Thursday, August 28, 2014

உட்கார்ந்து உட்கார்ந்து உட்காருதல்.

சினிமா போகலாம்னு யாராவது சொன்னாலே கிலி ஆயிடும் எனக்கு. ஏன்? இப்போ வர்ற (ஆங்கிலம் தவிர்த்த) படங்களெல்லாம் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஓடுதே. (முதல் ஓரிரு நாட்கள் மட்டுமே 180 நிமிடங்கள். அடுத்தடுத்த நாட்களில் பத்து பத்து நிமிடங்களா குறைச்சி வெளியிடுறாங்கன்றது வேறு விஷயம்!!). அவ்வளவு நேரம் ஓர் இடத்தில் உட்காருதல்ன்றது என்னால் முடியாத காரியம். செமையா போர் அடிச்சிடும்.

மொதல்லேந்தே இப்படித்தானான்னா கிடையாது. (நாள் முழுக்க ஓடும் DDLJ படத்தையெல்லாம் பல முறை அரங்கத்தில் பார்த்ததுண்டு). நடுவில் எப்பவோ நடந்த மாற்றம்தான். அப்போ படங்களே பார்ப்பது கிடையாதான்னா அதுவும் கிடையாது. எப்போவாவது அத்தி பூப்பதுபோல் (அத்தி? ஆத்தி, இது என்ன? எப்போ பூக்கும்? யாருக்குத் தெரியும்!!) பார்ப்பது உண்டு.

அரங்கத்திற்குப் போய் படம் பார்ப்பது போர்னா, வீட்டில் தொடர்ச்சியா படம் பார்ப்பது அதைவிட போர். அமெரிக்காவில் இருந்தவரை (DW பார்த்ததால்) வாரம் ஒரு படம் பார்ப்போம். தினம் அரை மணி நேரம் வீதம் ஒரு வாரத்தில் படம் முடிந்துவிடும். இந்தியா வந்தபிறகு அதுவும் பார்ப்பது கிடையாது.

முக்கால் மணி நேரம் அல்லது அதிகபட்சம் ஒரு மணி நேரம். அதுக்கு மேல் என்னால் தொடர்ந்து உட்கார முடியாது. முதுகு வலி, பல் வலி இதெல்லாம் கிடையாது. எழுந்து நடக்கணும். அவ்வளவுதான்.

வெவ்வேறு சமயங்களில் எப்படி இப்படி உட்காராமல் சமாளிப்பது? அதுதான் இந்தப் பதிவு. (அப்பாடா, இப்பவாவது பதிவு ஆரம்பிச்சுதே!)

ஆபீஸில் வேலைன்னா பிரச்னையே இல்லை. அப்பப்போ தண்ணீர் குடிச்சாலே போதும். அதுவே என்னை எழுப்பி விட்டுடும். போய் ஒரு முறை போயிட்டு வரவேண்டியிருக்கும். போற வழியில் யாரையாவது பார்த்து பேசினா, அப்படியே பொழுதும் போயிடும்!!

ஆபீஸ் மீட்டிங்க்னா, ஒரு மணி நேரத்தில் நான் மட்டும் எழுந்து நின்றிடுவேன். என்னய்யா ஆச்சுன்னு மக்கள் கேட்பாங்க. ஒண்ணும் இல்லே, கால் வலிக்குது, கொஞ்ச நேரம் நிற்கப்போறேன்னு சொல்லிட்டு நின்றவாறே பேசுவதோ / கவனிப்பதோ (தூங்க மட்டும் இன்னும் பயிற்சி எடுக்கவில்லை. அதுவும் செய்துடணும்!) - ஒரு பத்து நிமிடம் கழித்து மறுபடி உட்கார்ந்து விடுவேன்.

பெங்களூர் வந்தபிறகு வீடு-அலுவலகம்-வீடு அலுவலகப் பேருந்தில். காலைப் பயணம் அரை மணி நேரம் மட்டுமே. ஆனால் மாலையில்? அது அந்த கடவுளுக்குமே தெரியாது. இதுவரையிலான அதிக பட்ச நேரம் ஒன்றரை மணி நேரம். இதிலும் சில நேரங்களில் தூங்கி விடலாம். தூங்கலேன்னா, ஒரு மணி நேரத்தில் எழுந்து நின்றுவிடுவேன். ஆரம்பத்தில் புதிதாகப் பார்த்த சக பயணிகள், பின்னர் பழகிக் கொண்டார்கள். பிறகு இன்னும் நீண்ட நேரம் பயணம் செய்பவர்களும் அவ்வப்போது பேருந்தில் நிற்கத் தொடங்கினார்கள். இன்னும் சில நாட்களில் எல்லாரையும் (தொடர்ச்சியாக உட்கார விடாமல்) நிற்க வைக்க வேண்டும். இதுவே என் குறிக்கோள்.

என்னை உட்கார வைத்து சோறு போடுவேன் என்று சத்தியம் செய்து என்னை மணம் செய்த DW, என் இந்தப் பிரச்னையைத் தெரிந்து கொண்ட பிறகு, வீட்டில் உட்கார விடுவதேயில்லை. என்னங்க, பத்து நிமிடம், இந்த பத்துப் பாத்திரங்களை தேச்சிக் கொடுங்க, ஒரு மணி நேரம் கழிச்சி இந்த துணிகளை மாடியில் போய் காய வெச்சிட்டு வந்துடுங்க. நீங்கதான் உட்கார்ந்துட்டே இருந்தா, போரடிக்குதுன்றீங்க. அதனால்தான் சொன்னேன். இல்லேன்னா, நானே செய்துட மாட்டேனா.

இந்த வாதம் சரியாயிருக்கிற மாதிரியும் இருக்கு, சரி இல்லாத மாதிரியும் இருக்கு. நீங்க என்ன சொல்றீங்க?

***


2 comments:

சேக்காளி August 28, 2014 at 8:24 AM  

//என்னங்க, பத்து நிமிடம், இந்த பத்துப் பாத்திரங்களை தேச்சிக் கொடுங்க, ஒரு மணி நேரம் கழிச்சி இந்த துணிகளை மாடியில் போய் காய வெச்சிட்டு வந்துடுங்க//
DW, உங்களுக்கு கிடைத்த அடிமை மிக நல்லவர்.ஆனால் அவரால் தொடர்ந்து உட்காரத்தான் குடியவில்லை

அமுதா கிருஷ்ணா August 28, 2014 at 9:25 AM  

ஒவ்வொருத்தரக்கும் ஒவ்வொரு பிரச்சனை.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP