Thursday, August 14, 2014

KBC - ஒரு கொசுவர்த்தி பதிவு.


KBCயின் அடுத்த சீசனுக்கான விளம்பரம் ‘Neighbours' மிகமிக அட்டகாசம். சரியான விடை சொல்லும் அந்த இஸ்லாமியரின் நடிப்புக்காக நிறைய முறை அந்த விளம்பரத்தை பார்த்தாகிவிட்டது.




இப்போது KBCயைப் பற்றிய ஒரு கொசுவர்த்தி.

கிமு. மன்னிக்க. கிபி 2000ம் ஆண்டெல்லாம் நான் வடஇந்தியாவில் குர்காவ்னில் இருந்த காலம். ஊரே மிட் நைட் மசாலா பார்த்துவிட்டு தூங்கப் போகும் நேரத்தில் (இரவு 1மணி) நாங்கள் 3-4 நண்பர்கள் மட்டும் அலாரம் வைத்து எழுந்து ஆபீசுக்குக் கிளம்பும் நேரம். ஆமாம். எங்கள் வேலை நேரம் இரவு 2 முதல் முற்பகல் 10மணி வரை. ஆஸ்திரேலியா மற்றும் சீனாவுக்கு மென்பொருள் சப்போர்ட் செய்யும் வேலை. ஹிஹி வேலையெல்லாம் அவ்வளவு இருக்காது. (அப்போதுமா? யெஸ். எப்போதுமேதான்!!).

பளபளவென குளித்து 2மணிக்கு ஆபீஸ் போனதும், அரை மணி நேரத்தில் வேலையை முடித்துவிட்டு, ராகா.காம் மற்றும் இதர தளங்களில் பாட்டு கேட்க ஆரம்பித்துவிடுவோம். (யூட்யூபெல்லாம் அப்போ கிடையாது). பெரும்பாலும் நண்பர்கள் கேட்டும் பாடல் சாஜன் (மற்றும் இதர) படத்தில் வரும் காதல் தோல்விப் பாடல்கள். (சிலருக்கு ஒரு தலைக் காதல்; பலருக்கு தறுதலைக் காதல். ஆனா, ரெண்டுமே தோல்விதான்!!).  அப்படியே மற்ற இரவு நேர வேலையாட்களுடன் வம்பு பேசி பொழுதை ஓட்டிவிடுவோம்.

அப்போதான் வந்தது இந்த KBC. முதல் சீசனில் Registration செய்ய கடுமையான போட்டா போட்டி. அவர்கள் கொடுத்த எண்ணில் அழைத்து, கேட்கும் 1 கேள்விக்கு சரியான விடை அளித்துவிட்டால், நம் பெயரும் குலுக்கலில் சேர்த்துக் கொள்வார்கள். பிறகு போட்டுக்கு அழைக்க வாய்ப்பு கிடைக்கலாம், கிடைக்காமல் போகலாம். அது தனிக்கதை. ஆனால் அந்த எண்ணை எப்போது அழைத்தாலும் இணைப்பு கிடைக்கவே கிடைக்காது.

நாங்க ஆபீஸில் காலை 2.30 மணி முதல் சும்மாதானே இருப்போம். இருக்கும் 4-5 தொலைப்பேசிகளில் தொடர்ச்சியாக KBCன் எண்ணை அழைத்துக் கொண்டேயிருப்போம். அந்த நேரத்தில் கூட சில சமயங்களில்தான் இணைப்பு கிடைக்கும். அப்படி இணைப்பு கிடைத்த நேரங்களில் கேட்கும் கேள்விக்கு சரியான விடை தெரிந்திருக்க வேண்டும். ஸ்ஸப்பா. எவ்வளவு டென்சன்றீங்க. பல முறைகள் சரியான பதில் அளித்தும், ஒரு முறை கூட நேர்முகப் போட்டிக்கு நாங்கள் தேர்வாகவில்லை.

அந்த காலகட்டத்தில் நான் தொலைக்காட்சியில் பார்த்த இரண்டே இரண்டு தொடர்கள். மெட்டி ஒலி & KBC. KBC பொது அறிவு வளர்ச்சிக்காக. மெட்டி ஒலி? சரி சரி. அதுவும் பொது அறிவு வளர்ச்சிக்காகதான்.

அமிதாப் அங்கிளின் விசிறியாக நாங்கள் பல பேர் மறுபதிவு (Renew) செய்து கொண்ட காலம். அவரின் மேனரிசம், சிரிப்பு, பெண் போட்டியாளர்களிடம் வழியும் வழிசல்கள், போட்டிக்கு நடுவில் போட்டியாளர்களிடம் அவர் போட்டு வாங்கும் கதைகள் / சம்பவங்கள் எல்லாமே சூப்பர்ப். 90% கேள்விகளுக்கு (வீட்டில் உட்கார்ந்து) சரியான விடை தெரிந்ததால், (போட்டிக்கு அழைத்தால்!) ஒரு கோடி ஜெயித்து, சொந்தக் கார் வாங்கி அதில்தான் ஆபீஸ் போகணுமென்று (அதே வேலை செய்ய!!) சபதம் போட்ட இரவுகள்.

முதல் இரண்டு சீசன்களில் (அவை மட்டுமே நான் பார்த்தவை!) தமிழ்நாடு, தமிழ் சினிமா தொடர்பான கேள்விகள் பல கேட்கப்பட்டன. அதில் இன்றும் நினைவில் இருக்கும் ஒரு கேள்வி. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான் விரும்பி, நடிக்க முடியாமல் போன பாத்திரம் என்ன? பதில்: அனைவருக்கும் முன்னர் நான் கத்திய சரியான விடை ‘பெரியார்’.

அதன் பிறகு ஊர், வேலை, விருப்பம் அனைத்திலும் மாற்றம். தொடர்ந்து ஷாருக், மறுபடி அமிதாப், இந்தப் பக்கம் சரத்குமார், பிரகாஷ்ராஜ், சூர்யா இப்படி பலர் இந்த (அல்லது இதே மாதிரியான) நிகழ்ச்சிகளை நடத்தினாலும், எதையும் ஒரு எபிசோட் கூட சரியாகப் பார்த்ததில்லை. காரணம்? அதில் அமிதாப் இல்லையே. அதுதான். யூட்யூப் வந்தபிறகும் பார்க்கத் தோன்றியதில்லை.

ஆனால்..
ஆனால்..

ஒரு முறை ட்விட்டரில் கிடைத்த இந்த ஒரு எபிசோட்’ன் லிங்க். இதை மட்டும் மறக்கவே முடியாமல், கடந்த 2 வருடங்களில் 4-5 முறை முழு 1மணி நேரத்தையும் பார்த்திருக்கிறேன். யாருக்காக? அது யாருக்காக? நம்ம சின்னக்குயில் சித்ரா’வுக்காகதான். அதுவும் மலையாள வெர்ஷன். நடத்துபவர் சுரேஷ் கோபி. அவர் நடத்தும் இதே நிகழ்ச்சியின் மற்ற எபிசோட்களையும் பார்த்ததில்லை. ஆனால் சித்ராவுடன் அவர் பேசி நடத்தும் விதம். Simply Wow. சித்ரா சேச்சியிடம் அவர் (மற்றும் மலையாளிகள்) வைத்திருக்கும் பாசம், அக்கறை, அதை அவர் சரியாக வெளிப்படுத்தும் விதம், அனைத்தும் Extraordinarily beautiful. நிறைய பேர் பார்த்திருக்கலாம். இல்லையென்றால், சித்ராவை பிடிக்குமென்றால் (பிடிக்காதவங்க யாராவது இருப்பாங்களா என்ன?) ஒரு முறை பார்க்கலாம்.



அவ்வளவுதான் பதிவு. இந்த நிகழ்ச்சியைப் போலவே நிஜ வாழ்க்கையிலும் இந்த மனைவி(கள்!), கேள்விகளைக் கேட்ட பிறகு, நமக்கு 4 ஆப்ஷன்களைக் கொடுத்தால் எப்படி இருக்கும்? ஆனா கொடுக்க மாட்றாங்களே? எதைக் கேட்டாலும் objective answerல்தான் பதில் சொல்லணுமாம். நம்மால் என்னதான் பதில் கொடுக்க முடியும்? எதைச் சொன்னாலும் திட்டு. ம்ம்ம்ம்.. மிடியல.

****

Read more...

Sunday, August 10, 2014

வண்டி வண்டி மிதிவண்டி...


இந்த வருடம் ஏப்ரல் மாதம் வரை கிட்டத்தட்ட ஒரு வருடம் அலுவலகத்திற்கு மிதிவண்டியில் போன அனுபவத்தில் எழுதும் பதிவு. ஒரு வழியில் 5கிமீ ஆக தினமும் 10கிமீ அலுவலகத்திற்கு மட்டும். (காலையில் உடற்பயிற்சிக்கு ஓட்டியது தனிக் கணக்கு).

ட்விட்டரில் நாம் சும்மா ‘மேலே-கீழே’ arrow அழுத்தி படிச்சிட்டு போயிட்டேயிருந்தாலும், யாராவது ஒருவர் நம்மை ஏதாவது ஒரு வண்டியில் ஏற்றி தரதரன்னு இழுத்துக்கிட்டே போயிடுவாங்க. அதைப் போலவே, சாலைகளிலும் நடக்கும். நாம பாட்டுக்கு ‘ரண்டக்க ரண்டக்க’ பாடிட்டே போயிட்டிருந்தாலும், நம்மைத் தாண்டி Left turn  எடுப்பவர்கள், ஒரு நொடிகூட பொறுக்காமல், நமக்கு முன்னால் போய் டக்குன்னு திரும்பிடுவாங்க.

பலமுறை இப்படி திடீர்னு ப்ரேக் போடமுடியாமல் நானும் அவங்க கூடவே இடது பக்கம் திரும்பி, பக்கத்து கட்டிடத்தில் / கடையில் நுழைந்திருக்கேன். வெயிலில் வேர்க்க விறுவிறுக்க சைக்கிளோடு கட்டிடத்தில் நுழையும் என்னை, கூரியர்காரன்னு நினைச்சி அங்கிருக்கும் காவலாளி திட்டியிருக்கான். டேய், அந்த வண்டியினால்தான் இப்படி இங்கேல்லாம் நுழைய வேண்டியதாயிடுச்சுடான்னு சொல்லி, திரும்பி, வெளியே வந்து, வண்டி ஓட்டி.. ஸ்ஸ்ஸப்பா...!!!

மிதிவண்டி ஓட்டுவதால் இன்னொரு வசதி என்னன்னா, நீங்க 'Invisible' ஆயிடலாம். திகைக்காதீங்க. நிஜம்தான். மிதிமிதிமிதிச்சி வண்டி ஓட்டிவரும் உங்களை யாருக்குமே தெரியாது. பெரிய பேருந்து மட்டுமல்ல, சாலையைக் கடப்பவர்களும் உங்களை கண்டுக்க மாட்டாங்க. தூரத்தில் வரும்போதே தெரிஞ்சிடும், இவன் கடக்கப் போகிறான், ஆனா நாமதான் வேகமா வர்றோமே, நம்மை போகவிட்டுத்தான் அவன் போவான்னு நினைச்சி தைரியமா வந்தாலும், அதுவரை பெரிய வண்டிகளுக்காகக் காத்திருந்தவன், சடாரென்று சாலையில் இறங்கிவிடுவான். கடைசி நொடியில்தான் இப்படி ஒரு ஜந்து, இப்படி ஒரு மிதிவண்டியில் வருதுன்னு பார்த்து, அப்படி இப்படின்னு டான்ஸ் ஆடி முடிப்பதற்குள்.. டூ லேட். இதே போல் இது வரை நான் இடித்தவர்கள் எண்ணிக்கை - நான்கு.

பெங்களூரில் ( நான் இருந்த Whitefieldல்) கடற்கரை இல்லையே என்று மக்கள் கவலைப்படக்கூடாதென்று சாலையோரம் குவியும் மணலை BDA எடுப்பதேயில்லை. நானும் கிட்டத்தட்ட ஒரு வருடம் மிதிவண்டியில் அலுவலகத்திற்குப் போனேன். கடற்கரையில் வண்டி ஓட்டிய அனுபவம்தான். சாலையிலும் போகமுடியாது, ஓரத்திலும் போகமுடியாது. வேறு வழி? நடைபாதையில் ஏறிவிட வேண்டியதுதான். ஆனா, அங்கேயும் அடிதடிதான். பைக்கில் வர்றவன் ‘Right of way’ கேட்டு ஒலிப்பானை விடாமல் அடிப்பான். டேய். நடைபாதையிலுமாடா உங்க அட்டகாசங்கள்னா? பெங்களூரின் சிறப்பு அம்சமே நடைபாதையில் பைக் ஓட்டுவதுதான் என்றான்.

அப்பப்போ என்ன ஆகும்னா, கிட்டத்தட்ட அரை கிமீ நடைபாதையில் வண்டி ஓட்டி வந்தபிறகு, சரியாக சாலையில் இறங்குமிடத்தில் ஒரு காவலர் நின்றிருப்பார். எல்லாருக்கும் டிக்கெட். புடிங்க சார். புடிச்சி உள்ளே போடுங்க சார் அவங்களை. என்னை மட்டும் ‘போங்க, போங்க’ என்று அனுப்பிவிடுவார். வாழ்க மிதிவண்டி.

அதிகமான போக்குவரத்து
அலைபாயும் மக்கள்
சாலையில் கல், மண், தூசு

இப்படி எவ்வளவோ பிரச்னை இருந்தாலும்
மிதிவண்டி ஓட்டுபவர்களுக்கு

சிக்னல் கிடையாது
Wrongsideலும், Onewayயிலும் தைரியமாகச் செல்லலாம்
நடைபாதையில் போகலாம்
வண்டியை அநாயசமாக தூக்கி தடைகளைக் கடக்கலாம்
கொழுப்பு குறைப்பு

எல்லாவற்றிற்கும் மேலாக

வாரம்தோறும் விலையேற்றும் BMTC இருக்கும் நகரத்தில் மிதிவண்டி ஓட்டி அலுவலகம் போனது ஒரு நல்ல அனுபவமே.

***





Read more...

Sunday, August 3, 2014

நண்பர்கள் தின வாழ்த்துகள்.


அமெரிக்காவில் இருந்தபோது நடந்த ஒரு சம்பவம்.

ஒரே குழுவில் இருந்த நாங்கள் மூவரும் நண்பர்கள் ஆனோம். வாரயிறுதிகளில் சேர்ந்து ஊர் சுற்றுவது, கடை கண்ணிகளுக்குப் போவது என பொழுது போக்கிக் கொண்டிருந்தபோது, ஒரு நண்பர் வேலை & இடமாற்றத்தால் வேறொரு ஊருக்குச் சென்றார். அடுத்து வந்த ஒரு நீண்ட வாரயிறுதியில் எங்கள் இரு குடும்பத்தையும் அவர் ஊருக்கு அழைக்க, அவர் குழந்தைகளுக்கு பரிசுகள் வாங்கி நாங்களும் பயணப்படத் தயாராக இருந்தோம். இங்குதான் George Orwell வருகிறார்.

All Friends are equal, but some Friends are more equal than others-ன்னு சொன்னாரே, அவர்தான்.

இங்கிருந்த மற்றொரு நண்பரின் மனைவியும், போகவிருந்த ஊரிலிருந்த நண்பரின் மனைவியும் மிகச்சிறந்த நண்பிகள். தங்கள் நட்பை கற்பைப்போல எண்ணக்கூடியவர்கள். அதில் உண்டான Possessiveness, மற்ற எவரையும் தங்கள் நட்புக்கிடையில் சேர்க்காத பண்பினைக் கொண்டவர்கள். அப்படி இருக்கும்போது, less equalஆக இருந்த என்னை, இந்தப் பயணத்திலிருந்து எப்படி ‘கட்’ செய்வது? அதைத்தான் த்ருஷ்யம் போல் ஒரு MasterPlan செய்து முடித்தார்கள். அது என்ன ப்ளான் என்பதுதான் இந்தப் பதிவு.

நாள் முழுக்க நடந்த இந்த ஆபரேஷன் பற்றி, துவக்கத்தில் எனக்குத் தெரியவில்லை. ஆனால், ஒரு சில மணி நேரங்களிலேயே தெரிந்தது. (’திடுக்’ திருப்பங்களுடன் எவ்வளவு ராஜேஷ்குமார் பாக்கெட் நாவல் படித்திருப்போம்!!).

அடுத்த நாள் காலை 6 மணிக்குக் கிளம்பி 1மணிக்கு நண்பர் வீட்டில் மதிய உணவு என்று ப்ளான். முந்தைய நாள் நடந்தவை:

9மணி: லோக்கல் நண்பர் அழைத்து - ஏம்பா, நீ கண்டிப்பா வர்றேயில்லே?. அட ஆமாம்பா. கண்டிப்பா போறோம் - இது நான்.

10மணி: லோக்கல் நண்பர் மனைவி அழைத்து: நாளைக்கு போற வழியில் பனி பெய்யும் போலிருக்கு. எப்படிப் போறோம்னு தெரியல. நான்: அட 30% பனிதான். ஒண்ணும் பிரச்னையில்லை. போகலாம்.

11மணி: ஊரிலிருக்கும் நண்பர்: குழந்தைக்கு உடம்பு சரியில்லை. இங்கு வந்தால் உன் குழந்தைக்கும் அது பரவிவிடும். எதுக்கும் நான் மாலை confirm செய்றேன்.

12மணி: லோக்கல் நண்பர்: எனக்கு ஆபீஸ் வேலை வரும் போலிருக்கு. நாம் அடுத்த வாரம் போகலாமா? அல்லது நீ மட்டும் போறியா? நான்: போவதென்றால் சேர்ந்தே போகலாம். நீ போகலேன்னா நானும் போகலை.

1மணி: லோக்கல் நண்பர்: பனி, அவர் குழந்தையின் ஜுரம், ஆபீஸ் வேலை - இதெல்லாம் காரணங்கள். நாம் இந்த வாரம் போகவேண்டாம். நீ வாங்கின பரிசுகளை போய் அந்தந்த கடைகளில் ரிட்டர்ன் கொடுத்துவிடு. நானும் அதேதான் செய்யப் போகிறேன்.

2மணி: ஊரிலிருக்கும் நண்பருக்கு தொலைப்பேச, அவரின் அனைத்து தொலைப்பேசிகளும் switchoff.

3மணி: பரிசுகள் ரிட்டர்ன் செய்தாச்சு.

4மணி: மனைவியிடம் சொன்னேன். (ரமணா மருத்துவமனைக் காட்சியில் விஜயகாந்த் குரலில்) இப்போ எந்த நேரத்திலும் தொலைப்பேசி வரும். இவன் மட்டும் புறப்பட்டுப் போறேன்னு சொல்வான். அடுத்த முறை இருவரும் சேர்ந்து போவோம்னு சொல்வான் பாருன்னேன்.

5மணி: லோக்கல் நண்பர்: எவ்வளவு பனி இருந்தாலும், என்னை மட்டுமாவது வரச்சொல்லிட்டாங்க. நான் மட்டும் இப்பவே கிளம்பிப் போறேன். உன்னால் உடனடியா கிளம்ப முடியாதில்லே. அடுத்த முறை சேர்ந்தே போகலாம். பை.

பிறகு நாங்கள் அமெரிக்கா காலி செய்துவிட்டு வரும்போது ஊரிலிருந்த அந்த நண்பரிடம் அந்த சம்பவத்தை நினைவு கூர்ந்து, சொல்லிவிட்டு வந்தேன் - அன்னிக்கு என்னை வரவேண்டாம்னு சொல்லியிருந்தாலே, நான் வந்திருக்க மாட்டேன். அதுக்கு அவ்வளவு கஷ்டப்பட்டிருக்க வேண்டாம். பரவாயில்லை. சென்னை வந்தால் கண்டிப்பாக என் வீட்டுக்கு வா.

***

‘நண்பேண்டா’ லேபிளில் இதே போல் வேறு சில சம்பவங்களும் உள்ளன.

***


Read more...

Tuesday, July 29, 2014

ஓடிட்டிங் குறுங்கதைகள் : பகுதி ஒன்று.


மென்பொருள் துறையில் ஓடிட்டிங் (இனிமேல் தணிக்கை) பிரிவில் சிலபல ஆண்டுகளாக வேலை செய்ததில் பலரை சந்தித்து பேட்டி கண்ட அனுபவங்கள் சிலவற்றை சொல்லலாம்னு...

முதலில், அதிகம் பேசும் ப்ராஜெக்ட் மேனேஜர்கள்.

ஒரு ஸ்டாம்பை வடிவேலு காட்டியதும், இந்தியாவிலிருந்து இங்கிலாந்து வரை பேசும் மேனேஜர் சீனா போல், நம்மகிட்டே யாராவது பேசமாட்டாங்களான்னு சில PMs காத்திருப்பாங்க. அந்த சமயம் பார்த்து நாம (தணிக்கையாளர்) போய் மாட்டினா, அவ்வளவுதான். பேசிப் பேசியே நேரத்தை கழிச்சிடுவாங்க. நாமதான் சூதானமா இருந்து அப்பப்போ ‘Cut. Fast forward’லாம் சொல்லணும்.

உதாரணத்திற்கு: தணிக்கையில் முதல் கேள்வியாக - உங்க ப்ராஜெக்டைப் பற்றி ஓரிரு நிமிடங்களில் நல்லா விளக்கி சொல்லுங்கன்னு சொன்னா போதும். ஆதௌ கீர்த்தனாம்பரதரத்தில்னு ஆரம்பிச்சிடுவாங்க சில PMs.

1857ல் முதல் சுதந்தரப் போர் துவங்கியபோது என்ன நடந்ததுன்னா...

கட் கட்.. அவ்ளோ தூரம் போகவேண்டாம். இன்னும் கொஞ்சம் பக்கத்தில் வாங்க..

1889ல் நம்ம நேரு பிறந்தபோது...

சார் சார். இன்னும் கொஞ்சம் இறக்கம் காட்டுங்க...

1919ல் ஜாலியன் வாலா பாக் சம்பவத்தில்..

நோ நோ..

1947ல் இந்திய சுதந்தரம்?

இன்னும்..

1991ல் ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூருக்கு..

பக்கத்துலே வந்துட்டீங்க..

2002?

அய்யய்யோ. அந்த வருடம் மட்டும் வேண்டாம். மேலே மேலே

2014ல் பொதுத் தேர்தல் நடந்தபோது...

யெஸ். அதிலிருந்து வாங்கன்னு கதைச்சுருக்கத்தைக் கேட்டு தணிக்கையைத் தொடர வேண்டியிருக்கும்.

இரண்டு மார்க் கேள்விக்கு இரண்டு பக்கங்களில் எதையாவது எழுதி ரொப்பும் பசங்களைப் போலவே இவங்களும் அதிகமா பேசுவாங்க. 50+ கேள்விகள். 2 மணி நேரத்தில் முடிக்க வேண்டிய தணிக்கையை இவங்க பேசிப்பேசியே 3 மணி நேரத்துக்கு இழுத்துடுவாங்க. தேவையில்லாத இந்த தகவல் மழையினால், நமக்குத் தேவையான சில முக்கியமான தகவல்களை விட்டுவிடக்கூடிய அபாயம் இருப்பதால், அவங்க பேச்சையும் கவனத்துடன் கேட்கவேண்டிய கட்டாயம் வந்துடும். அதனால்தான் மேலே சொன்னதெல்லாம்...

இதுக்கு எதிர்ப்பதமாய் வேறு சிலர் இருப்பாங்க... வாயைத் திறந்து நம்ம கையை விட்டு பதிலை இழுக்க வேண்டியிருக்கும். அவர்களைப் பற்றியும் மற்றும் சில சுவாரசியமான சம்பவங்கள் குறித்தும் அடுத்தடுத்த பதிவுகளில்...

***

Read more...

Monday, May 26, 2014

சங்கீத வாத்தியார்கள் பள்ளிக்கூடம் நடத்தினால்!!




அமெரிக்காவில் இருந்தபோது சஹானாவிற்கு வாய்ப்பாட்டு சொல்லிக் கொடுக்கவேண்டுமென்று ஒரு நல்ல ஆசிரியரைத் தேடினோம். கர்நாடக முறையிலான பாட்டு சொல்லிக் கொடுக்க எங்க கிராமத்தில் யாரும் இல்லாது போகவே, ஹிந்துஸ்தானி பாட்டு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரிடம் சேர்ந்தார். இரு வருடங்கள் பாட்டு கற்றும் கொண்டார்.

இதற்கிடையில் சென்னை திரும்பி வர நேர்ந்ததும் இங்கே அதே ஹிந்துஸ்தானிக்காக ஒரு வாத்தியைப் பிடித்தோம். இவரை பாடச் சொல்லிக் கேட்ட வாத்தி, நல்லாத்தான் பாடுறாங்க. ஆனா, அவர் (அமெரிக்க வாத்தி) சொல்லிக் கொடுத்த முறை வேறு. நான் சொல்லிக் கொடுக்கும் முறை வேறு. அதனால், முதல் இரு மாதங்கள் மறுபடி ஆரம்பத்திலிருந்துதான் சொல்லிக் கொடுப்பேன். சஹானாவின் வேகத்திற்கேற்ப அடுத்தடுத்த கட்டத்திற்குப் போய்விடலாம் என்றார். அப்போ இரண்டு வருடங்கள் கற்றுக் கொண்டது வேஸ்ட்தானா என்றதற்கு, அப்படி சொல்ல முடியாது. ஆனா அப்படிதான் என்று மழுப்பி பாடத்தை ஆரம்பித்தார். ஆனால், வேகமாகவும் பாடங்களில் முன்னேறினார்.

அதே வகுப்பில் கர்நாடக வாத்தி ஒருவரும் இருந்தார். சஹானா நல்லா பாடுறாங்க. நேரம் இருந்தால் கர்நாடக பாட்டு வகுப்பிலும் சேர்த்து விடுங்க. வேகமா பிக்கப் செய்துடுவாங்க என்று சொல்லி அதிலும் சேர்த்துக் கொண்டார்.

இதற்கிடையில் சஹானா, வயலின் கற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லவே, அதிலும் சேர்த்துவிட்டோம். இப்படியாக சென்னையில் இந்த மூன்று வகுப்பிலும் சேர்ந்து சஹானா பாடி / வாசித்து வந்தார்.

கால மாற்றம். காலச் சக்கரத்தில் சுழற்சி. எங்களை பெங்களூருக்கு தள்ளியது.

இங்கே பாட்டு வகுப்பில் சேர்ப்பதற்காகப் போனோம். எங்கே பாடுங்க? - இது வாத்தி. சஹானாவும் 2-3 பாடல்களைப் பாடிக் காட்டினார். எல்லாவற்றையும் கேட்ட வாத்தி இறுதியில் என்ன சொல்லியிருப்பார்? அதேதான். இதுவரை இவர் கற்றவை ஹிந்துஸ்தானி & கர்நாடிக் ஆனாலும், கற்றுக் கொடுக்கும் வகைகள் எல்லா இடத்திலும் வெவ்வேறாக இருப்பதால், மறுபடி முதலிலிருந்து துவக்க வேண்டும் என்றார். செம டென்சன் ஆனோம். மறுபடி - சரிகமபதநி என்று முதல் வகுப்பிலிருந்தா, அப்போ நான்கு ஆண்டுகளாக இவர் கற்றதெல்லாம் வீண்தானா என்று கேட்க - அப்படியில்லை ஆனால் அப்படித்தான் என்றார். ஆனால் கவலைப்படாதீர்கள் ஓரிரு மாதங்களில் நான் மறுபடி இதே நிலைமைக்குக் கொண்டு வந்து விடுகிறேன் என்று வாக்களித்தார்.

அடுத்து வயலின் வாத்தி. இதிலும் 1-2 பாடல்களை வாசித்துக் காண்பித்தார் சஹானா. மேலே உள்ள பத்தியில் பாட்டுக்கு பதிலாக வயலின் என்று போட்டுக் கொள்ளவும். சொந்தமாக பாடல்களை வாசித்துப் பழகி வரும் நிலையில் இருந்தாலும், அடிப்படை வகுப்பில் இந்த வாத்தி சொல்லிக் கொடுக்கும் முறை மாறுபடுகிறது என்று சொல்லி, ஓரிரு மாதங்கள் மறுபடி பாடங்களை கற்றுத் தருகிறேன். வேகமாக பிக்கப் செய்துவிடுவார் என்று சொல்லியுள்ளார்.

என்ன கொடுமை இது வாத்திகள்? புதிய பள்ளி, புதிய மொழி இப்படி எல்லாப் பிரச்னைகளையும் கடந்து ஒரு ஊரிலிருந்து வேறு ஊருக்கு மாறினாலும், இந்த பாட்டு / வயலின் வகுப்பு வாத்திகள் படுத்தும் ‘பாட்டுக்காக’ இனிமேல் அடுத்த முறை இடப்பெயர்வுக்கு பயங்கரமாக யோசிக்க வேண்டியிருக்கும்.

இப்படி இந்த சங்கீதம் சொல்லிக் கொடுக்கும் வாத்திகள், பள்ளிக்கூடம் நடத்தினால் என்ன ஆகும்? மூன்றாம், நான்காம் வகுப்பில் சேர வரும் மாணவ/விகளை மறுபடி முதல் வகுப்பிலேயே சேர்ந்து படியுங்கள் என்று சொல்லிவிடுவார்களோ? #மிடியல.

***


Read more...

Thursday, May 22, 2014

பிரச்னை புரியல. ஆனால் உங்க பதில் தேவை!!

தெரிஞ்சோ தெரியாமலோ அறிந்தோ அறியாமலோ, ஓட்டக்காரர்னு ஒரு பேரு எடுத்துட்டேன். நம்மை சுற்றி இருக்கும் நண்பர்களுக்கும், அலுவலகத்தில் அடிக்கடி பேசித் தொடர்பில் இருப்பவர்களுக்கும் அது தெரியும். ஆனால், அலுவலகம் முழுக்க எப்படி பரப்புவது? இதற்கு நான் எடுத்த சில முயற்சிகளும் அதன் பலன்களும் என்னன்றதுதான் இந்த பதிவு.


சென்ற அலுவலகத்தில் ஒரு நல்ல பதவி வந்தபோது, அதற்காக ஒரு அறிமுக மின்னஞ்சல் அலுவலகம் முழுக்க அனுப்பணும். உங்களைப் பற்றிய விவரங்களை இந்த டெம்ப்ளேட்டில் எழுதித் தாங்கன்னு கேட்டாங்க. அதில் ஒரு தலைப்பு - பொழுதுபோக்கு. அடிச்சாச்சு லக்கி ப்ரைஸ், இதில் நம்ம ஓட்டத்தைப் பற்றி எழுதி அனுப்புவோம் - அலு முழுக்க தெரியட்டும்னு எழுதி அனுப்பினேன். என்ன ஆச்சரியம்? இந்த குறிப்பிட்ட தகவல் மட்டும் வெட்டப்பட்டு, பாக்கி விவரங்கள் எல்லாம் மின்னஞ்சலில் வந்தது. என்னம்மா ஆச்சு? ஏன் அதை மட்டும் வெட்டிட்டீங்கன்னு கேட்டா, மின்னஞ்சல் ரொம்ப பெரிசா இருந்துச்சு, அதனால்தான். தப்பா எடுத்துக்காதீங்கன்னு சொன்னாங்க. சரின்னு விட்டுட்டேன்.


ஆனால், அதற்குப் பிறகு வந்த ஒரு திட்டத்தின் கீழ், உடல்நல அமைச்சராக நான் போட்டியிட்டு, என் ஓட்டத்தைப் பற்றி அலு முழுக்க நிறைய விளம்பரங்கள் செய்து, பலரை ஓட வைத்தது வரலாறு.


இங்கே கட் பண்றோம். அடுத்த வருடம். வேறொரு வேலை. வேறொரு அலு.


அதே பழைய டெம்ப்ளேட். அதே போல 'பொழுதுபோக்கு' பத்தி. ஆனால், அதே போல் ஓட்டத்தைப் பற்றி எழுதலாமா வேண்டாமான்னு ஒரு யோசனை. பிறகு, சேச்சே, அது வேறு அலு. இது வேறு அலு. அங்கேதான் லூஸ்தனமா சிந்திச்சி, அந்த ஒத்தை வரியை 'கட்' பண்ணினாங்கன்னா, இங்கேயும் பண்ணுவாங்களா என்னன்னு நினைச்சி, மராத்தான் பற்றியும் அதில் நம் பங்களிப்பு குறித்தும் சிறு குறிப்பு (2 வரிகள் மட்டுமே) வரைந்து அனுப்பி வைத்தேன்.


நம்ம குழுவிலேயே 150+ பேர் இருக்காங்க. எல்லாருக்கும் தெரியட்டும்னு அனுப்பிச்ச வெச்ச அந்த தகவல்கள் அடங்கிய மின்னஞ்சல், ஒன்றரை மாசம் கழித்தும் வெளிவரவில்லை. போன வாரம் தொலைப்பேசி கேட்டா, கொஞ்சம் எடிட் பண்ணனுமேன்னாங்க. ஏங்க, அதில் இருப்பது என் படிப்பு, சான்றளிப்புகள், அனுபவம் இவ்வளவுதான். இதில் எதை எடிட் செய்யணும்னு கேட்டேன்.


பதில்? இதைப் படிக்கற நீங்க நினைப்பது சரிதான். மறுபடி அதே 'பொழுதுபோக்கு' விவரத்தை எடுத்துடலாமான்னு கேட்டாங்க. எனக்கு செம குழப்பம். ஏம்மா, அதில் என்ன பிரச்னைன்னு கேட்டா, பொபோ'ன்னா - புத்தகம் படிப்பது, இசை கேட்பது, கிரிக்கெட் பார்ப்பது இப்படிதான் இருக்கணும். நீங்க ஓடறதுன்னு போட்டிருக்கீங்களேன்றாங்க. அவ்வ். வேண்டாம். அதை எடுக்க வேண்டாம். அப்படியே மின்னஞ்சல் அனுப்புங்கன்னா, முடியாது. அதை எடுக்கலேன்னா மின்னஞ்சலே வராதுன்னுட்டாங்க. நீங்க ஆணியே புடுங்க வேண்டாம். மின்னஞ்சல் அனுப்பலேன்னா பரவாயில்லைன்னுட்டேன்.


இந்த நிமிடம் வரை என் அறிமுக மின்னஞ்சல் வரவேயில்லை.


* ஏன் அந்த விவரத்தை மட்டும் இரு அலுவலகத்திலும் எடிட் பண்ணனும்னு சொல்றாங்க?


* இந்த நாட்டில் ஒரு தனி மனிதனுக்கு ஓடவும், அதை மற்றவரிடம் பகிர்ந்துக்கவும் அனுமதி இல்லையா?


இந்த இரு சம்பவத்திலும், மின்னஞ்சல் அனுப்பும் / அனுப்ப முடிவெடுக்க வேண்டிய இடத்தில் இருந்தது தமிழர்கள். அதுவும் பெண்கள் என்பது இங்கு தேவையில்லாத தகவல்.


***

Read more...

Wednesday, March 19, 2014

நொறுக்ஸ் - 3-19-2014


சென்னையில் வாகனங்கள் ஓட்டுபவர்கள் எப்போதெல்லாம் ஒலிப்பான் பயன்படுத்துகிறார்கள்? இந்தக் கேள்விக்கு 10 மதிப்பெண்கள் என்றால், விடை பின்வருமாறு:

* சாலையில் இடப்புறம் திரும்பும்போது; வலப்புறம் மற்றும் நேராகப் போகும்போது.
* வீட்டை விட்டு கிளம்பும்போது; மற்றும் வீட்டுக்கு வந்தபிறகு (உள்ளே இருப்பவர்களுக்கு சிக்னல் கொடுக்குறாராம்!).
• சிக்னலில் சிகப்பு, மஞ்சள் அல்லது பச்சை விளக்கு எரியும்போது; (கவுண்ட்டவுன் 5க்கு கீழ் வந்துவிட்டால், ஒலி exponentially கூடிக்கொண்டே போகும்).
* ஆடு, மாடு மற்றும் நாய்கள் சாலையில் நடுவே இருந்தாலோ, குறுக்கே வந்தாலோ அல்லது ஓரமாய் நின்றாலோ.
* சாலையில் மேடு, பள்ளம் இருந்தால்; அல்லது சமதரையாக இருந்தால்.
* சாலையில் அதிக போக்குவரத்து இருந்தால்; அல்லது யாருமே இல்லாமல் காலியாக இருந்தால்.
* தங்கள் வாகனத்தை விட சிறிய வாகனங்களின் பின்னால் போகும்போது (கார் பின்னால் வரும் பேருந்து, பைக் பின்னால் வரும் கார், மிதிவண்டி பின்னால் வரும் பைக் இவர்களெல்லாம் தைரியமாக ஒலிப்பான் பயன்படுத்துவார்கள்).

இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். ஆனால் நிறுத்திக்குவோம். மேற்கண்ட கேள்விக்கு 1 மதிப்பெண்தான்னு சொன்னா, அதற்கான விடை எப்படியிருக்கும்? விடை பதிவில்.

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு போன வாரம் திருப்பதி போயிருந்தோம். நிறைய மாற்றங்கள். பக்தர்களுக்கு அதிக வசதிகள். மாணவர்களுக்கு தேர்வு நேரமாகையால் அதிக கூட்டம் இல்லாமல் இருந்தது. நம் மக்கள் சாமி கும்பிட தலங்களுக்குப் போனாலும், கட்டில், குளிர்சாதன வசதியுடன் கூடிய தனி அறை, வெந்நீர் குளியல் இன்னபிற வசதிகளை எதிர்பார்த்தே இருப்பார்கள். அப்படியில்லாமல், கடவுளை நினைத்து, கிடைத்த இடத்தில் உண்டு, உறங்கி அவன் தரிசனம் பெற முயற்சிக்கலாமே என்று வேளுக்குடி ஒரு சொற்பொழிவில் சொல்வார். அதே போல் நாங்களும் அறை எதுவும் எடுக்காமல், ஒரு பெரிய shed போன்ற இடத்தில் மக்களோடு மக்களாக உறங்கி (சூப்பர் குளிர்!), அதிகாலையில் தண்ணீர்க் குளியலுக்குப் பிறகு தரிசனத்திற்குச் சென்றோம். ஏழுமலையானின் தரிசனம் சில நொடிகளுக்கே கிடைத்தாலும், அதை நினைத்தவாறு சில மாதங்களை ஓட்டிவிடலாம் என்றும், இனி ஆண்டுக்கொருமுறை இங்கு வரவேண்டும் என்றும் நினைத்து மலையிறங்கினோம். மதுரை தூங்கா நகரம்னா, திருமலை தூங்கா மலை. 24x7 சாப்பாடு கிடைக்குது; ஷாப்பிங்கும் செய்யலாம். 

இந்த வாரம் படித்த புத்தகம் வைகோ’வின் பல பேச்சுக்களின் தொகுப்பு. வெல்லும் சொல். விகடன் பிரசுரம். பொன்னியின் செல்வன், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், மகாபாரதம் என பல தலைப்புகளில், பல்வேறு கூட்டங்களில் பேசிய பேச்சுக்கள் மிக அருமையாக தொகுக்கப்பட்டுள்ளன. திருவாசகம் விழாவில் இவரது பேச்சைக் கேட்டு (சூப்பர் ஸ்டாரைப் போலவே!) ரசிகனானேன். அதைப் போலவே மேற்சொன்ன தலைப்புகளில் மனிதர் சும்மா பின்னிப் பெடல் எடுத்திருக்கிறார். கண்டிப்பாக வாங்கி வைத்துக் கொள்ள வேண்டிய புத்தகம், ஆனால் நான் நூலகத்திலிருந்து எடுத்திருந்ததால், திருப்பிக் கொடுத்துவிட்டேன். 

பதிவில் முதலில் சொன்ன கேள்விக்கு 1 மதிப்பெண் மட்டுமே என்றால் அதற்கான விடை:

வண்டி Onல் இருக்கும்போதெல்லாம் ஒலிப்பானை ஒலிப்பார்கள்; Offல் இருக்கும்போது ஒலிப்பானை ஒலிக்கமாட்டார்கள்.

***

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP