Tuesday, February 26, 2008

தமிழ் வலைப்பதிவுகளில் முதல்முறையாக... பல குரல் நிகழ்ச்சி (மிமிக்ரி)

தமிழ் வலைப்பதிவுகளில் முதல்முறையாக - பல குரல் நிகழ்ச்சி (மிமிக்ரி) ஒன்றை சமர்ப்பிக்கிறேன். படித்து, அனுபவித்து மகிழுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

சூப்பர் ஸ்டாரின் குரலில் படிக்கவும்:
கார்ல பொண்ணு இருக்கு. அதை இறக்கி விடு...

உலக நாயகன் குரலில் படிக்கவும்:
கார்ல பொண்ணு இருக்கு. அதை இறக்கி விடு...

பழம்பெரும் நடிகர் நம்பியாரின் குரலில் படிக்கவும்:
கார்ல பொண்ணு இருக்கு. அதை இறக்கி விடு...

மூத்த நடிகர் விசுவின் குரலில் படிக்கவும்:
கார்ல பொண்ணு இருக்கு. அதை இறக்கி விடு...

புரட்சிகலைஞர் விஜயகாந்தின் குரலில் படிக்கவும்:
கார்ல பொண்ணு இருக்கு. அதை இறக்கி விடு...

இதே போல் பற்பல நடிகர்களில் குரல்களில் மேற்கூறிய வாக்கியத்தைப் படித்துக்கொள்ளவும்.

பதிவு அவ்வளவுதான்.

ஏதாவது கமெண்டும்முன் லேபிளை (தமிழில்?) பார்த்துக்கொள்ளவும். நன்றி...

Read more...

Monday, February 25, 2008

தமிழகத்தில் ஒரு புதிய கட்சி தொடங்க என்னவெல்லாம் தேவை?

ஒரு அரசியல் கட்சி தொடங்கவேண்டும் என்று வந்த நண்பருக்காக ஒரு பட்டியல் தயார் செய்துள்ளேன். இந்த பட்டியல் சரியாக இருக்கிறதா என்று பார்த்து உங்கள் மேலான கருத்துக்களைக் கூறவும்.

கட்சிப் பெயர்:
கீழ்க்கண்ட சொற்களை முன்னும் பின்னும் இடம்மாற்றிக்கொள்ளவும்.
திராவிட, கழகம், முன்னேற்ற, அகில இந்திய, கட்சி, மக்கள்,

கட்சிக் கொடி:
கறுப்பு, மஞ்சள், சிகப்பு - இந்த வர்ணங்களில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.

வாரிசு:
இது உன் வாரிசு/வாரிசுகளைப் பற்றி அல்ல. நீ யாருடைய வாரிசு என்று இப்போதே தீர்மானம் செய்து கொள்ளவும். ஏற்கனவே வேறு யாராவது - அந்த தலைவரின் வாரிசு என்று கூறிக்கொண்டிருந்தால் நலம். (அப்போதுதான் நீ விரும்பாமலேயே உனக்கு விளம்பரம் கிடைக்கும்).

கட்சி ஆரம்பிக்கும் நாள்:
மேற்கூறிய உன் வாரிசு-தந்தையின் பிறந்த/இறந்த நாளில் கட்சி தொடங்கலாம்.

மக்கள் தொடர்பு:
1 தொலைக்காட்சி
1 தொலைக்காட்சி - செய்திகளுக்காக மட்டும்.
1 செய்தித்தாள் (காலை)
1 செய்தித்தாள் (மாலை)
1 செய்தித்தாள் - கட்சித் தொண்டர்களுக்காக

மனித வளம்:
1 அமைச்சர் - எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் இருந்திருந்தால் நலம்.
1 கவிஞர்
1 கவிதாயினி
1 வாரிசு - (வாரிசுகள் 3 இருந்தால் நலம். 1-டெல்லிக்கு; 1-தமிழ் நாட்டுக்கு; 1-கட்சிக்கு)
1 பேச்சாளர் - (ஆபாசமாக பேசத் தெரிந்தால் நலம்)
மற்றும் சில நடிக, நடிகையர்.

கொள்கை:
நம் கட்சித்தலைவர், முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வேண்டும். இதுதான் ஒரே கொள்கை.

கூட்டணி:
இப்போதைக்கு இல்லை என்று கூறவும். பின்னர் ஒவ்வொரு தேர்தலுக்கும் வெவ்வேறு கூட்டணியில் இருக்கலாம். (அப்படி இருந்தாலும், யாரும் ஒன்றும் சொல்லபோவதில்லை என்று தெரிந்துகொள்).

எதிர்காலத் திட்டங்கள் (மாநிலத்துக்கு/ நாட்டுக்கு):
1. ஏதாவது ஒரு இடத்தின் பெயரை தமிழ்ப்படுத்த வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்டு செய்தால் நலம். (இது தமிழுக்கு நீ என்ன செய்தாய் - என்று யாரும் கேட்டு விடாமல் இருக்க).

2. யாராவது ஒரு பழைய தலைவருக்கு ஒரு மணி மண்டபம் மற்றும் ஒவ்வொரு ஊரிலும் சிலை. (ஏதாவது ஒரு சிலையாவது சேதமாகாதா என்ன?.. அதை வைத்து கூட்டம் சேர்த்து பெரிய நிலைக்கு வந்து விடலாம்).

3. ஏதேனும் ஒரு மாவட்டத்தை இரண்டாக பிரிக்கச் சொல்லலாம். அல்லது சென்ற ஆட்சியில் சேர்ந்த இரு மாவட்டங்களை பிரிக்கச் சொல்லலாம். (இது அந்தந்த மாவட்ட மக்களை கவர்வதற்காக).

4. இலவசங்கள்: தற்போதைய கட்சிகள் தரும் இலவசங்களைக் குறித்து கொள்ளவும். அவற்றில் இல்லாத ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு அதை இலவசமாக தருவதாக அறிவிக்கவும்.

5. விடுதலைப்புலிகள் பிரச்சினை, சேது சமுத்திர விவகாரம் - இவைகளைப் பற்றி யாராவது கேட்டால் - 'செயற்குழு' கூடி முடிவெடுக்கும் என்று கூறவேண்டும். வருங்காலத்தில் நாம் அமைக்கப்போகும் கூட்டணியைப் பொறுத்துத்தான் நம் கருத்தும்/திட்டமும் அமையும் என்று உனக்குத் தெரியவேண்டும்.

எதிர்காலத் திட்டங்கள் (கட்சிக்கு) :
மேலே பார்க்கவும். அங்கே சொன்ன எல்லாம் நாட்டுக்கு என்றா நினைத்தாய்? அனைத்தும் கட்சி வளர்ச்சிக்காகத்தான்.

பணம்:
இது பற்றி என்னால் எழுத்தில் தர முடியாது. நேரில் பேசிக் கொள்ளலாம்.

பிகு:
நல்ல யோசனைகள் சொல்பவர்களுக்கு ஏதாவது ஒரு கட்சிப் பதவி தரப்படும் என்பதை கட்சியின் பொருளாளர் என்ற முறையில் தெரிவித்துக்கொள்கிறேன்.

Read more...

Sunday, February 24, 2008

சென்னையில் வடிவேலு

மதுரையிலிருந்து சென்னை எழும்பூர் வந்து இறங்குகிறார் வடிவேலு. வெளியே வந்தவுடன் ஒரு ஆட்டோவை நோக்கி போகிறார்.

ஏம்பா, ஆட்டோ மைலாப்பூர் வருமா?
அதை ஆட்டோக்கிட்டேயே கேளுங்க..

(ஆகா.. காலையிலேயேவா..) அட.. ஆட்டோன்னா ஆட்டோ இல்லேப்பா.. உங்கிட்டேதான் கேக்குறேன்.
வாங்க.. போலாம்.. பஸ்லேயா / நடந்தேவா?

அட என்னப்பா இது... நீ ஆட்டோவிலே மைலாப்பூர் போவியா?
நான் ஆட்டோவிலே மைலாப்பூர் போவேன் இல்லெ எங்கே வேணா போவேன், உனக்கென்ன?


ஐயய்யோ, என்கூட ஆட்டோவிலே மைலாப்பூர் வருவியா?
ஏன், உனக்கு தனியா போக பயமா இருக்கா?

இது ஆவுறதில்லே. நான் வேறே ஆட்டோ பாத்துக்குறேன்.
சார்.. சார்... மன்னிச்சிடுங்க.. வாங்க மைலாப்பூர் போகலாம்.
அப்படி வா வழிக்கு.. வா போலாம்.

(எழும்பூரிலிருந்து புறப்பட்டு தி.நகர், சைதாப்பேட்டை, கிண்டி, வேளச்சேரி தாண்டி போய்க்கொண்டிருக்கின்றனர்).

ஏன்பா சென்னையிலே எங்கே பாத்தாலும் மக்கள் கும்பல் கும்பலா இருக்காங்க?
தனியா வெளியே போனா தொலெஞ்சி போயிடுவாங்கல்லே...

அட அப்படியா, நாந்தான் அப்போ ரொம்ப தைரியசாலியா? தனியா போயிட்டுருக்கேனே?
நீ எங்கே தனியா போறே. நானுந்தான் கூட வரேனே?
(அடடா.. இவன் ரொம்ப நக்கலா பேசறானே?... வீடு போய் சேர்ற வரைக்கும் இவன்கிட்டே வாய் கொடுத்து மாட்டிக்ககூடாது..).

(ஒரு வழியாக ஊர் சுற்றிவிட்டு மைலாப்பூர் வந்தடைகின்றனர்).

ஏம்பா, இவ்ளோ தூரமா இருக்கு மைலாப்பூர்?ஆமா, சென்னை எவ்ளோ பெரிசு தெரியுமா? நான் உன்னே குறுக்கு வழியிலே கூட்டி வந்துருக்கேன்னா பாத்துக்கோ...
அப்படியா.. அப்படியா.. ரொம்ப நன்றிப்பா..

அதெல்லாம் சரி, மைலாப்பூர் வந்துடுச்சு.. மைலாப்பூர்லே எங்கே போகணும்னு சொல்லு.

இந்தா சீட்டு. இந்த தெருவுக்குதான் போகணும்.

(5 நிமிடங்களுக்குப் பிறகு)

இங்கே பாருங்க... இந்த தெருவுதான்... என்னய்யா. இது ரொம்ப பணக்காரவுங்க இருக்கற தெருவாச்சே... என்ன நம்பரு வேணும் உனக்கு..

எஸ்.பி (S.P) வீடு எங்கேயிருக்குன்னு தெரியுமா?

என்னது, (பயத்துடன்) எஸ்.பி ஐயா வீடுங்களா.. அங்கேயா போறீங்க? உங்களுக்கு அவரை தெரியுமா?

தெரியுமாவா? சரியா போச்சு... நானும் எஸ்.பியும் சின்ன வயசில அரை ட்ராயர் போட்ட காலத்திலிருந்து நண்பர்கள், தெரியுமா?

அப்படியா?

ஆமா. அவன் இப்போ பெரிய ஆளாயிட்டாலும், என்னை இன்னும் மறக்காம நினைவு வச்சிருக்கான், தெரியுமா?

அய்யய்யோ, அப்படியா?.. சார்.. சார்... நான் தெரியாம உங்களை ரொம்ப கலாச்சிட்டேன்... ஊர் ரொம்ப சுத்தி கூட்டிவந்துட்டேன்.. இதெல்லாம் போய் நீங்க ஐயாகிட்டே சொல்லிடாதீங்க... என் பொழப்பே நாறிப்போயிடும்.

சேசே... நீ என்ன ரொம்ப வருத்தப்படறே.. நான் இதெல்லாம் சொல்லமாட்டேன். ஓகேவா? நீ மட்டும் அவர் வீட்டுக்கிட்டே போய் என்னெ ஒழுங்கா விட்டுடு.

எஸ்.பி வீட்டுக்கிட்டே நான் வரலை. தெரு முனையிலேயே உங்கள இறக்கி விட்டுடுறேன். நீங்க நடந்து போய்க்கோங்க...
சரி சரி.. நான் இங்கேயே இறங்கிக்கறேன். ஆட்டோக்கு எவ்ளோப்பா ஆச்சு...?

உங்களுக்கு புண்ணியமாப் போகும். நீங்க ஒண்ணுமே கொடுக்க வேண்டாம். ஆளெ விட்டாப் போதும் சாமி.. நான் போயிட்டு வரேன்.

(ஆட்டோக்காரர் வேகமாக போய்விடுகிறார்).

அட என்னடா இது இவன் இப்படி ஓடறானே? என் நண்பன் சரவண பெருமாள் (எஸ்.பி) இந்த தெருவுலே ஒரு பங்களாலே watchmanஆ வேலை பாக்குறான். எனக்கும் பக்கத்து பங்களாவுலே watchman வேலை வாங்கி தரேன்னு வாடான்னான். அதெ சொல்றதுக்குள்ளே பயபுள்ள ஏதோன்னு நெனெச்சி இப்படி பயந்து ஓடிட்டானே?

சரி எப்படியோ, ஆட்டோலே செலவில்லாமே மைலாப்பூர் வந்து சேந்தாச்சு... இப்படியே பேசிப் பேசியே இங்கே காலத்தை ஓட்டிடவேண்டியதுதான்.. மதுரைக்காரன்னா சும்மாவா!!!

(வெற்றி நடை போட்டு போகிறார்).

Read more...

Friday, February 22, 2008

தமிழக அரசியல் கட்சிகளின் One liners

இப்போ எல்லா தமிழ் திரைப்படங்களில், அதன் பெயருடன் - ஆங்கிலத்தில் ஒரு வரி (One liner) போடுவது வழக்கமாகி போய்விட்டது. உதாரணம்: சிவாஜி - The Boss.

அதே போல் இங்கே இருக்கும் அரசியல் கட்சிகளும் தங்கள் பெயர்களுக்குப் பின்னால் - ஆங்கிலத்தில் ஒரு வரி போட்டுக் கொண்டால் எப்படி இருக்கும் என்று ஒரு கற்பனை.

எல்லா ஒன் லைனர்களும் புரியற மாதிரி இருக்குன்னுதான் நினைக்கிறேன். நல்லா இருந்தா சொல்லுங்க... நல்லா இல்லேன்னா - நீங்க ஒரு ஒன் லைனர் சொல்லுங்க...

திமுக
We are Family


அதிமுக
Everybody else is a Fool


பாமக
Always Ruling


மதிமுக
Next year, we will be the King


காங்கிரஸ்
Unity in Diversity


பாஜக
In Hindu God we trust


கம்யூனிஸ்ட்
Left - But always right


தேமுதிக
We like all numbers - Love to be number One.

Read more...

Thursday, February 21, 2008

தீவிரவாதத்தை அழிப்பது எப்படி?

மேலே நாலாவது வரியில் நீங்கள் பார்ப்பது (அல்லது பார்க்கமுடியாதது!!) முற்றிலும் அழிந்துவிட்ட தீவிரவாதம்...

என்ன பண்றது?.. ஆணி ரொம்ப ஜாஸ்தி...:-(

ஏதாவது சொல்லணும்னு நினைக்கறவங்க 'லேபிளை' கொஞ்சம் பாத்துக்கங்க...:-)

Read more...

Wednesday, February 20, 2008

கிபி2030 - தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்விலிருந்து சில கேள்விகள்

நடந்து முடிந்த தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் - ஒரு சர்ச்சைக்குரிய கேள்வி கேட்கப்பட்டது.


அதே போல், கிபி 2030ல் இந்த தேர்வில் கேட்கப்படப் போகும் சில சர்ச்சைக்குரிய கேள்விகள் தற்போது வெளிவந்துள்ளது. அவற்றுக்கு இப்போதே பதில்களை குறித்து வைத்துக்கொண்டு தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

1. திமுக தலைவர் கருணாநிதியின் குடும்பத்தினர் எவ்வளவு பேர் நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்?
அ. 10
ஆ. 12
இ. 14
ஈ. 16


2. கடந்த அதிமுக ஆட்சியில், போக்குவரத்துக்குத் தடையாக உள்ளதென்று முதலமைச்சராக இருந்த செல்வி ஜெயலலிதா எதை அப்புறப்படுத்தினார்?
அ. சென்னை சென்ட்ரல்
ஆ. அண்ணா மேம்பாலம்
இ. கலங்கரை விளக்கம்
ஈ. கலைஞர் சிலை


3. கடந்த 35 வருடங்களில் பாமக எவ்வளவு ஆண்டுகள் ஆளுங்கட்சிக் கூட்டணியில் இல்லை?அ. 0 மாதங்கள்
ஆ. 3 மாதங்கள்
இ. 6 மாதங்கள்
ஈ. 1 வருடம்


4. கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் யாருடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது?
அ. தயாநிதி அழகிரி திராவிட முன்னேற்ற கழகம்
ஆ. உதயநிதி திராவிட மக்கள் முன்னேற்ற கழகம்
இ. அகில இந்திய யாத்ரா திராவிட முன்னேற்ற கழகம்
ஈ. குறளரசன் மறுமலர்ச்சி முன்னேற்ற கழகம்


5. கடந்த வருடம் ஒரே ஒரு நாள் அமைதியாக நடந்த தமிழக சட்டசபையில் என்ன விவாதிக்கப்பட்டது?
அ. ரஜினியின் புதிய படம்
ஆ. புத்தம் புதிய திரைப்படம் 'கருணாநிதி' யின் வசனங்கள்
இ. நதி நீர் இணைப்பு
ஈ. எதுவும் விவாதிக்கவில்லை


6. தமிழகத்தில் திரைப்பட நடிக/நடிகையரால் துவக்கப்பட்டு இருக்கும் கட்சிகள் எவ்வளவு?
அ. 25
ஆ. 30
இ. 35
ஈ. 40

7. தாங்கள்தான் உண்மையான எம்.ஜி.ஆரின் வாரிசு என்று எவ்வளவு அரசியல்வாதிகள் கூறுகின்றனர்?
அ. 10
ஆ.15
இ. 20
ஈ. 25

Read more...

Monday, February 18, 2008

தமிழை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல ஒரு சிறு முயற்சி...


இதே போல, ஆங்கிலம், இந்தி, தெலுங்கு மற்றும் பல மொழிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல என்னிடம் திட்டங்கள் உள்ளது. சந்தேகம் உள்ளவர்கள் உடனே என்னை தொடர்பு கொள்ளவும்.

Read more...

Sunday, February 17, 2008

இது பின்னூட்டக் கயமை அல்ல - அரைபக்க கதை

சுரேஷ் காலையில் சீக்கிரமே எழுந்துவிட்டான். முதலில் தன் பின்னூட்டப் பெட்டியைப் பார்க்க வேண்டும். உடனே, நீங்கள் ஏதோ சுரேஷின் பதிவுகளை ஏகப்பட்ட பேர் பார்த்து வருவதாகவும், பின்னூட்டங்களால் பெட்டியை நிரப்புவதாகவும் கற்பனை செய்ய வேண்டாம். தவறுதலாக அவர் பதிவுகளில் வந்து விடுபவர்கள்தான் அதிகம். நிற்க.


ஆஆ. 10 பின்னூட்டங்கள். நேற்று போட்ட சொத்தைப் பதிவுக்கு 10 பின்னூட்டங்கள். சுரேஷ் தன்னைத்தானே கிள்ளிப் பார்த்துக் கொண்டான். நிஜம்தான். யாரோ என் பதிவுக்கும் வந்திருக்கிறார்கள். 'சிறந்த பதிவர்' விருதைப் பெற்றதைப் போல சந்தோஷம் அடைந்தான்.

பின்னூட்டப் பெட்டியை திறந்து பார்த்தால், அந்த பத்து பின்னூட்டங்களும் 'See here' மற்றும் 'See there' (அனானி) என்று இருந்தது. அடப்பாவிகளா, இவ்வளவுதானா... யாரும் என் பதிவைப் பார்க்ககூட இல்லையா - இதை வெளியிட்டு என்ன பிரயோசனம் என்று அந்த பத்து பின்னூட்டங்களையும் 'Reject' செய்தான்.


எப்படியும் 10 பின்னூட்டங்கள் வந்தது... அதற்கு பதிலாக இருந்துவிட்டுப் போகட்டும் என்று தன் பதிவுகளில் வெவ்வேறு பெயர்களில் 10 பின்னூட்டங்கள் போட்டுக்கொண்டான். இது பின்னூட்டக் கயமை அல்ல என்று திருப்தி அடைந்தான்.

டிஸ்கி:

அ. இது கற்பனைதான். நான் அவனில்லை.
அஅ. ஆனால், இது யாருக்காவது நடந்திருக்கலாம் அல்லது நடக்கலாம்.
அஅஅ. இனிமேல் யாராவது இதைப் போல் செய்தால், நான் பொறுப்பல்ல.
அஅஅஅ. இதெல்லாம் ஒரு கதையா என்று திட்ட வருபவர்களுக்கு - நாமெல்லாம் Friends - ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.

Read more...

Saturday, February 16, 2008

டாஸ்மாக் விற்பனையை மேலும் கூட்ட வழிகள்

மாதா மாதம், வருடா வருடம் டாஸ்மாக் விற்பனை கூடி வருகிறது. இந்த விற்பனையை மேலும் கூட்ட அரசு என்னவெல்லாம் செய்யலாம் என்ற சிறு கற்பனை. (ஆனால், இவை எதுவும் இல்லாமலேயே நம் 'குடி'மக்கள் அவர்களுக்கு நல்ல விற்பனையைக் குடுத்து வருகின்றனர் என்பது வேறு விஷயம். )

உறுப்பினர் அட்டை:

அடிக்கடி வரும் வாடிக்கையாளர்கள், தங்கள் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண்ணைக் கொடுத்து ஒரு உறுப்பினர் அட்டை பெற்றுக்கொள்ளலாம். உறுப்பினர் சந்தா என்பதெல்லாம் கிடையாது. மாறாக, பற்பல வசதிகளும், சலுகைகளும் இந்த அட்டை வைத்திருப்பவர்களுக்கு கிடைக்கும்.

அறிமுகச் சலுகை:

வாடிக்கையாளர்கள் தங்கள் கடைக்கு புதிய உறுப்பினர்களை அறிமுகப்படுத்தும்போது, அவருக்கும் அந்த புதிய உறுப்பினருக்கும் தலா ஒரு சுற்று அவர்களுக்குப் பிடித்தமான மது இலவசமாக அளிக்கப்படும்.

ECS முறை:

உறுப்பினர் அட்டை காட்டி குடிப்பவர் அவரது வங்கிக் கணக்கு எண்ணைக் கொடுத்தால், மாதா மாதம் அவரது கணக்கிலிருந்து அவர் குடித்ததற்குண்டான பணம் எடுத்துக் கொள்ளப்படும். இதனால், கடைக்காரருக்கு, குடித்துவிட்டு மயங்கிக் கிடப்பவரிடம் பணத்திற்காக சண்டை போட வேண்டிய அவசியம் இருக்காது.

குடித்தவர்கள் மட்டும்:

இரவு வெகு நேரம் வரையில் குடிப்பவர்கள் வீட்டிற்குப் போவதற்கு மிகவும் கஷ்டப்படுகின்றனர். அதற்காக அரசு ஒரு சிறப்பு பேருந்து வசதியை செய்யப் போகிறது. அதாவது மதுக்கடைகள் மூடும் நேரமான இரவு 12 மணிக்கு பல்வேறு இடங்களுக்கு 'குடித்தவர்கள் மட்டும்' பேருந்தை இயக்கும். சென்னையில் 'மகளிர் மட்டும்' பேருந்துகளைப் போல இது குடித்தவர்கள் மட்டுமே ஏறக்கூடியதாக இருக்கும்.

சரக்கு உங்கள் சாய்ஸ்:

இரவு முழுக்க மது குடித்தவர்கள் காலையில் மப்பில் எழுந்துக் கொள்ள கஷ்டப்படுவார்கள். அப்படி எழுந்தாலும், மறுபடி மதுக்கடைக்கு வர அவர்கள் மிகவும் சிரமப்படுவார்கள். இப்படிப்பட்டவர்களுக்கென்றே, இந்த அரசு ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதாவது, காலையில் 7 மணி முதல் 10 மணி வரை, நீங்கள் உங்கள் அருகாமையில் உள்ள மதுக்கடைக்கு போன் செய்து, உங்கள் உறுப்பினர் எண்ணைக் கொடுத்தால் போதும். அடுத்த 15 நிமிடத்தில் உங்கள் சரக்கு உங்கள் வீடு தேடி வரும்.

அப்படி 15 நிமிடத்தில் சரக்கு உங்கள் கையில் இல்லாவிடில், அந்த சரக்கு உங்களுக்கு இலவசமாகவே வழங்கப்படும்.


சரக்கு தினம்:

இப்போதெல்லாம் காதலர் தினம் போன்று பல தினங்களைக் கொண்டாடுகின்றனர். மது குடிப்பவர்களும் அதே முறையில் வருடத்தில் ஒரு நாள் ஒதுக்கி அன்று முழுக்க குடித்து மகிழ இந்த அரசு ஏற்பாடு செய்யும். இதற்கென ஒரு நல்ல நாள் விரைவில் அறிவிக்கப்படும்.


மேலும், இது போன்ற குடிமக்களை மகிழ்விக்கும் நல்ல திட்டங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்படும் திட்டங்களுக்கு பரிசுகள் உண்டு.


Read more...

கொலுசு எதுக்காக போடறோம்?


அமெரிக்காவுக்கு வந்த புதிதில் பாப்பாவைக் கூட்டிக்கொண்டு பேருந்து பயணம் செய்வோம். பேருந்தில் பாப்பாவைப் பார்ப்பவர்கள், காலில் உள்ள கொலுசைப் பற்றி கேட்காமல் விடமாட்டார்கள்.

ஒரு நாள் இப்படித்தான் ஒருவர் கேட்டார்:

இது என்ன? மிகவும் அழகாக இருக்கிறதே?
இதன் பெயர் கொலுசு (anklet).
நீங்கள் இந்தியர்தானே? எல்லோரும் இதை அணிவார்களா?
ஆம். இதை எல்லா பெண்களும் அணிவார்கள்.
நீங்களும் இதை அணிந்திருக்கிறீர்களா? மிகவும் அருமையாக இருக்கிறது.
ஆமாம்.
இது இங்கே கிடைக்குமா?
தெரியவில்லை. நாங்கள் இந்தியாவிலிருந்து வாங்கி வந்தோம்.
இதை எதற்கு இந்த பாப்பாவிற்கு போட்டிருக்கிறீர்கள்?
இது எங்கள் வழக்கம். எல்லா பெண்களும் அணிவார்கள்.
பாப்பா எந்த அறையில் / இடத்தில் இருக்கிறது என்று இந்த கொலுசின் சத்தத்தை வைத்தே கண்டு பிடிக்கலாம்தானே? அதற்குத்தான் போட்டிருக்கிறீர்களா?
ம். ஆமாம். அதற்கும்தான்.

தமிழ் நாட்டில், பெண் குழந்தைக்கு கொலுசு போடுவது வழக்கமென்பதால், நாமும் எந்த காரணமும் தெரியாமல் போட்டுவந்தோமே?... ஏதாவது நிஜமான காரணம் இருக்கிறதா என்று யோசித்தாலும் தெரியவில்லை.

ஆனால் என்ன, எங்களுக்கு இப்போது ஒரு புதிய காரணம் கிடைத்து விட்டது. இனிமேல் யார் கொலுசைப் பற்றி கேட்டாலும், பாப்பா எந்த அறையில்/ இடத்தில் இருக்கிறது என்பதை, அந்த சத்தத்தை வைத்து கண்டுபிடிப்பதற்காகப் போட்டிருக்கிறோம் என்று சொல்லிவிடலாம்.

இது எப்படி இருக்கு?

Read more...

Wednesday, February 13, 2008

கேப்டன் டிவி - தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள்



செய்தி: கேப்டன் டிவி தமிழ்ப் புத்தாண்டில் (ஏப்.14??) துவங்குகிறது. ஏற்கனவே இருக்கும் டிவிகளுக்கும் இதற்கும் ஆறு வித்தியாசங்கள் கூட இருக்காது என்ற நம்பிக்கையுடன் ஒரு சிறு கற்பனை:


கேப்டன் டிவியின் தமிழ்ப் புத்தாண்டு தின சிறப்பு நிகழ்ச்சிகள் - பார்த்து மகிழுங்கள்:

காலை 7 மணிக்கு - வணக்கம் விருத்தாசலம்:

விருத்தாசலம் எம்.எல்.ஏ திரு. விஜயகாந்த் அவர்களுடன் கலந்துரையாடல். தொகுதியில் திரு.விஜயகாந்த் அவர்கள் செய்த சாதனைகளை விளக்குகிறார்.

காலை 8.30 மணிக்கு - சிறப்பு பட்டிமன்றம்:

தேர்தலுக்கு - கூட்டணியா அல்லது தனித்துப் போட்டியா? நடுவராக திரு. சதீஷ் பங்கேற்று சிறப்பிக்கிறார்.

காலை 10.00 மணிக்கு - புள்ளிராஜாவுடன் பேசுங்க:

புள்ளிவிவர மன்னர் திரு. புள்ளிராஜா பங்கேற்கும் ஒரு நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி. தொலைபேசியில் அழைக்கும் மக்களின் சந்தேகங்களுக்கு, புள்ளி விவரத்துடன் பதிலளிக்கும் ஒரு அசத்தலான நிகழ்ச்சி.

நண்பகல் 12.00 மணிக்கு - சூப்பர் ஹிட் திரைப்படம்:

கேப்டன் டிவி வரலாற்றிலேயே முதல்முறையாக, திரைக்கு வந்து சில வருடங்களேயான - புத்தம் புதிய திரைப்படம் - ரமணா. பார்த்து மகிழுங்கள்.

மாலை 4.00 மணிக்கு - விளையாடலாம் வாங்க.

"தரையில்" பம்பரம் விடுவது எப்படி? விளக்க வருகிறார் விளையாட்டுத்துறை ஆசிரியர் சி.கவுண்டர் அவர்கள்.

மாலை 5.30 மணிக்கு - ஒரு வார்த்தை, ஒரே வார்த்தை:

மக்களுக்கு பிடித்த, பிடிக்காத ஒரு வார்த்தை என்ன? என்று தொலைபேசியில் கேட்கும் நிகழ்ச்சி.

இரவு 7.30 மணிக்கு - சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஹிட் திரைப்படம்:

அடுத்த வாரிசு - பார்த்து மகிழுங்கள்.

கேப்டன் டிவியின் அனைத்து புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகளையும் பார்த்து, புத்தாண்டை மகிழ்ச்சியோடு கொண்டாடுங்கள்.

புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்தையும் வழங்குவது - இளைஞர்களின் எதிர்காலத்தை சிறப்பாக்கும் - தமிழகத்தின் சிறந்த கல்லூரி - ஆண்டாள் அழகர் கல்லூரி.

நேயர்களுக்கு இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

Read more...

Tuesday, February 12, 2008

அமெரிக்காவில் ஒரு மாதமாக கரண்ட் கட்


காட்சி 1:

டங்...
அம்மாஆஆஆ...
என்னங்க...இடிச்சிண்டீங்களா..பார்த்து போகக்கூடாதா?
இருட்டுல எப்படிம்மா பார்த்து போறது.
ரெண்டு வருஷமா நாற்காலி அங்கேதானே இருக்குது. எப்படி தெரியாம போகும்? மெதுவா தடவிக்கிட்டே போங்க... ஒரு மாசமா இருட்டுலே நடக்குறீங்க.. அப்போவும் உங்களுக்கு எதெது எங்கெங்கே இருக்குன்னு தெரிய மாட்டேங்குது. என்னமோ போங்க...

காட்சி 2:

டக்..டக்..
கதவைத் திறந்தவுடன் வழக்கம்போல ஒரே இருட்டு.
முகத்தில் டார்ச் (தமிழில்?) அடிக்கிறது.
உள்ளே மெதுவா வாங்க... புலி தூங்கிகிட்டுருக்கு. உங்க பையை இங்கே வைக்காதீங்க... அந்தப் பக்கம் யானை உக்காந்திருக்கு. சத்தம் போடாமெ போய் உக்காருங்க...

விளக்கம்:

தொடர்ச்சியா பார்த்துக்கிட்டு வர்ற கார்ட்டூன் நிகழ்ச்சிகளில் யாராவது காட்டில் / இருட்டில் - ஏதாவது ஒரு மிருகத்தைக் காப்பாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். அதைப் பார்த்து, அதைப் போலவே செய்யவேண்டுமென்ற எங்கள் பாப்பாவின் ஆவல், எங்கள் வீட்டை இருட்டாக்கி இருக்கிறது.

இது நானும் பாப்பாவும்:

என்னம்மா இது, எப்பொவுமே வீட்டை இருட்டா வச்சிருக்கே?
அப்போதானே, நான் டார்ச் அடிச்சி மிருகங்களைத் தேட முடியும்.
மிருகங்களை காலையில தேட முடியாதா?
மிருகங்கள் ஆபத்திலிருக்கும்போது, என்னாலே கார்த்தாலெ வரைக்கும் காத்திருக்க முடியாது. ஏம்மா, மிருகங்களுக்கு காலை வேளையிலே ஆபத்தே வராதா?
வரும்பா. ஆனால் என்னாலே காப்பாத்த முடியாது.
ஏன் காப்பாத்த முடியாது?
காலையிலே என் டார்ச் வெளிச்சமே தெரியாதே?
நீ நேராகவே பார்த்து காப்பாத்தலாமே?
டோரா / டியகோ (Dora/Diego) அவங்கல்லாம் இருட்டிலேதானே மிருகங்களைக் காப்பாத்துறாங்க. அது மாதிரிதான் நானும் செய்வேன்.

முடிவு:

(கவுண்டமணி பாணியில் படிக்கவும்)ஆனா ஒண்ணுடா... என் ஜென்மத்திலே (குறைந்த பட்சம் இரண்டு-மூன்று மாதங்களாவது) கரண்ட் பில் கட்டினதேயில்லேடா....

Read more...

Monday, February 11, 2008

சாக்லெட் வாங்கலியோ சாக்லெட்







சென்ற வாரம் ஒரு நாள் அலுவலகத்தில் இருக்கும்போது, வீட்டிலிருந்து தங்கமணியின் போன்.

ரங்கமணி... நம்ம பாப்பாவிற்கு அவள் பள்ளியில் ஒரு டப்பா நிறைய சாக்லெட்கள் கொடுத்திருக்காங்க...
அப்படியா... எதுக்கு.. என்ன விஷயம்..
தெரியல..
டீச்சர் ஒண்ணும் சொல்லலியா?
ஒரு கடிதம் கொடுத்திருக்காங்க... நீங்களே வந்து படிச்சு பாருங்க....
ஓகே.. என் பொண்ணாச்சே.. எதிலாவது பரிசு வாங்கியிருப்பா.. நான் வந்து பாக்குறேன்.

உடனே எல்லா நண்பர்களுக்கும் தொலைபேசி சொல்லியாகிவிட்டது. பாப்பாவிற்கு நிறைய சாக்லெட்கள் கொடுத்திருக்காங்க... எல்லோரும் வந்திடுங்கப்பா... வந்து எடுத்துக்கங்க...

சரி.. சாயங்காலமாச்சு... வீட்டுக்குப் போய் பார்த்தால் மொத்தம் 50 சாக்லெட்டுகள். ஒவ்வொன்றும் ஒரு டாலர். நாம் அவற்றை விற்று 50 டாலர்கள் பள்ளிக்குத் தர வேண்டும். இது ஒரு Fund Raiser.

அடப்பாவிகளா... எங்கே போய் விற்பது என்று யோசிக்கும்போது - சரி. நம் நண்பர்கள்தான் வருகிறார்களே - அவர்கள் அனைவரும் ஒன்று/இரண்டு வாங்கினாலே, ஐம்பது சாக்லெட்டுகள் விற்று விடலாம் என்று நினைத்தோம். மறுபடி எல்லோருக்கும் தொலைபேசி - வரும்போது ஒரு/இரண்டு டாலர்களோடு வரவும் என்று சொல்லியாயிற்று.

உடனே வருகிறோம் என்று சொன்னவர்கள்தான் - அடுத்த ஒரு வாரத்திற்கு ஒருவரையும் காணவில்லை. என்னடா வரவில்லையாயென்றால் கீழ்க்கண்ட காரணங்களில் ஏதாவதொன்றை சொல்கின்றனர்.

1. கடைகளுக்குப் போகவேண்டியிருந்தது.
2. தங்கமணிக்கு/பாப்பாக்கு ஜலதோஷம்
3. அவர்கள் வீட்டிற்கு வேறு நண்பர்கள் வந்திருந்தனர்
4. இந்தியாவிற்கு நிறைய தொலைபேச வேண்டியிருந்தது.

சரிதான். இவர்களை நம்பி பிரயோசனமில்லை - நம் அலுவலகத்திலேயே கடை போடவேண்டியதுதான் என்று முடிவு செய்தோம். அலுவகத்திலும் இதே போல் பலரும் கடை போட்டிருப்பார்கள். அவர்களுடன் நம் கடையும் இருக்கட்டும். நாளைக்கே நல்ல நாள் கடை போட என்று பத்து சாக்லெட்கள் எடுத்து வைத்தாகிவிட்டது.

காலையில் சென்றவுடன் நமது தளத்தின் சமையலறையில் சாக்லெடுகளுடன் ஒரு கல்லாப் பெட்டியும் வைத்தாகிவிட்டது. ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை வந்து விற்பனையை பார்த்துச் செல்லலாம் என்று முடிவானது. வேலை பளுவால் மதியம்தான் அந்தப் பக்கம் செல்ல முடிந்தது. பார்த்தால், மூன்று சாக்லெட்டுகள் மட்டுமே விற்பனை ஆகியிருந்தது. சரிதான், ஒரு நாளைக்கு பத்து கூட நம்மால் விற்க முடியாது போல என்று நினைத்துக் கொண்டு வந்துவிட்டேன்.

மாலையில் சென்று கடையை மூடப் போனபோது, ஒன்று கூட மிச்சமில்லை. ஆகா...இன்று பத்து ரூபாய் விற்றாகிவிட்டது என்று கல்லாப் பெட்டியை வீட்டிற்கு எடுத்துப் போனேன். வீட்டில் தங்கமணி கல்லாப் பெட்டியை உடைத்துப் பார்த்தார்.

ரங்கமணி, உங்களைப் போலவே உங்கள் அலுவலகத்தில் யாராவது இருக்கிறார்களா?
என்னது? அப்படின்னா...
பத்து சாக்லெட்கள் வித்தீங்க... ஆனா கல்லாப் பெட்டியில் எட்டு ரூபாய்தான் இருக்கு.

அடப்பாவிகளா, யாரோ ரெண்டு பேர் பணத்தைப் போடாமலே சாக்லெட் எடுத்துட்டாங்க... நாளைக்கும் கடை போட்டால் இப்படியே ஓசியில் எடுத்துப் போயிடுவாங்க என்று பயமாக இருந்தது... இருந்தாலும் வேறு வழியில்லை... வர்ற வரைக்கும் லாபம்... கடைசியில் நம் கையிலிருந்து மிச்சத்தைப் போட்டு பள்ளியில் கொடுத்து விடவேண்டியதுதான் என்று பேசிக்கொண்டோம்.

அதன்படியே, இப்போது விற்பனை நடந்து கொண்டிருக்கிறது.... சாக்லெட்கள் வேண்டுமென்பவர்கள், தொகையை மணியார்டர் செலுத்தவும். சாக்லெட்கள் உடனே மின்னஞ்சல் (e-mail) செய்யப்படும்.

சாக்லெட் வாங்கலியோ சாக்லெட்...

Read more...

Thursday, February 7, 2008

நண்பன் திருடிய தொலைபேசி - அரை பக்கக் கதை

எங்கே போச்சு இந்த போன்? இங்கேதானே வெச்சேன்?
இப்போ 5 நிமிஷத்துக்கு முன்னாடிகூட பேசிட்டிருந்தேனே?

சரிதான். சுரேஷ்தான் எடுத்திருக்கணும்.

நான் பேசும்போது பாத்துக்கிட்டே இருந்தான்.
இப்போ அவனையும் காணோம். போனையும் காணோம்.


என்னோட ஒரே நண்பன் அவன்.
அப்படி எடுத்திருந்தாலும் வந்து கொடுத்துடுவான்.
புது போன்.. நேத்துதான் அப்பா வாங்கிக் கொடுத்தார்.


வரட்டும் அவன். விளையாட இங்கேதானே வந்தாகணும்.
தடிப்பய... கேட்டா கொடுக்கமாட்டேன்னா சொல்லப் போறேன்.


பத்து நிமிஷமாச்சு. இன்னும் அவனை காணோமே?
சரி பக்கத்து வீடுதானே? நாமே போய் பாப்போம்.


இதென்ன...தரையெல்லாம் ஒரே வழுக்குது?
ஆ...என்ன என் வாய்லேருந்து இவ்ளோ ஜொள்ளா?
அதிலேதான் நான் வழுக்கி விழறேனா?
நல்லவேளை.. அம்மா வந்துட்டாங்க...


அச்சச்சோ...என்னடா செல்லம்...வழுக்கிடுச்சா?
ஒரு வயசு இப்பத்தான் முடிஞ்சுது...
அதுக்குள்ளே ஐயாவுக்கு ஓடணும்னு ஆசை வந்துடுச்சா?
மொதல்லே உட்காரு.. கொஞ்ச நாள் கழிச்சி ஓடலாம். சரியா?


சரி சரி. இனிமே வெளியே ஓடமுடியாது. கோலங்கள் ஆரம்பிச்சுடும்... பாக்கவேண்டியதுதான்.நீங்களும் போய் பாருங்க...
கோலங்கள் சூப்பராயிருக்கும்.

Read more...

Monday, February 4, 2008

கிபி 2030 - சூப்பர் ஸ்டார் - தமிழ் நாட்டுக்கு ஏதாவது செய்யணும்; செய்வேன்.

பல வருடங்கள் காத்திருப்புக்குப் பிறகு நமக்கு சூப்பர் ஸ்டாரை பேட்டி எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. விடுவோமா? வாருங்கள், நேராக பேட்டிக்குப் போய்விடுவோம்.

நிருபர்: இப்போல்லாம் மன அமைதிக்கு இமயமலை போகிறீர்களா?

சூ.ஸ்: எங்கே பாஸ்? இமயமலையிலேயே அமைதி இல்லை இப்போது. பயங்கர கும்பலாகி விட்டது. அதனால் வருடா வருடம் நான் யாருக்கும் சொல்லாமல் ஆல்ப்ஸ் மலைக்கு சென்று விடுகிறேன். நான் போய்விட்டால், என் குடும்பத்தினர் அமைதியில்லாமல் அல்லாடுகின்றனர். அதனால், அவர்களையும் என்னோடு கூட்டிப் போகின்றேன். ஆனால் பாஸ், தமிழ் நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும். செய்வேன்.

நிருபர்: உங்கள் அடுத்த படம் எது? கதாநாயகி யார்?

சூ.ஸ்: என்னோடு அடுத்த படம் 'ரிமோட்'. ரிமோட் வெடிகுண்டு தயாரித்து சென்னையை தாக்க சதி செய்யும் ஒரு கும்பலைப் சாதாரண பஸ் கண்டக்டராக இருக்கும் ஒருவன் பிடிப்பதுதான் கதை. புதுமுகம் ஸ்ருதி ஸ்ரேயாதான் கதாநாயகி. அவருக்கு இந்த படம் மூலம் ஒரு நல்ல எதிர்காலம் இருக்கும். இவர் வேறு யாருமல்ல. பழைய நடிகையும், தற்போதைய டிவி சீரியல் மாமியார் புகழ் ஸ்ரேயாவின் பேத்திதான். ஒரு தமிழ்ப் பெண்தான் கதாநாயகியாக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து அவரை புக் பண்ண வைத்தேன். தமிழ் நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் பாஸ். செய்வேன்.

நிருபர்: 'ரிமோட்' தமிழ் பெயரா? வரி விலக்கு கிடைக்குமா?

சூ.ஸ்: இது தமிழக மக்களால் பல காலமாக பேசப்பட்டு வரும் ஒரு வார்த்தையாகும். நான் இது குறித்து நம் தமிழக முதல்வரிடம் ஏற்கனவே பேசிவிட்டேன். இந்தத் தலைப்புக்கு வரி விலக்கு நிச்சயம் உண்டு.


நிருபர்: இந்த படத்தின் பட்ஜெட் என்ன?

சூ.ஸ்: இது ஒரு சாதாரண பட்ஜெட் படம்தான். சுமார் 1000 கோடி. வினியோகஸ்தர்களுக்கு நஷ்டம் வரக்கூடாது என்று நான் விரும்புகிறேன். தயாரிப்பாளர், இயக்குனர் எல்லோரும் தமிழர்கள்தான். தமிழ் நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும். செய்வேன்.

நிருபர்: உங்கள் ரசிகர்களெல்லாம் உங்களை சந்திக்க பல வருடங்களாக முயற்சி செய்தும் உங்களைப் பார்க்க முடிவதில்லை என்று குறை கூறுகிறார்களே, அதைப் பற்றி?

சூ.ஸ்: நான் இன்னும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருப்பதே என் ரசிகக் கண்மணிகள் பார்த்து ரசிக்கவேண்டும் என்பதற்காகதான். அதற்காக, எப்போதும் படப்பிடிப்பிலேயே இருப்பதால், கடந்த 25 வருடங்களாக என்னால் என் ரசிகர்களைக்கூட சந்திக்க முடிவதில்லை. ஆனால், என் ரசிகர்களை நான் கூடிய விரைவில் சந்திப்பேன்.


நிருபர்: நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா?

சூ.ஸ்: இப்போதைக்கு நான் பிஸியாக படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறேன். அதனால் அரசியல் பற்றி யோசிக்கக்கூட நேரமில்லை. ஆனால் அரசியலுக்கு வரவேண்டுமென்றால், வரவேண்டிய நேரத்துக்கு சரியாக வந்துவிடுவேன். ஏனென்றால், தமிழ் நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும். செய்வேன்.

நிருபர்: நதி நீர் இணைப்புக்கு நீங்கள் ஒரு கோடி ரூபாய் கொடுப்பேன் என்று பல வருடங்களுக்கு முன் சொன்னீர்களே, அதைப் பற்றி?

சூ.ஸ்: இப்பொழுதும் சொல்கிறேன். நதி நீர் இணைப்பு திட்டம் நிறைவேறினால், என் சார்பாக நான் இரண்டு கோடி கொடுக்கிறேன். நதிகள் இணைவதை யாராலும் தடுக்க முடியாது. தமிழ் நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும். செய்வேன்.

நிருபர்: அடிக்கடி தமிழ் நாட்டுக்கு ஏதாவது செய்யவேண்டும் செய்வேன், தமிழ் நாட்டுக்கு ஏதாவது செய்யவேண்டும் செய்வேன் என்று சொல்கிறீர்களே, தமிழ் நாட்டுக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?

சூ.ஸ்: தமிழ் நாட்டுக்கு நான் எதுவும் செய்யப்போவதில்லை. அது என் அடுத்த படத்துடைய பஞ்ச் வசனம். எப்படி அதை விதவிதமாக சொல்லலாம் என்று சொல்லிப் பார்த்துக் கொள்கிறேன். அவ்வளவுதான்.

வாழ்க தமிழ்!!! வளர்க தமிழர்கள்!!! வணக்கம்.

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP