Wednesday, September 29, 2010

எந்திரன் ரிலீஸன்று தினப்பலன்!

கலைஞர் குழுமத்தில் ஏதோவொரு தொலைக்காட்சி:

இன்று உலகெங்கிலும் உள்ள தமிழ் பேசும் நல்லுள்ளங்களுக்கு மிகவும் பொன்னான நாள். ஏழு கிரகங்களும் ஒரே வரிசையில் வந்தால் எப்படியொரு அதிசய, நல்ல தினமோ அதை விட மிகவும் அதிர்ஷ்டகரமான நாள். அதனால், ஒவ்வொரு ராசிக்கும் பலன் சொல்லாமல் இன்று மொத்தமாய் அத்தனை பேருக்கும் ஒரே பலன்தான்.

இன்று முழுவதும் நேர்மறையாக சிந்தித்து, நேர்மறையான வார்த்தைகளையே பேசவேண்டியது அவசியம். சூப்பர், அருமை, அற்புதம், வாய்ப்பே இல்லை - ஆகிய சொற்களை தொடர்ந்து சொல்வது சாலச்சிறந்ததாகும். அதை விடுத்து எதிர்மறையான வார்த்தைகளைப் பேசுபவர்களுக்கு கெட்டபயன் உடனேயே கிட்டும் என்பது உறுதி.

உங்களுக்கு உகந்த திசை - ‘மேல்’. மலை, மேடு, உயர்ந்த கட்டிடம் அல்லது கட்டவுட்டுகள் எதன் மீதாவது ஏறுவது நல்லது.

இன்று உங்களுக்கு உகந்த நிறம் - வெள்ளை. வெள்ளை நிறத்திலான பொருட்களை வாங்கி பயன்படுத்துவது மிகவும் நல்லது.

கற்சிலைகளுக்கு மட்டுமல்லாமல், மரச்சிலைகளுக்கும் அபிஷேகம் செய்ய அற்புதமான நாள் இன்று. உங்களுக்கு உகந்த வெள்ளை நிறத்திலுள்ள பால், தயிர், வெண்ணை ஆகியவற்றால் உயரமான மரச்சிலைகளுக்கு அபிஷேகம் செய்தால், ஏழேழு ஜென்மங்களுக்கும் உங்களுக்கு மோட்சம் கிட்டும். நீங்கள் தொலைக்காட்சியில் தோன்றும் வாய்ப்பும் அதிகமாகும்.

வெளியில் செல்ல முடியாத வயதானவர்கள், நோயாளிகள் வீட்டிலிருந்தபடியே சன் டிவி பார்த்தால் தனலட்சுமியின் அருள் கிட்டும்.

***********

ஜெயா டிவி:

இன்று உங்களுக்கு ரொம்பவே ஆகாத நாள். வரலாற்றில் கரித்துண்டினால் கூட பொறிக்கக்கூடாத நாள். இப்பேற்ப்பட்ட கெட்ட நாளில் தமிழர்கள் தங்கள் தோஷம் தீர்க்க செய்ய வேண்டிய செயல் - ஒன்றுமேயில்லை. வீட்டை விட்டு வெளியே வராமல், வீட்டிலேயே அடைந்து கடவுள் வழிபாடு செய்ய வேண்டியதுதான்.

அப்படி வீட்டிலிருக்கும்போது, தொலைக்காட்சி போன்ற மின்சார உபகரணங்களை பயன்படுத்தாமல் இருந்தால் உத்தமம்.

ஒரு வேளை கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் நோயாளிகளுக்காக தொலைக்காட்சி பயன்படுத்த வேண்டியிருந்தால், ஜெயா டிவியில் பக்திமாலை பார்த்தால், அடுத்த வருடம் தமிழர்களுக்கு நல்லாட்சி கிட்டும்.

********

மக்கள் டிவியில் ஒரு நிரந்தர அறிவிப்பு:

மக்கள் டிவி நேயர்கள் இன்றிலிருந்து ஒரு நாள் சன் டிவியும் ஒரு நாள் ஜெயா டிவியும் மாறிமாறி பார்க்கவும். அடுத்த தேர்தல் உடன்பாடு ஏற்படும்வரை இந்த அறிவிப்பு தொடரும். அதற்குப் பிறகே உங்களுக்கு நல்ல நேரமா, கெட்ட நேரமா என்பது கணித்து சொல்லப்படும்.

*****

Read more...

Sunday, September 26, 2010

தங்ஸ் கேட்கும் கேள்விகள்!

தொலைக்காட்சியில் எந்த நிகழ்ச்சியும் இல்லாமல், தொலைபேசியில் எந்த தோழியும் சிக்காமல் பொழுது போகலேன்னா, தங்ஸுக்கு என்னை கேள்வி கேட்பது ரொம்ப பிடிக்கும். அதுவும் எனக்கு பதில் தெரியாதுன்னு தெரிஞ்சும் கேட்கப்படும் கேள்விகள் அவருக்கு ரொம்ப இஷ்டம்!

*****

முதல் (1 of many) கேள்வி - - இந்த புடவை (அல்லது ஏதோ ஒரு ஆடை) எப்போ வாங்கினது சொல்லுங்க. பாப்போம்.?

கேக்கறது வாங்கிக் கொடுக்கறது, கொடுக்கறது வாங்கிப் போட்டுக்கறது மட்டுமே தெரிஞ்ச எனக்கு, எந்த ஆடைக்கும் அதன் ஆடைமூலம் (like ரிஷிமூலம்) நினைவிருக்காதுன்னு அவங்களுக்கு நல்லாவே தெரியும்.

பதில் தப்பாயிருந்தாலும் பரவாயில்லைன்னு - நாமதானே தி. நகர்லே வாங்கினோம் அல்லது சென்னை சில்க்ஸ்லே வாங்கினோம்னு சொல்லிட்டா - க்கும். நீங்க வாஆஆஆங்கிக் கொடுத்துட்டாலும்னு ஒரு புது ராகத்துலே இழுத்து பேசுவாங்க.

சரி சமாளிப்போம்னு - ஏம்மா, நீங்க புடவை ஒரு தடவையா வாங்கறீங்க? வாங்கிட்டு வந்ததை, 4 தடவை மாத்தறீங்க. ஒவ்வொரு தடவையும் எதை வாங்கறீங்க எதை மாத்தறீங்கன்னு நான் எவ்ளோ புடவையை ஞாபகம் வெச்சிக்கறது? - ன்னு கேட்டா, அவங்க - வாங்கின / வாங்காத / மாத்தின / மாத்தாத புடவைகள் எல்லாத்தையும் வரிசையா ஒண்ணு, ரெண்டுன்னு ஔவையார் மாதிரி வரிசைப்படுத்தி பாடி நம்மை இம்சைப்படுத்துவாங்க.

சரிசரி.. இதெல்லாம் நம்ம வீர வாழ்க்கையில் ஜகஜம்தானேன்னு நினைச்சிக்கிட்டு சூனாபானா மாதிரி போயிட்டே இருக்கவேண்டியதுதான்.

*****

அடுத்த (2 of many) கேள்வி - நம்ம கல்யாணத்தன்னிக்கு நான் என்ன வண்ண ஆடை போட்டிருந்தேன், சொல்லுங்க பாப்போம்?

அவ்வ்வ். இதுக்கு முதல் கேள்வியே பரவாயில்லைன்னு ஆயிடும்.

நல்ல கொளுத்துற வெயில் காலத்தில், ஒரு ச்சின்ன மண்டபத்துலே ஒரு ஐநூறு பேரை அடைச்சி வெச்சி, நடு நடுவே மின்சாரத்தை நிறுத்தி, வேர்க்க விறுவிறுக்க ஒருத்தியை(!) பக்கத்துலே நிக்க வெச்சி, கட்றா தாலியை - கொட்றா மேளத்தைன்னு சொல்லும்போது - உஃப்.. இருங்க மூச்சு வாங்குது - நான் ஆடை போட்டிருக்கிறேனான்னே பாக்க தோணாதபோது, பக்கத்தில் நிக்குறவ என்ன வண்ண ஆடை போட்டிருக்கான்னு எப்படி பாக்கறது சொல்லுங்க?

ஆனா, அதெல்லாம் சொன்னா அவங்க ஒத்துக்க மாட்டாங்க. அதனால் எனக்குத் தெரிஞ்ச நாலைஞ்சி வண்ணத்தை சொல்ல ஆரம்பிப்பேன். பச்சை? சிகப்பு? மஞ்சா? கண்டிப்பா இதுலே ஏதாவது ஒரு வண்ணம் சரியா இருக்கும்.

இப்படித்தான் பற்பல கேள்விகளுக்கு - choose the best answer - முறையில் வாழ்க்கை ஓடிட்டிருக்கு. CTBA கண்டுபிடிச்சவன் வாழ்க!!

*****

என்னங்க, இங்கே கொஞ்சம் வாங்க..

ஐயய்யோ! ஏதோ ஒரு கேள்வி கேக்கப்போறாங்க. நான் வெளியே ஓடிப் போகப் போறேன்.. என்னை ஆள விடுங்க. அடுத்த இடுகையில் சந்திப்போம்.

*****

Read more...

Wednesday, September 22, 2010

தென்றல் என்னை வெண்ணை என்ற கதை...

அதுக்கு முன்னால் சென்னை - தில்லி, சென்னை - மும்பை மார்க்கத்தில் பல முறை விமான பயணம் மேற்கொண்டிருந்தாலும், அன்றுதான் என் முதல் முதல் முதல் வெளிநாட்டுப் பயணம்.

எங்க வீட்டு ஆட்களெல்லாம் கதவருகில் நின்றுகொண்டிருக்க, எதிர், பக்கத்து, பக்கத்து-பக்கத்து, எதிர்-பக்கத்து இப்படி எல்லா வீட்டுலேயும் அவங்கவங்க ஜன்னலில் நிக்குறாங்க. என்னை வழியனுப்ப எவ்ளோ பேர் நிக்குறாங்க பாருன்னு பெருமையா சொன்னா - பின்னாடியிருந்து ஒரு குரல் - "நீ எப்ப ஊரை காலி பண்ணுவேன்னு எல்லாரும் காத்திருக்காங்க. அவ்ளோதான்".
சரி சரின்னு சொல்லி ஒரு வழியா கிளம்பி விமான நிலையத்திற்குப் போனேன்.

ஒரே ஒரு ராஜ்ய சபா சீட்டுக்காக அண்ணா அறிவாலயத்திலிருந்து எப்போ கூப்பிடுவாங்களோன்னு காத்திருக்கும் மருத்துவர் போல், நானும் ‘பே’ன்னு வேடிக்கை பார்த்துக் கொண்டு, என்னைக் கூப்பிடுவாங்கன்னு செக்-இன் வரிசையில் நின்றிருந்தேன்.

சிறிது நேரம் கழித்து என் முறையும் வந்தது.

கவுண்டரில் (counter) அந்தப் பக்கம் அழகான பெண். அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் மொசைக் தரையில் ஊற்றிய நெய் மாதிரி அவ்ளோ வழுவழு.

கவுண்டரின் (counter) இந்தப் பக்கம் நான். அந்தப் பெண்ணைப் பார்த்து பேசிய ஒவ்வொரு வார்த்தையும் தென்றலைப் போல் தவழ்ந்து வந்தது. சரி சரி. ஒத்துக்கறேன். வெறும் காத்துதான் வந்தது.

அவங்க சொன்னாங்க - "குடுங்க".

ரொம்ப நாளைக்கு முன்னாடியே மனசிலிருந்த கசடுகளையெல்லாம் வெளியே போட்டுவிட்ட காரணத்தால், அதற்கு தப்பர்த்தம் எதுவும் செய்யாமே, பயணச்சீட்டை எடுத்து கொடுத்தேன்.

வெண்டைப் பிஞ்சு விரல்களால் அவங்க மெல்ல மெல்லமாய் கணிணியில் தட்டச்சிய பிறகு, ஒரு ரெண்டு நிமிஷம் கழிச்சு கேட்டாங்க.

"நீங்க சிட்டிசனா?"

பொறந்து, வளர்ந்து, படிச்சு (சரி சரி..) பள்ளிக்கு போய், (ஒரு வழியா) வேலைக்கும் போய் இப்படி வெளிநாட்டுக்குப போகும்போதுதானா இப்படிப்பட்ட சந்தேகம் வரணும்?

நல்லா நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு - நம்ம கேப்டன், அர்ஜுன், ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பலருக்கும் மனசுக்குள் வந்தேஏஏஏ மாதரம் சொல்லிட்டு - "எஸ் மேடம். நான் சிட்டிசந்தான்".ன்னு சொன்னேன்.

மறுபடி ரெண்டு நிமிஷம் - அதே கீபோர்ட் - அதே வெண்டைக்காய்.

"நீங்க அமெரிக்கன் சிட்டிசனா?"

மனசிலிருந்த கேப்டனுக்கு கோபம் வர ஆரம்பிக்குது. மெல்லமா இடது காலை தூக்கி பக்கத்திலிருந்த சுவற்றில் வைத்து குதிக்க தயாராகிறார்.

அமெரிக்காவா... அந்த பறங்கியர் தேசத்துக்கு நான் சிட்டிசனா.. நெவர்.. நோ..

"இல்லை மேடம்"

"அப்போ க்ரீன் கார்ட் ஹோல்டரா?" - அடுத்த நெய் - வழுவழு.

அதுக்கெல்லாம் பத்து - பன்னெண்டு வருஷம் ஆகும்னு சொன்னாங்களே. இல்லையா? ஒரு வேளை அதுக்கு இங்கேயே விண்ணப்பம் கொடுக்கறாங்களோ என்னவோ? ஒண்ணும் புரியலியே? சரி ஏதோ ஒண்ணு. இல்லைன்னு சொல்லி வைப்போம்.

"இல்லை மேடம். எனக்கு பத்து - பன்னெண்டு வருஷமெல்லாம் அங்கே இருக்கற மாதிரி திட்டம் இல்லே. ஒரு வேளை அந்த பச்சை அட்டை சீக்கிரம் கிடைக்க நீங்க ஏதாவது ஏற்பாடு பண்ணீங்கன்னா, எனக்கு ஓகேதான்".

” நோ நோ. அதெல்லாம் இங்கே கொடுக்க முடியாது. ”

”சரி மேடம். பின்னே நான் ஊருக்கு போக இன்னும் வேறே ஏதாவது கொடுக்கனுமா? இல்லே நான் போகட்டா? விமானத்துக்கு நேரமாகுது.”

"பாஸ்போர்ட்டை குடுறா வெண்ணை"

******

ஹிஹி. அதுவரை உள்நாட்டிலேயே பயணம் செய்ததால், பாஸ்போர்டை எடுத்துக் கொடுக்கணும்றதே மறந்து போச்சு. பத்திரமா உள்ளே வெச்சிருந்தேன். அப்புறமென்ன, கடகடன்னு வேலையை முடிச்சிட்டு, விமானத்தைப் பிடிக்க உள்ளே ஓடிப் போனேன்.

இதுதாங்க தென்றல் என்னை வெண்ணை என்று சொன்ன கதை..

*****

Read more...

Wednesday, September 15, 2010

விளையும் இலக்கியவாதியை...

விளையும் இலக்கியவாதியை...

அக்கம்பக்கம் பேசியதிலிருந்து
ட்விட் போடுவேன்...

இருபது ட்விட் ஆனபிறகு அதை வைத்து
இடுகை போடுவேன்...

பல இடுகைகள் போட்டபிறகு அதை வைத்து
புத்தகம் போடுவேன்...

ஓரிரு புத்தகங்கள் போட்டபிறகு அதை வைத்து
ஒரு தொகுப்பு போடுவேன்..

பல தொகுப்புகள் போட்டபிறகு..
போட்டபிறகு...

உள்ளேயிருந்து குரல் கேட்டது...

அதைத் தூக்கி பரண் மேலே போடுங்க.

இப்போதைக்கு இந்த தோசையை வாயிலே போடுங்க..
வயிறாவது ரொம்பும்..

விளையும் இலக்கியவாதியை
முளையிலே கிள்ளிட்டாங்க!

**********

இது கண்டிப்பா நான் இல்லை!!!

கஷ்டப்பட்டு யோசித்து(!!)
ஒரு இடுகையை வெளியிட்டேன்...

இன்ட்லியிலும் தமிழ்மணத்திலும்
இணைத்தேன்...

புது இடுகைன்னு டிவிட்டரிலும், பஸ்சிலும்
புலம்பினேன்...

ஆர்குட்டிலும், முகநூலிலும்
அலறினேன்.

நெருங்கிய நண்பர்களுக்கு
தொலைபேசி கூறினேன்.

தூரத்து சொந்தங்களுக்கு எஸ்.எம்.எஸ்
தூது அனுப்பினேன்..

யாஹூ, கூகிள் குழுமங்களுக்கு
யாராவது பாருங்கப்பான்னு மின்னஞ்சல் செய்தேன்..

மற்றவர்களுக்கு பின்னூட்டம் போடும்போது
மறக்காமல் இடுகையின் உரலையும் கொடுத்தேன்...

இவ்வளவும் செய்த பிறகு,
இருபதே நிமிடத்தில் என்
இடுகையை தூக்கிவிட்டேன்...

யாராவது screenshot எடுத்து
போடமாட்டாங்களான்னு பார்க்கிறேன்.

அப்படியாவது bigshot
ஆகமுடியுதான்னு யோசிக்கிறேன்.


*****

Read more...

Saturday, September 11, 2010

எந்திரன் வர்றதுக்குள்ளே என்னென்ன பண்ணனும்?

புயல், மழைக்காலங்களில் அவசியமான பொருட்களை முன்னாடியே வாங்கி வெச்சிக்கற மாதிரி, எந்திரன் வர்ற தேதி தெரிஞ்ச இந்த காலக்கட்டத்தில் நாம முன்னெச்சரிக்கையா என்னென்ன செய்யணும்னு தெரிஞ்சிக்கணுமா? நீங்க சரியான இடத்துக்குதான் வந்திருக்கீங்க.

*****
எந்திரன் வர்றதுக்குள்ளே... நிறைய படிச்சி நல்ல server administrator ஆயிடணும்...
விமர்சனம் அடிச்சி அடிச்சி நிறைய servers தொங்கிடப் போகுதே..

எந்திரன் வர்றதுக்குள்ளே... நிறைய மூச்சுக் காற்றை உள்ளே சேமிச்சி வைக்கணும்...
தாத்தா ஐஸோட ஆடும்போது (கபர்தார்!!) நிறைய பெருமூச்சு விடவேண்டியிருக்குமே...

எந்திரன் வர்றதுக்குள்ளே... புது சொம்பு வாங்கி பஞ்சாயத்து பண்ண கத்துக்கணும்...
நல்லாயிருக்கு / இல்லே அப்படின்னு எல்லாருக்கும் அடிச்சிக்கும்போது உதவுமே...

எந்திரன் வர்றதுக்குள்ளே... ஒரு இலக்கியவாதியாயிடணும்...
அப்போதானே பின்னவீனத்துவ / முன்னவீனத்துவ விமர்சனம் எழுதமுடியும்...

எந்திரன் வர்றதுக்குள்ளே... உலக திரைப்படமெல்லாம் பாத்துடணும்...
அப்போதானே எங்கேயிருந்தெல்லாம் சுட்டுருக்காங்கன்னு சொல்ல முடியும்...

எந்திரன் வர்றதுக்குள்ளே... நிறைய மாடுகளை வாங்கணும்...
பால் அபிஷேகம் செய்றதுக்கு எக்கச்சக்க பால் வாங்குவாங்களே...

எந்திரன் வர்றதுக்குள்ளே... இமயமலை போயிட்டு வந்துடணும்...
அப்புறம் அங்கே விகடன், குமுதம் நிருபர்களெல்லாம் வந்துடுவாங்களே...

எந்திரன் வர்றதுக்குள்ளே.. உலக இசையை கரைச்சிக் குடிக்கணும்...
அப்போதான் ‘இசை ஆய்வாளர்கள்’ எழுதறதை புரிஞ்சிக்க முடியும்...

எந்திரன் வர்றதுக்குள்ளே.. ஒரு பெரிய்ய்ய புது ஃப்ரிட்ஜ் (fridge) வாங்கணும்...
சட்டம் ஒழுங்கு கெட்டுப் போகாமே இருக்கணுமா இல்லையா?

*****

பிகு: இந்த மாதிரி இடுகைக்கு பிகு போட்டாலே என்ன சொல்லுவாங்கன்னு உங்களுக்கே தெரியுமே? நானும் அவரோட ரசிகந்தான். அவர் படம் முதல் நாளே போய் பாத்துடுவேன். அப்படி இப்படி.. ஹிஹி.. நான் மட்டும் அதை சொல்லக்கூடாதா என்ன?

*****

Read more...

Wednesday, September 8, 2010

அந்தப் பெண்ணை மறக்க முடியவில்லை!!!



ஒரு சின்ன கொசுவத்தி.

மதியம் 3 மணி. தலைவர் எங்க குழுவினரை கூப்பிட்டு பேசுறார்.

"நாளைக்கு காலையில் க்ளையண்டுக்கு இந்த வேலையை முடிச்சி குடுக்குறதா சொல்லியிருக்கேன். நீங்க எல்லோரும் இன்னிக்கு எவ்ளோ நேரமானாலும் வேலை செய்து முடிச்சிட்டுத்தான் போறீங்க. சாப்பாடு சொல்லிடறேன். நம்ம ஆபீஸ் வண்டியிலேயே எல்லாரையும் வீட்டில் விட சொல்லிடறேன்".

சொல்லிட்டு அவர் கிளம்பி போயிட்டார்.

4 மணி.

அவங்க வர்றாங்க.

சத்யா (நான்தான் குழுத்தலைவன்) - "என் புருஷனுக்கு உடம்பு சரியில்லை. நான் போய்த்தான் பாத்துக்கணும். என் பங்கை நான் காலங்கார்த்தாலே வந்து முடிச்சு கொடுத்துடறேன். பிரச்சனை எதுவுமேயில்லை".

நான் - "என்னம்மா, தலைவர் அப்படி சொல்லிட்டு போயிருக்காரே?"

அவங்க - "நான் போயே ஆகணும். நான்தான் நாளைக்கு வந்து வேலை செய்யறேன்னு சொல்றேன்லே. கண்டிப்பா என்னால் இந்த டெலிவரி நிக்காது".

நான் - "சரி, பாத்து செய்ங்க".

அவ்ளோதான். கிளம்பி போயிட்டாங்க.

அடுத்த நாள் காலை 11 மணி. இன்னொரு கூட்டம்.

அவங்க வேலை இன்னும் முடியல.

தலைவர் கேக்குறாரு - "ஏன்?"

அவங்க சொல்றாங்க - "நேத்து சாயங்காலம் சும்மா வெளியே போனா நல்லாயிருக்குமேன்னு நான் சொன்னேன். சத்யாதான் சரி, போயிட்டு வா. நாளைக்கு வேலை செய்தா போதும். ஒண்ணும் பிரச்சினையில்லேன்னு என்னை வீட்டுக்கு அனுப்பிட்டாரு. இல்லேன்னா நான் ராத்திரி முழுக்க உக்காந்து இந்த வேலையை முடிச்சிருப்பேன்".

நினைச்சி பாருங்க. என் நிலைமை எப்படியிருக்கும்னு. தலைவர் அந்த கூட்டத்தில் எதுவுமே கேக்கலை. அதற்குப் பிறகும். கேள்வி கேட்டிருந்தால் பதில் சொல்லிட்டு நிம்மதியாயிருப்பேன் - அதைக் கேட்காததினால், அடுத்த ஒரு வாரம் வரைக்கும் தேவையில்லாத மனக்கஷ்டம். அந்த நிறுவனத்திலிருந்து கிளம்பறத்துக்கு அந்த நிகழ்ச்சி ஒரு முக்கிய காரணம்.

அதுக்கப்புறம் நடந்ததெல்லாம் வரலாறு. (இப்படி சொன்னா, கொசுவத்தி முடிஞ்சி நிகழ்காலத்துக்கு வந்துட்டோம்னு அர்த்தம்).

********

இந்தியாவில் எங்க அலுவலகத்தில், ஆளெடுக்கும் பணியிலிருக்கும் ஒருவர் என்னிடம் -

"சத்யா, உங்க குழுவுக்கு ஆள் ரெண்டு பேர் வேணும்னு கேட்டிருக்கீங்க. யார், எப்படிப்பட்ட ஆள் வேணும்?"

நான் - " வேலையே செய்யத் தெரியலேன்னாக்கூட பரவாயில்லை. எனக்கு ஆம்பளைங்கதான் வேணும். பொண்ணுங்களே வேணாம்."

அவர் - "ஏன், பொண்ணுங்க மேலே அவ்ளோ வெறுப்பா?"

நான் - "உங்களுக்கு தமிழ் தெரியாது. தெரிஞ்சிருந்தா நாளைக்கு பூச்சாண்டியை படிங்கன்னு சொல்லியிருப்பேன்".

******

Read more...

Thursday, September 2, 2010

ஒரே ஒரு நிமிடம் ஒரு சின்னஞ்சிறு குழந்தைக்காக ஒதுக்கமுடியுமா?

ஊர் விட்டு ஊர் வந்து வேலை செய்யும் எங்களைப் போன்றவர்களுக்கு பக்கத்தில் இருப்பவர்களே சகோதரர்கள், சகோதரிகள். அவர்கள் மகிழ்ச்சியே எங்கள் மகிழ்ச்சி. அவர்கள் கஷ்டமே எங்கள் கஷ்டம். ஊரில், வீட்டினருக்கு தெரியாத எங்களுடைய கஷ்ட நஷ்டங்கள், இங்கிருப்பவர்களுக்கு தெரியும்.


பக்கத்தில் இருக்கும் ஒரு சகோதரிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு இதயத்தில் சிறு பிரச்சினை. ஒரு வருடத்தில் அந்த பிரச்சினை தானாகவே சரியாகிவிடும் என்று மருத்துவர்கள் கூறினாலும், அவ்வப்போது அக்குழந்தையை மருத்துவமனைக்கு கூட்டிச் சென்று பல்வேறு பரிசோதனைக்கு ஆளாக்குகிறார்கள்.


வயதானவர்களுக்கே அடிக்கடி மருத்துவமனை, பரிசோதனை என்றால் வேதனையாக இருக்கும். இதுவோ சின்னஞ்சிறு குழந்தை. வெளியில் சிரித்துக் கொண்டு பேசினாலும், அந்தக் குழந்தையின் பெற்றோர் மனதுக்குள் படும் வேதனைகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது. மருத்துவ ரீதியாகவோ பண ரீதியாகவோ இங்கு எந்த பிரச்சினையும் இல்லை. உணர்வு ரீதியாக ஆதரவு தர மட்டும் எங்களால் இயன்ற அளவு முயற்சி செய்கிறோம்.


ஒரு முறை எனக்கு மிகப்பெரிய பிரச்சினை வந்தபோதும் சரி, அதற்குப் பிறகும் எப்போது கோயிலுக்குப் போனாலும், கடவுளிடம் எதுவும் கேட்காமல், சும்மா அவரை வேடிக்கை பார்த்துவிட்டு வருவது என் வழக்கம். இப்போது இந்த சின்னஞ்சிறு குழந்தையின் நலனுக்காக அவரிடம் வேண்டிக் கொள்கிறேன்.


அதே நோக்கத்துடன் உங்களுக்கும் ஒரு விண்ணப்பம் வைக்கிறேன். ஒரே ஒரு நிமிடம் உங்களால் ஒதுக்க முடிந்தால், இந்த குழந்தைக்காக பிரார்த்தனை செய்யுமாறு கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.


எல்லோரும் (அட்லீஸ்ட் எனக்குத் தெரிஞ்சவங்க!) இன்புற்று இருப்பதன்றி வேறொன்றறியேன் பராபரமே!

மிக்க நன்றி.

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP