Wednesday, December 31, 2008

எனது டைரியிலிருந்து ஒரு பக்கம்

காலை 5.00am : விஜய் டிவியில் மந்த்ராலய மகான் பற்றி ஒலிபரப்பினார்கள். ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை.


6.00am : பக்கத்து கோயிலில் ஏதோ திருவிழாவாம். பத்து நாட்களாய் மைக் செட் போட்டு பாட்டு போடறாங்களாம். இன்னிக்குதான் கேள்விப்பட்டேன். எனக்கு எதுவும் கேட்கவில்லை.


8.00am : பக்கத்தில் இருக்கும் ஒரு கோயிலுக்கு போயிருந்தேன். தொன்னையில் வைத்து அருமையான பொங்கல் கொடுத்தார்கள். அங்கேயே உட்கார்ந்து சாப்பிட்டு, சிறிது நேரம் கழித்து கொடுத்த தயிர் சாதமும் சாப்பிட்டேன். கடவுளை ஒரு முறையாவது பார்க்க வேண்டுமென்று நினைத்தேன். மறந்து விட்டேன்.


10.30am : சன் டிவியில் மெகாத்தொடர்கள் ஆரம்பம். எல்லாமே அருமையாக இருந்தது. அடுத்த மூணு மணி நேரம் போனதே தெரியவில்லை.


மதியம்
12.00 noon: தங்கமணி அருமையாக சமைத்திருந்தார். எப்போதும் சமைப்பதில் அவருக்கு நிகர் அவர்தான்.


1.00pm: 'ஃபேவரைட்ஸில்' வைத்திருக்கும் - வீக் எண்ட் ஜொள்ளு - பதிவு போடும் பதிவர்கள் யாரும் இன்றைக்கும் பதிவே போடவில்லை. பழைய பதிவுகளையே இன்னொரு முறை பார்த்தேன்.


2.00pm: தூக்கம் கண்ணை சுழற்றியதால், சிறிது கண்ணயர்ந்தேன்.


4.30pm: பக்கத்து வீட்டிலிருந்து முறுக்கு கொடுத்தனுப்பியிருந்தார்கள். பாக்கு குத்தும் உரலில் வைத்து இடித்து, பொடி செய்து சாப்பிட்டேன். அருமையாக இருந்தது.


7.00pm: எங்கள் வீட்டு விளக்கு மிகவும் மங்கலாக இருக்கிறதே என்று சொல்லி தங்கமணியிடம் திட்டு வாங்கினேன். இதை விட வெளிச்சம் அதிகமாக விளக்கு போட்டால், பக்கத்து வீட்டிலிருந்து வந்து திட்டுவார்கள் என்று சொன்னார்.


10.30pm: இப்போல்லாம் மிட் நைட் மசாலாவில் சரியான பாட்டே போடுவதில்லை. நாளைக்கு டிவி சேனலுக்கு கடிதம் எழுதணும்.


தேதி: டிசம்பர் 26, 2048

-------------

பிகு: அ. இப்போ எனக்கு டைரி எழுதும் பழக்கமில்லை. ஒரு வேளை வருங்காலத்தில் நான் டைரி எழுதினால் கற்பனை செய்து பார்த்தேன். ஹிஹி... லேபிளை பாத்துட்டேளா!!!

ஆ. இந்த வருஷத்தை ஒரு மொக்கையோட முடிக்கலாமேன்ற நல்ல எண்ணம்தான் இந்த பதிவு. எல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Read more...

Tuesday, December 30, 2008

நொறுக்ஸ் - செவ்வாய் - 12/30/08


பிறந்த அன்னிக்கே கடகடன்னு பேசின ஒரு அதிசய குழந்தையை உங்களுக்குத் தெரியுமா? விவரம் பதிவில்.

--------

சென்ற வாரம் நண்பர் குடும்பத்துடன் பேசிக்கொண்டிருந்தோம். நண்பர் மனைவி கேட்டார் - "இரவுக்கு என்ன சமையல்?". என் தங்கமணி சொன்னார் - "தோசை". நண்பர் - "என்ன இந்த ஊருக்கு வந்துட்டு இன்னும் இட்லி தோசைன்னுட்டு. பீட்சா, பர்கர்னு ஏதாவது சாப்பிட வேண்டியதுதானே. எங்கே
போறோமோ அந்த இடத்துக்கு தகுந்தா மாதிரி நம்மை மாத்திக்கணும்" அப்படி இப்படின்னு அட்வைஸ் பண்ணிக்கிட்டிருந்தார்.


என் தங்கமணி "நான் அந்த மாதிரியெல்லாம் இல்லை. ஆனா இவரு அப்படித்தான். எந்த இடத்துக்கு போறாரோ அப்படியே தன்னை மாத்திக்குவார்"
அப்படின்னாங்க. நண்பரும் ஆச்சரியத்துடன் "பலே பலே" என, தங்கமணி தொடர்ந்து சொன்னார் - "ஆமாம். போன வருஷம் இங்கே மிருகக்காட்சி
சாலைக்குப் போனோம். அப்பத்திலேந்து இவர் அப்படியேயிருக்கார்".

-------

தானியங்கி கார் கழுவும் இடத்தில் வண்டியை விடப் போயிருந்தோம். வண்டி தண்டவாளத்தில் வரவர வெவ்வேறு கருவிகள் வந்து சுத்தம் செய்வதால், பத்து நிமிடத்தில் வண்டி பளபளாவென்று வெளியே வந்துவிடுகிறது.
வீட்டுக்கு வரும்போது தங்கமணியிடம் என்னுடைய புதிய தொழில்நுட்பத்தைப் பற்றி சொன்னேன்.

அதாவது இதே மாதிரி மனிதர்களை குளிப்பாட்டும் கருவி ஒன்று கண்டுபிடிக்க வேண்டும். ஆசாமி ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டால், முதலில் ஒரு கருவி வந்து உடம்பில் எண்ணைய் தேய்த்துவிட வேண்டும். பிறகு அந்த நாற்காலி மெதுவாக நகர்ந்து தடத்தில் வரும்போது, இன்னொரு கருவி தலையில் சீயக்காய் தேய்த்தும், பிறகு வென்னீரால் குளிப்பாட்டிய பிறகு அடுத்த கருவி சோப் / ஷாம்பூ தடவி, மறுபடி தண்ணீரால் கழுவி, மின்விசிறியால் ஈரத்தை காயவைத்து வெளியே வரும்போது அந்த
ஆளுக்கு சாம்பிராணி / நாத்த மருந்து ஏதாவது அடித்து பத்து நிமிடத்தில் அவனை ஒரு புது மனிதனாக மாற்ற வேண்டும்.


இந்த மாதிரி ஒரு கருவியை நான் கண்டிப்பாக கண்டு பிடிப்பேன் என்று சொன்னதால் அன்றைக்கு கொஞ்சம் அதிகமாகவே திட்டு விழுந்தது.
----------------

நேத்து வால்மார்ட் போய் ஒரு உடற்பயிற்சிக்காக ஒரு ச்சின்ன கருவி வாங்கிட்டு வந்தோம். நாற்காலியில் உட்கார்ந்து மிதிவண்டி ஓட்டறது போல் பயிற்சி செய்வதற்காக வாங்கியது. வாங்கும்போதே தங்ஸ் சொன்னாங்க - “ஒரு நாள் ரெண்டு நாள் ஓட்டுவீங்க, அதுக்கெதுக்கு இதெல்லாம்?” - அதையெல்லாம் மீறி இதை வாங்கியாச்சு. என்ன ஆகுதுன்னுதான் பாக்கணும்.


---------

போன வாரம் வருடாந்திர செக்கப்புக்காக மருத்துவமனை போயிருந்தபோது, பிறந்த தேதி எழுத வேண்டிய இடத்தில் போன வாரத்துத் தேதியே
எழுதிவிட்டேன். அதைப் பார்த்த அந்த நர்ஸுக்கு வாயெல்லாம் சிரிப்பு. இன்னிக்குதான் பிறந்தீங்களான்னு கேள்வி வேறே. அப்படியே கொஞ்ச நேரம் சிரிச்சி பேசிக்கிட்டிருந்தோம்.

ஒரே ஒரு கூடுதல் தகவலை சொல்லி இந்த நொறுக்ஸை முடிக்கறேன். அந்த நர்ஸ் கண்டிப்பா எங்க பாட்டியை விட ஓரிரு வயசு கம்மியாத்தான் இருப்பாங்க...

Read more...

Monday, December 29, 2008

வீட்டு வேலை செய்யாமல் ரங்கமணிகள் தப்பிப்பது எப்படி?

என்னதான் பிஸியாக காட்டிக் கொண்டாலும் சில சமயங்களில் ரங்கமணிகள் வீட்டு வேலை செய்ய வேண்டியிருக்கிறது. பதிவை படிக்கும் நிகழ்கால / வருங்கால ரங்கமணிகளுக்காக - அந்த சிற்சில வேலைகளையும் செய்யாமல் தப்பிப்பது எப்படி என்பதைத்தான் இங்கே பார்க்கப் போறோம்.


இந்த பதிவில் ரங்கமணிகளிடம் ஒப்படைக்கப்படும் மிகவும் முக்கியமான டாப்-3 வேலைகளை மட்டும்தான் பாக்கப் போறோம். மக்களின் ஆதரவுக்கேற்ப இதே தலைப்பில் அடுத்தடுத்த பதிவுகள் வெளியிடப்படும்.

இந்த யோசனைகளை அமுல்படுத்தும் ரங்கமணிகள் - தங்கள் முயற்சியில் வெற்றியடைந்தால் என்னை வாழ்த்தி பதிவிடவும். மாறாக ஏதேனும் 'பின்விளைவுகளை' சந்திக்க நேர்ந்தால், அதற்கு கம்பெனி பொறுப்பாகாது.

பாத்திரம் தேய்த்தல்:

திருமணமான ரங்கமணிகளுக்கு முதன்முதலில் கொடுக்கப்படும் வேலை இதுவாகத்தான் இருக்கும். குழாயடியில் நின்று பாத்திரம் தேய்ப்பது ரொம்பவே கஷ்டமான செயல். அதுவும் ஒவ்வொரு பாத்திரத்தையும் நன்றாக தேய்த்தபிறகு அதில் ஏதாவது கறை இருக்கா இல்லே எல்லாம் போய் சுத்தமாயிடுச்சான்னு கவனமாக பார்க்க வேண்டியிருக்கும். அப்படி ஏதாவது ஒரு கறை இருந்துச்சுன்னா, கஷ்டப்பட்டு எல்லா வேலையும் செய்தபிறகும் திட்டு வாங்கும் வாய்ப்பு நிறையவே உண்டு.

அதனால் நாம் செய்ய வேண்டியது என்னன்னா - ஒரு உதாரணத்தோட சொல்றேன். நம்ம நடிகைகள் மணிக்கணக்குலே மேக்கப் போட்டுக்குவாங்க. ஆனா கடைசியில் உதடுக்கு மேலே அல்லது கீழே, கறுப்பா சின்ன மச்சம் ஒண்ணு வெச்சுக்குவாங்க. கேட்டா திருஷ்டி பொட்டுன்னுவாங்க. அதே மாதிரி, பாத்திரங்கள நல்லா சுத்தம் செய்தபிறகு - தேர்ந்தெடுத்த சில பாத்திரங்களில் அங்கங்கே சின்ன திருஷ்டி பொட்டு இருக்கறா மாதிரி பாத்துக்கங்க. அவ்வளவுதான்.


"எதையும் உருப்படியா செய்யமாட்டீங்க. இனிமே உங்ககிட்டே சொல்லி பிரயோஜனமில்லே. நானே பாத்திரத்தை தேய்ச்சிக்கறேன்" - அப்படின்னு தங்கமணிகள் காரியத்தில் இறங்கிடுவாங்க. நீங்க - வேறென்ன - ஒரு தடவை காதை துடைச்சிக்கிட்டு - ஜாலியா தொலைக்காட்சியோ கணிணியோ ஆன் பண்ணிடுங்க. அவ்வளவுதான். கொஞ்ச நாளைக்கு பாத்திரமே தேய்க்க வேண்டாம்.


குக்கர் வைப்பது:

குக்கரில் அரிசி, பருப்பு அல்லது காய்களை வைத்து - விசில்களை எண்ணி சரியாக அடுப்பை அணைப்பது - கேட்பதற்கு சுலபமாகத்தான் தெரியும். ஆனால், அப்படி விசில்களை கவனமாக எண்ண வேண்டும் என்பதால் அந்த ஐந்து/பத்து நிமிடங்களுக்கு வேறெந்த வேலையும் செய்ய முடியாது. நண்பர்களின் பதிவுகளில் ஒரு பின்னூட்டமோ, ஓட்டோ போட முடியாது.

அதே மாதிரி, சில சமயங்களில் கேஸ்கட் (gaskette) பழுதாகி விடும். அப்போது குக்கர் மூடியை காற்று வெளியேறாமல் அழுத்தமாக பிடித்துக் கொள்ள வேண்டும். உள்ளே சரியான அளவில் தண்ணீர் போட வேண்டும். இவ்ளோ பிரச்சினைகளிருக்கும் இந்த வேலையிலிருந்து தப்பிப்பது மிகவும் சுலபம். கீழே படிங்க.

அ. ஒரு தடவை அரிசியுடன் போடும் தண்ணீர் அளவை சற்று அதிகரிக்கவும். உதாரணத்திற்கு - 5 டம்ளர் தண்ணீர் போடவேண்டுமென்றால், சரியாக 8 அல்லது 9 டம்ளர் போடுங்கள் போதும்.

ஆ. அதே மாதிரி விசில் எண்ணிக்கை. ஐந்து விசிலில் குக்கரை இறக்க வேண்டும் என்று சொன்னால், முதல் விசில் வந்தவுடன் காதை மூடிக்கொள்ளவும். குத்து மதிப்பாக அடுத்த பத்து நிமிடம் கழித்து குக்கரை இறக்கவும்.

இ. அரிசியே போடாமலும் (வெறும் தண்ணீரோடு) குக்கர் வைக்கலாம். அதெல்லாம் உங்கள் தைரியத்தைப் பொறுத்து நீங்களே முடிவு செய்துகொள்ள வேண்டியது.

மேற்கூறிய மூன்றினையும் ஒன்று அல்லது இரண்டு தடவை செய்தால் போதும் - வாழ்க்கையில் இனிமேல் நீங்கள் குக்கர் வைக்கவே வேண்டியிருக்காது. எல்லாவற்றையும் தங்கமணியே பார்த்துக் கொள்வார்கள்.

வீட்டை பெருக்கி, ஒட்டடை அடித்தல்:

என்னிக்காவது ஒரு நாள் லீவில் உட்கார்ந்து தொலைக்காட்சி பார்த்தாலோ, சமீபத்தில் 1980யில் நடந்த ஒரு கிரிக்கெட் மேட்சை (வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா) பரபரப்பாக பார்த்துக் கொண்டிருந்தாலோ - அப்போதுதான் வீட்டை பெருக்க வேண்டுமென்றும், ஒட்டடை அடிக்க வேண்டுமென்றும் தங்கமணிகளுக்கு நினைவு வரும்.

வேறு வழியில்லாமல் ரங்கமணிகள் அந்த வேலைகளை செய்தாலும், போஸ்ட் மார்டம் ரிப்போர்டில் நிறைய குற்றங்கள் இடம்பெற்றிருக்கும்.

இப்போ இந்த வேலையிலிருந்து தப்பிப்பது எப்படின்றத பாப்போம். இதுக்கு சரியான உதாரணம் நம்ம ஊர் குப்பை வண்டி. அதாவது ஒரு இடத்திலே இருக்கற குப்பையை பல இடங்களுக்கும் பரப்புவது. புரிஞ்சிக்கிட்டிருப்பீங்கன்னு நினைக்கிறேன். ஒட்டடை அடிக்கணும்னா சுவத்திலே ஒரு மூலையில் இருக்கறதை, அப்படியே கோடு மாதிரி பல இடங்களுக்கும் இழுத்துடணும். இந்த மாதிரி செய்யத் தெரியலேன்னா கவலைப்பட வேண்டாம். இதுக்கெல்லாம் எங்கேயும் க்ராஷ்-கோர்ஸ் கிடையாது. நீங்களே ஓரிரு முறை முயற்சி செஞ்சா செய்துடலாம்.


அதுக்கப்புறம் கவலையே கிடையாது. ரஞ்சிக்கோப்பை மேட்சிலிருந்து பழைய மேட்ச் எதுவாயிருந்தாலும், கால் மேல் கால் போட்டு பார்த்துக்கொண்டே இருக்கலாம். ‘யாரும்' தொந்தரவே செய்ய மாட்டார்கள்.

Read more...

Thursday, December 25, 2008

எனது வாழ்க்கையில் Morse Code

முன்னுரை:



நேற்றைய பதிவில் மொக்கை கொஞ்சம் ஓவராவே இருந்துச்சுன்னு நினைக்கிறேன் - அதை சரிப்படுத்துவதற்காக இன்றைய பதிவு கொஞ்சம்
டாகுமெண்டரி டைப்பில் எழுதியிருக்கேன்.


--------


ச்சின்ன வயசில் சாரணர் இயக்கத்தில் இருந்தபோது சொல்லிக் கொடுத்த ஒரு மேட்டர் - மோர்ஸ் கோட்.




சாமுவேல் மோர்ஸ் என்பவர் கண்டுபிடுத்த இந்த முறையைக் கொண்டு பழைய காலத்தில் தந்தி தகவல்களை பரிமாறிக் கொண்டிருந்தனர். எல்லா ஆங்கில எழுத்துகளையும் மற்றும் 0 முதல் 9 வரை உள்ள எண்களையும் குறியீடுகள் மூலம் மொழிபெயர்த்து அதை குறிப்பிட்ட அலைவரிசையில் அனுப்பி இத்தகைய தகவல் பரிமாற்றங்கள் நடந்து வந்தன. தற்போதும் ஹாம் எனப்படும் அமெச்சூர் ரேடியோ பயன்படுத்துபவர்கள் இந்த மோர்ஸ் கோட் மூலம் பேசுகிறார்கள்.




ஹாம் எப்படி இருக்கும்னா - பழைய திரைப்படங்களில் வில்லன் அலமாரியின் கதவைத் திறந்து - ஹெட்செட்டை எடுத்து மாட்டிக்கொண்டு - ஹலோ ஹலோ 305 ஹியர் - அப்படின்னுவாரே, அதே மாதிரிதான் இருக்கும். விக்ரம் படத்தில் கமல் கூட அந்த மாடி வீட்டில் இப்படி ஒரு கருவியை கண்டுபிடிப்பார்.




எல்லா ஆங்கில எழுத்துக்களையும் - டிட் (புள்ளி), டா (கோடு) - இந்த இரண்டு குறியீடுகளின் மூலம் வகைப்படுத்தி உள்ளனர். உதாரணத்திற்கு, A என்பதை
ஒரு டிட், ஒரு டா (சொல்லும்போது : டிட் டா) எனவும் B என்பதை ஒரு டா, மூன்று டிட் (சொல்லும்போது: டா டிட் டிட் டிட்) எனவும் சொல்ல வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்கலாம்.




இந்த மோர்ஸ் கோட் - மேலே சொன்ன மாதிரி அமெச்சூர் ரேடியோ பயன்படுத்தும் ஆட்களுக்கோ அல்லது ராணுவத்தில் தந்தி தகவல் பரிமாற்றத்தில் இருப்பவர்களோதான் பயன்படும் - எங்களுக்கு எதுக்கு இதை சொல்லித் தருகிறீர்கள்னு கேட்டதற்கு - "ஏதாவது ஒரு காட்டுலே இரவிலே வழிதெரியாமே மாட்டிக்கிட்டாலோ, ஆபத்து காலத்திலோ இது உங்களுக்கு உதவும்" அப்படின்னு சொன்னாங்க.




நம்ம வடிவேலு ஜோக் அப்பவே வந்திருந்ததுன்னா நான் கேட்டிருப்பேன் - "நான் ஏண்டா நடுராத்திரியிலே (சுடு)காட்டுக்குப் போகணும்? அவ்வ்வ்".
இருந்தாலும் அப்ப நல்ல பிள்ளையா இருந்ததால் அப்படியெல்லாம் கேக்காமே ஒழுங்கா அவங்க சொன்னதை கேட்டுக்கிட்டேன்.




அதன்பிறகு பள்ளியில் 9வது படிக்கும்போது நடைபெற்ற ஒரு அறிவியல் கண்காட்சியில் இதை பயன்படுத்தப் போறேன்னு ஆசிரியரிடம் சொன்னேன். ஒரு switch boardல் இரண்டு பல்ப் மாட்டினோம். அதன் மேல் வெவ்வேறு நிற காகிதங்களை ஒட்டினோம். ஒரு பல்பை டிட் (புள்ளி) ஆகவும், மற்றொரு பல்பை டா (கோடு) ஆகவும் பயன்படுத்தி செய்தியை அனுப்ப முயற்சி செய்தோம். என் நண்பன் அதை இயக்கி மோர்ஸ் கோட் மூலம் செய்தியை அனுப்ப, நான் சற்று தூரத்திலிருந்து அந்த செய்தியை கண்டுபிடித்து சொல்வேன். அந்த கண்காட்சிக்காக ஒரு வாரம் பயிற்சி எடுத்திருந்தாலும், கடைசியில் சிறப்பு விருந்தினர் கொடுத்த செய்தியை நான் சரியாக கண்டறியாமல் வழிந்தது தனி கதை...




அதன் பிறகு வேறெங்கும் உதவாத அந்த மோர்ஸ் கோட் எனக்கு திருமணமான பிறகுதான் மிகவும் பயன்பட்டது. அது எப்படின்னு கேக்கறவங்களுக்காக - மோர்ஸ் கோட் பயன்படுத்தி நான் இன்னிக்கு அனுப்பின செய்தியை கொடுக்கிறேன்.




"டிட்டிட்டிட் இன்னிக்கு டிட்டா காபியிலே டிட்டிட் சர்க்கரை டாடா கொஞ்சம் டிட்டிட் கம்மியாயிருக்கே டாடாடா????"



பின்குறிப்பு:

என்னாச்சு, இன்னிக்கு இந்த மாதிரி ஒரு சீரியஸ் பதிவுன்னு கேக்கறவங்களுக்கு - நான் பதிவு எழுத ஆரம்பிச்சி இன்னியிலேந்து ரெண்டாவது வருஷம் ஆரம்பிச்சிடுச்சு... அதுக்குதான் இப்படி...

Read more...

Wednesday, December 24, 2008

வேண்டாம் வேண்டாம் எதுவுமே வேண்டாம்...!!!

போன வாரம் ஒரு நாள் தூங்கும்போது அமர்க்களம் படத்தில் எஸ்.பி.பி பாடும் 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டை கேட்டுக்கிட்டே படுத்தேன்.


படுத்தா தூக்கத்திலேயும் அதே பாட்டு சுத்தி சுத்தி அடிக்குது. சரி நல்ல பாட்டுதானேன்னு கனவிலே கேட்டுக்கிட்டு இருந்தா, திடீர்னு அந்த பாட்டோட உல்டா கேக்குது - அதுவும் என்னோட குரல்லே. வேறே வழியில்லே
- அதையும்தான் கேப்போம்னு கேட்டுட்டு உங்களுக்காக இந்த பதிவுலே போடறேன். நீங்களும் பாத்து படிச்சி சந்தோஷப்படுங்க.


இனிப்பா இருக்கற காபி வேண்டாம்
இனிப்பே இல்லாத சர்க்கரை வேண்டாம்


எழுத முடியாத பேனா வேண்டாம்
ஏற முடியாத ஏணி வேண்டாம்


காலை கடிக்கிற செருப்பும் வேண்டாம்
பல்லை உடைக்கிற லட்டு வேண்டாம்


சுட முடியாத தோசை வேண்டாம்
சூடாகாத பதிவும் வேண்டாம்


பத்த முடியாத தீப்பெட்டி வேண்டாம்
பாக்கெட் இல்லாத சட்டை வேண்டாம்

முடி இல்லாத தலையும் வேண்டாம்
முடிவே இல்லாத பாதை வேண்டாம்


திறக்க முடியாத ஃப்ரிட்ஜும் வேண்டாம்
மூட முடியாத குழாயும் வேண்டாம்


லொள்ளு பண்ணற நண்பர்கள் வேண்டாம்
லொள்ளு பண்ணாத நாயும் வேண்டாம்


ரௌண்டா இல்லாத பாலும் (ball) வேண்டாம்
ரௌண்டா இருக்கற அமௌண்டும் வேண்டாம்


இப்படி நான் பாடிக்கிட்டே வரும்போது ஒரிஜினல் பாட்டு மாதிரியே இந்த பாட்டுலேயும் டெம்போ மேலே மேலே போயிட்டே இருக்கு. நானும் விடாமே உச்சஸ்தாயியில் சஞ்சாரம் செய்து பாடிக்கொண்டே வரும்போது - குறட்டை சத்தம் ஜாஸ்தியாயிட்டே போகுதுன்னு அம்மாவும் பொண்ணும் சேந்து என்னை அடிச்சி எழுப்பிட்டாங்க. நான் அருமையா பாடினது இவங்களுக்கு குறட்டையா கேட்டிருக்கு. என்ன பண்றது. அவங்க கொடுத்து வெச்சது அவ்ளோதான்.


பாட்டு நடுவிலே என்னை எழுப்பிட்டதாலே, அந்த பாட்டை என்னால் கம்ப்ளீட் செய்ய முடியலே. அதனாலே இந்த பதிவுலே அதை போட முடியல. என்னை
தயவு செஞ்சு மன்னிச்சிடுங்க. அடுத்த தடவை முழு பாட்டையும் போடறேன்.


பிகு: கனவுலே என்னாலே சரியா கம்போஸ் பண்ணமுடியாததாலே அங்கங்கே தளை தட்டும். கண்டுக்காதீங்க..ஓகேவா..

Read more...

Tuesday, December 23, 2008

குளிர் காலத்தின் நன்மை தீமைகள்:

இங்கே பயங்கரமா குளிர் வாட்டி எடுக்குது. எங்களுக்கு இது மூன்றாவது குளிர் சீசனாகும். குளிரை பல பேர் வெறுத்தாலும் எனக்கு மிகவும் பிடித்த இந்த காலத்தின் நன்மை தீமைகளை இங்கே பட்டியலிடுகிறேன். இந்த பட்டியலில் உள்ளதைத் தவிர உங்களுக்கு தெரிஞ்சதையும் சொல்லவும்.


நன்மைகள்:


1. தினமும் சட்டையை அயர்ன் செய்ய வேண்டாம். அப்படியே போட்டுட்டு ஆபீசுக்குப் போயிடலாம். ஏன்னா, அதுக்கு மேல்தான் ஒரு குளிராடை
(ஸ்வெட்டர்) போடப்போறோமே.


2. அங்கங்கே சற்றே கிழிந்திருந்த சட்டைகளுக்கெல்லாம் நல்ல மவுசு வர்ற காலம் இது. ஸ்வெட்டர்தான் அதையெல்லாம் மறைச்சிடுமே.


3. மேலே குறிப்பிட்ட அதே காரணங்களுக்காக தொள தொள சட்டை மற்றும் ச்சின்னதாகிப் போன சட்டைகளையும் வெளியே எடுத்திடலாம்.


4. தனுஷ் மாதிரி ஒல்லியாக இருக்கற நானெல்லாம் மூன்று/ நான்கு அடுக்கு ஆடை அணிந்து கொண்டால்தான் கொஞ்சமாவது பார்க்கும்படி இருக்கும்.


5. தினமும் குளிக்கத் தேவையில்லை. இவ்ளோ அடுக்கைத் தாண்டியா வாசனை (கப்புன்னும் சொல்வாங்க!!!) வரப்போகுது?


6. குளிர் போட்டுத் தாக்கறதாலே குடும்பத்தோட வெளியே போறது குறைஞ்சிடும். அதனால் செலவும் கம்மியாயிடும்னு உங்களுக்குத் தெரியாதா என்ன?


7. வெளியே போகத் தேவையில்லாததாலே, நாம கணிணியே கதின்னு கிடக்கலாம். கண்டதையும் (காணாததையும்) படிக்கலாம்.


தீமைகள்:


மேலே சொன்ன ஏகப்பட்ட நன்மைகள் இருந்தாலும், குளிர் காலத்துலே சிற்சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யுது. அது என்னன்னா:


1. body sprayக்காக செலவழிக்கும் காசு ஜாஸ்தியாகும்.


2. தினமும் ஒரே அறையில் தங்கமணியோட அடைஞ்சி கிடப்பதால், ஏற்படும் போரும் (சண்டைன்னும் சொல்வாங்க!!!) அதனால் ஏற்படும் விழுப்புண்களும்
ஜாஸ்தியாகற காலமிது.


3. வீட்லே எவ்ளோ நாள்தான் சும்மா கணிணி முன் உக்காந்திருக்க விடுவாங்க. அப்பப்போ வீட்டு வேலைகளும் செய்ய வேண்டியிருக்கும்.


4. பத்து நிமிஷ தூரத்திலிருக்கிற ஆபீஸுக்குக் கிளம்பறதுக்கு அரை மணி நேரமாவது ஆகும். வீட்டுக்குத் திரும்ப வந்தபிறகும், ஆடையை மாத்தறதுக்கு
ரொம்ப நேரமாகும். (அந்த நேரத்துலே ஒரு பதிவாவது ஏற்பாடு செய்யலாம்!!!).


-----


மேலே சொன்னதெல்லாம் கற்பனைதான் என்னோட சொந்த கதையில்லேன்னு ஒரு தடவைக்கு ரெண்டு தடவை சொல்லிட்டு, இந்த பதிவை முடிச்சுக்கறேன்.. நன்றி.. வணக்கம்.

Read more...

Monday, December 22, 2008

ஆத்தா, நான் அமெரிக்காவுக்குக் கிளம்பறேன்!!!

இதுவரைக்கும் நான் இரண்டு தடவை சென்னையிலிருந்து அமெரிக்காவுக்குக் கிளம்பி வந்திருக்கிறேன். அந்த இரண்டு தடவையும் நான் பட்ட பிரச்சினைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அதைத்தான் இங்கே சொல்லவிருக்கிறேன். மெதுவா படிங்க...

முதல் தடவை தனியாக பயணம்:

மூன்று மாதத்துக்கு மட்டுமே இந்த பயணமாகையால் குடும்பமில்லாமல் தனியாக (ஜாலியாக!!!) பயணம். விடிகாலை 2 மணிக்கு சென்னையில் விமானம். முதல் நாள் இரவு 10 மணிக்கு விமான நிலையத்திற்கு புறப்படணும். பெட்டியெல்லாம் கட்டியாகிவிட்டது.


அன்றைக்கு அலுவலகத்தில் வழியனுப்பு விழா நடத்திவிட்டார்கள். நண்பர்களுக்கு "நன்னீர்" பார்ட்டி முடிந்துவிட்டது. மாமனார் குடும்பத்திலிருந்து அனைவரும் ஆஜர். எல்லா ஊரிலிருந்தும் உறவினர்கள் / நண்பர்கள் தொலைபேசி வாழ்த்திவிட்டனர். நம் குடும்பத்தில் (பரம்பரையில்!!!) முதல்முதலாக வெளிநாடு போற பையன் அப்படின்னு எல்லாருக்கும் பெருமிதம். அக்கம் பக்கத்து வீட்டிலும் விஷயம் சொல்லியாகிவிட்டது.


இரவு 9 மணிக்கு அமெரிக்காவிலிருந்து ஒரு தொலைபேசி. என் மேனேஜர்தான். கூப்பிட்டு - இன்னும் எவ்வளவு நேரத்தில் விமான நிலையத்துக்குக் கிளம்பணும் - என்றார். சொன்னேன் "ஒரு மணி நேரம்". சொன்னார் " நான் மறுபடி தொலைபேசறேன். அது வரை கிளம்பாதே!!!".


வீட்டில் ஒரு பத்து பேர் கூடிய சிறு கும்பல் என்னை வழியனுப்பத் தயாராக இருந்தது. நான் யாரிடமும் தொலைபேசி வந்ததை சொல்லவில்லை. என்னதான் ஆகிறதென்று பார்ப்போமென்று விட்டுவிட்டேன்.


மறுபடி 9.30 மணிக்கு வந்த தொலைபேசியில் - அமெரிக்கா, நோய்டா, சென்னை - இந்த இடங்களிலிருந்து தலா 2 பேர் இருந்தார்கள். ஒரு பத்து நிமிடம் காரேபூரேவென்று பேசியபின் அனைவரும் முடிவு செய்தது - "சத்யா இன்னிக்கு கிளம்ப முடியாது. க்ளையண்ட் தகராறு பண்றார்".


முடிஞ்சது அமெரிக்கக் கனவு!!!


வீட்டில் எல்லோரும் என் கம்பெனியை திட்டித் தீர்த்தனர். உறவினர்களுக்கு தொலைபேசி இந்த விஷயம் சொல்லப்பட்டது. அடுத்த நாள் அலுவலகத்தில் மக்கள் முகத்தில் நான் எப்படி முழிப்பேன் என்று தெரியவில்லை என்று வீட்டில் சொன்னால் - என் அம்மாவோ - "அதை விடு. நான் அக்கம் பக்கத்து வீட்டில் என்ன சொல்வேன். எல்லோரும் என்னை ஒரு மாதிரி பார்ப்பார்களே?" என்று கூறினார். எல்லோருக்கும் அவரவர் கவலை!!!.


பத்து நாள் கழித்து பிரச்சினைகள் தீர்ந்து மறுபடி நான் கிளம்பி அமெரிக்கா வந்த பிறகுதான் அனைவருக்கும் நிம்மதி...


இரண்டாவது தடவை குடும்பத்துடன் பயணம்:


முதல் தடவை பயணம் தடைபட்டதுபோல் ஆகிவிடக்கூடாது என்று எல்லோரும் எல்லாக் கடவுளையும் வேண்டிக் கொண்டிருந்திருந்தனர். நாங்கள் விமான நிலையத்துக்கு புறப்பட்டு வரும்வரை எங்கிருந்தும் எந்த தொலைபேசியும் வரவில்லை.


மறுபடி ஒரு 15 பேர் கொண்ட கும்பல் விமான நிலையத்துக்கு வந்திருந்தனர். சிறிது நேரம் கழித்து நாங்கள் 3 பேர் மட்டும் உள்ளே போக, அனைவரும் விடைபெற்றுக் கொண்டு வீட்டுக்குப் போய் விட்டனர்.


விமான நிலையத்தில் செக்-இன் செய்வதற்காக நின்றிருந்தோம். நின்றிருந்தோம். ரொம்ப நேரம் நின்றிருந்தோம். பிறகுதான் தெரிந்தது - விமானம் நிரம்பிவிட்டது. எங்கள் மாதிரியே ஒரு 25 பேருக்கு அதில் இடமில்லையென்று. அங்கேயே எல்லோரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டும் எந்த பிரயோஜனமில்லை. அடுத்த இரண்டு நாட்களுக்கு வேறெந்த விமானத்திலும் இடமில்லையென்று சொல்லிவிட்டனர்.


வேறு வழியில்லாமல் அங்கிருந்து வீட்டுக்குத் தொலைபேசி - நாங்கள் அமெரிக்கா போகவில்லை, வீட்டுக்குத் திரும்ப வருகிறோம் என்று சொல்லி - வீட்டுக்கு வந்து - அடுத்த இரண்டு நாள் யாருக்கும் தலைகாட்ட முடியாமல் வீட்டிலேயே கிடந்து - மறுபடி புறப்பட்டு வந்தோம்.

--------

இப்படியாக நாங்க கிளம்பி கிளம்பி திரும்ப வர்ற விளையாட்டு இரண்டு தடவை நடந்துடுச்சு...
அப்பவே சொல்லிட்டாங்க மக்கள் - "இன்னொரு தடவை ஊருக்குக் கிளம்பறேன்னா, முதல் தடவை நான் விமான நிலையத்துக்கு வரமாட்டேன். அடுத்த தடவை வர்றேன்"... அவ்வ்வ்....

Read more...

Monday, December 8, 2008

நொறுக்ஸ் - திங்கள் - 12/08/08


நேற்று தொலைக்காட்சியில் ஏதோ ஒரு சேனலில் extreme sportsல் - மேடு பள்ளம் பாறை சகதி இவற்றுக்கு நடுவில் விழுந்து வாரி பைக் ஓட்டியதைப் பார்த்து எங்களுக்கும் அதில் பங்கேற்க வேண்டும் என்ற ஆவல் பிறந்துவிட்டது. அதற்கான தயார் முயற்சியில் சஹானா. படம் கீழே.


----


ஒரு வாரமாக எங்கள் வீட்டில் எல்லோரும் புதுசா கல்யாணம் ஆன பொண்ணைப் போல் இருக்கோம். விவரம் கடைசியில்.


----


இங்கே அமெரிக்க மேனேஜர்கள் தினமும் வீட்லே 6 மணிக்கெல்லாம் எழுந்து 1.5 மணி நேரம் வண்டி ஓட்டிக்கிட்டு 8 மணிக்கு அலுவலகத்துக்கு வந்துடுவாங்க. நமக்கு இவ்ளோ சீக்கிரமெல்லாம் போய் பழக்கமேயில்லை. நான் ஆர அமர 9 மணிக்கு சஹானாவை பள்ளியில் விட்டுவிட்டு 9.30 மணிக்குத்தான் போவேன்.


இதுவே சாயங்கலாம் அவங்க 4.30 மணிக்கு வாக்குலே கிளம்பும்போது, சரியா 15 நிமிஷம் கழிச்சி நானும் கிளம்புவேன். அது எதுக்கு 15 நிமிஷம் கழிச்சுன்றீங்களா.. அதுலே ஒரு சின்ன கணக்கு இருக்கு... பை எடுத்துக்கிட்டு மேனேஜர் வெளியே போனார்னா, ஓய்வறையில் ஒரு 5 நிமிஷம், கார் நிறுத்துமிடத்துக்கு நடந்து போக ஒரு 5 நிமிஷம், காரை எடுத்துக்கிட்டு மலை மேலேயிருந்து கீழிறங்கி போக ஒரு 5 நிமிஷம் - ஆக மொத்தம் 15 நிமிஷம். (எங்க ஆபீஸ் ஒரு குட்டி மலைமேலே இருக்கு!!!).


ரொம்ப நாளா இந்த கேல்குலேஷன் சரியா போயிட்டிருந்தது. போன வாரம் என்ன ஆச்சுன்னா, மேனேஜர் கிளம்பி போய் 15 நிமிஷம் கழிச்சி (மணி 4.40) நான் வெளியே வரும்போது - எதையோ மறந்து வெச்சிட்ட மேனேஜர் திரும்பி வந்துக்கிட்டிருந்தாரு. என்னைப் பாத்து - "என்ன, நான் கிளம்பிப் போயிட்டேன்னு நினைச்சியா? ஹாஹாஹா"ன்னாரு. நான் "அதில்லே ஸ்டீவ், 5 மணிக்குத்தான் எப்பவும் கிளம்புவேன் (!!). இன்னிக்கு கொஞ்சம் சீக்கிரம் போறேன். அவ்வளவுதான்" அப்படின்னேன்.


"சரி சரி.. சும்மாத்தான் கேட்டேன். என் மேனேஜர் கிளம்பிப் போய் ஒரு மணி நேரமாயிடுச்சு. நான் இன்னும் இங்கே என்ன பண்றேன்னு எனக்கே தெரியலே"ன்னார். அவ்வ்.. எல்லோருமே இப்படித்தானாடான்னு நினைச்சிக்கிட்டு "பை" சொல்லிட்டு ஜூட் விட்டுட்டேன்...


-------------


மக்கள்ஸ், இன்னியிலேந்து ஒரு வாரத்துக்கு வலைச்சரத்துலே எழுதறேன்... அங்கே வந்து பாத்துடுங்க... நன்றி... தவிர கொஞ்சம் பிஸியாக இருப்பதால் பூச்சாண்டியில் அடுத்த பதிவு அடுத்த வாரம்தான் இருக்கும்.


-----


எல்லோருக்கும் தொண்டையில் கிச்கிச். அதனால் புதுசா கல்யாணம் ஆன பொண் - புருஷனை கூப்பிடறாப்போல் அடிக்கடி 'ம்கூம். ம்கூம்' அப்படின்னு கனைச்சிக்கிட்டிருக்கோம். இப்பல்லாம் எந்த பொண்ணும் அப்படி யாரும் கூப்பிடறதில்லைன்னு சொன்னீங்கன்னா, நான் விடு ஜூட்.
-----




Read more...

Friday, December 5, 2008

சந்தில் சிந்து...!!! பகுதி 2 of 2...!!!


கைனடிக் சேலஞ்சர்:



ஒரு கைப்பேசி ஓசியில் கிடைக்குதுன்றதுக்காக என் பழைய கம்பெனியில் இந்த வண்டியை எனக்கு வாங்கிக் கொடுத்தாங்க. சென்னையில் மிகச்சிலரே வைத்திருக்கும் அபூர்வ மாடல் வண்டி இது. நிற்க. வழக்கமான வழக்கப்படி வண்டி வாங்கி பூஜை போட்டவுடன் செய்த முதல் காரியம் அந்த ரெண்டு கண்ணாடியையும் கழற்றியதுதான்.


ஒரு முறை தங்கமணி பின்னாலிருக்க, அவரை அலுவலகத்திற்கு விடப்போய்க்கொண்டிருந்தேன். கத்திப்பாரா - போரூர் ரோடில் கிண்டி அருகிலேயே ஒரு சந்தில் க்ராஸ் செய்ய வேண்டும். சரியான ட்ராஃபிக். பல்வேறு வண்டிகளுக்கிடையே புகுந்து புறப்பட்டு ரோட்டை க்ராஸ் செய்தபோது சடாரென்று ஒரு ஆட்டோ வந்துவிட்டது. சிந்து பாட முயற்சித்தபோது சாலையோரத்தில் இருந்த மணல் வழுக்கி சர்ர்ர்ர்ரென்று போய் விழுந்தோம்.


சமாளித்து எழுந்து நின்று, ஆடைகளில் மட்டுமல்ல, மீசையிலும்கூட மண் ஒட்டவில்லையென்று சொல்லிக்கொண்டு போனோம்.

கார் (இந்தியாவில்):

நங்கநல்லூர் ஆஞ்சனேயா பள்ளியில் கார் ஓட்டக் கற்றுக்கொள்ளும்போது ஆசிரியர் சொல்லிக் கொடுப்பது முதலில் நம்மிடம் சுத்தமாக இல்லாத ஒன்றைத்தான். அது காரோட்டும்போது பொறுமையா இருக்கணும்றது.

ஒரு முறை மேடவாக்கம் நெடுஞ்சாலையில் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தபோது எனக்கு முன்னால் ஒரு ஆட்டோ மிகவும் மெதுவாக போய்க்கொண்டிருந்தது. எதிர்ப்பக்கத்திலிருந்து ஒரு பேருந்து வந்துகொண்டிருந்தது. இப்போ பதிவோட தலைப்பை மறுபடி பாத்துக்குங்க... அப்படி செய்றேன்னு சொல்லி சர்ருன்னு ஒரு க்ளோஸ் ப்ராக்கெட் (")") போட்டா மாதிரி வண்டி ஓட்டி, ஆட்டோவுக்கும் பேருந்துக்கும் நடுவில் போய் அந்தப் பக்கம் நின்னேன்.

வண்டியில் அமர்ந்திருந்த சக கற்றுக்கொள்பவர்கள் படபடவென்று கைதட்ட, கூட இருந்த ஆசிரியரோ வழக்கம்போல் #$@#$ இது உங்கப்பன் வீட்டு வண்டியா, நீ கார் ஓட்டறியா இல்லே ப்ளேன் ஓட்டறியா அப்படி இப்படின்னு திட்டி தீர்த்துட்டார்.

இந்த ஆட்டோ-பேருந்து போல் பல காம்பினேஷன்களுக்கு 'நடுவில்' வண்டி ஓட்டி (மாடு-மாடு, மாடு-சைக்கிள், பேருந்து-சுவர்) கொஞ்சம்போல கற்றுக் கொண்டு அமெரிக்கா வந்து சேர்ந்தேன்.


கார் (அமெரிக்காவில்):


இங்கே சந்துலே சிந்தெல்லாம் பாட முடியாது. ஒருத்தர் பின்னாலே ஒருத்தர்தான் போகணும். அதெல்லாம் நாம விட்டுடுவோமா.. மேலே படிங்க.


ஒரு வாரயிறுதியில் ஊர் சுற்றிப்பார்க்கப் போன இடத்தில் வண்டியை நிறுத்த முற்பட்டபோது... ஏற்கனவே அங்கு நின்றிருந்த காருக்கும், சுவருக்கும் நடுவே இருந்த இடைவெளியில் புகுந்து போயிடலாம்னு நினைச்சி... அந்த கார் மேலே இடிக்கக்கூடாதுன்னு கவனமா இருந்து... வலது பக்கம் சுவற்றில் 'சர்ர்ர்ர்'ன்னு என் காரை தேச்சிட்டேன்.


மிகச்சிறிய டேமேஜே ஆயிருந்தாலும், எனக்கு மேரேஜ் ஆகியிருந்த காரணத்தால், அன்னிக்கு திட்டு அதிகமா விழுந்தது...:-((


அன்னியிலேர்ந்து வழியில் மிகப் பெரிய இடைவெளி இருந்தாலும், நின்னு நிதானமா போறதால் - சந்தில் சிந்து பாடறேன்னு யாரும் என்னை சொல்ல முடியாது.


ரெயில்:


பதிவுக்காக இவ்ளோ விஷயத்தையும் எழுதியபிறகு - தங்ஸிடம் எல்லாத்தையும் சொன்னேன். அதுக்கு அவங்க - "நல்ல வேளை. நீங்க இன்னும் ரெயில் ஓட்டலே. அப்படியே ரெயில் ஓட்ட உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சாலும், இப்படித்தான் குறுக்கும் நெடுக்குமா போய் ஏதாவது பிரச்சினை பண்ணிக்கிட்டே இருப்பீங்க" - அப்படின்னு நல்லபடியா வாழ்த்துனாங்க...!!!


Read more...

Thursday, December 4, 2008

சந்தில் சிந்து...!!! பகுதி 1 of 2...!!!


சந்தில் சிந்து பாடறியா? - நீங்க மத்தவங்களையோ / மத்தவங்க உங்களையோ வாழ்க்கையில் ஒரு தடவையாவது சொல்ல கேட்டிருப்பீங்க.

ஒரு நாள் மல்லாக்க படுத்து விட்டத்தைப் பாத்துக்கிட்டு இருந்தபோது, நான் சைக்கிள் கத்துக்கிட்ட நாள்லேந்து கார் ஓட்டற இந்த நாள் வரைக்கும் எப்பல்லாம்/எப்படியெல்லாம் சந்துலே சிந்து பாடியிருக்கேன்னு யோசிச்சேன். அதன் விளைவுதான் இந்த தொடர் பதிவு. ரெண்டு பகுதிகளா இன்னிக்கும் நாளைக்கும் வருது.

தவறாம படிச்சி உங்க பொன்னான வாக்குகளை / பின்னூட்டங்களை அள்ளி வீசுங்க.

ச்சின்ன சைக்கிள்:

ச்சின்ன வயசுலே ச்சின்ன சைக்கிள் விட கத்துக்கிட்டப்போ, சந்தே தேவையில்லை. பெரிய தெருவில் போகும்போதுகூட வளைச்சி வளைச்சி
ஓட்டி யார் மேலேயாவது இடித்துவிடுவேன். அட, கத்துக்கும்போது இதெல்லாம் சகஜம்தானே...


ஒரு நாள் எங்க பெரியப்பா வெள்ளையும் சொள்ளையுமா அலுவலகத்துக்கு நடந்து போய்க்கொண்டிருந்தார். அவர் கிட்ட்ட்ட்டே போய் சைக்கிள் ஓட்டி காட்டறேன் பேர்வழின்னு அவர் மேலேயே இடிச்சி, வேட்டியில் டயர் டிசைன் போட்டுவிட்டேன். எதுவுமே திட்டாமே சிரிச்சிக்கிட்டே அவர் திரும்ப வீட்டுக்குப் போய் வேட்டி மாத்திகிட்டாலும் - இப்போ நினைச்சிப் பாத்தா கண்டிப்பா அன்னிக்கு மனசிலே ஏதாவது திட்டியிருப்பார்னு தோணுது.


பெரிய சைக்கிள்:




சென்னையிலிருந்த தண்ணீர் கஷ்டத்தினால் வாரம் இருமுறை பீச்சுக்கு சென்று அங்கிருக்கும் கிணற்றிலிருந்து குடிநீர் எடுத்து வருவோம். சைக்கிள் கேரியரின் இருபக்கத்திலும் ப்ளாஸ்டிக் குடமும், மேலே ஒரு எவர்சில்வர் குடமும் கட்டிக்கொண்டு போவோம்.


அப்படி ஒரு தடவை தண்ணீர் நிரப்பிக்கொண்டு மூன்று குடத்துடன் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தேன். வீட்டுக்கருகில் ஒரு கன்றுக்குட்டி நின்றுக் கொண்டிருந்தது. அதற்கும் வீட்டு ப்ளாட்பாரத்துக்கும் சிறிய இடைவெளியே இருந்தது. நம்ம சைக்கிளுக்கு அந்த சின்ன கேப் போதும்னு நினைச்சி அதில் போக - நம்மை தாக்க வருகிறான் என்றெண்ணி அந்த கன்றுக்குட்டி டக்கென்று திரும்பியது.

சரி மொத்தமாக சைக்கிளோடு நான் கீழே விழுந்திருப்பேன்னு நினைச்சீங்களா. அதுதான் இல்லே. நான் ஸ்டெடியா நின்றிருக்க, பின்னாலிருந்த எவர்சில்வர் குடம் தண்ணீரோடு 'டம்'. எங்க அம்மாவுக்கு அந்த குடம் சப்பையானதுகூட பரவாயில்லை - ஆனா அவ்ளோ தண்ணியும்
வீணாப் போச்சேன்னுதான் கவலை...:-((

டிவிஎஸ் சாம்ப்:




ஓட்டிப்பார்றான்னு நண்பன் கொடுத்தபோது சிலபல பேரை அன்னிக்கு தட்டப்போறேன்னு நினைக்கவில்லை. புது வண்டி. சீப்பா கிடைக்குதேன்னு ரெண்டு பக்கமும் 'பின் பக்கம் பார்க்கும்' கண்ணாடியை வாங்கி மாட்டியிருந்தான் அவன். நிறைய வருஷம் சைக்கிள் ஓட்டிய
முன்னனுபவம் இருந்ததால், நீ பின்னாடி உக்காரு நான் ஓட்டறேன்னு சொல்லிட்டு ஓட்ட ஆரம்பித்துவிட்டேன்.


எல்லாம் நல்லாத்தான் போயிட்டுயிருந்தது. 'திடீர்னு' நடுவில் ஒரு காய்கறி மார்க்கெட் வந்துவிட்டது. நம்ம ஊர்லே மார்க்கெட்லே கும்பலுக்கு
கேக்கணுமா.. எங்க வண்டி கண்ணாடி, வண்டியை விட கொஞ்சம் வெளியே நீட்டி இருந்ததால், ஒரு நாலஞ்சு பேரை தட்டி விட்டுக்கிட்டே
போயிட்டிருந்தேன். அதுலே சில பேர் நல்லாவும், பல பேர் நல்ல்ல்லாவும் திட்ட, திட்டத்தெரியாத ஒரு மாடு அதன் கொம்பின் உதவியால்,
எங்கள் வண்டியை முட்டி நிறுத்தியது.


கண்ணாடி இருந்தா இனிமே உன் வண்டியே ஓட்டமாட்டேன்னு சத்தம் போட்டு முதல்லே அவன் வண்டியிலிருந்து அந்த ரெண்டு
கண்ணாடியையும் கழட்ட வெச்ச பெருமை என்னைத்தான் சேரும்.

-------

பைக்கிலிருந்து பெரிய வண்டிகளில் சந்தில் சிந்து - நாளைய பதிவில்!!!

Read more...

Wednesday, December 3, 2008

தங்கமணியிடம் எப்போல்லாம் பேசலாம்?

1. கணிணி restart ஆகும் அந்த ஐந்து நிமிடம் சும்மாத்தானே இருப்போம். அப்போ பேசலாம்.

2. தொலைக்காட்சியில் ஏதாவது பார்க்கும்போது, விளம்பர இடைவேளையில் போரடிக்கும். அப்போ பேசலாம்.

3. வண்டி போக்குவரத்து சிக்னலில் நிற்கும்போது, செய்வதற்கு எந்த வேலையும் இல்லை. அப்போ பேசலாம்.

4. மின் தூக்கியில் ஏறும்போதோ இறங்கும்போதோ ஓரிரு நிமிடங்கள் தப்பித்து ஓடமுடியாது. அப்போது கொஞ்சம் பேசலாம்.

5. கோவிலிலோ வேறெங்காவதோ வரிசையில் நிற்கும்போது பேசியே ஆகவேண்டும்.

6. சுடச்சுட சாதம் தட்டில் இருக்கும்போது சாப்பிட முடியாது. அது ஆறும் வரைக்கும் ஏதாவது பேசலாம்.

7. வேறு யாரிடமாவது தொலைபேசியில் கடலை போடும்போது, அவர்கள் நம்மை holdல் போட்டுவிட்டால், அந்த ஒரு நிமிடம் வேறே என்ன
செய்ய முடியும் சொல்லுங்க? அப்போ தங்கமணியிடம் பேசலாம்.

8. ஏதாவது ஒரு உணவகத்துக்குப் போய் போண்டா ஆர்டர் செய்து - அது வர நேரமானா, அந்த இரண்டு நிமிடம் பேசலாம்.

9. அலுவலகத்துலே ஏதாவதொரு பெரிய பிரச்சினையில் மாட்டிக்கொண்டால் - தங்ஸுக்கு தொலைபேசி பேசலாம். அப்போது அந்த பிரச்சினை சிறியதாக தோன்ற வாய்ப்பிருக்கிறது.

10. ஆற்காட்டார் தயவு செய்தார்னா, அந்த சமயமா பாத்து வேறே எதுவும் புத்தகம் கைவசம் இல்லேன்னா, அந்த சிறிது நேரம் தங்ஸிடம் பேசலாம். என்ன? ஆற்காட்டார் என்னிக்கு 'சிறிது' நேரமா தயவு பண்ணியிருக்காருன்றீங்களா? நான் வரலே இந்த விளையாட்டுக்கு.


யாராவது மேலே சொன்ன இந்த சமயங்களைத் தவிர வேறே எப்பவாவது 'வளவள'ன்னு பேசுவீங்களா என்ன?

Read more...

Tuesday, December 2, 2008

வட அமெரிக்க பதிவர் சந்திப்பு - பகுதி 2 of 2





ட்விட்டர்: நம்ம ஊருலே குட் மார்னிங், குட் நைட்ன்னு எஸ்.எம்.எஸ் பண்ணிக்கிட்டேயிருப்பாங்க. அதே மாதிரி இங்கே 'பெருந்தலைகள்' எல்லாரும் ட்விட்டர்லேயே இருக்காங்க. ப்ளாக்கிங்க ஒரு நாள் போட்டின்னா - ட்விட்டரை 20 - 20 மேட்ச் மாதிரி நினைக்கறாங்க. இளா எல்லா பதிவர்களையும் ட்விட்டருக்கு வாங்கன்னு அழைப்பு விடுச்சாரு. நமக்கு அலுவலக நெட்வர்க்லே ட்விட்டர் வேலை செய்யலே. அதனால் அங்கே எதையும் படிக்க முடியறதில்லே. கு.ப வீட்லேயிருக்கும் போதாவது ஏதாவது பாக்கணும்.


குழுப்பதிவுகள்: வலைப்பதிவுகளில் குழுப்பதிவுகள் ஏன் தோல்வி அடைகின்றன - என்று அலசப்பட்டது. பல்வேறு உதாரணங்களை சுட்டிக்காட்டினர். accountability இல்லாதது, கமெண்ட் மாடரேஷன் மற்றும் குழுவில் எழுதறதுக்கு நம்ம சொந்த பதிவுலேயே எழுதிடலாம்ன்ற மனப்பான்மைதான் குழுப்பதிவுகள் தோல்வியடையறதுக்கு காரணங்கள் என்று கூறப்பட்டது.


சமூகசேவை: வலைப்பதிவுகளில் புதிதாக வருபவர்களுக்கு - இங்கு என்ன சமூகசேவை நடக்கிறது, எதில் பங்கு கொள்ளலாமென்ற தகவலே தெரியவில்லை - இதற்கு தமிழ்மணத்தில் தனியாக இடம் ஒதுக்கலாமா? என்றெல்லாம் மொக்கைச்சாமி கேட்டார். இதற்கு பதிலளித்த கேயாரெஸ்/இளா - பல உதவிகள் செய்யப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டினர். அதை தனிப்பட்ட முறையில் யாராவது எடுத்து செய்கிறார்களே ஒழிய, ஒரு குழுவாக எடுத்து செய்யமுடியவில்லை என்று கூறினர்.


மோகன் கந்தசாமி -> புதிதாக வருபவர்களின் பதிவுகளை, பெருந்தலைகள் விமர்சித்து எழுதி அவர்களை ஊக்கப்படுத்தலாமே என்று கேட்டார். செய்யலாம் என்று பதில் வந்தது. மோகன் -> 'ச்சும்மா டமாஷ்'னு இல்லாமே, இதை எப்படி செய்யலாம்னு பாருங்க... காத்து வாங்கிட்டிருக்கற பல புதிய நல்ல கடைகளை விமர்சனம் செய்ய வைங்க.. நல்லா இருக்கும்....:-)


நசரேயன் -> இவரு பயங்கரமான ஆளா இருக்காரு (பாக்கறதுக்கு இல்லே!!!). திருநெல்வேயில் இருந்தபோது - இரண்டரை மணி நேரமுள்ள நாடகத்துக்கெல்லாம் காமெடி ட்ராக் எழுதியிருக்காரு. அந்த மாதிரி இங்கே பதிவுலேயும் நிறைய எழுதுங்கன்னு அவர்கிட்டே வேண்டுகோள் வைக்கப்பட்டது.


சத்யராஜ்குமார்: ஏகப்பட்ட சிறுகதைகளையும், கட்டுரைகளையும் எழுதிய எழுத்தாளர். இவரை சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி. அவரது கதைகளில் பெரும்பாலும் அமெரிக்க வாழ்க்கையை எதிர்மறையாகவே சொல்வதன் காரணம் என்ன என்று கேட்டபோது - இந்தியாவில் இருப்பவர்கள் அமெரிக்க வாழ்க்கை என்றால் சொர்க்கம் என்றே நினைக்கின்றனர். ஊடகங்களும் இங்கே இருக்கும் பிரச்சினைகளை சொல்வதில்லை. அதை என் கதைகளின் மூலம் சொல்கிறேனென்று சொன்னார். இதை நான் அமெரிக்கா வருவதற்கு முன்னாலேயே ஏன் சொல்லவில்லை என்று நினைத்தேன். சொல்லவில்லை.... :-)


தமிழோவியம் கணேஷ் மற்றும் ஜெய்: இவங்க ரெண்டு பேரும் நிறைய படிக்கறாங்க. எல்லாவற்றையும் படிக்கறாங்க... மொக்கைப் பதிவுகளைத் தவிர்த்து... அதனாலே என்னோட பதிவுகளையும் படித்ததில்லைன்னு நினைக்கிறேன்... ச்சின்னப் பையனின் இருக்கும் அந்த 'ச்' போட்டு எழுதுவது நீங்கதானா? அப்படின்னு கொலவெறியோட பாத்தாங்க.... அவ்வ்வ்...


மேலே படத்துலே இடது பக்கத்திலிருந்து இருப்பவர்கள்தான் முறையே கணேஷ் சந்திரா மற்றும் ஜெய்.


மருத நாயகம்: பல நல்ல பதிவுகள் எழுதவேண்டுமென்று வந்த இவர் கடை பயங்கரமாக காத்து வாங்கியதால், இவர் மொக்கை போடும் நிலமைக்கு வந்துவிட்டார் - இதை அவரே சொன்னார். (எஸ்.வி.சேகர் நாடகத்துலே வருமே - இவர் பேரு ஏகலைவன். பெரிய எழுத்தாளராம். அவரே சொன்னார் - அப்படி படிங்க!!!). அப்படி எழுதிய மொக்கையொன்று உடனே 'சூடாகி' விட்டதையும் சொல்லி 'சந்தோஷப்பட்டார்'. ஹிஹி..


கொத்ஸ் குறுக்கெழுத்து: விடைகள் தெரிந்தபிறகே கேள்விகள் புரிவதாக இளா குறிப்பிட்டார். அதனால் அந்த பக்கமே போகவில்லை என்றும் தெரிவித்தார். குறுக்கெழுத்துக்கு '+' குத்தாவிட்டாலும் பரவாயில்லை யாரோ '-' குத்திவிட்டனர் என்று கொத்ஸ் சொன்னதற்கு, இளா பாய்ந்து சொன்னார் ' அது நானில்லை.. அது நானில்லை'. எல்லோரும் நம்பிவிட்டனர். இனிமேல் 'க்ளூ'வை சுலபமாக வைப்பதாகவும், இந்த சந்திப்புக்கு வந்தவர்களுக்கு மட்டும் விடைகளை முன்கூட்டியே அனுப்பி வைப்பதாகவும் (!!!) கொத்ஸ் சொன்னார்.


இன்னும் இதே மாதிரி பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டன.


என்னைத் தவிர எல்லோரும் லோக்கல் ஆளுங்க என்பதால் (லோக்கல் = உள்ளூர். தப்பர்த்தம் பண்ணிக்காதீங்க!!!) - நாந்தான் 'மீ த பஷ்ட் எஸ்கேப்' என்று கிளம்பியபோது மணி 9.00. போக்குவரத்தில் சிக்கி வீட்டுக்கு வந்தபோது மணி சரியாக நள்ளிரவு 12.


இதைத்தவிர சுவாரசியமாக நம்ம மோகன் ஏற்கனவே பதிவு போட்டுட்டார். அங்கேயும் போய் படிச்சிடுங்க.

Read more...

Monday, December 1, 2008

வட அமெரிக்க பதிவர் சந்திப்பு - பகுதி 1 of 2


(இ-வ): சுதன் (பார்வையாளர்) இளா (விவசாயி), சம்சுதீன் (மருத நாயகம்) மற்றும் இலவசம்.



(இ-வ): கேயாரெஸ், நசரேயன், மோகன் கந்தசாமி, சத்யராஜ்குமார்



(இ-வ): மேலே குறிப்பிட்டபடி



(இ-வ): சஹானா (பார்வையாளர்), ரோஹன் (பார்வையாளர்), சத்யா (ச்சின்னப் பையன்)

(இ-வ): ஜெய் (பார்வையாளர்), மொக்கைச்சாமி
-----

மேலே குறிப்பிட்ட (இ-வ) அப்படின்னா இட்லிவடையோ, இ.வாயோ இல்லே... சரியா படிங்க.. இடமிருந்து வலம்.
------
சிறப்பு விருந்தினர் திரு.பாஸ்டன் பாலா சந்திப்புக்கே வராமல் மட்டம் போட்டுவிட்டார். அவரைக் காணவேண்டுமென்று ஆவலுடன் காத்திருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சார்பாக மென்மையாக ஒரு கண்டனத்தை இங்கு பதிவு செய்கிறேன்.
-----
5.15 மணிக்கு முதல்முதலா நாந்தான் போய் கதவை திறக்காத உணவகத்தின் முன் தர்ணா செய்து, கடையை திறக்கச் செய்தேன். மெதுவாக 5.45 மணியிலேர்ந்து மக்கள் வர ஆரம்பித்தனர்.
6.30 மணிக்கு மும்பை பிரச்சினையில் பலியானவர்களுக்கு ஒரு நிமிட அஞ்சலியுடன் ஆரம்பித்த சந்திப்பில் பல்வேறு சூடான பிரச்சினைகள் அலசப்பட்டன.
இரவு உணவில் கண்டிப்பாக போண்டா இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்பட்டது.
-----
இன்னொரு முக்கியமான நபர் இருக்கிற படம் காமிராலேந்து வரமாட்டேங்குது... நாளைக்கு அதை பிச்சிப் போட்டு, சந்திப்பின் மத்த விவரங்களையும் சொல்றேன்.

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP