Friday, December 5, 2014

அப்ரைசல் ராஜா MBBS




ஏதாவது ஒரு திரைப்படக் காட்சியை உல்டா செய்து பதிவு தேற்றி பல நாட்கள் ஆகிவிட்டன. வசூல்ராஜா படத்தில், முதல்முதலாக போமன் (பிரகாஷ்ராஜ்) வகுப்புக்கு வந்து மாணவர்களிடம் பேசும் காட்சியை நினைவுபடுத்திக் கொள்ளவும்.

அந்த நிறுவனத்தில் அப்ரைசல் காலம் துவங்கும் நாள். எல்லா மேனேஜர்களையும் கூப்பிட்டு அப்ரைசல் எப்படி எடுக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பதற்காக கூட்டம் கூட்டியிருக்கின்றனர்.

Welcome to ImperialSoft. I am your M.D. Please sit down.

உங்க எல்லாருக்கும் நான் ஒண்ணு சொல்லிக்க விரும்பறேன். நம் துறையின் பல புகழ்பெற்ற மேலாளர்கள், மேனேஜர்கள் ஒரு காலத்தில், நீங்க  உட்கார்ந்திருக்கிற இதே அறையில், இதே நாற்காலிகளில் உட்கார்ந்திருந்தவங்கதான். அனுபவம் மிகுந்த இந்த நிறுவனத்தில் நீங்களும் வேலை பார்த்து, அப்ரைசல் செய்யப் போறீங்கன்றது உங்களுக்கு மிகவும் பெருமையா இருக்கணும்.

உங்களில் யார் மிகவும் நல்ல மேலாளர் ஆகணும்னு விரும்பறீங்க?

பலர் கை தூக்குகின்றனர்.

குட். (ஒருவரைக் காட்டி) Yes, you.

நீங்க ஒரு நல்ல திறமையான மேலாளர் ஆவீங்கன்னு நினைக்கிறீங்களா?

(மற்றவர்களைப் பார்த்து) Can you hear me? good.

ஏன், உங்களிடம் அப்படி என்ன திறமை இருக்கு?

சார், எனக்கு என் குழுவில் இருப்பவர்களை மிகவும் பிடிக்கும். ஒரு ப்ராஜெக்டை முடிப்பதற்காக அவங்க எவ்வளவு கஷ்டப்படறாங்கன்னு என்னால் உணர முடியும். நான் மேனேஜர் இல்லே, ஒரு நல்ல நண்பனா இருந்து, அவங்களுக்கு நல்ல அப்ரைசல் கொடுப்பேன்.

(மற்றவர்களைப் பார்த்து, சத்தமுடன்) We are not here to make friends.

நான் என்னுடைய 25 ஆண்டு மேனேஜர் அனுபவத்தில் யாரிடமும் நட்பு கொண்டதில்லை. எந்த குழு உறுப்பினரின் கஷ்டத்தையும் உணர்ந்ததில்லை. வெறும் அவங்களுக்கு அப்ரைசல் மட்டுமே செய்தேன். and I have done well, mmm.

I do not love my teammates.

Confused? mm? let me explain.

என் கையைப் பாருங்கள். Rock steady. மோசமான rating கொடுத்து, 1000 அப்ரைசல்கள் செய்திருக்கேன், ஆனால் இந்தக் கைகள் என்றைக்கும் நடுங்கியதேயில்லை.

ஆனால், நான் என் பெண்ணின் அப்ரைசல் செய்ய வேண்டிவந்தால், அப்போ கண்டிப்பா நடுங்கும். ஏன்? ஏன்னா, நான் என் பெண்ணின் மேல் பாசம் வைத்திருக்கிறேன்.

குழு உறுப்பினர்களிடம், பாசம், நட்பு, அன்பு வைத்தல், ஒரு மேனேஜரின் பலவீனமாகும்.

நீங்க இந்த நிறுவனத்தில் வேலை செய்யும் காலம் முழுவதும், உங்களுக்கு இதுவே சொல்லித் தரப்படும். ஒரு மேனேஜருக்கு அவர் குழு உறுப்பினர், அப்ரைசலுக்காக வரும் ஒரு சாதாரண மனிதர் மட்டுமே. அதைத் தாண்டி வேறெதுவும் இல்லை.

I like to wish you, the best of luck.

any questions?

yes sir.

yes?

வாயில் நுரை தள்ள, 24x7 நேரமும், குழுவுக்காக தொடர்ந்து வேலை பார்க்கும் ஒருவர் இருந்தால், அவரும் இந்த அப்ரைசல் பார்ம் கண்டிப்பா பூர்த்தி செய்தே ஆகணுமா?

(வகுப்பு முழுவதும் சிரிப்பு பரவுகிறது).

மேலாளர்:
நீங்க அப்ரைசல் செய்ய வேண்டிய நேரம் நாளை காலை 8 மணிக்குத் துவங்கும்.

Thank you very much.

அறையை விட்டு வேகமாக வெளியேறுகிறார்.

***



Read more...

Friday, November 28, 2014

உலகின் மிக அழகான சாலைகள்.




மேலிருக்கும் Maze இன்னொரு முறை பார்த்துடுங்க.

ஒரு பக்கம் எலியும் இன்னொரு பக்கம் வெண்ணெயும் வெச்சிட்டு, எலியை வெண்ணெயிடம் கொண்டு சேருங்கள்னு சொல்வாங்க. இரண்டும் நேரெதிரில் இருந்தாலும், சந்து சந்தாக நுழைந்து, கடைசியில் வெண்ணெயை அடைவதே விளையாட்டு.

இதுவே எங்களுக்கு ஒரு காலத்தில் பொழுதுபோக்காக இருந்தது. அட, Maze விளையாடுவது கிடையாதுங்க. திருவல்லிக்கேணியில் இருந்த காலத்தில், வீடு ஒரு பக்கம். பேருந்து நிலையம் இன்னொரு பக்கம். இந்த இரண்டும், நேரெதிரில் இருந்தாலும், இதே Maze போல, ஊர் முழுக்க சுற்றிக்கொண்டே போவோம். காரணம்? வேறென்ன.. தோழிகள்தான்.

இந்த நேரத்தில் க க க க க க கல்லூரிச் சாலை.... பாடலையும் பார்க்கலாம். மூட் செட்டாவதற்காகத்தான் இந்த ஏற்பாடு.

பேதை, பெதும்பை காலத்திலிருந்து பேரிளம் பெண்ணாக மாறிய வரை, தெரிந்த பலர் அங்கே இருந்ததுதான் காரணம். அதாவது, பள்ளியில், தட்டச்சு / சுருக்கெழுத்து நிலையத்தில், இந்தி வகுப்பில் இப்படி பல இடங்களில் கூடப் படித்தவர்கள் எல்லாரும் அதே சுற்றுவட்டாரத்தில் இருந்ததால், எங்களுக்கு பொபோ வேறெதுவும் தேவையில்லை. வெறும் தெருத்தெருவாக - மேற்கண்டவர்கள் வீடு வழியாக - போய் வருவதே போதுமானதாக இருந்த காலம். (அப்பா/அம்மா அன்பாகச் சொல்வதுபோல் சொல்லணும்னா - வெட்டியா ஊர் சுற்றிட்டு வருது பாரு தண்டச்சோறு!).

வெறும் நாட்களிலேயே இப்படியென்றால், தீபாவளி போல் விழாக் காலங்களில் கேட்கவே வேண்டாம். அப்போதெல்லாம் எங்களுக்கு புதுத்துணி என்பது, இரண்டு ஆடிக்கு ஒரு முறை, 24 அமாவாசைக்கு ஒரு முறைதான். ஆனால், அதெல்லாம் ஒரு பொருட்டாக இருந்ததில்லை. பண்டிகையன்று, சீக்கிரம் வாடா’ன்னு அவசரப்படுத்தும் நண்பர்கள். பிறகென்ன.. நகர்வலம்தான்.

இப்போ, ஏப்ரல், மே’யிலே பசுமையே இல்லே - பாடலையும் சேர்த்துக்கலாம். பார்க்கவில்லை என்றாலும் தப்பில்லை.

Mazeல் முக்கியமான விதி என்னன்னா, எங்கும் சுவற்றில் போய் முட்டிக் கொள்ளக்கூடாது. பாதை இருக்கும் வழியாகவே போக வேண்டும். ஆனால் நிஜத்தில் அப்படி முடியுமா? நமக்குத் தெரிந்த சில மடந்தைகளும், அரிவைகளும் வேண்டுமென்றே அப்படி ஒரு சந்தில் - அதாவது முட்டுச்சந்தில், அதுவும் கடைசி வீட்டில்தான் இருந்தார்கள். அந்த சந்திற்கு மறுபுறம் போக வழியில்லை என்று தெரிந்தாலும், நம்மால் போகாமல் இருக்கமுடியுமா? அங்கே போவதெல்லாம் நாம் என்ன பெருமைக்கா செய்கிறோம்? ஒரு கடமைதானே? வாடா போகலாம்னு இழுத்துக் கொண்டு போவான் நண்பன். அவ்வளவு தூரம் போய், அவர்களும் வெளியே இருந்துவிட்டால் ஒரு வழி, வழிந்துவிட்டு - பம்மல் உவ்வே சம்மந்தம், ஏண்டி சூடாமணின்னு பாடிக்கொண்டே சுவற்றில் போய் முட்டி, திரும்பி சரியான பாதையில் வருவதைப் போல் வந்துவிடுவோம்.

இப்படியாக சிலபல வருடங்களைக் கழித்ததால், உலகின் மிக அழகான, மிகவும் பிடித்தமான சாலைகள்/தெருக்கள் எங்கேயிருக்குன்னு கேட்டால் என்ன பதில் வரும்? திருவல்லிக்கேணியின் எல்லா தெருக்களும் (முட்டுச்சந்துகள் உட்பட) அழகானவைகள்தான். எவ்வளவு முறை வேண்டுமானாலும்  ’நடைப்பயிற்சி’ செய்யத் தகுந்தவை என்று சொல்வேன். ரிடையர் ஆனபிறகு அதே ஊரில் போய் செட்டில் ஆகவேண்டும் - ஆனால் என்ன, எனக்குத் தெரிஞ்சவங்க எல்லாரும் கிழவி ஆயிருப்பாங்க என்று சொன்னால், நீங்க மட்டும்னு ஒரு கேள்வி வரும் வீட்டிலிருந்து. நமக்கு எப்பவுமே வாலிப வயசுதான்னு சமாளிக்க வேண்டியிருக்கும்.

ஆனால்.. ஆனால்..

மேற்சொன்ன அருமை / பெருமைகள் நிறைந்த திருவல்லிக்கேணியிலும் ஒரே ஒரு தெரு/சந்து மட்டும் எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. கடந்த 20 வருடங்களாக பலமுறை அந்தப் பக்கம் சுற்றி வந்தாலும், அந்த தெருவுக்குள் மட்டும் நான் போகவே இல்லை. இனிமேலும் போக மாட்டேன்.

ஏன்? யார்கிட்டேயாவது திட்டு / அடி வாங்கினியா? எனி வம்பு / தும்பு? என்று கன்னாபின்னாவென மனசை அலைபாய விடுவதற்குமுன் சரியான காரணத்தைச் சொல்லி விடுகிறேன்.

அந்த குறிப்பிட்ட தெருவில்தான் 20 வருடங்களுக்கு முன் என் தந்தையார் தடுக்கி விழுந்து, அடிபட்டு, யாராலும் கண்டுகொள்ளப்படாமல், Golden Hourஐ தவறவிட்டு இறந்தார்.


***


Read more...

Friday, November 21, 2014

Woh Shaam kuch ajeeb thi


பல கிஷோர் குமார் பாடல்களை எனக்கு அறிமுகப்படுத்திய என் தந்தையார்தான் இந்தப் பாடலையும் எனக்கு அறிமுகப்படுத்தினார். அப்போ யூட்யூப் கிடையாதே. ரேடியோ கீத் மாலா & சித்ரஹாரில்தான். உடனே பாட்டு பிடித்தும் போனது.

20 கண்கள் இருக்கும் ராவணனிடம் உனக்குப் பிடித்த கண் எதுன்னு கேட்டா எதைச் சொல்வார்? அதைப் போலவே கிஷோர் பாடல்களும் எனக்கு ஆனது. எல்லாப் பாடல்களையும் திரும்பத் திரும்பக் கேட்டாலும் இன்னொரு முறை கேட்க வேண்டும் என்றானது. பள்ளிப் பாடங்கள் படிக்காமல் கிஷோர் பாடல்களைக் கேட்டுக் கொண்டேயிருந்தால்? அதுவும் இந்தப் பாடலை மட்டும் கேட்டுக் கொண்டேயிருந்தால்? கோபம் வந்துடுச்சு அவருக்கு.

ஒரு கேசட்டில் இரு பக்கமும் இந்த ஒரே பாடலை பதிவு செய்து - ஒரு இரவு முழுக்க என்னை தனியறையில் அடைத்து வைத்தார். காலை வரை இந்தப் பாடலைக் கேட்டு, இந்த கேசட்டை அழிக்கணும். அதுதான் உனக்கு தண்டனை என்றார்.

நானும் இரவு முழுக்க, திரும்பத் திரும்ப அதே பாடலை போட்டுப் போட்டுக் கேட்டேன். கேசட்டும் தேய்ஞ்சி போச்சு.

காலை கதவைத் திறந்த என் அப்பா - இப்போ உனக்கு அந்தப் பாடல் அலுத்திருக்கும். ஜென்மத்திற்கும் அந்த பாடலின் ஒலி உனக்கு கசந்துவிடும் என்றார். நானும் ஸ்டைலாக சிரித்துக் கொண்டே சொன்னேன் - ஆமாம்பா. இவ்வளவு முறை கேட்டபின்புதான் அந்தப் பாடலின் மகத்துவம் எனக்குப் புரிந்தது. இனிமேல் தினமும் ஒருமுறையாவது அதைக் கண்டிப்பாகக் கேட்பேன் என்று அவருக்கு வாக்குக் கொடுத்தேன்.

அதன்படியே, இன்று வரை அவ்வப்போது இந்தப் பாடலைக் கேட்காவிட்டால், எனக்கு தூக்கமே வராது.

அதுக்கப்புறம், 300 கோடியா 3000 கோடியான்னு கேட்டாரான்னு கேட்கக்கூடாது. அவ்வளவு பணம் இருந்தா, நான் ஏன் இங்கே இருந்து, இந்த மாதிரி மொக்கை ப்ளாக்கையெல்லாம் எழுதிக்கிட்டிருக்கேன்.

பாடலைக் கேளுங்க.

பிகு: சம்பவம் கற்பனைன்னு தெரிஞ்சிருக்கும். ஆனால் பாடலைப் பற்றிய கருத்துகள் உண்மை.

இந்தப் பாடலின் பொருள், பின்னணி விவரங்கள் இந்தப் பதிவில் அருமையா சொல்லியிருக்கார் ஒருவர்.

http://mrandmrs55.com/2012/04/02/woh-shaam-kuch-ajeeb-thi-lyrics-and-translation-lets-learn-urdu-hindi/




Read more...

Thursday, August 28, 2014

உட்கார்ந்து உட்கார்ந்து உட்காருதல்.

சினிமா போகலாம்னு யாராவது சொன்னாலே கிலி ஆயிடும் எனக்கு. ஏன்? இப்போ வர்ற (ஆங்கிலம் தவிர்த்த) படங்களெல்லாம் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஓடுதே. (முதல் ஓரிரு நாட்கள் மட்டுமே 180 நிமிடங்கள். அடுத்தடுத்த நாட்களில் பத்து பத்து நிமிடங்களா குறைச்சி வெளியிடுறாங்கன்றது வேறு விஷயம்!!). அவ்வளவு நேரம் ஓர் இடத்தில் உட்காருதல்ன்றது என்னால் முடியாத காரியம். செமையா போர் அடிச்சிடும்.

மொதல்லேந்தே இப்படித்தானான்னா கிடையாது. (நாள் முழுக்க ஓடும் DDLJ படத்தையெல்லாம் பல முறை அரங்கத்தில் பார்த்ததுண்டு). நடுவில் எப்பவோ நடந்த மாற்றம்தான். அப்போ படங்களே பார்ப்பது கிடையாதான்னா அதுவும் கிடையாது. எப்போவாவது அத்தி பூப்பதுபோல் (அத்தி? ஆத்தி, இது என்ன? எப்போ பூக்கும்? யாருக்குத் தெரியும்!!) பார்ப்பது உண்டு.

அரங்கத்திற்குப் போய் படம் பார்ப்பது போர்னா, வீட்டில் தொடர்ச்சியா படம் பார்ப்பது அதைவிட போர். அமெரிக்காவில் இருந்தவரை (DW பார்த்ததால்) வாரம் ஒரு படம் பார்ப்போம். தினம் அரை மணி நேரம் வீதம் ஒரு வாரத்தில் படம் முடிந்துவிடும். இந்தியா வந்தபிறகு அதுவும் பார்ப்பது கிடையாது.

முக்கால் மணி நேரம் அல்லது அதிகபட்சம் ஒரு மணி நேரம். அதுக்கு மேல் என்னால் தொடர்ந்து உட்கார முடியாது. முதுகு வலி, பல் வலி இதெல்லாம் கிடையாது. எழுந்து நடக்கணும். அவ்வளவுதான்.

வெவ்வேறு சமயங்களில் எப்படி இப்படி உட்காராமல் சமாளிப்பது? அதுதான் இந்தப் பதிவு. (அப்பாடா, இப்பவாவது பதிவு ஆரம்பிச்சுதே!)

ஆபீஸில் வேலைன்னா பிரச்னையே இல்லை. அப்பப்போ தண்ணீர் குடிச்சாலே போதும். அதுவே என்னை எழுப்பி விட்டுடும். போய் ஒரு முறை போயிட்டு வரவேண்டியிருக்கும். போற வழியில் யாரையாவது பார்த்து பேசினா, அப்படியே பொழுதும் போயிடும்!!

ஆபீஸ் மீட்டிங்க்னா, ஒரு மணி நேரத்தில் நான் மட்டும் எழுந்து நின்றிடுவேன். என்னய்யா ஆச்சுன்னு மக்கள் கேட்பாங்க. ஒண்ணும் இல்லே, கால் வலிக்குது, கொஞ்ச நேரம் நிற்கப்போறேன்னு சொல்லிட்டு நின்றவாறே பேசுவதோ / கவனிப்பதோ (தூங்க மட்டும் இன்னும் பயிற்சி எடுக்கவில்லை. அதுவும் செய்துடணும்!) - ஒரு பத்து நிமிடம் கழித்து மறுபடி உட்கார்ந்து விடுவேன்.

பெங்களூர் வந்தபிறகு வீடு-அலுவலகம்-வீடு அலுவலகப் பேருந்தில். காலைப் பயணம் அரை மணி நேரம் மட்டுமே. ஆனால் மாலையில்? அது அந்த கடவுளுக்குமே தெரியாது. இதுவரையிலான அதிக பட்ச நேரம் ஒன்றரை மணி நேரம். இதிலும் சில நேரங்களில் தூங்கி விடலாம். தூங்கலேன்னா, ஒரு மணி நேரத்தில் எழுந்து நின்றுவிடுவேன். ஆரம்பத்தில் புதிதாகப் பார்த்த சக பயணிகள், பின்னர் பழகிக் கொண்டார்கள். பிறகு இன்னும் நீண்ட நேரம் பயணம் செய்பவர்களும் அவ்வப்போது பேருந்தில் நிற்கத் தொடங்கினார்கள். இன்னும் சில நாட்களில் எல்லாரையும் (தொடர்ச்சியாக உட்கார விடாமல்) நிற்க வைக்க வேண்டும். இதுவே என் குறிக்கோள்.

என்னை உட்கார வைத்து சோறு போடுவேன் என்று சத்தியம் செய்து என்னை மணம் செய்த DW, என் இந்தப் பிரச்னையைத் தெரிந்து கொண்ட பிறகு, வீட்டில் உட்கார விடுவதேயில்லை. என்னங்க, பத்து நிமிடம், இந்த பத்துப் பாத்திரங்களை தேச்சிக் கொடுங்க, ஒரு மணி நேரம் கழிச்சி இந்த துணிகளை மாடியில் போய் காய வெச்சிட்டு வந்துடுங்க. நீங்கதான் உட்கார்ந்துட்டே இருந்தா, போரடிக்குதுன்றீங்க. அதனால்தான் சொன்னேன். இல்லேன்னா, நானே செய்துட மாட்டேனா.

இந்த வாதம் சரியாயிருக்கிற மாதிரியும் இருக்கு, சரி இல்லாத மாதிரியும் இருக்கு. நீங்க என்ன சொல்றீங்க?

***


Read more...

Tuesday, August 19, 2014

குப்பை பக்கெட் சாலஞ்ச்!!

குப்பை பக்கெட் சாலஞ்ச்!!

ஷாப்பிங் போகலாமான்னு கேட்டாங்க DW. எங்கேம்மான்னு கேட்டா காய்கறிக் கடைக்காம். நல்லதாப் போச்சு. இன்னும் இவங்களுக்கு ஷாப்பிங்’க்கு அர்த்தம் தெரியலேன்னு கிளம்பியாச்சு. காய்கறி வாங்கிட்டு வரும்போது திடீர்னு நினைவு படுத்தி, ஒரு குப்பை பக்கெட்டும் வாங்கணும்னாங்க. சரி வாங்கிடுவோம்னு மூடி போட்ட ஒரு குப்பை பக்கெட்டும் வாங்கியாச்சு.

ஒரு கையில் காய்கறி. இன்னொரு கையில் குப்பை பக்கெட். எதுக்கு இரண்டையும் தனித்தனியா எடுத்துப் போகணும்னு கு.ப’ல் கா’யைப் போட்டாச்சு. அப்போதான் ஒரு நண்பர் குறுக்கிட்டார். அப்போது நடந்த உரையாடல்.

நண்பர் : ஏங்க, குப்பை போடறதுக்கு இவ்ளோ தூரம் வந்துட்டீங்க? உங்க வீட்டுப் பக்கத்திலேயே இடம் இருக்கே?

நான்: அட இது குப்பை இல்லீங்க. காய்கறி.

ஏன் காய்கறியை இதில் போட்டு எடுத்துப் போறீங்க? அதுலே எவ்ளோ அழுக்கு, கிருமிகள் இருக்குமோ?

இல்லீங்க. காய்கறிகளை நல்லா கழுவி சுத்தமாதாங்க வெச்சிருந்தாங்க.

நான் காய்கறியை சொல்லலீங்க. குப்பை பக்கெட்டை சொன்னேன்.

குப்பை பக்கெட்டையும் சுத்தமா கழுவிதாங்க.. அடச்சே.. இந்த குப்பை பக்கெட்டும் புதுசுதாங்க. இப்பதான் வாங்கிக்கிட்டு போறோம்.

இருந்தாலும் எனக்கு பிடிக்கலீங்க.

Fresh காய்கறிகள் பிடிக்காதுன்னு சொல்ற மனுசனை இப்பதான் முதல்முறையா பார்க்கிறேன்.

காய்கறி இல்லேங்க.

அப்போ குப்பை பக்கெட்டா? என்ன, கலர் பிடிக்கலியா?

அய்யோ.. ரெண்டுமே புதுசுன்னாலும், குப்பை பக்கெட்டில் காய்கறி எடுத்துப் போய், அதை சமைச்சி சாப்பிடறது பிடிக்கலைன்னேன்.

பிடிக்கலேன்னா எங்க வீட்டுக்கு வராதீங்க.

பிடிச்சிருந்தா?

அப்பவும் வராதீங்க. அவ்வ்’ன்னு சொல்லி ஓடி வந்துட்டோம்.

நிம்மதியா ஒரு குப்பை பக்கெட்டை வாங்கி வர முடியலியே மனுசனாலே. இதுக்கு அந்த ஐஸ் பக்கெட் சாலஞ்ச் எவ்வளவோ பரவாயில்லை போலிருக்கே!!

***

Read more...

Sunday, August 17, 2014

எச்சூஸ்மி, இந்த அட்ரஸ் எங்கேயிருக்கு?


ஒரு கடைத்தெருவில் நுழையறேன். இரு பக்கத்திலும் இருக்கும் கடைகளை பார்த்தவாறே போகும்போது, ஏதோ வித்தியாசமாய் உணர்கிறேன். கடைகளில் பொருட்களை வாங்க வந்திருப்பவர்கள் அனைவரும் ‘குசுகுசு’வென்று ஏதோ பேசிக்கொண்டு என்னையே முறைத்துப் பார்ப்பதாகத் தெரிகிறது. ஏன்னு புரியல. திடீர்னு ஒருத்தர் கத்தறாரு. ‘இவன்தாண்டா. பிடிங்க பிடிங்க.’ அவ்வளவுதான். எல்லாரும் கையில் இருப்பதைக் கீழே போட்டுவிட்டு என்னைத் துரத்த ஆரம்பிக்கிறாங்க. நானும் ஓட, ஓட, ஓடறேன். இப்படியே ஒரு காத தூரம் (அப்படின்னா எவ்ளோ தூரம்? யாருக்குத் தெரியும். சும்மா சொல்றதுதான்!!) துரத்தியபிறகு, பக்கத்தில் வந்து, டக்குன்னு என்னை கீழே தள்ளி விட்டுடறாங்க. நான் அலர்றேன்.

“வேண்டாம். வேண்டாம்”.

”நீங்க என்னதான் வேண்டாம்னாலும், இன்னிக்கு உப்புமாதான். ஒழுங்கா போடறதை சாப்பிட்டு எழுந்திருங்க”.

அவ்வ். இவ்வளவு நேரம் கண்டதெல்லாம் கனவா?. ஆனா கனவில் வந்த ஒருவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்ததே? ரொம்ப நேரம் யோசித்தபிறகு டக்குன்னு நினைவுக்கு வந்துடுச்சு. இவருதான் நேத்திக்கு என்கிட்டே வழி கேட்டவரு.

வழி?

அது ஒரு பெரிய சின்ன கதை. கேளுங்க.

எப்படிதான் என்னை கண்டுபிடிக்கிறாங்களோ தெரியாது. நான் பாட்டுக்கு சிக்னலுக்காகவோ, பேருந்துக்காகவோ அல்லது சாலையை கடக்கவோ நின்றிருப்பேன். சாலையில் இருக்கிற எல்லாரையும் விட்டுட்டு, சரியா என்னைப் பார்த்து கேப்பாங்க. “எச்சூஸ்மீ, இந்த அட்ரஸ் எங்கேயிருக்கு” அல்லது “25வது தெருவுக்கு எப்படிப் போகணும்?”.

அவ்ளோ நேரம் சரியா வேலை செய்யும் இந்த மூளையானது (அப்படியா?), அந்த ஒரு நிமிடத்திற்கு ஸ்டாப் ஆயிடும். நாம எங்கே இருக்கோம்? இவரு கேக்குற இடம் எங்கே இருக்கு? இப்படி போகணுமா? அப்படி போகணுமா? என்று பல கேள்விகளை நானே கேட்டுக் கொள்ள, அதற்குள் ஒரு அரை நிமிடம் கடந்திருக்கும்.

வழி கேட்டவரு, நாம கேட்டது இவனுக்குக் கேட்டுச்சா இல்லையா? இவனுக்கு தமிழ் புரியுமா புரியாதா? ஏன், எதுவுமே சொல்லாமே இருக்கான்? தெரியலேன்னா, தெரியலேன்னு சொல்ல வேண்டியதுதான்னு யோசிச்சிக்கிட்டே நிப்பாரு. நானோ, அவர் படற கஷ்டத்தைப் பார்த்து, டக்குன்னு 'ஏதோ ஒரு' வழியை காட்டி, இப்படியே நேரா போனீங்கன்னா, வந்துடும்னு ஒரு வழி காட்டிடுவேன்.

ஒரு நாள் யோசிச்சிப் பார்த்தேன். எப்படியும் ஒரு ஐம்பது பேருக்காவது நாம (சரியா, தப்பான்னு தெரியாமலேயே!!) வழி சொல்லியிருப்போம்.  அவங்கள்ள யாராவது என்னிக்காவது நம்மள அடையாளம் கண்டுபிடிச்சி, சட்டையை பிடிச்சி, ஏண்டா எனக்கு தப்பான வழியைக் காட்டினே’ன்னு கேள்வி கேட்டா என்ன சொல்லி சமாளிக்கலாம்?

ஒருத்தர் வந்தா பரவாயில்லை, அவங்க ஐம்பது பேரும் சேர்ந்து வந்து ‘இவன்தாண்டா’ன்னு துரத்த ஆரம்பிச்சிட்டா?

யாராவது வழி கேட்டு, சரியாத் தெரியலேன்னா, என்ன சொல்லணும்? எனக்கு தெரியல சார். வேறே யாரையாவது கேட்டுக்கோங்க. அதோ, அந்த கடையில் கேளுங்கன்னு சொல்லிடலாம். ஆனா, அதுவும் முடியல. ஏன்? காரணம் எனக்கே தெரியல. நமக்கு ஒரு விஷயம் தெரியலேன்னு மத்தவங்களுக்குத் தெரியக்கூடாதுன்னு இருக்குமோ?

அதுக்காக, தப்பான வழியைக் காட்டலாமா? அப்படி செய்யறது தப்புதான். புத்திக்கு தெரியுது. மனசுக்கு தெரியலியே (இல்லே, மாத்தி சொல்லிட்டேனா?!?).

எப்படியோ அவங்களும் விடறதா இல்லை. நானும் வழி சொல்றதை நிறுத்தறதா இல்லை.

சரி விடுங்க. இவ்வளவு தூரம் படிச்சிட்டீங்க. பதிவோட இறுதிப் பத்தியையும் படிச்சிடுங்க. என்னது? அது எங்கே இருக்கா? அதுக்கும் நான்தான் வழி சொல்லணுமா?

சொல்றேன். மேலே முதலில் இருக்கு பாருங்க. அதுதான்.

***

Read more...

Thursday, August 14, 2014

KBC - ஒரு கொசுவர்த்தி பதிவு.


KBCயின் அடுத்த சீசனுக்கான விளம்பரம் ‘Neighbours' மிகமிக அட்டகாசம். சரியான விடை சொல்லும் அந்த இஸ்லாமியரின் நடிப்புக்காக நிறைய முறை அந்த விளம்பரத்தை பார்த்தாகிவிட்டது.




இப்போது KBCயைப் பற்றிய ஒரு கொசுவர்த்தி.

கிமு. மன்னிக்க. கிபி 2000ம் ஆண்டெல்லாம் நான் வடஇந்தியாவில் குர்காவ்னில் இருந்த காலம். ஊரே மிட் நைட் மசாலா பார்த்துவிட்டு தூங்கப் போகும் நேரத்தில் (இரவு 1மணி) நாங்கள் 3-4 நண்பர்கள் மட்டும் அலாரம் வைத்து எழுந்து ஆபீசுக்குக் கிளம்பும் நேரம். ஆமாம். எங்கள் வேலை நேரம் இரவு 2 முதல் முற்பகல் 10மணி வரை. ஆஸ்திரேலியா மற்றும் சீனாவுக்கு மென்பொருள் சப்போர்ட் செய்யும் வேலை. ஹிஹி வேலையெல்லாம் அவ்வளவு இருக்காது. (அப்போதுமா? யெஸ். எப்போதுமேதான்!!).

பளபளவென குளித்து 2மணிக்கு ஆபீஸ் போனதும், அரை மணி நேரத்தில் வேலையை முடித்துவிட்டு, ராகா.காம் மற்றும் இதர தளங்களில் பாட்டு கேட்க ஆரம்பித்துவிடுவோம். (யூட்யூபெல்லாம் அப்போ கிடையாது). பெரும்பாலும் நண்பர்கள் கேட்டும் பாடல் சாஜன் (மற்றும் இதர) படத்தில் வரும் காதல் தோல்விப் பாடல்கள். (சிலருக்கு ஒரு தலைக் காதல்; பலருக்கு தறுதலைக் காதல். ஆனா, ரெண்டுமே தோல்விதான்!!).  அப்படியே மற்ற இரவு நேர வேலையாட்களுடன் வம்பு பேசி பொழுதை ஓட்டிவிடுவோம்.

அப்போதான் வந்தது இந்த KBC. முதல் சீசனில் Registration செய்ய கடுமையான போட்டா போட்டி. அவர்கள் கொடுத்த எண்ணில் அழைத்து, கேட்கும் 1 கேள்விக்கு சரியான விடை அளித்துவிட்டால், நம் பெயரும் குலுக்கலில் சேர்த்துக் கொள்வார்கள். பிறகு போட்டுக்கு அழைக்க வாய்ப்பு கிடைக்கலாம், கிடைக்காமல் போகலாம். அது தனிக்கதை. ஆனால் அந்த எண்ணை எப்போது அழைத்தாலும் இணைப்பு கிடைக்கவே கிடைக்காது.

நாங்க ஆபீஸில் காலை 2.30 மணி முதல் சும்மாதானே இருப்போம். இருக்கும் 4-5 தொலைப்பேசிகளில் தொடர்ச்சியாக KBCன் எண்ணை அழைத்துக் கொண்டேயிருப்போம். அந்த நேரத்தில் கூட சில சமயங்களில்தான் இணைப்பு கிடைக்கும். அப்படி இணைப்பு கிடைத்த நேரங்களில் கேட்கும் கேள்விக்கு சரியான விடை தெரிந்திருக்க வேண்டும். ஸ்ஸப்பா. எவ்வளவு டென்சன்றீங்க. பல முறைகள் சரியான பதில் அளித்தும், ஒரு முறை கூட நேர்முகப் போட்டிக்கு நாங்கள் தேர்வாகவில்லை.

அந்த காலகட்டத்தில் நான் தொலைக்காட்சியில் பார்த்த இரண்டே இரண்டு தொடர்கள். மெட்டி ஒலி & KBC. KBC பொது அறிவு வளர்ச்சிக்காக. மெட்டி ஒலி? சரி சரி. அதுவும் பொது அறிவு வளர்ச்சிக்காகதான்.

அமிதாப் அங்கிளின் விசிறியாக நாங்கள் பல பேர் மறுபதிவு (Renew) செய்து கொண்ட காலம். அவரின் மேனரிசம், சிரிப்பு, பெண் போட்டியாளர்களிடம் வழியும் வழிசல்கள், போட்டிக்கு நடுவில் போட்டியாளர்களிடம் அவர் போட்டு வாங்கும் கதைகள் / சம்பவங்கள் எல்லாமே சூப்பர்ப். 90% கேள்விகளுக்கு (வீட்டில் உட்கார்ந்து) சரியான விடை தெரிந்ததால், (போட்டிக்கு அழைத்தால்!) ஒரு கோடி ஜெயித்து, சொந்தக் கார் வாங்கி அதில்தான் ஆபீஸ் போகணுமென்று (அதே வேலை செய்ய!!) சபதம் போட்ட இரவுகள்.

முதல் இரண்டு சீசன்களில் (அவை மட்டுமே நான் பார்த்தவை!) தமிழ்நாடு, தமிழ் சினிமா தொடர்பான கேள்விகள் பல கேட்கப்பட்டன. அதில் இன்றும் நினைவில் இருக்கும் ஒரு கேள்வி. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான் விரும்பி, நடிக்க முடியாமல் போன பாத்திரம் என்ன? பதில்: அனைவருக்கும் முன்னர் நான் கத்திய சரியான விடை ‘பெரியார்’.

அதன் பிறகு ஊர், வேலை, விருப்பம் அனைத்திலும் மாற்றம். தொடர்ந்து ஷாருக், மறுபடி அமிதாப், இந்தப் பக்கம் சரத்குமார், பிரகாஷ்ராஜ், சூர்யா இப்படி பலர் இந்த (அல்லது இதே மாதிரியான) நிகழ்ச்சிகளை நடத்தினாலும், எதையும் ஒரு எபிசோட் கூட சரியாகப் பார்த்ததில்லை. காரணம்? அதில் அமிதாப் இல்லையே. அதுதான். யூட்யூப் வந்தபிறகும் பார்க்கத் தோன்றியதில்லை.

ஆனால்..
ஆனால்..

ஒரு முறை ட்விட்டரில் கிடைத்த இந்த ஒரு எபிசோட்’ன் லிங்க். இதை மட்டும் மறக்கவே முடியாமல், கடந்த 2 வருடங்களில் 4-5 முறை முழு 1மணி நேரத்தையும் பார்த்திருக்கிறேன். யாருக்காக? அது யாருக்காக? நம்ம சின்னக்குயில் சித்ரா’வுக்காகதான். அதுவும் மலையாள வெர்ஷன். நடத்துபவர் சுரேஷ் கோபி. அவர் நடத்தும் இதே நிகழ்ச்சியின் மற்ற எபிசோட்களையும் பார்த்ததில்லை. ஆனால் சித்ராவுடன் அவர் பேசி நடத்தும் விதம். Simply Wow. சித்ரா சேச்சியிடம் அவர் (மற்றும் மலையாளிகள்) வைத்திருக்கும் பாசம், அக்கறை, அதை அவர் சரியாக வெளிப்படுத்தும் விதம், அனைத்தும் Extraordinarily beautiful. நிறைய பேர் பார்த்திருக்கலாம். இல்லையென்றால், சித்ராவை பிடிக்குமென்றால் (பிடிக்காதவங்க யாராவது இருப்பாங்களா என்ன?) ஒரு முறை பார்க்கலாம்.



அவ்வளவுதான் பதிவு. இந்த நிகழ்ச்சியைப் போலவே நிஜ வாழ்க்கையிலும் இந்த மனைவி(கள்!), கேள்விகளைக் கேட்ட பிறகு, நமக்கு 4 ஆப்ஷன்களைக் கொடுத்தால் எப்படி இருக்கும்? ஆனா கொடுக்க மாட்றாங்களே? எதைக் கேட்டாலும் objective answerல்தான் பதில் சொல்லணுமாம். நம்மால் என்னதான் பதில் கொடுக்க முடியும்? எதைச் சொன்னாலும் திட்டு. ம்ம்ம்ம்.. மிடியல.

****

Read more...

Sunday, August 10, 2014

வண்டி வண்டி மிதிவண்டி...


இந்த வருடம் ஏப்ரல் மாதம் வரை கிட்டத்தட்ட ஒரு வருடம் அலுவலகத்திற்கு மிதிவண்டியில் போன அனுபவத்தில் எழுதும் பதிவு. ஒரு வழியில் 5கிமீ ஆக தினமும் 10கிமீ அலுவலகத்திற்கு மட்டும். (காலையில் உடற்பயிற்சிக்கு ஓட்டியது தனிக் கணக்கு).

ட்விட்டரில் நாம் சும்மா ‘மேலே-கீழே’ arrow அழுத்தி படிச்சிட்டு போயிட்டேயிருந்தாலும், யாராவது ஒருவர் நம்மை ஏதாவது ஒரு வண்டியில் ஏற்றி தரதரன்னு இழுத்துக்கிட்டே போயிடுவாங்க. அதைப் போலவே, சாலைகளிலும் நடக்கும். நாம பாட்டுக்கு ‘ரண்டக்க ரண்டக்க’ பாடிட்டே போயிட்டிருந்தாலும், நம்மைத் தாண்டி Left turn  எடுப்பவர்கள், ஒரு நொடிகூட பொறுக்காமல், நமக்கு முன்னால் போய் டக்குன்னு திரும்பிடுவாங்க.

பலமுறை இப்படி திடீர்னு ப்ரேக் போடமுடியாமல் நானும் அவங்க கூடவே இடது பக்கம் திரும்பி, பக்கத்து கட்டிடத்தில் / கடையில் நுழைந்திருக்கேன். வெயிலில் வேர்க்க விறுவிறுக்க சைக்கிளோடு கட்டிடத்தில் நுழையும் என்னை, கூரியர்காரன்னு நினைச்சி அங்கிருக்கும் காவலாளி திட்டியிருக்கான். டேய், அந்த வண்டியினால்தான் இப்படி இங்கேல்லாம் நுழைய வேண்டியதாயிடுச்சுடான்னு சொல்லி, திரும்பி, வெளியே வந்து, வண்டி ஓட்டி.. ஸ்ஸ்ஸப்பா...!!!

மிதிவண்டி ஓட்டுவதால் இன்னொரு வசதி என்னன்னா, நீங்க 'Invisible' ஆயிடலாம். திகைக்காதீங்க. நிஜம்தான். மிதிமிதிமிதிச்சி வண்டி ஓட்டிவரும் உங்களை யாருக்குமே தெரியாது. பெரிய பேருந்து மட்டுமல்ல, சாலையைக் கடப்பவர்களும் உங்களை கண்டுக்க மாட்டாங்க. தூரத்தில் வரும்போதே தெரிஞ்சிடும், இவன் கடக்கப் போகிறான், ஆனா நாமதான் வேகமா வர்றோமே, நம்மை போகவிட்டுத்தான் அவன் போவான்னு நினைச்சி தைரியமா வந்தாலும், அதுவரை பெரிய வண்டிகளுக்காகக் காத்திருந்தவன், சடாரென்று சாலையில் இறங்கிவிடுவான். கடைசி நொடியில்தான் இப்படி ஒரு ஜந்து, இப்படி ஒரு மிதிவண்டியில் வருதுன்னு பார்த்து, அப்படி இப்படின்னு டான்ஸ் ஆடி முடிப்பதற்குள்.. டூ லேட். இதே போல் இது வரை நான் இடித்தவர்கள் எண்ணிக்கை - நான்கு.

பெங்களூரில் ( நான் இருந்த Whitefieldல்) கடற்கரை இல்லையே என்று மக்கள் கவலைப்படக்கூடாதென்று சாலையோரம் குவியும் மணலை BDA எடுப்பதேயில்லை. நானும் கிட்டத்தட்ட ஒரு வருடம் மிதிவண்டியில் அலுவலகத்திற்குப் போனேன். கடற்கரையில் வண்டி ஓட்டிய அனுபவம்தான். சாலையிலும் போகமுடியாது, ஓரத்திலும் போகமுடியாது. வேறு வழி? நடைபாதையில் ஏறிவிட வேண்டியதுதான். ஆனா, அங்கேயும் அடிதடிதான். பைக்கில் வர்றவன் ‘Right of way’ கேட்டு ஒலிப்பானை விடாமல் அடிப்பான். டேய். நடைபாதையிலுமாடா உங்க அட்டகாசங்கள்னா? பெங்களூரின் சிறப்பு அம்சமே நடைபாதையில் பைக் ஓட்டுவதுதான் என்றான்.

அப்பப்போ என்ன ஆகும்னா, கிட்டத்தட்ட அரை கிமீ நடைபாதையில் வண்டி ஓட்டி வந்தபிறகு, சரியாக சாலையில் இறங்குமிடத்தில் ஒரு காவலர் நின்றிருப்பார். எல்லாருக்கும் டிக்கெட். புடிங்க சார். புடிச்சி உள்ளே போடுங்க சார் அவங்களை. என்னை மட்டும் ‘போங்க, போங்க’ என்று அனுப்பிவிடுவார். வாழ்க மிதிவண்டி.

அதிகமான போக்குவரத்து
அலைபாயும் மக்கள்
சாலையில் கல், மண், தூசு

இப்படி எவ்வளவோ பிரச்னை இருந்தாலும்
மிதிவண்டி ஓட்டுபவர்களுக்கு

சிக்னல் கிடையாது
Wrongsideலும், Onewayயிலும் தைரியமாகச் செல்லலாம்
நடைபாதையில் போகலாம்
வண்டியை அநாயசமாக தூக்கி தடைகளைக் கடக்கலாம்
கொழுப்பு குறைப்பு

எல்லாவற்றிற்கும் மேலாக

வாரம்தோறும் விலையேற்றும் BMTC இருக்கும் நகரத்தில் மிதிவண்டி ஓட்டி அலுவலகம் போனது ஒரு நல்ல அனுபவமே.

***





Read more...

Sunday, August 3, 2014

நண்பர்கள் தின வாழ்த்துகள்.


அமெரிக்காவில் இருந்தபோது நடந்த ஒரு சம்பவம்.

ஒரே குழுவில் இருந்த நாங்கள் மூவரும் நண்பர்கள் ஆனோம். வாரயிறுதிகளில் சேர்ந்து ஊர் சுற்றுவது, கடை கண்ணிகளுக்குப் போவது என பொழுது போக்கிக் கொண்டிருந்தபோது, ஒரு நண்பர் வேலை & இடமாற்றத்தால் வேறொரு ஊருக்குச் சென்றார். அடுத்து வந்த ஒரு நீண்ட வாரயிறுதியில் எங்கள் இரு குடும்பத்தையும் அவர் ஊருக்கு அழைக்க, அவர் குழந்தைகளுக்கு பரிசுகள் வாங்கி நாங்களும் பயணப்படத் தயாராக இருந்தோம். இங்குதான் George Orwell வருகிறார்.

All Friends are equal, but some Friends are more equal than others-ன்னு சொன்னாரே, அவர்தான்.

இங்கிருந்த மற்றொரு நண்பரின் மனைவியும், போகவிருந்த ஊரிலிருந்த நண்பரின் மனைவியும் மிகச்சிறந்த நண்பிகள். தங்கள் நட்பை கற்பைப்போல எண்ணக்கூடியவர்கள். அதில் உண்டான Possessiveness, மற்ற எவரையும் தங்கள் நட்புக்கிடையில் சேர்க்காத பண்பினைக் கொண்டவர்கள். அப்படி இருக்கும்போது, less equalஆக இருந்த என்னை, இந்தப் பயணத்திலிருந்து எப்படி ‘கட்’ செய்வது? அதைத்தான் த்ருஷ்யம் போல் ஒரு MasterPlan செய்து முடித்தார்கள். அது என்ன ப்ளான் என்பதுதான் இந்தப் பதிவு.

நாள் முழுக்க நடந்த இந்த ஆபரேஷன் பற்றி, துவக்கத்தில் எனக்குத் தெரியவில்லை. ஆனால், ஒரு சில மணி நேரங்களிலேயே தெரிந்தது. (’திடுக்’ திருப்பங்களுடன் எவ்வளவு ராஜேஷ்குமார் பாக்கெட் நாவல் படித்திருப்போம்!!).

அடுத்த நாள் காலை 6 மணிக்குக் கிளம்பி 1மணிக்கு நண்பர் வீட்டில் மதிய உணவு என்று ப்ளான். முந்தைய நாள் நடந்தவை:

9மணி: லோக்கல் நண்பர் அழைத்து - ஏம்பா, நீ கண்டிப்பா வர்றேயில்லே?. அட ஆமாம்பா. கண்டிப்பா போறோம் - இது நான்.

10மணி: லோக்கல் நண்பர் மனைவி அழைத்து: நாளைக்கு போற வழியில் பனி பெய்யும் போலிருக்கு. எப்படிப் போறோம்னு தெரியல. நான்: அட 30% பனிதான். ஒண்ணும் பிரச்னையில்லை. போகலாம்.

11மணி: ஊரிலிருக்கும் நண்பர்: குழந்தைக்கு உடம்பு சரியில்லை. இங்கு வந்தால் உன் குழந்தைக்கும் அது பரவிவிடும். எதுக்கும் நான் மாலை confirm செய்றேன்.

12மணி: லோக்கல் நண்பர்: எனக்கு ஆபீஸ் வேலை வரும் போலிருக்கு. நாம் அடுத்த வாரம் போகலாமா? அல்லது நீ மட்டும் போறியா? நான்: போவதென்றால் சேர்ந்தே போகலாம். நீ போகலேன்னா நானும் போகலை.

1மணி: லோக்கல் நண்பர்: பனி, அவர் குழந்தையின் ஜுரம், ஆபீஸ் வேலை - இதெல்லாம் காரணங்கள். நாம் இந்த வாரம் போகவேண்டாம். நீ வாங்கின பரிசுகளை போய் அந்தந்த கடைகளில் ரிட்டர்ன் கொடுத்துவிடு. நானும் அதேதான் செய்யப் போகிறேன்.

2மணி: ஊரிலிருக்கும் நண்பருக்கு தொலைப்பேச, அவரின் அனைத்து தொலைப்பேசிகளும் switchoff.

3மணி: பரிசுகள் ரிட்டர்ன் செய்தாச்சு.

4மணி: மனைவியிடம் சொன்னேன். (ரமணா மருத்துவமனைக் காட்சியில் விஜயகாந்த் குரலில்) இப்போ எந்த நேரத்திலும் தொலைப்பேசி வரும். இவன் மட்டும் புறப்பட்டுப் போறேன்னு சொல்வான். அடுத்த முறை இருவரும் சேர்ந்து போவோம்னு சொல்வான் பாருன்னேன்.

5மணி: லோக்கல் நண்பர்: எவ்வளவு பனி இருந்தாலும், என்னை மட்டுமாவது வரச்சொல்லிட்டாங்க. நான் மட்டும் இப்பவே கிளம்பிப் போறேன். உன்னால் உடனடியா கிளம்ப முடியாதில்லே. அடுத்த முறை சேர்ந்தே போகலாம். பை.

பிறகு நாங்கள் அமெரிக்கா காலி செய்துவிட்டு வரும்போது ஊரிலிருந்த அந்த நண்பரிடம் அந்த சம்பவத்தை நினைவு கூர்ந்து, சொல்லிவிட்டு வந்தேன் - அன்னிக்கு என்னை வரவேண்டாம்னு சொல்லியிருந்தாலே, நான் வந்திருக்க மாட்டேன். அதுக்கு அவ்வளவு கஷ்டப்பட்டிருக்க வேண்டாம். பரவாயில்லை. சென்னை வந்தால் கண்டிப்பாக என் வீட்டுக்கு வா.

***

‘நண்பேண்டா’ லேபிளில் இதே போல் வேறு சில சம்பவங்களும் உள்ளன.

***


Read more...

Tuesday, July 29, 2014

ஓடிட்டிங் குறுங்கதைகள் : பகுதி ஒன்று.


மென்பொருள் துறையில் ஓடிட்டிங் (இனிமேல் தணிக்கை) பிரிவில் சிலபல ஆண்டுகளாக வேலை செய்ததில் பலரை சந்தித்து பேட்டி கண்ட அனுபவங்கள் சிலவற்றை சொல்லலாம்னு...

முதலில், அதிகம் பேசும் ப்ராஜெக்ட் மேனேஜர்கள்.

ஒரு ஸ்டாம்பை வடிவேலு காட்டியதும், இந்தியாவிலிருந்து இங்கிலாந்து வரை பேசும் மேனேஜர் சீனா போல், நம்மகிட்டே யாராவது பேசமாட்டாங்களான்னு சில PMs காத்திருப்பாங்க. அந்த சமயம் பார்த்து நாம (தணிக்கையாளர்) போய் மாட்டினா, அவ்வளவுதான். பேசிப் பேசியே நேரத்தை கழிச்சிடுவாங்க. நாமதான் சூதானமா இருந்து அப்பப்போ ‘Cut. Fast forward’லாம் சொல்லணும்.

உதாரணத்திற்கு: தணிக்கையில் முதல் கேள்வியாக - உங்க ப்ராஜெக்டைப் பற்றி ஓரிரு நிமிடங்களில் நல்லா விளக்கி சொல்லுங்கன்னு சொன்னா போதும். ஆதௌ கீர்த்தனாம்பரதரத்தில்னு ஆரம்பிச்சிடுவாங்க சில PMs.

1857ல் முதல் சுதந்தரப் போர் துவங்கியபோது என்ன நடந்ததுன்னா...

கட் கட்.. அவ்ளோ தூரம் போகவேண்டாம். இன்னும் கொஞ்சம் பக்கத்தில் வாங்க..

1889ல் நம்ம நேரு பிறந்தபோது...

சார் சார். இன்னும் கொஞ்சம் இறக்கம் காட்டுங்க...

1919ல் ஜாலியன் வாலா பாக் சம்பவத்தில்..

நோ நோ..

1947ல் இந்திய சுதந்தரம்?

இன்னும்..

1991ல் ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூருக்கு..

பக்கத்துலே வந்துட்டீங்க..

2002?

அய்யய்யோ. அந்த வருடம் மட்டும் வேண்டாம். மேலே மேலே

2014ல் பொதுத் தேர்தல் நடந்தபோது...

யெஸ். அதிலிருந்து வாங்கன்னு கதைச்சுருக்கத்தைக் கேட்டு தணிக்கையைத் தொடர வேண்டியிருக்கும்.

இரண்டு மார்க் கேள்விக்கு இரண்டு பக்கங்களில் எதையாவது எழுதி ரொப்பும் பசங்களைப் போலவே இவங்களும் அதிகமா பேசுவாங்க. 50+ கேள்விகள். 2 மணி நேரத்தில் முடிக்க வேண்டிய தணிக்கையை இவங்க பேசிப்பேசியே 3 மணி நேரத்துக்கு இழுத்துடுவாங்க. தேவையில்லாத இந்த தகவல் மழையினால், நமக்குத் தேவையான சில முக்கியமான தகவல்களை விட்டுவிடக்கூடிய அபாயம் இருப்பதால், அவங்க பேச்சையும் கவனத்துடன் கேட்கவேண்டிய கட்டாயம் வந்துடும். அதனால்தான் மேலே சொன்னதெல்லாம்...

இதுக்கு எதிர்ப்பதமாய் வேறு சிலர் இருப்பாங்க... வாயைத் திறந்து நம்ம கையை விட்டு பதிலை இழுக்க வேண்டியிருக்கும். அவர்களைப் பற்றியும் மற்றும் சில சுவாரசியமான சம்பவங்கள் குறித்தும் அடுத்தடுத்த பதிவுகளில்...

***

Read more...

Monday, May 26, 2014

சங்கீத வாத்தியார்கள் பள்ளிக்கூடம் நடத்தினால்!!




அமெரிக்காவில் இருந்தபோது சஹானாவிற்கு வாய்ப்பாட்டு சொல்லிக் கொடுக்கவேண்டுமென்று ஒரு நல்ல ஆசிரியரைத் தேடினோம். கர்நாடக முறையிலான பாட்டு சொல்லிக் கொடுக்க எங்க கிராமத்தில் யாரும் இல்லாது போகவே, ஹிந்துஸ்தானி பாட்டு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரிடம் சேர்ந்தார். இரு வருடங்கள் பாட்டு கற்றும் கொண்டார்.

இதற்கிடையில் சென்னை திரும்பி வர நேர்ந்ததும் இங்கே அதே ஹிந்துஸ்தானிக்காக ஒரு வாத்தியைப் பிடித்தோம். இவரை பாடச் சொல்லிக் கேட்ட வாத்தி, நல்லாத்தான் பாடுறாங்க. ஆனா, அவர் (அமெரிக்க வாத்தி) சொல்லிக் கொடுத்த முறை வேறு. நான் சொல்லிக் கொடுக்கும் முறை வேறு. அதனால், முதல் இரு மாதங்கள் மறுபடி ஆரம்பத்திலிருந்துதான் சொல்லிக் கொடுப்பேன். சஹானாவின் வேகத்திற்கேற்ப அடுத்தடுத்த கட்டத்திற்குப் போய்விடலாம் என்றார். அப்போ இரண்டு வருடங்கள் கற்றுக் கொண்டது வேஸ்ட்தானா என்றதற்கு, அப்படி சொல்ல முடியாது. ஆனா அப்படிதான் என்று மழுப்பி பாடத்தை ஆரம்பித்தார். ஆனால், வேகமாகவும் பாடங்களில் முன்னேறினார்.

அதே வகுப்பில் கர்நாடக வாத்தி ஒருவரும் இருந்தார். சஹானா நல்லா பாடுறாங்க. நேரம் இருந்தால் கர்நாடக பாட்டு வகுப்பிலும் சேர்த்து விடுங்க. வேகமா பிக்கப் செய்துடுவாங்க என்று சொல்லி அதிலும் சேர்த்துக் கொண்டார்.

இதற்கிடையில் சஹானா, வயலின் கற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லவே, அதிலும் சேர்த்துவிட்டோம். இப்படியாக சென்னையில் இந்த மூன்று வகுப்பிலும் சேர்ந்து சஹானா பாடி / வாசித்து வந்தார்.

கால மாற்றம். காலச் சக்கரத்தில் சுழற்சி. எங்களை பெங்களூருக்கு தள்ளியது.

இங்கே பாட்டு வகுப்பில் சேர்ப்பதற்காகப் போனோம். எங்கே பாடுங்க? - இது வாத்தி. சஹானாவும் 2-3 பாடல்களைப் பாடிக் காட்டினார். எல்லாவற்றையும் கேட்ட வாத்தி இறுதியில் என்ன சொல்லியிருப்பார்? அதேதான். இதுவரை இவர் கற்றவை ஹிந்துஸ்தானி & கர்நாடிக் ஆனாலும், கற்றுக் கொடுக்கும் வகைகள் எல்லா இடத்திலும் வெவ்வேறாக இருப்பதால், மறுபடி முதலிலிருந்து துவக்க வேண்டும் என்றார். செம டென்சன் ஆனோம். மறுபடி - சரிகமபதநி என்று முதல் வகுப்பிலிருந்தா, அப்போ நான்கு ஆண்டுகளாக இவர் கற்றதெல்லாம் வீண்தானா என்று கேட்க - அப்படியில்லை ஆனால் அப்படித்தான் என்றார். ஆனால் கவலைப்படாதீர்கள் ஓரிரு மாதங்களில் நான் மறுபடி இதே நிலைமைக்குக் கொண்டு வந்து விடுகிறேன் என்று வாக்களித்தார்.

அடுத்து வயலின் வாத்தி. இதிலும் 1-2 பாடல்களை வாசித்துக் காண்பித்தார் சஹானா. மேலே உள்ள பத்தியில் பாட்டுக்கு பதிலாக வயலின் என்று போட்டுக் கொள்ளவும். சொந்தமாக பாடல்களை வாசித்துப் பழகி வரும் நிலையில் இருந்தாலும், அடிப்படை வகுப்பில் இந்த வாத்தி சொல்லிக் கொடுக்கும் முறை மாறுபடுகிறது என்று சொல்லி, ஓரிரு மாதங்கள் மறுபடி பாடங்களை கற்றுத் தருகிறேன். வேகமாக பிக்கப் செய்துவிடுவார் என்று சொல்லியுள்ளார்.

என்ன கொடுமை இது வாத்திகள்? புதிய பள்ளி, புதிய மொழி இப்படி எல்லாப் பிரச்னைகளையும் கடந்து ஒரு ஊரிலிருந்து வேறு ஊருக்கு மாறினாலும், இந்த பாட்டு / வயலின் வகுப்பு வாத்திகள் படுத்தும் ‘பாட்டுக்காக’ இனிமேல் அடுத்த முறை இடப்பெயர்வுக்கு பயங்கரமாக யோசிக்க வேண்டியிருக்கும்.

இப்படி இந்த சங்கீதம் சொல்லிக் கொடுக்கும் வாத்திகள், பள்ளிக்கூடம் நடத்தினால் என்ன ஆகும்? மூன்றாம், நான்காம் வகுப்பில் சேர வரும் மாணவ/விகளை மறுபடி முதல் வகுப்பிலேயே சேர்ந்து படியுங்கள் என்று சொல்லிவிடுவார்களோ? #மிடியல.

***


Read more...

Thursday, May 22, 2014

பிரச்னை புரியல. ஆனால் உங்க பதில் தேவை!!

தெரிஞ்சோ தெரியாமலோ அறிந்தோ அறியாமலோ, ஓட்டக்காரர்னு ஒரு பேரு எடுத்துட்டேன். நம்மை சுற்றி இருக்கும் நண்பர்களுக்கும், அலுவலகத்தில் அடிக்கடி பேசித் தொடர்பில் இருப்பவர்களுக்கும் அது தெரியும். ஆனால், அலுவலகம் முழுக்க எப்படி பரப்புவது? இதற்கு நான் எடுத்த சில முயற்சிகளும் அதன் பலன்களும் என்னன்றதுதான் இந்த பதிவு.


சென்ற அலுவலகத்தில் ஒரு நல்ல பதவி வந்தபோது, அதற்காக ஒரு அறிமுக மின்னஞ்சல் அலுவலகம் முழுக்க அனுப்பணும். உங்களைப் பற்றிய விவரங்களை இந்த டெம்ப்ளேட்டில் எழுதித் தாங்கன்னு கேட்டாங்க. அதில் ஒரு தலைப்பு - பொழுதுபோக்கு. அடிச்சாச்சு லக்கி ப்ரைஸ், இதில் நம்ம ஓட்டத்தைப் பற்றி எழுதி அனுப்புவோம் - அலு முழுக்க தெரியட்டும்னு எழுதி அனுப்பினேன். என்ன ஆச்சரியம்? இந்த குறிப்பிட்ட தகவல் மட்டும் வெட்டப்பட்டு, பாக்கி விவரங்கள் எல்லாம் மின்னஞ்சலில் வந்தது. என்னம்மா ஆச்சு? ஏன் அதை மட்டும் வெட்டிட்டீங்கன்னு கேட்டா, மின்னஞ்சல் ரொம்ப பெரிசா இருந்துச்சு, அதனால்தான். தப்பா எடுத்துக்காதீங்கன்னு சொன்னாங்க. சரின்னு விட்டுட்டேன்.


ஆனால், அதற்குப் பிறகு வந்த ஒரு திட்டத்தின் கீழ், உடல்நல அமைச்சராக நான் போட்டியிட்டு, என் ஓட்டத்தைப் பற்றி அலு முழுக்க நிறைய விளம்பரங்கள் செய்து, பலரை ஓட வைத்தது வரலாறு.


இங்கே கட் பண்றோம். அடுத்த வருடம். வேறொரு வேலை. வேறொரு அலு.


அதே பழைய டெம்ப்ளேட். அதே போல 'பொழுதுபோக்கு' பத்தி. ஆனால், அதே போல் ஓட்டத்தைப் பற்றி எழுதலாமா வேண்டாமான்னு ஒரு யோசனை. பிறகு, சேச்சே, அது வேறு அலு. இது வேறு அலு. அங்கேதான் லூஸ்தனமா சிந்திச்சி, அந்த ஒத்தை வரியை 'கட்' பண்ணினாங்கன்னா, இங்கேயும் பண்ணுவாங்களா என்னன்னு நினைச்சி, மராத்தான் பற்றியும் அதில் நம் பங்களிப்பு குறித்தும் சிறு குறிப்பு (2 வரிகள் மட்டுமே) வரைந்து அனுப்பி வைத்தேன்.


நம்ம குழுவிலேயே 150+ பேர் இருக்காங்க. எல்லாருக்கும் தெரியட்டும்னு அனுப்பிச்ச வெச்ச அந்த தகவல்கள் அடங்கிய மின்னஞ்சல், ஒன்றரை மாசம் கழித்தும் வெளிவரவில்லை. போன வாரம் தொலைப்பேசி கேட்டா, கொஞ்சம் எடிட் பண்ணனுமேன்னாங்க. ஏங்க, அதில் இருப்பது என் படிப்பு, சான்றளிப்புகள், அனுபவம் இவ்வளவுதான். இதில் எதை எடிட் செய்யணும்னு கேட்டேன்.


பதில்? இதைப் படிக்கற நீங்க நினைப்பது சரிதான். மறுபடி அதே 'பொழுதுபோக்கு' விவரத்தை எடுத்துடலாமான்னு கேட்டாங்க. எனக்கு செம குழப்பம். ஏம்மா, அதில் என்ன பிரச்னைன்னு கேட்டா, பொபோ'ன்னா - புத்தகம் படிப்பது, இசை கேட்பது, கிரிக்கெட் பார்ப்பது இப்படிதான் இருக்கணும். நீங்க ஓடறதுன்னு போட்டிருக்கீங்களேன்றாங்க. அவ்வ். வேண்டாம். அதை எடுக்க வேண்டாம். அப்படியே மின்னஞ்சல் அனுப்புங்கன்னா, முடியாது. அதை எடுக்கலேன்னா மின்னஞ்சலே வராதுன்னுட்டாங்க. நீங்க ஆணியே புடுங்க வேண்டாம். மின்னஞ்சல் அனுப்பலேன்னா பரவாயில்லைன்னுட்டேன்.


இந்த நிமிடம் வரை என் அறிமுக மின்னஞ்சல் வரவேயில்லை.


* ஏன் அந்த விவரத்தை மட்டும் இரு அலுவலகத்திலும் எடிட் பண்ணனும்னு சொல்றாங்க?


* இந்த நாட்டில் ஒரு தனி மனிதனுக்கு ஓடவும், அதை மற்றவரிடம் பகிர்ந்துக்கவும் அனுமதி இல்லையா?


இந்த இரு சம்பவத்திலும், மின்னஞ்சல் அனுப்பும் / அனுப்ப முடிவெடுக்க வேண்டிய இடத்தில் இருந்தது தமிழர்கள். அதுவும் பெண்கள் என்பது இங்கு தேவையில்லாத தகவல்.


***

Read more...

Wednesday, March 19, 2014

நொறுக்ஸ் - 3-19-2014


சென்னையில் வாகனங்கள் ஓட்டுபவர்கள் எப்போதெல்லாம் ஒலிப்பான் பயன்படுத்துகிறார்கள்? இந்தக் கேள்விக்கு 10 மதிப்பெண்கள் என்றால், விடை பின்வருமாறு:

* சாலையில் இடப்புறம் திரும்பும்போது; வலப்புறம் மற்றும் நேராகப் போகும்போது.
* வீட்டை விட்டு கிளம்பும்போது; மற்றும் வீட்டுக்கு வந்தபிறகு (உள்ளே இருப்பவர்களுக்கு சிக்னல் கொடுக்குறாராம்!).
• சிக்னலில் சிகப்பு, மஞ்சள் அல்லது பச்சை விளக்கு எரியும்போது; (கவுண்ட்டவுன் 5க்கு கீழ் வந்துவிட்டால், ஒலி exponentially கூடிக்கொண்டே போகும்).
* ஆடு, மாடு மற்றும் நாய்கள் சாலையில் நடுவே இருந்தாலோ, குறுக்கே வந்தாலோ அல்லது ஓரமாய் நின்றாலோ.
* சாலையில் மேடு, பள்ளம் இருந்தால்; அல்லது சமதரையாக இருந்தால்.
* சாலையில் அதிக போக்குவரத்து இருந்தால்; அல்லது யாருமே இல்லாமல் காலியாக இருந்தால்.
* தங்கள் வாகனத்தை விட சிறிய வாகனங்களின் பின்னால் போகும்போது (கார் பின்னால் வரும் பேருந்து, பைக் பின்னால் வரும் கார், மிதிவண்டி பின்னால் வரும் பைக் இவர்களெல்லாம் தைரியமாக ஒலிப்பான் பயன்படுத்துவார்கள்).

இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். ஆனால் நிறுத்திக்குவோம். மேற்கண்ட கேள்விக்கு 1 மதிப்பெண்தான்னு சொன்னா, அதற்கான விடை எப்படியிருக்கும்? விடை பதிவில்.

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு போன வாரம் திருப்பதி போயிருந்தோம். நிறைய மாற்றங்கள். பக்தர்களுக்கு அதிக வசதிகள். மாணவர்களுக்கு தேர்வு நேரமாகையால் அதிக கூட்டம் இல்லாமல் இருந்தது. நம் மக்கள் சாமி கும்பிட தலங்களுக்குப் போனாலும், கட்டில், குளிர்சாதன வசதியுடன் கூடிய தனி அறை, வெந்நீர் குளியல் இன்னபிற வசதிகளை எதிர்பார்த்தே இருப்பார்கள். அப்படியில்லாமல், கடவுளை நினைத்து, கிடைத்த இடத்தில் உண்டு, உறங்கி அவன் தரிசனம் பெற முயற்சிக்கலாமே என்று வேளுக்குடி ஒரு சொற்பொழிவில் சொல்வார். அதே போல் நாங்களும் அறை எதுவும் எடுக்காமல், ஒரு பெரிய shed போன்ற இடத்தில் மக்களோடு மக்களாக உறங்கி (சூப்பர் குளிர்!), அதிகாலையில் தண்ணீர்க் குளியலுக்குப் பிறகு தரிசனத்திற்குச் சென்றோம். ஏழுமலையானின் தரிசனம் சில நொடிகளுக்கே கிடைத்தாலும், அதை நினைத்தவாறு சில மாதங்களை ஓட்டிவிடலாம் என்றும், இனி ஆண்டுக்கொருமுறை இங்கு வரவேண்டும் என்றும் நினைத்து மலையிறங்கினோம். மதுரை தூங்கா நகரம்னா, திருமலை தூங்கா மலை. 24x7 சாப்பாடு கிடைக்குது; ஷாப்பிங்கும் செய்யலாம். 

இந்த வாரம் படித்த புத்தகம் வைகோ’வின் பல பேச்சுக்களின் தொகுப்பு. வெல்லும் சொல். விகடன் பிரசுரம். பொன்னியின் செல்வன், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், மகாபாரதம் என பல தலைப்புகளில், பல்வேறு கூட்டங்களில் பேசிய பேச்சுக்கள் மிக அருமையாக தொகுக்கப்பட்டுள்ளன. திருவாசகம் விழாவில் இவரது பேச்சைக் கேட்டு (சூப்பர் ஸ்டாரைப் போலவே!) ரசிகனானேன். அதைப் போலவே மேற்சொன்ன தலைப்புகளில் மனிதர் சும்மா பின்னிப் பெடல் எடுத்திருக்கிறார். கண்டிப்பாக வாங்கி வைத்துக் கொள்ள வேண்டிய புத்தகம், ஆனால் நான் நூலகத்திலிருந்து எடுத்திருந்ததால், திருப்பிக் கொடுத்துவிட்டேன். 

பதிவில் முதலில் சொன்ன கேள்விக்கு 1 மதிப்பெண் மட்டுமே என்றால் அதற்கான விடை:

வண்டி Onல் இருக்கும்போதெல்லாம் ஒலிப்பானை ஒலிப்பார்கள்; Offல் இருக்கும்போது ஒலிப்பானை ஒலிக்கமாட்டார்கள்.

***

Read more...

Thursday, February 13, 2014

மாப்பிள்ளை பார்க்கும் படலம்!

நேற்று ஒருவர் publish செய்துவிட்டு, பிறகு எடுத்துவிட்ட பதிவுதான் இந்தப் பதிவுக்கு இன்ஸ்பிரேஷன்.

தூரத்து சொந்தக்கார பொண்ணுதான். பெங்களூர் ஜெய நகர்லே இருக்காங்க. அந்த பொண்ணுக்கு கல்யாணத்துக்கு வரன் பார்க்க ஆரம்பிச்சாங்க. என்ன ஆச்சுன்னு பதிவில் பாருங்க.

வயசு 23: பொண்ணு MBA முடிச்சி ஒரு நல்ல தனியார் வங்கியில் வேலைக்கும் சேர்ந்துடுச்சு. கிடைக்கும் மாப்பிள்ளை ஜெய நகர் / ஜெபி நகர் 5வது Phaseக்குள் இருக்க வேண்டும். மென்பொருள் நிபுணர்’ஆகத்தான் இருக்க வேண்டும் என்ற கண்டிஷன்கள் - அந்தப் பொண்ணுதான் போட்டது. (சிரிக்கக்கூடாது. இது நிஜமான சம்பவப் பதிவுதான்). ஆனா, கிடைத்த மாப்பிள்ளைகள் பெங்களூரில் வேறு பகுதிகளில் இருந்து வந்தார்கள். அதனால் - ரிஜெட்டட்.

வயது 24: பையன் பெங்களூரில் எங்கே வேணாலும் இருக்கலாம். ஆனால், ஜெய நகர் / ஜெபி நகருக்கு வீடு மாற்றிக் கொண்டு வந்துவிட வேண்டுமென்ற கண்டிஷன். ஆனால், கிடைத்த பையன்கள் பெங்களூருக்கு வெளியே ஹோசூர், மாண்டியா போன்ற பகுதிகளில் இருந்தார்கள். அதனால் - ரிஜெட்டட்.

வயது 25: பையன் பெங்களூர், மைசூர் அல்லது கர்னாடகாவில் எங்கே வேணாலும் இருக்கலாம். பெங்களூருக்கு ட்ரான்ஸ்பர் வாங்கினால் போதும். இதுதான் கண்டிஷன். இப்போ ஜாதகங்கள் சென்னையிலிருந்து வந்தன. சென்னையா? உவ்வே.. நோ. அதனால் - ரிஜெட்டட்.

வயது 26: சரிப்பா. பெங்களூர், சென்னை, ஹைதை. எங்கேயிருந்தாலும் ஓகே. ஆனா பெரிய நகரங்களில்தான் இருக்கவேண்டும். என்ன சொல்லப் போறேன்னு உங்களுக்கே தெரியும். இங்கிருந்தெல்லாம் எதுவும் கிடைக்கவில்லை. வந்தவை - ரிஜெட்டட்.

வயது 27: தென்இந்தியாவில் எங்கே வேணாலும் போறேன். வங்கிக் கிளை இல்லைன்னாலும் பரவாயில்லை. வேறு வேலை தேடிக்கறேன். யாராவது மாட்டுறானான்னு பார்ப்போம். நோப். யாரும் மாட்டவில்லை.

வயது 28: இந்தியாவின் எந்த மூலைக்கும் போகத் தயார். ‘நம்மளவா’வா இருந்தா போதும்.

வயது 29: ஆம்பளையா இருந்தா போதும்.

வயது 30: இன்னும் மாப்பிள்ளை தேடிக்கிட்டுதான் இருக்காங்க.

இந்த மாதிரி case studiesகளைப் பார்க்கும்போதுதான் பக்பக்ன்னு இருக்கு. ஆனா, நம்ம கையில் என்ன இருக்கு? நல்லதே நடக்கும்னு ஒரு நம்பிக்கையில் வாழ்க்கையை ஓட்டிப் போகலாம்.

நீங்க என்ன சொல்றீங்க?

***

Read more...

Monday, January 6, 2014

பொங்கலோ பொங்கல் காதலோ காதல்.



பொங்கல் மேலான என் காதல் எப்போ ஆரம்பிச்சதுன்னு நினைச்சிப் பார்க்கறேன். மஞ்சளா இருந்தாலும் வெண் பொங்கல்னு சொல்றோமே, அதைப் பத்தின பதிவுதான் இது. சின்ன வயசுலே திருவல்லிக்கேணியில் மார்கழி மாத விடியலில் அம்மாவுடன் 2-3 கோயில்களுக்குப் போகும்போது சுடச்சுட கிடைக்கும். அடி கிடையாது. பொங்கல்தான். பார்த்தசாரதி கோயிலின் பெரிய கதவு திறக்கும்முன்னே அதிலுள்ள சின்ன கதவின் வழியாக ‘பக்தர்கள்’ உள்ளே போவார்கள். நாங்களும். அங்கேயும் அதே பிரசாதம்தான். அப்போதான் பொங்கல் காதல் வந்திருக்கணும். இன்னிய தேதி வரை எந்த வேளையில் எந்த உணவகத்திற்குப் போனாலும், பொங்கல் இருக்கான்னு ஒரு தடவை செக் பண்ணிடறதுதான். 

வெண் பொங்கல் இப்படி இருக்கணும், அப்படி இருக்கணும்னு எந்தவித விதியும் எனக்குக் கிடையாது. எப்பொங்கலும் சம்மதம். இதுதான் என் கொள்கை. திரவமா இலையில் ஓடக்கூடிய வடிவில் இருந்தாலும், கல்லுமாதிரி வெட்டி சாப்பிடக்கூடியதா இருந்தாலும், அல்லது நடுவாந்திரமாக ஓடியும் ஓடாமலும் இருந்தாலும் எனக்கு ஓகேதான். ஆனால்... என்ன ஆனால்? விதியே இல்லைன்னுட்டு, இப்ப என்ன ஆனால்? ஒரே ஒரு விஷயம் இருக்கு. ஸ்ரீராமஜெயம் மாதிரி ஒரு நாளைக்கு 108 முறை டயட், டயட்னு சொல்லிவந்தாலும், பொங்கல்னு வந்துட்டா டயட்டுக்கு கட்’தான். நெய். இது கண்டிப்பா வேணும்னு சொல்லிடுவேன். ஒரு ஸ்பூன், ரெண்டு ஸ்பூனெல்லாம் கிடையாது. பரோட்டா தின்னும் போட்டியில் சால்னா பக்கெட்டை வெச்சிட்டுப் போன்னு சொல்றா மாதிரி, நெய்யை பக்கத்திலேயே வெச்சிடும்பேன். பொங்கல் மேல் கிரிப் பிரதிட்சணம் செய்றா மாதிரி நெய்யை சுத்திசுத்தி ஊத்திட்டு, வெள்ளி மலையில் தேன் மழைன்னு வர்ணிச்சா, கேட்க ஆளிருக்காது. நானேதான் மெச்சிக்கணும். 

பொங்கலிலே ஒரு குறையிருந்தாலும், தரத்தினில் குறைவதுண்டோன்னு அன்னிக்கே கவிஞர் பாடியிருப்பதை கேள்விப்பட்டிருப்பீங்க... அது கண்ணதாசா ஜேசுதாஸா?.. சரி விடுங்க. யார் சொன்னா என்ன, மேட்டர்தான் முக்கியம். உலகிலேயே அழகான உணவுப்பொருள் என்னன்னு கேட்டா, நான் என்ன சொல்வேன்? வேறென்ன. பொங்கல்தான். ஏன்? அவ்ளோ அழகா இருப்பதால்தானே, திருஷ்டிப் பொட்டு போல், அங்கங்கே மிளகு போடுறோம். அழகான குழந்தைகளுக்கே ஒரு திருஷ்டிப் பொட்டுதான். ஆனா, பொங்கலுக்கு பல பொட்டுகள். இப்ப புரியுதா?

அமெரிக்கா போய் சமைக்கக் கத்துக்கும்போது, நான் கத்துண்ட முதல் டிஷ் என்னவாக இருக்கும்? நோ. மதிப்பெண்கள் கிடையாது. அது பொங்கல்தான். எல்லாப் பொருட்களையும் குக்கரில் போட்டு மூடி, விசில் வந்தவுடன் இறக்கினா ஆச்சு, இது சுலபம்தானே, அதுக்காகதான் இதை முதலில் கத்துண்டியான்னு கேட்டீங்கன்னா, அது தப்பு. பதிவின் தலைப்பை இன்னொரு முறை பாருங்க.

இவ்வளவு அருமையா சமைச்ச கைக்கு தங்க வளைதான் செஞ்சு போடணும்னு தமிழில் ஒரு வசனம் இருக்கு. இதே போல் ஆங்கிலத்தில் எனக்கு பிடிச்ச வசனம் - Everybody loves raymondன்ற தொலைக்காட்சித் தொடரில் வரும் தாத்தா சொன்னதுதான். உணவுப்பொருள் பெயரை மட்டும் மாத்தியிருக்கேன். Anyone who can cook பொங்கல் like this deserves a hillside full of heavenly scented marigolds and daffodils. அது சரி, பொங்கல் செஞ்சு போட்ட கைக்கு நீ என்ன போடுவேன்னு கேட்டா, அந்த கை மேலேயே ரெண்டு போட்டு, இன்னொரு கரண்டி பொங்கல் போடுன்னு சொல்வேன். 

நாளைக்கே நான் ஆட்சிக்கு வந்தா, என்னென்ன செய்வேன்?

* கல்யாணத்திற்கு பெண் பார்க்கும் படலத்தில், பஜ்ஜி/சொஜ்ஜிக்குப் பதிலாக பொங்கல்தான் போடணும்னு 110 விதியின் கீழ் ஒரு ஆணை போடுவேன். 
* ‘பையன்’ உணவகத்தில் பொங்கல் மட்டும் இலவசம்.
* திரைப்படங்களின் தலைப்பில் பொங்கல் சொல் வந்தால், சிறப்பு வரிவிலக்கு. உதா: 1000 பொங்கல் தின்ற அபூர்வ சிகாமணி, பொங்கலை மீட்ட சுந்தரபாண்டியன், பொங்கல் உனக்காக, பொங்கல் தேசம் ஆகியன.

எனது ஆட்சியின் தாரக மந்திரம்:

பொங்கல் நாமம் வாழ்க!
நாளை நமதே. பொங்கலும் நமதே!

பொங்கல் உடனான உங்க அனுபவத்தையும் பின்னூட்டத்தில் பகிர்ந்துக்கோங்க.

***

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP