாத்திக்க முயற்சி பண்றேன். இப்போதைக்கு இல்லை.

மா.அப்பா: அதில்லைடா மாது... இப்போ..

மாது: அப்பா.. என் முடிவிலே மாற்றமேயில்லை. சும்மா வளவளான்னு பேசிக்கிட்டே போகாதே. சீன் ரொம்ப பெரிசாயிட்டே போகுதுன்னு டைரக்டர் ‘கட்' சொல்றதுக்கு முன்னாடி, நாமளே உள்ளே போயிடுவோம். சாப்பாடும் ரெடியாயிருக்கும். சாப்பிடுவோம். என்ன?

மா.அப்பா: சரி சரி. வா போகலாம்.

(தொடரும்...)

*****

15 comments:

Vidhya Chandrasekaran May 3, 2009 at 10:20 PM  

\\அதான் டைரக்டர் டச்ன்றது. இந்த சம்மந்தம் கட்டாயிடும்னு எப்படி பூடகமா சொல்றாரு பாத்தியா?\\

முடியலடா சாமீஈஈஈ

ஆயில்யன் May 3, 2009 at 10:37 PM  

//Let us be friends.

ஜா.அப்பா: என்ன இப்படி சொல்லிட்டீங்க?

மா.அப்பா: ஓ. உங்களுக்கு இங்க்லீஷ் தெரியாதுன்னு எனக்கு தெரியாது. நான் சொல்ல வந்தது - நாம இனிமே நண்பர்களா இருப்போம்//

:))))))))))))

Mahesh May 3, 2009 at 11:18 PM  

அய்யா கிரேசி மோகன்.... இந்தாளை கொஞ்சம் அடக்கி வெக்க முடியாதா உங்களால?

சி சி வ வ :)))

Anonymous,  May 4, 2009 at 1:19 AM  

//சி சி வ வ :)))//

ரிபிட்டேய்

மங்களூர் சிவா May 4, 2009 at 1:54 AM  

:)))))))))
கலக்குறிங்கோ ச்சின்ன பையன்

முத்துலெட்சுமி/muthuletchumi May 4, 2009 at 6:29 AM  

மாது செம அறிவாளிப்பா..
பாருங்க ஒரு பதிவு எத்தனை பெரிசு இருக்கனுமோ அத்தனைக்கு நடிச்சிட்டு சமத்தா உள்ள போயாச்சு.. :)

சின்னப் பையன் May 4, 2009 at 8:41 AM  

வாங்க சகோதரி வித்யா -> ஆமாங்க. இன்னும் முடியல... எவ்ளோ பகுதிகள் வரும்னு தெரியல... ஹிஹி....

வாங்க ஆயில்ஸ், மகேஷ், வேலன் அண்ணாச்சி, சிவா -> தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி...

வாங்க மு-க அக்கா -> ஹாஹா.... ஒவ்வொரு காட்சி ஒவ்வொரு பதிவுன்னு முயற்சி பண்ணா, இவ்ளோதான் வந்தது... நன்றி...

ஆளவந்தான் May 4, 2009 at 3:47 PM  

//
அவளுக்கு வேணா முடிவ மாத்திக்கறது முடி ஸ்டைலை மாத்திக்கறது மாதிரி சுலபமா இருக்கலாம். ஆனா நான் ஒரு தடவை முடிவெடுத்துட்டா முடி எடுத்தா மாதிரி. மாத்திக்கவே மாட்டேன்.
//

என்னா ஒரு உதாரணம் ..

ஆளவந்தான் May 4, 2009 at 3:49 PM  

//
மாது: அவங்க இந்த கல்யாணம் வேணாம்னு இன்னும் கன்ஃபர்ம்டா சொல்லலேயில்லே. அதை அவங்க முதல்லே சொல்றதுக்கு முன்னாடி, நாம தொலைபேசி இந்த கல்யாணத்தை கான்சல் பண்ணிடுவோம். எப்படி ஐடியா?
//

அவ்வ்.. என்ன ஒரு புத்திசாலிதனம்.. முடியல :)

ஆளவந்தான் May 4, 2009 at 3:49 PM  

ஆஹா ரவுண்டடிச்சாச்சு

நசரேயன் May 4, 2009 at 6:00 PM  

நல்லா இருக்கு தொடரவும் பயணத்தை

Kumaran May 5, 2009 at 3:35 PM  

ஏதோ மூணு எபிசோட் ல முடிப்பிங்கன்னு பார்த்தா.. மெகா சீரியல் ஆக்கிர்வீங்க போல இருக்கு.. ;-)

இருந்தாலும் கதைல மைதிலி ய எதிர்ப்பார்க்குறேன்..

சின்னப் பையன் May 5, 2009 at 7:42 PM  

வாங்க ஆதி, ஆளவந்தான், நசரேயன் -> நன்றி...

வாங்க குமரன் -> அவ்வ்வ்... கதை நகர்ந்துக்கிட்டிருக்கே... இல்லே மொக்கைன்னு நினைக்கிறீங்களா??? இன்னும் ரெண்டு பகுதிதான்... சுபம் போட்டுடலாம்னு நினைக்கிறேன்... என்ன சொல்றீங்க????

பட்டாம்பூச்சி May 7, 2009 at 6:05 AM  

//முடிவெடுத்துட்டா முடி எடுத்தா மாதிரி.//
அட அட அட.....என்ன உவமை....என்ன உவமை...கலக்கறீங்க.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP