Monday, February 15, 2016

உட்கார்ந்தான், ஓடினான், கிடந்தான்.



ITPL to KRPuram ரெயில் நிலையம். முன்பெல்லாம் ஆட்டோவில் ரூ150 கேட்பாங்க. ரூ120க்கு வருவாங்க. சென்ற ஆண்டு நவம்பர் மழைக்குப் பிறகு எல்லா விலையும் கூடிப்போச்சு போல. இந்த முறை கேட்டதற்கு ரூ300ன்னாரு. சாமி, ரூ500க்கு நான் சென்னைக்கே போறேன். என்னை விட்டுடுங்கன்னு ஓலா ஆட்டோ பார்த்தால், ஒரே ஒரு நிமிடம் காட்டியது. Confirm செய்து நிமிர்ந்தால், அடடே, அவரே வந்துட்டாரேன்னு ஓலா வந்துடுச்சு. ரூ110 மீட்டர்+ரூ10 கொடுத்து ரெயில் ஏறியாச்சு.

நிமிர்ந்த முதுகும், நேர்கொண்ட பார்வையுமாய் உட்கார்ந்து போகணும் இந்த Double Deckerல். (அப்படின்னா, அந்தக் கட்சிக்காரங்க இந்த ரெயிலில் போக முடியாதான்னு கேட்கக்கூடாது!!). வாரயிறுதி வெள்ளி மாலைக்கு அதிக கும்பலில்லை. 3-seaterல் நான் ஒருவனே உட்கார்ந்து வந்ததால், கொஞ்சம் கால் நீட்டி கால் மடக்கி பிரச்னையில்லாமல் போக முடிந்தது.

Central to Triplicane பேருந்தில் ஏறியாச்சு. பெங்களூரு நிலைமையில் 4கிமீக்கு ரூ12ஆவது இருக்கும்னு காசு கொடுத்தால், ரூ4க்கு டிக்கெட் கொடுத்து, சரியான மீதி சில்லறையும் உடனே கொடுத்தார் நடத்துனர். கண்ணில் வந்த ஜலத்தை கஷ்டப்பட்டு அடக்கிண்டேன்.

85+ வயதான ஒரு சொந்தக்கார். நான்கைந்து சாக்லெட் கொடுத்தார். யாருக்கு இது? சஹானாவுக்கான்னா, அடேய் இது உனக்குதான். சாப்பிடுன்னார். எனக்கு எதுக்கு? சின்ன வயசில் தினமும் சாக்லெட் கேட்டு எங்க வீட்டுக்கு வருவே. உனக்கு எவ்வளவு வயசான என்ன? எங்களுக்கு நீ எப்பவுமே குழந்தைதான். அப்புறம் என்ன சொல்றது? போட்டேன் சாக்லெட்டை (என்) வாயில்.

அப்பா. எவ்ளோ நாளாச்சு இந்த லோக்கல் டாஸ்மாக் வாசத்தை நுகர்ந்து. பறக்கும் ரெயிலில் படுத்தபடியே (மட்டையாகி) வந்த இருவரிடம்தான் அந்த நறுமணம். ரூ5க்கு 15 நிமிடத்தில் திருவல்லிக்கேணியிலிருந்து கஸ்தூரிபாய் நகருக்கு வந்து சேர்த்துடுச்சு பறக்கும் ரெயில். (யஹ் கஸ்தூரிபாய் நகர் ஹை).

இறங்கியவுடன் தயாராக நின்றது புதுச்சேரிக்கான ஒரு குளிர்சாதன பேருந்து. லோக்கல் வெயிலில் காயணும்னு வந்தவனுக்கு, எதுக்கு குசாபே. வேண்டாம்னுட்டேன். (ஹிஹி. காசும் அதிகமா இருக்கும்லே!). பின்னாடியே இன்னொரு தநா விரைவுப் பேருந்து. ரூ97க்கு 3.30மணி நேரம் ஓட்டி (ஒரு சிறு தேநீர்க்கான நிறுத்தத்துடன்) புதுச்சேரி கொண்டு வந்து சேர்த்தார் ஓட்டுநர்.

ஆரோவில் ஓட்டம் துவங்கிடுச்சு. 9மணி வாக்கில் சரியான வெயில். சட்டையைக் கழற்றி கக்கத்தில் வைத்து ஓடிக்கொண்டிருந்தேன். அப்போ பக்கத்தில் வந்த ஒருவர், சட்டையை அவுத்திட்டீங்க சரி. அந்த பூணலையும் எடுத்துடுங்க. ரொம்ப தொந்தரவா இருக்கும். நான் அதுக்குதான் அதை கழற்றி Hotelலிலேயே வெச்சிட்டு வந்துட்டேன்னாரு. அடேய். அதுக்கு நீ ஊரிலேயே வெச்சிட்டு வந்திருக்காலாமேன்னு, சொல்ல நினைத்தேன். சொல்லவில்லை. சரி சார், அடுத்த முறை அப்படியே செய்றேன்னு கொஞ்சம் முன்னாடி ஓடிப்போனேன்.

சரி, 42கிமீ ஓட்டத்திற்கே சட்டையைக் கழட்டிட்டே, 75 அ 100 ஓடினா, இன்னும் எதையெல்லாம்.. ஐ மீன்.. என்னவெல்லாம் செய்வேன்னு ஏடாகூடமா கேட்காமல், அடுத்த பத்திக்குப் போங்க.

புதுச்சேரியில் தடுக்கி விழுந்தால்.. சரக்கு கடையல்ல. நான் சொல்ல வந்தது ஃப்ளெக்ஸ். கட்சிகளின் ‘தலைவர் வருகிறார்’ பேனர்கள் கூட இல்லை. திருமண வாழ்த்துகள் ப்ளெக்ஸ்கள். மணமக்களை ஓரமாக போட்டுவிட்டு, வாழ்த்தும் நண்பர்களின் படங்களுடன் ஏகப்பட்ட விளம்பரங்கள். டூ மச். இஅ23பு போல், ஒரு ஃப்ளெக்ஸ் மைதானம் அமைத்தாலும், அதுவும் நிரம்பிவிடும்.

இதுவும் புதுச்சேரியில்தான். ஞாயிறன்று அம்மா கட்சியினர் பட்டாசு வெடித்து சிறப்பு ஊர்வலம். இதனால் பேருந்துகள் ஒரு பத்து நிமிட நெரிசலில் சிக்கின. ஆனால் மக்கள் அதுக்காக திட்டவில்லை. ஏன்னா, எல்லா பேருந்துகளிலும் ஏறி ‘சார், லட்டு, அம்மா, லட்டு’ன்னு லட்டு விநியோகம் செய்து கொண்டிருந்தனர். எல்லாரும் ஆளுக்கு 2கூட வாங்கிக் கொண்டபோது, நான் லட்டு வேண்டாம்னு சொல்லிட்டேன். அதுக்காக, நான் அந்தக் கட்சி இல்லையோ? வேறெந்தக் கட்சியா இருக்கும்னெல்லாம் ஆராய்ச்சி வேண்டாம் மக்கழே.

Auroville to Puducherry பேருந்து நிலையத்திற்கு ஆட்டோ கேட்போம்னு எவ்வளவு ஆகும்னா, இவரும் சென்னை போகும் கட்டணத்தை விட அதிகமாக, ரூ200ன்னு சொல்லி, வண்டி எடுக்க வந்தார். சிரமப்படாதீங்க, நானே பார்த்துக்கிறேன்னு சொல்லி, ஒரு தனியார் பேருந்தில் ஏறி ரூ5க்கு டிக்கெட் எடுத்து, பேருந்து நிலையம் வந்து சேர்ந்தேன்.

Puducherry to Bangalore. படுக்கை வசதி கொண்ட குசாபே. இரவுக்குள் வீட்டுக்கு வந்து சேர்த்துட்டான்.

இப்படியாக ஆரோவில் பயணம் இனிதே நிறைவுற்றது.

***


Read more...

Monday, February 1, 2016

வாரயிறுதி பயணக் குறிப்புகள்.


ஒரு திருமண நிகழ்ச்சிக்காக திருக்கோயிலூருக்குப் போய் வந்தோம். அந்த பயணத்திற்கான சிறு குறிப்புகள்தான் இந்தப் பதிவு.

பெங்களூரிலிருந்து திருக்கோயிலூருக்கா? பேருந்திலா? சாலைகள் மோசமாக இருக்கும். பார்த்து போங்கன்னு சொன்னார் நண்பர். கிருஷ்ணகிரி வரை தேநெ7 வெண்ணெய். அதுக்கப்புறமும் நண்பர் சொன்ன மாதிரி மோசமெல்லாம் இல்லை. படுமோசம். 3+ ஆண்டுகளாகவே அப்படிதான் இருக்காம். பல இடங்களில் சாலை / பாலம் போடும் வேலைகள். முடிஞ்சிடுச்சுன்னா நல்லாயிருக்கும். அதுவரை கர்ப்பஸ்த்ரிகள் அந்தப் பக்கம் போவதை தவிர்க்கவும்.

பல ஆண்டுகள் கழித்து சஹானாவைப் பார்த்த உறவினர் ஒருவர், என்னம்மா படிக்கிறே, என்ன பள்ளி, எத்தனாவது ரேங்க் என பல கேள்விகள் கேட்டாரு. இவரும் எல்லாத்துக்கும் பொறுமையா பதில் சொன்னாரு. முடிஞ்சுதா? அடுத்த நாள் காலை. அந்த ஆளை மறுபடி சந்திக்க நேர்ந்தது. சஹானாவைப் பார்த்து அவர் கேட்ட முதல் கேள்வி - என்னம்மா படிக்கிறே?.

செங்கம் பேருந்து நிலையம். ஆத்திரத்தை அடக்கிவிட்டு, அடுத்ததை அடக்க முடியாமல் ஊர் மக்கள் எல்லாரும் இங்கே வந்துதான் போவாங்க போலன்னு நினைக்க வைக்கும் வாடை. நம் ஓட்டுநருக்கும் அந்த வாடை வந்ததால், உடனே வண்டியை கிளப்பிட்டாரு.

ஊருக்குப் போய், தென்பெண்ணையைப் பார்த்து பல்லாண்டுகள் ஆச்சு. திச2015ல் தமிழக மழை வெள்ளத்தில் இந்த நதியில் தண்ணீர் விட்டிருக்காங்கன்னு சொன்னாங்க. ஜன2016ல் இன்னும் தண்ணீர் இருக்கலாம்னு நினைச்சி போனா, கண்ணுக்கெட்டிய வரை அங்கங்கே மக்கள், மணலில் குந்தவெச்சி, அசிங்கம் செய்திங். மிகப்பெரிய திறந்தவெளி அசிங்கரங்கம்.

உலகளந்த பெருமாள். கோயிலில் ஆறஅமர வேடிக்கை பார்த்தவாறு தரிசனம் முடிச்சாச்சு. பெரும்பாலான கோயில்களைப் போலவே இங்கும் செக்யூரிட்டி முதற்கொண்டு அனைவரும் வணக்கம் வைக்கிறார்கள். கையில் பல பத்து ரூபாய் நோட்டுகள் இருந்தால் நலம்.

இன்னொரு உறவினர். ஏன் என் பையன் பூணலுக்கு வரலை. இந்தக் கல்யாணத்துக்கு மட்டும் வரத் தெரிஞ்சுதில்லை? அடேய். இப்போ நான் வந்தது பெங்களூரிலிருந்து. அப்போ நான் இருந்தது அமெரிக்காவில். அதெல்லாம் எனக்குத் தெரியாது. உன்மேல் எனக்குக் கோபம் இன்னும் தீரலை. பிறகு, பந்தியில் அவருக்கு ஒரு எக்ஸ்ட்ரா லட்டு வாங்கித் தந்தபிறகு சிறிது பேசினார்.

திருவண்ணாமலை பேருந்து நிலையம். 12வாழைப்பழம் 10ரூபாய்னு வாங்கியாச்சு. சிறிது நேரத்தில் ஒரு வயதானவர் பசிக்குது ஏதாவது காசு கொடுங்கன்னு கேட்டு பேருந்து ஓரமாக வந்தாரேன்னு, சீப்பிலிருந்து 6வாப பிச்சி அவரிடம் கொடுத்தோம். பேருந்து புறப்பட்டு ஒரு சுற்று சுற்றி, வெளிச்சுவர் ஓரமாக மறையும் வரை அவரைப் பார்த்திருந்ததால், அந்தப் பழங்களை அவர் சாப்பிடாமல் தூக்கியெறிந்ததை பார்க்க முடிந்தது.

ஒரு வழிக்கு 250கிமீ. இரண்டு வழிக்கும் த நா அதிவிரைவுப் பேருந்து. சரியா 6மணி நேரம் எடுத்துக்கறாங்க. பேருந்து நல்ல கண்டிஷனில்தான் இருந்தது. ஆனா தேநெ7ல் வரும் பாலங்கள் மேல் ஏற முக்கி முக்கி முக்குது. சரக்கு லாரிகளுடன் போட்டி. 7 தாண்டியபிறகு சாலைகள் சரியில்லைன்னு ஏற்கனவே பார்த்தாச்சு.

போகும்போது அமைதியாகப் போன பேருந்து, திரும்பி வரும்போது மாபியா மெம்பர்களோடு வந்தது. ஓட்டுநர் + நடத்துனர் இருவரும் மாபியா. கேட்கணுமா. மொத்த 6மணி நேரமும் 80-90 பாடல்கள். இவங்களும் கூடவே பாடிக்கிட்டு. சரின்னு நாமும் காதில் சொருகியிருந்த தாசர் பாடல்களை எடுத்துவிட்டு, ஆத்தா பெத்தாளே ஆம்பளயா என்னத்தான்னு பாடிக்கிட்டே வந்து சில்க்போர்டில் இறங்கியாச்சு.

நன்றி வணக்கம்.

***

Read more...

Thursday, January 7, 2016

இரண்டு குரு’க்கள் வர்றார். வழி விடுங்கோ!!


இரண்டு குரு’க்கள் வர்றார். வழி விடுங்கோ!!

மொத்தம் இரண்டு தத்துவ நூல்கள். (பேர் இப்போதைக்கு தேவையில்லை!). ஒன்று சமஸ்கிருதத்தில். இன்னொன்று கன்னடத்தில். இரண்டு மொழிகளுமே நமக்கு ததிங்கினத்தோம். ஆனா அந்த நூல்களை படிக்கணும். அதனால், சரியான குரு ஒருவரைத் தேடிக் கொண்டிருந்த சமயம்.



நான்கு மாதங்களுக்கு முன்:

அந்த சமஸ்கிருத நூலை கற்றுத்தரும் ஒரு குரு கிடைத்தார்னு போனேன். அவருடன் இருந்த ஒரு சிஷ்யர் நமக்குத் தெரிந்தவர். இந்த மாதிரி.. இந்த மாதிரின்னு சொன்னதற்கு, குரு - ஆஹா, அதுக்கென்ன? பேஷா சொல்லித் தரலாமே? வந்துடு.

நமக்கோ - சரிதான், இன்னிக்கு நரி முகத்தில்தான் முழிச்சிருக்கோம்னு நினைப்பு. ஆனா... ஊஊஊஊ..

அந்த சிஷ்யர் - குருஜி, இவருக்கு (அதாவது எனக்கு) கன்னடம் சரியா பேச வராது. தடுமாறி தடுமாறித்தான் பேசுவார். நம்ம கூட்டத்தில் நாம் எல்லாருமே கன்னடிகா. கன்னடம்தான் பேசுவோம். அதனால் இவருக்கு கஷ்டமா இருக்கும். ஒத்துப் போகாது.

குருஜி - தடுமாறியாவது பேசுவார்லே. அது போதும்.

சிஷ்யர் - வேண்டாம் குருஜி. திரும்பி என்னிடம் - அதுவும் தவிர, இவருக்கு ரொம்ப வயசாயிடுச்சு. பேசுவதே எங்களுக்கு சரியா கேட்கவில்லை. அதனால், இது சரிப்படாது.

குருஜியும் ஒன்றும் பேசவில்லை. நானும் சரின்னு திரும்பி வந்துவிட்டேன்.

No Hard feelings on either குருஜி or சிஷ்யர்.

ஒரு மாதத்திற்கு முன்:

கன்னட நூலுக்காக ஒருவர் சிக்கினார். அவரிடம் போய் கேட்டேன். சார், எனக்கு கன்னடம் மெதுவாகத்தான் படிக்க வரும். பேசுவதும் தமின்னடம் or கன்னமிழ் (கன்னடம்+தமிழ்) மாதிரிதான் இருக்கும். ஆனா எனக்கு இந்த புத்தகம் படிக்கணும்.

அவரும் ஊஊஊஊ சொல்லி அனுப்பிடுவார்னு நினைத்திருந்தபோதுதான், காதில் அந்த இன்பத்தேன், இன்பத்தேன்னு சொல்வாங்களே, அது -

அதனால் என்ன, நூலைக் கற்க மொழி அவசியமேயில்லை. எனக்கு கன்னடம் தெரியும். உனக்கு கன்னடம் புரியும். நம்ம இருவருக்கும் ஆங்கிலம் தெரியும். நான் கன்னட+ஆங்கிலத்திலேயே சொல்லித் தர்றேன். ஓகேதானே?

சலங்கை ஒலி கமல் போல் expression காட்ட நம்மால் முடியாது. ஆனால் மிகவும் நன்றி ஐயா என்றேன்.

கூடவே, நம் தளமான தாசர் பாடல்களைப் பற்றியும் சொன்னேன். இன்னொரு நற்செய்தியும் சொன்னார்.

தாச சாஹித்ய பாடத்தில் மணிபால் பல்கலையில் உள்ள ஒரு பிரிவில் பல்வேறு தேர்வுகள் நடப்பதாகவும், அதையும் நீ முயற்சிக்கலாமே என்றார்.

எனக்கு தலை கீழே. கால் மேலே. அப்புறம் சரியாக திரும்பி நின்றுவிட்டேன்.

மொத்தம் 12 செமஸ்டர்கள். குறைந்த பட்சம் 6 வருடங்கள் ஆகும். 12 தேர்வுகளும் முடித்தால், தாச சாஹித்யத்தில் M.Philக்கு நிகரான ஒரு பட்டம்.

அதற்கு மேல் பேச ஒன்றுமேயில்லை. எல்லாவற்றிற்கும் தலையை ஆட்டினேன்.

இதோ, இந்த ஜன 10 முதல் அந்த கன்னட நூல் + முதல் நிலைத் தேர்வுக்கான coaching வகுப்புகள் துவக்கம்.

இந்த ஆண்டு இனிய ஆண்டு.

***


Read more...

Friday, December 18, 2015

பகவத் கீதை.



நண்பர் உவாச (சொன்னார்):
மாதங்களில் நான் மார்கழின்னு சொன்னாரே பகவான், அந்த பகவத் கீதையை படிச்சிருக்கியா?

நான்: யெஸ். மலர்களிலே நான் மல்லிகைதானே அடுத்த வரி?

நண்பர்: அடேய்!!



ரொம்ப நாளாகவே இந்த பகவத்கீதையை முழுக்க ஒரு முறையாவது படிக்கணும்னு நினைப்பு இருந்தது. அங்கும் இங்குமாக சொற்பொழிவுகள் கேட்டிருந்தாலும், புத்தகம் படிக்கணும், அதில் என்னதான் சொல்ல வர்றார்னு புரிஞ்சிக்கணும்னு இருந்தது. சரி இந்த மார்கழியில் ஒரு rapid-fire பகவத்கீதை படித்தல் / கேட்டல் செய்திடுவோம்னு முடிவு எடுத்தாச்சு.

வீட்டில் இருந்த புத்தகங்கள்:
* கீதா பிரஸ் - தமிழில் உரை (1000 பக்கங்கள்).
* பாரதியாரின் உரை - (Project Madurai)
* The Gita for Children : Roopa Pai
* My Gita - Devdatt Patnaik
* Gita for Students - ராஜாஜி

கேட்பதற்காக தேர்ந்தெடுத்த ஒலித்துண்டுகள்:
* வேளுக்குடியின் கீதாசாரம் - 3மணி நேரங்கள்
* வேளுக்குடியின் பக்தி யோகம் - 2மணி நேரங்கள்
* சுகி சிவமின் கீதாசாரம் - 4மணி நேரங்கள்

இதையெல்லாம் இந்த ஒரே மாதத்தில் முடிச்சிடலாம்னு முடிவு செய்திருக்கேன்.

நண்பர்: அட! ஆமா கீதா பிரஸ் ஒரு as-is உரைன்னு சொல்றாங்க. ஆனா மத்தவங்க அவங்க அவங்களுக்கு புரிஞ்ச மாதிரிதானே சொல்லியிருப்பாங்க. எல்லாத்தையும் படிச்சி / கேட்டு, நீ குழம்பிடமாட்டே?

நான்: கண்ணா. அர்ச்சுனன் குழப்பத்தையே தீர்த்த கீதை இது. இதைப் படிச்சி குழம்பிட்டான்னு கேக்குறியே?

நண்பர்: அதில்லை. School of thoughtன்னு சொல்றாங்களே? அதில்தானே குழப்பமெல்லாம் வரும்?

நான்: இது கேள்வி. இதுவரை பகவத்கீதைன்னா என்னன்னே தெரியாமல் இருக்கிற எனக்கு, மேற்சொன்ன எல்லாம் ஒரு முன்னுரை மாதிரிதான். இப்போ content என்னன்னு தெரிஞ்சபிறகே, நம்ம school of thoughtக்கு வரணும். அதைப் பற்றி சொல்லவேயில்லையே?


நம்மது எப்பவுமே இரட்டை இலைதான். (பார்க்க படம்). அதற்கான ஒலித்துண்டு + புத்தகங்கள் இவை.

* சுவியேந்திரர் - உடுப்பி மடத் தலைவர்களில் ஒருவர் - 12 மணி நேர சொற்பொழிவு (கன்னடத்தில்)
* வித்யாபூஷணர் - 10 மணி நேர சொற்பொழிவு (கன்னடத்தில்)
* த்வைத வழியின் ஆராய்ச்சியாளர்கள் - K.T.Pandurangi & T.S.Raghavendran ஆகியோர் எழுதிய புத்தகங்கள்.

இதைத் தவிர, இந்த வாரயிறுதியில், த்வைத புத்தகக் கடைக்குப் போய், ஓரிரு புத்தகங்கள்/CDகளை அள்ளப் போறேன். இவை, நம்ம School of thoughtல் ஏதாவது வித்தியாசம் இருக்கா, கீதையை எப்படி புரிஞ்சிக்கணும்னு எனக்கு சொல்லித் தரும்.

நண்பர்: சூப்பர். ஆமா, இது எல்லாத்தையும் ஒரே மாதத்தில் செய்ய முடியுமா?

நான்: ஹிஹி. ஆபீசில் சும்மாதானே இருக்கோம்?

நண்பர்: இருக்கேன்னு சொல்லு. ஆமா, இவ்வளவு செய்த பிறகு, அடுத்த மாசம் இதிலிருந்து என்ன முடிவு வரும்னு எதிர்பார்க்கிறே?

நான்: பகவத்கீதை படிக்கிறது என் கடமை. படித்தா என்ன பலன்கள் வரும்னு நான் எதிர்பார்ப்பதில்லை. எப்புடி?

நண்பர்: ஆ!

***

Read more...

Friday, December 5, 2014

அப்ரைசல் ராஜா MBBS




ஏதாவது ஒரு திரைப்படக் காட்சியை உல்டா செய்து பதிவு தேற்றி பல நாட்கள் ஆகிவிட்டன. வசூல்ராஜா படத்தில், முதல்முதலாக போமன் (பிரகாஷ்ராஜ்) வகுப்புக்கு வந்து மாணவர்களிடம் பேசும் காட்சியை நினைவுபடுத்திக் கொள்ளவும்.

அந்த நிறுவனத்தில் அப்ரைசல் காலம் துவங்கும் நாள். எல்லா மேனேஜர்களையும் கூப்பிட்டு அப்ரைசல் எப்படி எடுக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பதற்காக கூட்டம் கூட்டியிருக்கின்றனர்.

Welcome to ImperialSoft. I am your M.D. Please sit down.

உங்க எல்லாருக்கும் நான் ஒண்ணு சொல்லிக்க விரும்பறேன். நம் துறையின் பல புகழ்பெற்ற மேலாளர்கள், மேனேஜர்கள் ஒரு காலத்தில், நீங்க  உட்கார்ந்திருக்கிற இதே அறையில், இதே நாற்காலிகளில் உட்கார்ந்திருந்தவங்கதான். அனுபவம் மிகுந்த இந்த நிறுவனத்தில் நீங்களும் வேலை பார்த்து, அப்ரைசல் செய்யப் போறீங்கன்றது உங்களுக்கு மிகவும் பெருமையா இருக்கணும்.

உங்களில் யார் மிகவும் நல்ல மேலாளர் ஆகணும்னு விரும்பறீங்க?

பலர் கை தூக்குகின்றனர்.

குட். (ஒருவரைக் காட்டி) Yes, you.

நீங்க ஒரு நல்ல திறமையான மேலாளர் ஆவீங்கன்னு நினைக்கிறீங்களா?

(மற்றவர்களைப் பார்த்து) Can you hear me? good.

ஏன், உங்களிடம் அப்படி என்ன திறமை இருக்கு?

சார், எனக்கு என் குழுவில் இருப்பவர்களை மிகவும் பிடிக்கும். ஒரு ப்ராஜெக்டை முடிப்பதற்காக அவங்க எவ்வளவு கஷ்டப்படறாங்கன்னு என்னால் உணர முடியும். நான் மேனேஜர் இல்லே, ஒரு நல்ல நண்பனா இருந்து, அவங்களுக்கு நல்ல அப்ரைசல் கொடுப்பேன்.

(மற்றவர்களைப் பார்த்து, சத்தமுடன்) We are not here to make friends.

நான் என்னுடைய 25 ஆண்டு மேனேஜர் அனுபவத்தில் யாரிடமும் நட்பு கொண்டதில்லை. எந்த குழு உறுப்பினரின் கஷ்டத்தையும் உணர்ந்ததில்லை. வெறும் அவங்களுக்கு அப்ரைசல் மட்டுமே செய்தேன். and I have done well, mmm.

I do not love my teammates.

Confused? mm? let me explain.

என் கையைப் பாருங்கள். Rock steady. மோசமான rating கொடுத்து, 1000 அப்ரைசல்கள் செய்திருக்கேன், ஆனால் இந்தக் கைகள் என்றைக்கும் நடுங்கியதேயில்லை.

ஆனால், நான் என் பெண்ணின் அப்ரைசல் செய்ய வேண்டிவந்தால், அப்போ கண்டிப்பா நடுங்கும். ஏன்? ஏன்னா, நான் என் பெண்ணின் மேல் பாசம் வைத்திருக்கிறேன்.

குழு உறுப்பினர்களிடம், பாசம், நட்பு, அன்பு வைத்தல், ஒரு மேனேஜரின் பலவீனமாகும்.

நீங்க இந்த நிறுவனத்தில் வேலை செய்யும் காலம் முழுவதும், உங்களுக்கு இதுவே சொல்லித் தரப்படும். ஒரு மேனேஜருக்கு அவர் குழு உறுப்பினர், அப்ரைசலுக்காக வரும் ஒரு சாதாரண மனிதர் மட்டுமே. அதைத் தாண்டி வேறெதுவும் இல்லை.

I like to wish you, the best of luck.

any questions?

yes sir.

yes?

வாயில் நுரை தள்ள, 24x7 நேரமும், குழுவுக்காக தொடர்ந்து வேலை பார்க்கும் ஒருவர் இருந்தால், அவரும் இந்த அப்ரைசல் பார்ம் கண்டிப்பா பூர்த்தி செய்தே ஆகணுமா?

(வகுப்பு முழுவதும் சிரிப்பு பரவுகிறது).

மேலாளர்:
நீங்க அப்ரைசல் செய்ய வேண்டிய நேரம் நாளை காலை 8 மணிக்குத் துவங்கும்.

Thank you very much.

அறையை விட்டு வேகமாக வெளியேறுகிறார்.

***



Read more...

Friday, November 28, 2014

உலகின் மிக அழகான சாலைகள்.




மேலிருக்கும் Maze இன்னொரு முறை பார்த்துடுங்க.

ஒரு பக்கம் எலியும் இன்னொரு பக்கம் வெண்ணெயும் வெச்சிட்டு, எலியை வெண்ணெயிடம் கொண்டு சேருங்கள்னு சொல்வாங்க. இரண்டும் நேரெதிரில் இருந்தாலும், சந்து சந்தாக நுழைந்து, கடைசியில் வெண்ணெயை அடைவதே விளையாட்டு.

இதுவே எங்களுக்கு ஒரு காலத்தில் பொழுதுபோக்காக இருந்தது. அட, Maze விளையாடுவது கிடையாதுங்க. திருவல்லிக்கேணியில் இருந்த காலத்தில், வீடு ஒரு பக்கம். பேருந்து நிலையம் இன்னொரு பக்கம். இந்த இரண்டும், நேரெதிரில் இருந்தாலும், இதே Maze போல, ஊர் முழுக்க சுற்றிக்கொண்டே போவோம். காரணம்? வேறென்ன.. தோழிகள்தான்.

இந்த நேரத்தில் க க க க க க கல்லூரிச் சாலை.... பாடலையும் பார்க்கலாம். மூட் செட்டாவதற்காகத்தான் இந்த ஏற்பாடு.

பேதை, பெதும்பை காலத்திலிருந்து பேரிளம் பெண்ணாக மாறிய வரை, தெரிந்த பலர் அங்கே இருந்ததுதான் காரணம். அதாவது, பள்ளியில், தட்டச்சு / சுருக்கெழுத்து நிலையத்தில், இந்தி வகுப்பில் இப்படி பல இடங்களில் கூடப் படித்தவர்கள் எல்லாரும் அதே சுற்றுவட்டாரத்தில் இருந்ததால், எங்களுக்கு பொபோ வேறெதுவும் தேவையில்லை. வெறும் தெருத்தெருவாக - மேற்கண்டவர்கள் வீடு வழியாக - போய் வருவதே போதுமானதாக இருந்த காலம். (அப்பா/அம்மா அன்பாகச் சொல்வதுபோல் சொல்லணும்னா - வெட்டியா ஊர் சுற்றிட்டு வருது பாரு தண்டச்சோறு!).

வெறும் நாட்களிலேயே இப்படியென்றால், தீபாவளி போல் விழாக் காலங்களில் கேட்கவே வேண்டாம். அப்போதெல்லாம் எங்களுக்கு புதுத்துணி என்பது, இரண்டு ஆடிக்கு ஒரு முறை, 24 அமாவாசைக்கு ஒரு முறைதான். ஆனால், அதெல்லாம் ஒரு பொருட்டாக இருந்ததில்லை. பண்டிகையன்று, சீக்கிரம் வாடா’ன்னு அவசரப்படுத்தும் நண்பர்கள். பிறகென்ன.. நகர்வலம்தான்.

இப்போ, ஏப்ரல், மே’யிலே பசுமையே இல்லே - பாடலையும் சேர்த்துக்கலாம். பார்க்கவில்லை என்றாலும் தப்பில்லை.

Mazeல் முக்கியமான விதி என்னன்னா, எங்கும் சுவற்றில் போய் முட்டிக் கொள்ளக்கூடாது. பாதை இருக்கும் வழியாகவே போக வேண்டும். ஆனால் நிஜத்தில் அப்படி முடியுமா? நமக்குத் தெரிந்த சில மடந்தைகளும், அரிவைகளும் வேண்டுமென்றே அப்படி ஒரு சந்தில் - அதாவது முட்டுச்சந்தில், அதுவும் கடைசி வீட்டில்தான் இருந்தார்கள். அந்த சந்திற்கு மறுபுறம் போக வழியில்லை என்று தெரிந்தாலும், நம்மால் போகாமல் இருக்கமுடியுமா? அங்கே போவதெல்லாம் நாம் என்ன பெருமைக்கா செய்கிறோம்? ஒரு கடமைதானே? வாடா போகலாம்னு இழுத்துக் கொண்டு போவான் நண்பன். அவ்வளவு தூரம் போய், அவர்களும் வெளியே இருந்துவிட்டால் ஒரு வழி, வழிந்துவிட்டு - பம்மல் உவ்வே சம்மந்தம், ஏண்டி சூடாமணின்னு பாடிக்கொண்டே சுவற்றில் போய் முட்டி, திரும்பி சரியான பாதையில் வருவதைப் போல் வந்துவிடுவோம்.

இப்படியாக சிலபல வருடங்களைக் கழித்ததால், உலகின் மிக அழகான, மிகவும் பிடித்தமான சாலைகள்/தெருக்கள் எங்கேயிருக்குன்னு கேட்டால் என்ன பதில் வரும்? திருவல்லிக்கேணியின் எல்லா தெருக்களும் (முட்டுச்சந்துகள் உட்பட) அழகானவைகள்தான். எவ்வளவு முறை வேண்டுமானாலும்  ’நடைப்பயிற்சி’ செய்யத் தகுந்தவை என்று சொல்வேன். ரிடையர் ஆனபிறகு அதே ஊரில் போய் செட்டில் ஆகவேண்டும் - ஆனால் என்ன, எனக்குத் தெரிஞ்சவங்க எல்லாரும் கிழவி ஆயிருப்பாங்க என்று சொன்னால், நீங்க மட்டும்னு ஒரு கேள்வி வரும் வீட்டிலிருந்து. நமக்கு எப்பவுமே வாலிப வயசுதான்னு சமாளிக்க வேண்டியிருக்கும்.

ஆனால்.. ஆனால்..

மேற்சொன்ன அருமை / பெருமைகள் நிறைந்த திருவல்லிக்கேணியிலும் ஒரே ஒரு தெரு/சந்து மட்டும் எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. கடந்த 20 வருடங்களாக பலமுறை அந்தப் பக்கம் சுற்றி வந்தாலும், அந்த தெருவுக்குள் மட்டும் நான் போகவே இல்லை. இனிமேலும் போக மாட்டேன்.

ஏன்? யார்கிட்டேயாவது திட்டு / அடி வாங்கினியா? எனி வம்பு / தும்பு? என்று கன்னாபின்னாவென மனசை அலைபாய விடுவதற்குமுன் சரியான காரணத்தைச் சொல்லி விடுகிறேன்.

<கடைசி பாரா சோகமான முடிவு என்பதால் 31.10.2024 அன்று நீக்கப்பட்டது. ஹேப்பி தீபாவளி>


***


Read more...

Friday, November 21, 2014

Woh Shaam kuch ajeeb thi


பல கிஷோர் குமார் பாடல்களை எனக்கு அறிமுகப்படுத்திய என் தந்தையார்தான் இந்தப் பாடலையும் எனக்கு அறிமுகப்படுத்தினார். அப்போ யூட்யூப் கிடையாதே. ரேடியோ கீத் மாலா & சித்ரஹாரில்தான். உடனே பாட்டு பிடித்தும் போனது.

20 கண்கள் இருக்கும் ராவணனிடம் உனக்குப் பிடித்த கண் எதுன்னு கேட்டா எதைச் சொல்வார்? அதைப் போலவே கிஷோர் பாடல்களும் எனக்கு ஆனது. எல்லாப் பாடல்களையும் திரும்பத் திரும்பக் கேட்டாலும் இன்னொரு முறை கேட்க வேண்டும் என்றானது. பள்ளிப் பாடங்கள் படிக்காமல் கிஷோர் பாடல்களைக் கேட்டுக் கொண்டேயிருந்தால்? அதுவும் இந்தப் பாடலை மட்டும் கேட்டுக் கொண்டேயிருந்தால்? கோபம் வந்துடுச்சு அவருக்கு.

ஒரு கேசட்டில் இரு பக்கமும் இந்த ஒரே பாடலை பதிவு செய்து - ஒரு இரவு முழுக்க என்னை தனியறையில் அடைத்து வைத்தார். காலை வரை இந்தப் பாடலைக் கேட்டு, இந்த கேசட்டை அழிக்கணும். அதுதான் உனக்கு தண்டனை என்றார்.

நானும் இரவு முழுக்க, திரும்பத் திரும்ப அதே பாடலை போட்டுப் போட்டுக் கேட்டேன். கேசட்டும் தேய்ஞ்சி போச்சு.

காலை கதவைத் திறந்த என் அப்பா - இப்போ உனக்கு அந்தப் பாடல் அலுத்திருக்கும். ஜென்மத்திற்கும் அந்த பாடலின் ஒலி உனக்கு கசந்துவிடும் என்றார். நானும் ஸ்டைலாக சிரித்துக் கொண்டே சொன்னேன் - ஆமாம்பா. இவ்வளவு முறை கேட்டபின்புதான் அந்தப் பாடலின் மகத்துவம் எனக்குப் புரிந்தது. இனிமேல் தினமும் ஒருமுறையாவது அதைக் கண்டிப்பாகக் கேட்பேன் என்று அவருக்கு வாக்குக் கொடுத்தேன்.

அதன்படியே, இன்று வரை அவ்வப்போது இந்தப் பாடலைக் கேட்காவிட்டால், எனக்கு தூக்கமே வராது.

அதுக்கப்புறம், 300 கோடியா 3000 கோடியான்னு கேட்டாரான்னு கேட்கக்கூடாது. அவ்வளவு பணம் இருந்தா, நான் ஏன் இங்கே இருந்து, இந்த மாதிரி மொக்கை ப்ளாக்கையெல்லாம் எழுதிக்கிட்டிருக்கேன்.

பாடலைக் கேளுங்க.

பிகு: சம்பவம் கற்பனைன்னு தெரிஞ்சிருக்கும். ஆனால் பாடலைப் பற்றிய கருத்துகள் உண்மை.

இந்தப் பாடலின் பொருள், பின்னணி விவரங்கள் இந்தப் பதிவில் அருமையா சொல்லியிருக்கார் ஒருவர்.

http://mrandmrs55.com/2012/04/02/woh-shaam-kuch-ajeeb-thi-lyrics-and-translation-lets-learn-urdu-hindi/




Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP